“சாதிங்குலிக மென்பாரு முளர்” என்றார். “அஞ்சன நிறநீக்கி யரத்தம்போர்த் தமருழக்கி, இங்குலிக விறுவரை போன் றினக்களி றிடைமிடைந்த, குஞ்சரங்கள் பாய்ந்திடலிற் குமிழி விட்டுமிழ்குருதி, இங்குலிக வருவிபோன் றெவ்வாயுந் தோன்றினவே” (சீவக. 2239) என்று கூறினர் பிறரும். நிறம், மார்பு. வெலற்கருமை பற்றி வீரர் மார்பு. “அருநிற” மெனப்பட்டது. “அரணாவது, மலையுங் காடும் நீரு மல்லாத அகநாட்டுட் செய்த அருமதில் ; அது வஞ்சனை பலவும் வாய்த்துத் தோட்டி முண் முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து, இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து, யவனர் இயற்றிய பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதணமும் எய்ப்புழை ஞாயிலும் ஏனைய பிறவு மமைந்து, எழுவும் சீப்பு முதலியவற்றால் வழுவின் றமைந்த வாயிற் கோபுரமும் பிற வெந்திரங்களும் பொருந்த வியற்றப்பட்டதாம்” என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியார். ஒருகால் அழித்தவழி இவை மீட்டும் முன்னைய வலிபெறாத வகையில் அழித்தல் வேண்டுதலின், கொலைவாய்பாட்டால், “அரண் கொன்று” எனவும், அச்செயலால் வேந்தர்க்கு மறமும் மானமும் மிகுதலின் “முரண்மிகு சிறப்பின்” எனவும், தன்னைத் தாக்க வருவோர் ஊக்க மழிக்குங் கருத்தால் இயற்றப்பட்ட இவ்வரணைக் கொல்லுந்தோறும் வேந்தர்க்கு ஊக்கம் கிளர்ந்தெழுதலால், “உயர்ந்த வூக்கலை” யெனவும் கூறினார். “உறுபகை யூக்க மழிப்ப தரண்” (குறள். 744) என்று திருவள்ளுவர் கூறுதல் காண்க. ஊக்கம், ஊக்கலென நின்றது. இவ் வூக்க மிகுதியால் கடல் கடந்து சென்று பலர் கூடிக் காத்து பகைவர் காவல் மரமாகிய கடம்பின் முழுமுதல் தடிந்து வென்றெறி முரசுசெய்துகொண்டது கூறலுறுகின்றாராதலின், ஊக்கலை யென முற்றெச்சமாக மொழிந்தாரெனவறிக. மொசிதல், மொய்த்தல், உவமைக்கண், செவ்வேள் மாக்கடல் முன்னி மாமுதல் தடிந்தது கூறவே, நெடுஞ்சேரலாதன் முந்நீர்க்குட் சென்று கடம்பெறிந்தா னென்பது இனிது விளக்க மெய்திற்று. கடம்பெறிந்து முரசு செய்துகொண்டதனை, “சால்பெருந் தானைச் சேரலாதன், மால் கடலோட்டிக் கடம்பறுத் தியற்றிய, பண்ணமை முரசு,” (அகம் 127, 147) என மாமூலரும், “துளங்குபிசி ருடைய மாக்கடல் நீக்கிக், கடம்பறுத் தியற்றிய வியன்பணை” (பதிற்.17), “எங்கோ, இருமுந்நீர்த் துருத்தியுள், முரணியோர்த் தலைச்சென்று, கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பின், நெடுஞ்சேரலாதன்” (பதிற். 20) என இவ்வாசிரியரும் கூறியிருத்தல் காண்க. சேரலாதன் செய்த போர் பலவும் அவற்கு வெற்றியே பயந்தமை தோன்ற, “வெல்போர்” என்றும், அவன் ஆணை வழி நின்று அறப்போ ருடற்றும் இயல்பு குறித்து, “போரடுதானை” யென்றும் சிறப்பித்தார். 17 - 25.மார்புவலி........கடந்தே. உரை : கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி - முருக்க மரங்கள் செறிந்த மலையிடத்தே இரவில் உறங்கும் கவரிமான்கள்; நரந்தம் பரந்து இலங்கு அருவியொடு கனவும் - பகற்போதில் தாம் மேய்ந்த நரந்தம் புற்களையும், அவை வளர்ந்திருக்கும் பரந்து விளங்கும் அருவிகளையும் கனவிற் கண்டு மகிழும்; ஆரியர் துவன்றிய ஆரியர் நிறைந்து வாழும்; பேரிசை இமயம் தென்னம் குமரியொடு ஆயிடை - பெரிய புகழையுடைய |