நூற்றுவர்க்குத் துணைவலியாந் துறையில் எஞ்சாது ஒழுகினமையின், “துப்புத்துறை போகிய” என்றும், துணிவில்வழி ஆண்மை சிறவாமையின், “துணிவுடை யாண்மை” யென்றும், வள்ளன்மையில் மிக்க மேம்பட்டோனாதலின், அதனை யுயர்த்தும் கூறினார். துப்பு, துணை; “துன்பத்துள் துப்பாயார்” (குறள். 106) என்புழிப்போல, “அக்குரன் பாரதத்தில் கூறப்படுபவனும் தலையெழு வள்ளல்களு ளொருவனுமாகிய அக்குரன்போலும்; கர்ணனென்று நினைத்தற்கு மிடமுண்டு; ஆதாரம் கிடைக்கவில்லை” யென்று டாக்டர் திரு. உ. வே. சாமிநாதையர் கூறுவர். 8 - 10. அமர்கடந்து......................ஆற்றலையே. உரை : அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர் - போரில் வஞ்சனையின்றிப் பொருது சிறந்த தும்பைப் பகைவருடைய; போர் பீடு அழித்த - போரினையும் அவர்தம் பெருமையினையும் அழித்தொழித்த; செருப்புகல் முன்ப - அத்தகைய போரை விரும்பும் வலியையுடையோய்; கூற்று வெகுண்டு வரினும் கூற்றுவனே சினங்கொண்டு பொரவந்தாலும்; மாற்றும் ஆற்றலை நீ அவனைப் பிறக்கிட் டோடச் செய்யும் ஆற்றலை யுடையையாவாய், வெட்சி, கரந்தை முதலாகப் பல்வகைப் போர்களைச் செந்நெறியிற் பொருது சிறந்தோரே, பகைவர் அதிரப்பொரும் தும்பைப்போர் செய்ய முற்படுபவாதலின், அவரைத் “தும்பைப் பகைவ” ரென்பர், “அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர்” என்று சிறப்பித்தார். அவர் செய்யும் போரும், அப்போரால் அவர் பெற்றிருக்கும் பீடும் உயர்ந்தனவாதலின், அவற்றையழித்த பெரும்போரைச் செய்தலின், “தும்பைப் பகைவர் போர் பீடழித்த முன்ப” என்றும், அம்முன்பினால் மேலும் போர் விரும்பும் அவன் மறப்பண்பை, “செருப்புகல் முன்ப” என்றும் வியந்துரைத்தார். “போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” (புறம். 31) எனவும், “செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி” (முருகு. 67) எனவும் சான்றோர் போர்வேட்கையைப் புகழ்ந்தோதுதல் காண்க. முன்னிற்பார் இல்லாத முரணுடைமைபற்றி “முன்பன்” என்ப போலும். உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கிக் கூறுபடுக்கும் முறைமையும் அத்தொழிற்கென வேண்டும் வன்மையும் விரகும் இறப்ப வுடைமையின், கூற்றுவனை வேறல் எத்திறத்தோர்க்கும் கூடாத செயலாயினும், அவனையும் வென்று முதுகிட்டோடச் செய்யும் மொய்ம்புடையாயென்றது, சேரலாதனது ஒப்புயர்வற்ற ஆற்றலைப் புலப்படுத்தற்கென வறிக. “பகையெனிற் கூற்றம்வரினும் தொலையான்” (கலி. 43) எனக் கபிலர் கூறுதல் காண்க. மாற்றுதல், மார்பு காட்டி வருவானை முதுகு காட்டியோடுமாறு செய்தல். 11 - 12. எழுமுடி..............சான்றோர் மெய்ம்மறை. உரை : எழுமுடிகெழீஇய - அரசர் எழுவரது முடிப்பொன்னாற் செய்யப்பட்ட ஆரமணிந்த; திருஞெமர் அகலத்து - திருமகள் விரும்பி |