வேந்தே” என்றும் கூறினார். கடம்புமுதல் தடிந்த பின்பும் ஆறாது முரசுசெய் தெறிந்த காலத்தே தணிந்தமையின், “கடுஞ்சின வேந்தே” என அவன் சினமிகுதியைச் சிறப்பித்தார். இடங்கவர் கடும்பு என்பதற்குத் “தனக்குரிய இடத்தைக் கவர்ந்த கடும்பு” என்று கூறுவாரு முளர். சேரநாட்டினுட் கடம்பர் போந்து நாடு கவர்ந்து கொண்டதாக வரலாறு ஒன்றும் இன்மையின் அப்பொருள் சிறக்கு மாறில்லை. 4 - 9. தாரணி..............இனிது உரை : தார் அணி எருத்தின் - பிடரிமயிர் பொருந்திய கழுத்தினையும்; வாரல் வள் உகிர் - நீண்ட கூரிய நகங்களையுமுடைய; அரிமான் வழங்கும் சாரல் - சிங்கவேறு உலாவும் மலைச் சரிவிலே; பிறமான் - பிற விலங்குகளின்; தோடுகொள் இன நிரை இனமினமாய்த் தொகுதி கொண்டிருக்கும் கூட்டம்; நெஞ்சு அதிர்ந்தாங்கு - நெஞ்சு நடுக்குற்று ஒடுங்கியுறைவது போல; முரசு முழங்கு நெடுநகர் - முரசுகள் முழங்கும் தம் அரண்மனைக்குள்ளேயிருக்கும்; மாதிரம் அரசு துயிலீயாது - நாற்றிசையிலும் வாழும் அரசர் நெஞ்சு துணுக்குற்றுக் கண்ணுறங்காமல்; பனிக்கும் நடுங்கச் செய்யும்; நின் மறம் வீங்கு பல் புகழ் - நின் வீரத்தால் மிக்கு விரிந்து பலதுறையால் வரும் புகழ்; கேட்டற்கு இனிது கேட்டற்கு எமக்கு இனிதாயிருந்தது; தார், பிடரி மயிர்.கிளியினது கழுத்தின் பிடரிபோல் நீண்டு ஒழுகும் கீற்றுக்களையும் இவ்வியைபுபற்றித் தார் என்ப; “செந்தார்ப் பசுங்கிளியார்” (சீவக. 1036) என்று தேவர் கூறுதல் காண்க. வாரல்: அல், சாரியை. தோடு, தொகுதி. பிற விலங்குகள் தோடுகொள் இனநிரைய வாயினும் அரிமான் வழங்குவதுபற்றி நெஞ்சதிர்ந்து ஒடுங்கியுறைவதுபோல என்ற உவமத்தால் ஆரியரை யலறத் தாக்கியும் கடற்குட் சென்று கடம்பெறிந்தும் செருமேம்பட்டு வரும் சேரலாதனது புகழ் கேட்கும் நாற்றிசை வேந்தரும் அஞ்சி நடுங்கித் தத்தம் நெடுநகர்க்கண் கண்ணுறக்க மின்றிக் கையற்றுக் கிடந்தமை பெற்றாம். (ப - ரை) துயிலீயாது என்றது, துயில் ஈயாது என்று கொண்டு. மாதிரத் தரசர், மண்ணசையால் சேரலாதன் எப்போது தம்மேல் வருவனோ என்றஞ்சித் தம் கண்கட்கு உறக்கம் நல்காது, திசைநோக்கி நெஞ்சு நடுங்கிக் கிடக்கச் செய்தது நின் புகழ் என வுரைப்பினுமாம். செல்லிட மெல்லாம் தன் மறம் துணையாகப் பெரும்புகழ் எய்தினமையின், “மறம் வீங்கு புகழ்” என்றும், அதுதானும் வெட்சி முதலாகப் பல்வேறு வகையாற் பெறப்படுதலின், “பல்புகழ்” என்றும், பலவாயினும் மறப்புகழ் என்ற ஒரு பயனையே விளைவித்தமையின், “இனிது” என ஒருமை முடிபு கொடுத்தும் கூறினார். (ப - ரை) கல்வி, செல்வம் முதலியவற்றா லெய்தும் பல்புகழ் மறமொன்றினாலே இச் சேரலாதன் பெறுதலின் “மறம் வீங்கு பல்புகழ்” என்று இதற்குப் பெயராயிற் றென்பார் பழையவுரைகாரர். “அரசர்க்குச் சிறந்த |