பக்கம் எண் :

74

யுறையும்     பரந்த மார்பினையும்;  நோன்புரித்  தடக்கை - வன்மை
பொருந்திய  பெரிய  கையினையு  முடைய; சான்றோர் மெய்ம்மறை -
வீரர்கட்குக் கவசம் போல்பவனே,
  

முடி,     முடிப்பொன்னாலியன்ற  ஆரத்துக்காதலின்  ஆகுபெயர்.
பகைவரை வென்று அவர் முடிப்பொன்னால் ஆரமும் வீரகண்டையும்
பிறவும்  செய்து  கோடலும், காவல் மரத்தால் முரசு முதலியன செய்து
கோடலும்,  அவர்  நாட்டிற்  பெற்ற பெருவளத்தைப் பாணர் முதலிய
இரவலர்க்கு   வழங்கலும்   பண்டை   வேந்தர்  மரபு.  சேரவேந்தர்
பகையரசர்  எழுவர்  திருமுடிப்  பொன்னால்  ஆரம் செய்துகொண்ட
செய்தியைக் காப்பியாற்றுக் காப்பியனார் “எழுமுடி கெழீஇய திருஞெம
ரகலத்து........தார்மிகு  மைந்தினார்முடிச்  சேரல்” (பதிற். 40)  என்றும்,
பரணர்,  “எழுமுடி  மார்பின்  எய்திய  சேரல்”  (பதிற். 45) என்றும்,
இளங்கோவடிகள்,  “எழுமுடி  மார்பநீ ஏந்திய திகிரி” (சிலப். 28: 169)
என்றும்  கூறுதல் காண்க. “எழுமுடி யென்பது ஏழு அரசரை வென்று
அவர்கள் ஏழு முடியானும் செய்ததோ ராரமாம்” என்பது பழையவுரை.
“நீயே......அவர்   முடிபுனைந்த   பசும்பொன்னின்   அடி  பொழியக்
கழல்தைஇய,  வல்லாளனை  வயவேந்தே”  (புறம்.  40) என்பதனால்,
முடிப்பொன்னால்   கழல்செய்து   கோடலை  யறியலாம்.  நோன்மை,
வன்மை.  அறப்போர்  புரியும்  ஆண்மையும்,  தறுகண்மையுமுடைய
வீரரை,   சான்றோர்   என்றல்   தமிழ்   மரபாதலின், அவர்கட்குத்
தலைவனும்   முன்னணி  வீரனுமாதலின்,  “சான்றோர்  மெய்ம்மறை”
யென்றார்.  இச்  சான்றோரைத்  தாக்கும்  பகைவர் இவனைத் தாக்கி
வென்றாலல்லது   அவர்பாற்  சேறலாகாமை  தோன்ற “மெய்ம்மறை”
யெனச்  சிறப்பித்தார்.  இவ்வியைபால்  அவர்கட்கு மெய்ம்மறைக்கும்
கவசம்போறலின் இவ்வாறு கூறியதென்க. “ஈண்டுச் சான்றோ ரென்றது
போரில்  அமைதியுடைய  வீரரை;  மெய்ம்மறை  -  மெய்புகு கருவி;
மெய்ம்மறை  யென்றது  அச்சான்றோர்க்கு  மெய்புகு  கருவி போலப்
போரிற் புக்கால் வலியாய் முன்னிற்றலின்; இச் சிறப்பு நோக்கி இதற்கு
(இப்பாட்டிற்கு) ‘சான்றோர் மெய்ம்மறை’ என்று பெயராயிற்று” என்பர்
பழையவுரைகாரரும் என அறிக.
  

13 - 15. வானுறை................கணவ.  

உரை : வான் உறை மகளிர்  இகல்  கொள்ளும் - விண்ணுலகத்து
மகளிர் தம நலத்தால் தனக்கு நிகராதல்  வேண்டித் தம்முள் முற்பட்டு
இகலும்; நலன் - மெய்ந்நலமும்; வயங்கு இழை கரந்த - விளங்குகின்ற
தலைக்கலனால்   மறைப்புண்ட;   வண்டு   படு   கதுப்பின்  வண்டு
மொய்க்கும்   கூந்தலும்;   ஈர்   ஓதி   ஒடுங்கு  கொடுங்  குழை  -
மண்ணுதலால்  நெய்ப்புற்ற  கூந்தல்  ஒடுங்கிய  செவியிடத்தே பெய்த
வளைந்த குழையும் உடையளாகிய தேவிக்கு; கணவ - கணவனே,
  

“மின்னுமிழ்ந்     தன்ன சுடரிழை யாயத்துத்,  தன்னிறங்   கரந்த
வண்டுபடு  கதுப்பின்,  ஒடுங்கீ  ரோதி  யொண்ணுதல்  அணிகொளக்,
கொடுங்குழைக் கமர்த்த நோக்கின்” (பதிற். 81) என்ற பிறரும் கூறுதல்
காண்க.