துறை : செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : புண்ணுமிழ் குருதி. திணை : பாடாண்டிணை. “பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே (தொல். பொ. 80) என்னும் தொல்காப்பிய நூற்பா வுரையில், ஆசிரியர் பதிற்றுப்பத்தினுள், வஞ்சிப்பொருளும் வாகைப்பொருளும் வந்த பாடாண் பாட்டுக்கள் சில காட்டி, “ இப் பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலின் பாடாண்டிணையே யாயிற்று” என்று கூறியிருக்கின்றனர். அதனாற்றான் இப் பாட்டுகட்குத் துறையும் வண்ணமும் தூக்கும் பெயரும் வகுத்தோர் திணை கூறிற்றிலர் போலும். அல்லதூஉம், இறந்தொழிந்த முதற்பத்தின் முதற்பாட்டில் திணைகாட்டிப் பின்னர் ஏனையிடங்களிற் கூறிக் கொள்ளுமாறு விடுத்தனர் போலும். துறை : செந்துறைப் பாடாண்பாட்டு; அஃதாவது, “வழங்கியன் மருங்கின் வகைபட நிலைஇ” (பொ. 82) என்னும் தொல்காப்பிய நூற்பாவுரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர், “செந்துறையாவது, விகாரவகையான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது, உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல்; இது செந்துறைப் பாடாண் பாட்டெனப்படும்” என்பது காண்க. பாடாணென்பது, “பாடுதல் வினையையும் பாடப்படும் ஆண் மகனையும் நோக்காது அவனது ஒழுகலாறாகிய திணையை யுணர்த்தினமையின், வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை” யென்பர் நச்சினார்க்கினியர். தூக்கு : செந்தூக்கு; அஃதாவது ஆசிரியப்பா. “ஈற்றய லடியே யாசிரிய மருங்கின், தோற்ற முச்சீர்த் தாகுமென்ப” என்றதற் கேற்ப, ஈண்டும் எருத்தடி முச்சீரினை யுடைமையின், இதுவும் ஆசிரியப்பாவாகிய செந்தூக்காயிற்று. “வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே” (பொ. 383) என்ற நூற்பாவுரையில் ஆசிரியர் பேராசிரியர். செந்தூக் கென்பதற்கு “ஆசிரியவடி” யென்றே பொருள் கூறியுள்ளார். இந்நூற்குத் தூக்கு வகுத்தோர், வேற்றடி விரவாது பாட்டு முழுதும் அளவடியா னியன்றவழிச் செந்தூக்கென்றும் வஞ்சியடி முதலியன விரவிவரின் செந்தூக்கும் வஞ்சித்தூக்கு மென்றும் கூறுவர். தூக்கு என்பது செய்யுள் அடி வரையறை கொண்டு பாக்களைத் துணிப்பது. அஃதாவது பாவகையுள் இன்ன பாவெனத் துணித்துக் கூறுவதென வறிக. வண்ணம் : ஒழுகு வண்ணம். இது வண்ணவகை இருபதினுள் ஒன்று. இது, முடியாதது போன்று முடிந்து நிற்றலும் முடிந்தது போன்று முடியாது நிற்றலுமாகிய அகப்பாட்டுப் புறப்பாட்டு வண்ணங்கள் போலாது, ஒழுகிய வோசையாற் செல்வது. ‘ஒழுகு வண்ணம் ஓசையி னொழுகும்’ (தொ. பொ. 538) என ஆசிரியர் கூறுதல் காண்க. “வண்ண மென்பது சந்த வேறுபாடு” என்றும், யாப்புப் பொருள் நோக்கிய வாறுபோல, இது பொருள் நோக்காது ஓசையே கோடலானும், அடியிறந்து கோடலானும் யாப்பெனப் படாது” என்றும் பேராசிரியர் |