பாழாயின - கருதிச் செல்வோருடைய மன வலியைக் கெடுத்து உடல் நடுங்கச் செய்யும் பாழிடங்களாயின, நாடுகவினழிய, தோற்றி, இறுத்த, நீரழிபாக்கம், கழனி, விடத்தரொடு காருடை போகி, பேய்மகள் இயங்க, நெருஞ்சி மன்றத்தின்கண் ஊக்குநர் உள்ளம் அழிய, உள்ளுநர் மிடல் தபுத்துப் பனிக்கும் பாழாயின என வினைமுடிவு செய்க. உடைபோக வென்பது போகியென நின்றது. நாடுகவினழிதற்குப் போர்வினை ஒரு காரணமாயினும், நாட்டு மக்கள் மனத்தே அச்சம் பிறப்பித்து, உள்ளத்திட்பத்தைச் சிதைத்தல் பெருங் காரணமாதலை விளக்குவார் “நாமம் தோற்றி” என்றார். இஃது அண்மையில், மேனாட்டுச் சருமானியர் (Germans) செய்த போர்ச் சூழ்ச்சிகளுள் தலையாயதாக விருந்ததை நாம் கண்டோம். சேரலாதன் பெருவெகுட்சியுடன் தன் பெரும்படைகொண்டு தங்கியதனால், நாட்டு மக்கள் அஞ்சி யலமந்து நீங்கினாராக, பேரூர்கள் காவலின்மையின் தம் செல்வநலமும் சிறப்பும் குன்றின வென்பார், “நீரழிபாக்க” மென்றும், நாள் செல்லச்செல்ல அவற்றின் பொலிவும் தேய்ந்து பாழாயிற்றென்பார், “கூற்றடூஉ நின்ற யாக்கை போல, விரிபூங் கரும்பின் கழனி புல்லென” என்றும் கூறினார். ‘நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார், போர்முற்றென றறியாத புரிசைசூழ் புனலூர” (கலி. 67) என்பதை யுட்கொண்டு. “நீரழிபாக்க மென்றது, வெள்ளத்தான் அழிவுபடி னல்லது பகைவரான் அழியாத பாக்கம் என்றவாறு” என்றும், கூற்றடூஉ நின்ற யாக்கை போல நீ சிவந்து எனக் கூட்டி, “இனிக் கூற்றுவனை யட்டுநின்ற யாக்கையையுடையா னொருவன் உளனாயினும், அவனைப்போல நீ சிவந்து என்றுரைப்பாரு முளர் என்றும் கூறுவர் பழைய வுரைகாரர். இறுத்த என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டு. விடத்தர், விடத்தேரை யென்னும் மரம். உடை, ஒரு வகை முள்மரம் கருநிறத்தாதலின் “காருடை” யெனப்பட்டது. போகுதல், உயர்தல். பாழிடத்தே கழுதும் பேயும் வாழு மென்பவாதலின், “பேய்மகள் கழுதூர்ந் தியங்க” என்றார். பேய்மகளின் தலைமயிர் காய்ந்து செம்பட்டையாய் இருபிளவாய் நிமிர்ந்து நிற்றலின் “கவைத்தலைப் பேய்மகள்” என்றார். இன்றும் தலைமயிர் எண்ணெயும் நீரும் படாது நெடுநாள் விட்டவிடத்து, நுனி பிளவுபடுதல் கண்கூடு. ஆகவே, தலையென்பது ஆகுபெயராதல் காண்க ஊர்தல், பரத்தல்; பிறைநுதல் பசப்பூரப் பெருவிதுப் புற்றாளை” (கலி. 99) என்றாற்போல. பறந்தலை, போர்க்களம். போர்வீரர் தம்முட் கலந்து போருடற்று மிடத்து. அக்களம் புழுதிமிக்கு நீறாதலின், “நீறாடு பறந்தலை” யென்றும், ஊர்ப்புறத்தே போர் நிகழ்தலின், ஆண்டெழும் புழுதி சென்று மன்றத்திற் படிந்து மாசு படுத்துதலால். “நீறாடு பறந்தலைத் தாதெரு மறுத்த கலியழி மன்றத்து”என்றும் கூறினார.் தாது, எரு; நுண்ணிய புழுதி. மறு, குற்றம்; அழுக்கு. மறுத்த, மறுவினை யுடைத்தாகிய என்றவாறு. மாவும் மாக்களும் வழங்குதலின்றிப் பாழ்பட்ட மன்றத்திற்குட் செல்ல ஒருவர் விரும்பின், அவர் உள்ளம் எழாவகை அச்சம் தோன்றி அதனை அழிவித்தலின், “உள்ளம் அழிய” என்றும் ஒருகால் துணிந்து செல்லக் கருதின் அவர்தம் மனத்திட்பம் சிதைந்து கெடுதலின், “ஊக்குநர் மிடல்தபுத்து” என்றும் கூறினார். தபுத்தல்வினை பனிக்கும் என்பதனோடு இயைய வேண்டிப் பழையவுரைகாரர் “தபுத் தென்பதனைத் தபுக்க வெனத்திரிக்க” என்றும், “மன்றத்து உள்ளம் |