ஐந்தாம் பத்து - பதிகம் | | வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக் குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன் கடவுள் பத்தினிக் கல்கோள் வேண்டி, கான் நவில் கானம் கணையின் போகி, | 5 | ஆரிய அண்ணலை வீட்டி, பேர் இசை இன் பல் அருவிக் கங்கை மண்ணி இனம் தெரி பல் ஆன் கன்றொடு கொண்டு; மாறா வல்வில் இடும்பில் புறத்து இறுத்து; உறு புலி அன்ன வயவர் வீழ, | 10 | சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி; அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து; பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின் முழாரை முழு முதல் துமியப் பண்ணி, வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர் | 15 | பல் இருங் கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டி; வெந் திறல் ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர் ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து; நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து, | 20 | கெடல்அருந் தானையொடு கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை, கரணம் அமைந்த காசு அறு செய்யுள் பரணர் பாடினார் பத்துப் பாட்டு. | | அவைதாம்:சுடர் வீ வேங்கை, தசும்பு துளங்கு இருக்கை, ஏறா ஏணி, நோய் தபு நோன் தொடை, ஊன் துவை அடிசில், கரை வாய்ப் பருதி, நல் நுதல் விறலியர், பேர் எழில் வாழ்க்கை, செங்கை மறவர், வெருவரு புனல் தார்: இவை பாட்டின் பதிகம். | | பாடிப் பெற்ற பரிசில்:உம்பற் காட்டு வாரியையும், தன்மகன் குட்டுவன் சேரலையும், கொடுத்தான் அக் கோ. | | கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான். | |
|
|