கூடினா ரெய்தும் இன்பப் பயனைப் பெறுதலின் மனையின் கண்ணிருந்து நல்லறம் புரியும் கற்புச் சிறப்பினைக் “கனவினும் பிரியா வுறையு” ளென்றும் கூறினார். “நனவினா னல்கா தவரைக் கனவினாற், காண்டலி னுண்டென்னுயிர்” (குறள். 1213) என்றாற்போ லொழுகுவது கனவினும் பிரியா வுலையுளென வறிக. ஈண்டுப் பழையவுரைகாரர், “உறையுளொடு நெஞ்சும் புகர் படுபு அறியாது என மாறிக்கூட்டி அறியா தென்பதனை அறியாமலெனத் திரித்து அதனைப் புரையும் என்றதனொடு முடிக்க” என்று கூறுவர். தலைவன் பிரிந்த விடத்துக் குலமகளிர் தம்மை யொப்பனை செய்து கொள்ளாராகலின், என்றும் தான் தலைவனைப் பிரியா துறைதலால் இடையறா ஒப்பனையால் நெய்ப்புப் புலராத கூந்தலுடையளாயினாள் அரசமாதேவி யென்பார், “தண்ணெனத் தகரம் நீவிய துவராக் கூந்த” லென்றார். தகரம், மயிர்ச்சாந்து. இதனை நீவிக் கொள்வதால் தலையும் கண்ணும் குளிர்ச்சி பெறுமென்று மருத்துவ நூலார் கூறுப; அவர் கூற்றும் உண்மை யென்றதற்குச் சான்றாமாறு, “தண்ணென” என்று ஆசிரியர் கூறுவது மிக்க நயமாக வுளது . துவர்தல், புலர்தல், பழைய வுரைகாரர், “துவராக் கூந்தலென்றது எப்பொழுதும் தகர முதலிய நீவுகையால் ஈரம் புலராத கூந்த லென்றவா” றென்றும், இச்சிறப்பானே இதற்குத் “துவராக் கூந்தலென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். வதுவைக் காலத்தே, மகளிர் தாம் மணக்கும் கணவனைப் பிரியாமல் கற்புவழி யொழுகும் பொற்பு மேம்படுதற்கு அருந்ததியைக் காண்டல் மரபாதல் தோன்ற, “வதுவை மகளிர் நோக்கினர்” என்றும், பின்னர்த் தாம் வாழும் நாட்களில் வாழ்நாளெல்லையை யறிதற்கு அவ்வருந்ததி மீனைக் காண்பதும் மரபாதல்பற்றி “பெயர்ந்து வாழ்நாளறியும் நோக்கத்து வயங்கு சுடர்” என்றும் கூறினார். “உலந்த நாளவர்க்குத் தோன்றாதொளிக்கு மீன் குளிக்குங் கற்பிற், புலந்தவே னெடுங்கட் செவ்வாய்ப் புதவி” (சீவக. 2141) என்று திருத்தக்கதேவர் கூறுதலால் இவ்வழக் குண்மை துணியப்படும். திருமணக்காலத்து நோக்கியவர் மறுபடியும் பிற்காலத்தே வேறு குறிப்பொடு நோக்குதல்பற்றி, “பெயர்ந்து” என்றும், வாழ்நா ளுலந்தவர்க்குத் தோன்றாது மறையும் என்பது அமங்கல மாதலின் “வயங்கு சுடர்” என்றும் கூறிய நாகரிகம் குறிக்கற்பாற்று. மகளிர் நோக்கினர், பெயர்ந்து, அறியும் நோக்கத்து வயங்கு சுடர் மீனொடு புரையும் கற்பின் என இயைக்க. இனி ஆசிரியர் உ . வே. சாமிநாதையர், கூந்தலை வதுவை மகளிர்க்கு அடையாக்குவர். இதுகாறுங் கூறியவாற்றால் இரும்பொறை, வானம் சுரப்ப, மடமான் ஏறு புணர்ந்தியல, புள்ளும் மிஞிறும் ஆர்ப்ப, பழனுங் கிழங்கும் மிசையற வறியாவாக, ஆனிரை புல்லார்ந் துகள, கூலங்கெழும, பல்லூழி நடுவுநின் றொழுக, நின்கோல் செம்மையிற் றிறம்பாது நிகழ்த்தலின், நாடு தொழுதேத்துதலானும், உயர்ந்தோர் பரவுவதாலும், உறையுளையும், கூந்தலையும் கற்பினையும், நுதலையுமுடைய அரிவையாகிய தேவியுடன் காண்வரப் பொலிந்து, அரசியல் பிழையாது செருமேந் தோன்றி, நீ நோயிலையாகியர் என்பதாம். இனிப் பழையவுரைகாரர் ‘உறையுளொடு மீனொடு என நின்ற ஒடுக்கள் வேறு வினையொடு” என்றும், “பல்வேல் இரும்பொறை, நின்கோல் செம்மையாலே வானம் சுரப்ப, கானம் ஏறு |