1 - 4. நிலநீர்..................விளக்கத்தனையை. உரை : நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின் - நிலமும் நீரும் காற்றும் விசும்பும் என்ற நான்கினையும் போல; அளப்பரியை - நீ பெருமையளந்துகாண்டற்கு அரியையாவாய்; நாள்கோள் திங்கள் ஞாயிறு கனை அழல் - நாண்மீன்களும் கோள்களும் திங்களும் ஞாயிறும் மிக்க நெருப்பும் என்ற; ஐந்து ஒருங்கு புணர்ந்த - ஐந்தும் ஒருங்குகூடினாற் பிறக்கும்; விளக்கத்து அனையை - ஒளிபோலும் ஒளியுடையையாவாய், அளத்தற்கரிய பெருமையுடையவாகலின், நில முதலியவற்றைக் கூறினார்; “இருமுந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத் தகலமும், வளிவழங்கு திசையும், வறிது நிலைஇய காயமும் என்றாங்கு, அவையளந் தறியினும் அளத்தற் கரியை” (புறம். 20) என்று பிறரும் கூறுதல் காண்க. இதன் கண்ணும் தீயொழிந்த ஏனைப் பூதங்கள் எண்ணப்பட்டிருப்பதும், “அளந்தறியினும்” என்றதனால் அளத்தற்கருமை பெறப்படுவதும் அறிக. தீ ஒளிப்பொருளாதலின், அதனை நாள் கோள் முதலியவற்றோடு கூட்டினார். பழைய வுரைகாரர், பூதங்கள் ஐந்தையு மெண்ணாது தீயை யொழித்தது மேல்விளக்கத்துக்கு உவமமாக எண்ணுகின்றவற்றோடு கூட்டவேண்டியென்பது; ஈண்டுக் கோளென்றது விளக்கமில்லா இராகு கேது வென்னும் இரண்டும் நீக்கிநின்ற ஏழினும் சிறப்புப் பற்றி வேறெண்ணப்பட்ட திங்கள் ஞாயிறென்னும் இரண்டும் நீக்கிநின்ற ஐந்தையு மென்பது ஈண்டு நோக்கத்தக்கது. நிலம் நீரினும், நீர் நெருப்பினும் நெருப்பு வளியினும், வளி விசும்பினும் ஒடுங்குமாகலின், அம் முறையே பற்றி, “நிலநீர் வளியொடு விசும்” பென்றார். நாளும் கோளும் திங்களும் இரவுப்போதில் தோன்றித் தண்ணியவொளி செய்வன வாகலினாலும், வெம்மையும் மிக்கவொளியுமுடைய ஞாயிற்றை யடுத்திருத்தலாலும், “ஞாயிறு கனையழல்” என்று சேரக் கூறினார். ஐந்துமென்ற வும்மை விகாரத்தால் தொக்கது. நாள் கோள் முதலிய ஐந்தும் ஒருங்கு கூடியவழிப் பிறக்கும் ஒளியைப்போலும் ஒளியென்றது, சேரலாதனது நல்லொளி எல்லா நிலத்தினும் சென்று பரவி ஆட்சி புரிதலைக் குறித்து என்க. 5 - 7. போர்தலை...............கைவண்மையையே. உரை : போர் - போர் செய்வதில்; தலைமிகுந்த ஈரைம் பதின்மரொடு - மிக்க மேம்பாடுற்ற நூற்றுவருடன், துப்புத்துறை போகிய - துணை வலியாகும் நெறியில் கடைபோகிய; துணிவுடை ஆண்மை - அஞ்சாமைபொருந்திய ஆண்மையினையுடைய; அக்குரன் அனைய - அக்குரனென்பானைப்போல; கைவண்மையைவள்ளன்மையுடையையாவாய், பாண்டவர் ஐவரொடு மலைந்த பேராண்மையையுடைய நூற்றுவரது மறச்சிறப்பை இவ்வாசிரியர், “போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு” என்றாற்போல, “நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை, ஈரைம்பதின்மர்” (புறம். 2) என முரஞ்சியூர் முடிநாகனாரும், “மறந்தலைக்கொண்ட நூற்றுவர்” (கலி. 52) எனக் கபிலரும் கூறியுள்ளார். போர்த்திறம் பலவற்றின்கண்ணும் |