யார்ப்ப - பறவைகளும் வண்டினமும் மரக்கிளைகளிலிருந்து ஆரவாரிக்க ; பழனும் கிழங்கும் மிசையறவு அறியாது - பழங்களும் கிழங்குகளும் பலரும் பலவும் உண்டலாற் குறைவுபடாவாக ; பல்லான் நல் நிரை புல் அருந்து உகள - பலவாகிய நல்ல ஆனிரைகள் புல்லை மேய்ந்து களித்துலவ ; பயங்கடை அறியா வளம் கெழு சிறப்பின் - வறுமை யறியாத வளம்பொருந்திய சிறப்பினால் ; பெரும்பல் யாணர்க் கூலம் கெழும - பெரிய பலவாகிய புதுப்புதுக் கூலங்கள் பெருக ; நல் பல ஊழி நடுவு நின்று ஒழுக - நல்ல பலவாகிய ஊழிகள் செம்மையிற் றிறம்பாது நிலை பெற்றொழுக எ - று. பொழுதொடு ; உருபு மயக்கம். உரிய காலத்திற் றவறாது பொழிவது தோன்ற, “வானம் பொழுதொடு சுரப்ப” என்றார் ; எது தவறினும், பொழுதுகள், தவறாது போந்து நிகழ்வன நிகழ்தற் கேதுவாதல் போல, மழையும் உரிய காலத்திற் றவறாது போந்து பொய்யாது பொழிவது தோன்ற, “பொழுதொடு சுரப்ப” என்றாரென்றும், ஒப்புப் பொருட்டாய இன்னுரு பிடத்தே ஒடுவுருபு வந்து மயங்கியதென்றும் கூறினு மமையும் . தோடு, தொகுதி, மடமானினம், கானம் மழை பெய்து தழைத்து விளங்குதலின் வேண்டும் மேயலை நன்கு மேய்ந்து தத்தம் ஆணொடு கூடி யினிதிருந்தியலும் என்றது இன்பச் சிறப்பினை ணர்த்திற்று. மானினம் துணையொடு கூடிக் காம வின்பந் துய்க்குங்காலம் கார்காலமாதலின், “மடமான் ஏறு புணர்ந்தியல” என்றார் ; ‘கார்பயம் பொழிந்த நீர் திகழ்காலை, ததர்தழை முனைஇய தெறிநடை மடப்பிணை, ஏறுபுணருவகைய வூறில வுகள” (அகம். 234) என்றும், “வானம் வாய்ப்பக் கவினிக் கானம், கமஞ்சூல் மாமழை கார்பயந் திறுத்தென, திரிமருப் பேற்றொடு கணைக்கா லம்பிணைக், காமர் புணர்நிலை” (அகம் 134) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. இனி, அம்சதேவ ரென்னும் சமண் சான்றோர், தாமெழுதிய மிருக பக்ஷி சாஸ்திரத்தில், மானினம் வேனிற் காலத்திற்றான் காமவின்பந் துய்க்கு மென்றும், அவற்றின் கருப்பக் காலம் ஐந்து திங்களென்றும் கூறுகின்றார். மழை பெய்தபின் மரந்தொறும் புள்ளினமும் வண்டினமும் பேராரவாரம் செய்வ தியல்பாதலால், “புள்ளும் மிஞிறும் மாச்சினை யார்ப்ப” என்றார் ; “கல் சேர்பு மாமழை தலைஇப், பல்குரற் புள்ளினொலியெழுந் தாங்கே” (பதிற். 84) என்று பிறாண்டு மோதுதல் காண்க. பழவகையும் கிழங்குவகையும் எப்போதும் இடையறவு படாது கிடைத்தலின், “பழனுங் கிழங்கு மிசையற வறியாது” என்றார். அறியாதென்பதைத் தனித்தனிக் கூட்டுக. மக்கட்கும் மாக்கட்கும் உணவாய்ப் பயன்படுவது பற்றி, “மிசை” யென்றார். உகளல், துள்ளி விளையாடுதல் . பசும்புல் வளமுற வளர்ந்து கான முழுதும் கவினுற லிருத்தலின், அதனை ஆர மேய்ந்த ஆனினம் தருக்கி விளையாடுகின்றன வென்பார், “புல்லருந் துகள” என்றார். ஆர்ந்தென்பது |