பக்கம் எண் :

76

கெடாஅ    நல்   இசை   நிலைஇ - அழியாத நல்ல புகழை நிறுவி;
உடனே - அதனுடனே; நீ தவா அலியர் - நீமெலிவின்றி வாழ்வாயாக
எ - று.
  

பொலங்கலத்தையும் திகிரியையு முடையராய்ப் பொழில் முழுதாண்ட
என்று    இயைத்தலு    மொன்று.    திகிரி   அரசாணை.   அஃது
இனிதுருளுதற்கு  இடமாய்  நிழல்  செய்தலின்,  கொற்றக் குடையைத்
“திகிரி” யென்றா ரென்றும், திகிரி யென்றதற்கு ஏற்பச் சாதியடையாகப்
பொலங்கலம்  என்று விசேடித்தாரென்றும் கூறுவர். உலக முழுதாண்ட
நின்   முன்னோர்  தம்  ஆட்சி  நலத்தாலும்  வெற்றிச்  சிறப்பாலும்
இறவாப்  புகழ்படைத்து  நிலைபெற்றதுபோல, நீயும் நிலைபெறுகவென
வாழ்த்துவது  கருத்தாகலின், “தவா அலிய, ரோவிவ் வுலகமோடுடனே”
என்றார்   புகழுடம்பு   செல்வமெய்தப்   பூதவுடம்பு   நல்கூர்தலும்
இறத்தலும்  உண்மையின்,  அவை யிலவாய் நிலைபெறுக என்றதற்குத்
“தவா  அலியரோ”  என்றா  ரென  வுணர்க.  தவல், வறுமை நோய்
முதலியவற்றால்  மெலிதல்;  “தவலும் கெடலும் நணித்து” (குறள். 856)
என்பதற்குப் பரிமேலழகர் கூறும் உரை காண்க.
  

சான்றோர்    மெய்ம்மறை; கொடுங்குழை கணவ; உழவ; வேந்தே;
அளப்பரியை;    விளக்கத்தனையை;   கைவண்மையை;   ஆற்றலை;
அதனால் நீ முதல்வர் போல நல்லிசை நிலைஇ, தவா அலியரோ என
முடிக்க.
  

“நிலமுதற்     பூதம் நான்கும் போலப் பெருமை யளத்த லரியை;
நாண்மீன்  முதல் ஐந்தையும் விளக்கத்தால் ஒப்பை; கைவண்மையால்
அக்குரன்    என்பவனை    யொப்பை;    அன்றி,   முன்ப,   நின்
வலியிருக்கும்படி  சொல்லின்  கூற்று வெகுண்டு வரினும் அதனையும்
மாற்றும்    வலியுடையை;    ஆதலால்   சான்றோர்   மெய்ம்மறை,
கொடுங்குழை  கணவ,  படையே  ருழவ,  பாடினி  வேந்தே, நின்குடி
முன்திணை   முதல்வர்போல   நின்று   நல்லிசையை  நிலைப்பித்து
இவ்வுலகத்தோடு கூடக் கெடா தொழிவாயாக என வினைமுடிவு செய்க.
இதனாற்  சொல்லியது,  அவன்  பல  குணங்களையும்  ஆற்றலையும்
ஒருங்குகூறி வாழ்த்தியவாறாயிற்று” என்பர் பழைய வுரைகாரர்.
  

இப்பாட்டின்கண்,  ஒழுகு வண்ணமே யன்றிச் சொற்சீர் வண்ணமும்
பயிலுதலின்,  அதனை  விளக்கலுற்ற பழையவுரை, “அளப் பரியையே
யெனச் சொற்சீரடி வந்தமையாற் சொற்சீர் வண்ணமுமாயிற்று; ஈண்டுச்
சொற்சீரென்றது,    அளவடியிற்    குறைந்தும்   வஞ்சியோசையன்றி
அகவலோசையாயும் வரும் அடியினை” என்று கூறுகின்றது.
  

இதனை  வாழ்த்தியலென்ப ரென்றும், பரவற்கண் வந்த செந்துறைப்
பாடாண்டாட்டென்றும்   ஆசிரியர்  நச்சினார்க்கினியர்,  “வழங்கியன்
மருங்கின்” (தொல். பொ. 82) என்ற நூற்பாவுரையிற் காட்டிக் கூறுவர்.