கதுப்பும் குழையும் எண்ணப்படுதற் கேற்ப, வானுறை மகளிர் இகல்கொள்ளும் நலனும் என மாறிக் கூட்டுக. கொள்ளும் நலன், கொள்ளுதற் கேதுவாகிய நலன் என்க. அரசமாதேவியின் மெய்ந்நலம் கண்டு அதனோடு தம் நலமும் நிகராமென்பது கருதி வானவர் மகளிர் தம்மிற் கூடிப் பிணங்குதல் தோன்ற, “இகல் கொள்ளும்” என்றார். மானுட மகளிரொடு தம்மை நிகர்ப்பித்துக் காணவேண்டாத வானுறை மகளிர், இதுபோது அச்செயலை மேற்கொண்டு பண்பில்லன செய்தலின், அதற்கேதுக் கூறுவாராய், இகல்கொள்ளு மென்றாரென வறிக. பண்பில்லன செய்தலாவது, “அழகி்ற்கு அவளை யொப்பேன் யானே யானே என்று தங்களில் மாறுகொள்”ளுவது. இகலென்பது “பகலென்னும் பண்பின்மை பாரிக்கும்” (குறள். 851) என்று சான்றோர் கூறுதல் காண்க. தலைக்கூந்தலை மண்ணிச் சீரிய தலைக்கலன்களை யணிந்ததனால், கதுப்பு, வண்டு மூசுதலாலன்றித் தோன்றாமையின், “வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின்” என்றார். கூந்தலுக்கு நெய்யணிந்து நன்கு மண்ணுதல் செய்தவழி, அது செவியின் பின்னே ஒடுங்கிச் சுருண்டமைதலின், “ஈரோதி ஒடுங்கு கொடுங்குழை” யென்றார். தன் பின்னே ஓதியை ஒடுக்கி நிற்கும் செவி குழையால் விளக்கமுறுதலின், அதனையே விதந்து “கொடுங்குழை” யென்றார். ஒடுங்கீரோதிக் கொடுங்குழை, அன்மொழித்தொகை. கதுப்பு மண்ணிய வழிச்சுருண்டு செவியின் புறத்தே ஒடுங்குமாறு தோன்றப் பழைய வுரைகாரர், “சுருள்” என்று உரைத்தவாறறிக. 16 -17. பல்களிற்று...................வேந்தே. உரை : பல்களிற்றுத் தொழுதியொடு - பலவாகிய யானைக் கூட்டத்தோடு; வெல் கொடி நுடங்கும் - வெல்லுகின்ற கொடி யுயர்ந்து அசையும்; படை ஏர் உழவ - படையினை ஏராகக் கொண்டு பகைவர் படையாகிய புலத்தையுழுகின்ற உழவனே; பாடினி வேந்தே - பாண்மகளுக்கு வேண்டும் பரிசு வழங்கும் வேந்தனே எ - று. தொகுதி, தொகுதி. “இழையணிந் தெழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு” (பதிற். 62) எனப் பிறரும் கூறுதல் காண்க. “வில்லேருழவ” என்பன போல, சேரலாதனைப் “படையே ருழவ” என்கின்றார். பாடினி பாடும் பாட்டுக்கு மகிழ்ந்து அவட்கு இழை முதலாயின வழங்கி, அவளுடைய இசைப் புலமையைச் சிறப்பித்து ஆதரித்தலின், “பாடினிவேந்தே” என்றார். 18 - 22. இலங்குமணி................உடனே. உரை : இலங்கு மணி மிடைந்த பொலங்கலம் - விளங்குகின்ற மணிகள் செறிந்த பொன்னாற் செய்யப்பட்ட கலங்களைப் பூண்டு; திகிரி - அரசியலாகிய ஆணையைச் செலுத்தி; கடல் அகவரைப்பின் - கடல்சூழ்ந்த நிலவுலகத்தே; இப்பொழில் முழுதாண்ட - இத் தமிழகத்தை முழுதும் ஆண்ட; நின் முன் திணை முதல்வர்போல - நின்குலத்து முன்னோர்களைப் போல; நின்று - நிலைபெற இருந்து; இவ் வுலகமொடு - இவ்வுலகின் கண்; |