குழப்பி விதை விதைக்கும் வயல்களாயினவும்; கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் - கரும்பு நிற்கும் பாத்திகளிற் பூத்த நெய்தல்; இருங்கண் எருமையின் நிரை தடுக்குநவும் - பெரிய கண்களையுடைய எருமைக் கூட்டத்தைப் பிறவிடத்திற்கு மேய்ச்சல் வேண்டிச் செல்லாவாறு தடுக்கும் வயல்களாயினவும்; கலிகெழு துணங்கை ஆடிய மருங்கின் - இளையமகளிர் கூடி ஒலிமிக்க துணங்கைக்கூத் தயரும் இடங்கள்; வளைதலை மூதா - வளைந்த தலையையுடைய முதிய ஆக்கள்; ஆம்பல் ஆர்நவும் - அவர் தழையுடையினின்றுதிர்ந்த ஆம்பலை மேயும் இடங்களாயினவும்; ஒலி தெங்கின் - தழைத்த தென்னைகளும்; இமிழ் மருதின் - புள்ளினம் கூடியொலிக்கும் மருதமரங்களும்; புனல் வாயிற் பூம்பொய்கை - கால்வாய்களையுடைய பூம்பொய்கைகளு முடைமையால்; பாடல் சான்ற பயம்கெழு வைப்பின் - புலவர் பாடும் புகழ்பெற்ற செல்வம் பொருந்திய வூர்களையுடைய; நாடு - நாடானது, புல்லும் தழையும் நிறைந்து ஆனிரைகட்கு மேய்கொல்லையாக இருந்தவை, நெல் விளையும் நன்செய்களாயின வென்பார், “தொறுத்தவயல் ஆரல் பிறழ்நவு” மென்றும், கிழங்கு தேர்ந்துண்ணும் இயல்பினவாகலின், கேழற்பன்றிகள் தம்முடைய மருப்புக்களாற் கிண்டி நிலத்தையுழுது விடுவதால் உழவர் ஏரான் உழுதல் வேண்டாவாயின வென்றற்கு, “ஏறு பொருத செறு உழாது வித்துநவும்” என்றும் கூறினார், “கடுங்கட் கேழ லுழுத பூமி, நன்னாள் வருபத நோக்கிக் குறவர், உழாது வித்திய பரூஉக்குரற் சிறுதினை” (புறம். 168) என வருதல் காண்க. “பன்றி புல்வாய் உழையே கவரி, என்றிவை நான்கு மேறெனற் குரிய” (தொல். பொரு. 593) என்றதனால் பன்றி ஏறெனப்பட்டது. இதனாற் காடழிந்து நாடாகிய முறை தெரிவித்தாராயிற்று. இனி, ஏறு பொருத செறு உழாது வித்துந என்பதற்கு, ஏறுகள் தம்முட் பொருதமையினாலே வயல் சேறுபட்டு உழவேண்டாதனவாயின வென்றுரைத்து, “பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பின், காரேறு பொருத கண்ணகன் செறுவின், உழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர். முடிநா றழுத்திய நெடுநீர்ச் செறுவின்” (பெரும்பாண். 209-12) என்பதனைக் காட்டலுமொன்று. கரும்புநிற்கும் பாத்தியில் நீர் இடையறா திருத்தலின், நெய்தல் உளதாயிற்று; அது தேன்மிக்குத் தன்னை மேயும் எருமை யினத்தை வேறிடம் செல்லாவாறு பிணித்தலின், “எருமையின் நிரைதடுக்குநவும்” என்றார்; “கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல், சுரும்புபசி களையும் பெரும்புன லூர” (ஐங். 65) எனப் பிறர் கூறுவது இக்கருத்தோ டொருபுடையொத்தல் காண்க. கரும்புநடு பாத்தியிற் கலித்த நெய்தல், தன்பால் நிறைந்துள்ள நறுவிய தேனின் சுவையொடு பொருந்திய இரையாகி, அருகு நிற்கும் கரும்பினை நாடாவாறு செய்யுமுகத்தால் அக் கரும்பினைக் காக்கும் இயற்கையழகு விளங்கத் தெரிக்கும் சிறப்பினைப் பாராட்டி, இப்பாட்டினைப் ‘பூத்த நெய்தல்’ என்றனர். பழையவுரைகாரரும், “இச்சிறப்பானே பூத்த நெய்தலென்று பெயராயிற்” றென்றார். இளையமகளிர் இடையில் ஆம்பற்றழை யுடுத்து, கண்ணியும் மாலையும் அவ்வாம்பலே |