13. |
தொறுத்தவய
லாரல்பிறழ்நவும்
ஏறுபொருதசெறு வுழா துவித்துநவும்
கரும்பின் பாத்திப்
பூத்த நெய்தல்
இருங்க ணெருமையி னிரைதடுக் குநவும் |
5 |
கலிகெழு துணங்கை
யாடிய மருங்கின்
வளைதலை மூதா வாம்ப லார்நவும்
ஒலிதெங்கி னிமிழ்மருதிற்
புனல்வாயிற் பூம்பொய்கைப்
பாடல் சான்ற பயங்கெழு வைப்பின் |
10 |
நாடுகவி
னழிய நாமந் தோற்றிக்
கூற்றடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகிக் |
15 |
கவைத்தலைப்
பேய்மகள் கழுதூர்ந் தியங்க
ஊரிய நெருஞ்சி நீறாடு பறந்தலைத்
தாதெரு மறுத்த கலியழி மன்றத்
துள்ள மழிய
வூக்குநர் மிடறபுத்
துள்ளுநர் பனிக்கும் பாழா யினவே |
20 |
காடே கடவுண்
மேன புறவே
ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
ஆறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
குடிபுறந் தருநர் பார மோம்பி |
25 |
அழல்சென்ற
மருங்கின் வெள்ளி யோடாது மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசியிகந் தொரீஇப்
பூத்தன்று பெருமநீ காத்த நாடே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர்
- பூத்த நெய்தல் (3)
(ப
- ரை) பிறழ்ந (1) எனவும் வித்துந (2) எனவும் தடுக்குந
(4) எனவும் ஆர்ந (6) எனவும் வந்தன. 1வினைப்பெயர்த் திரிசொல்.
3 - 4.
நெய்தல் எருமையின் நிரை தடுக்குநவுமென்றது
நெய்தலானது அக்கரும்பு முதலாய 2மற்றோரிரையின் பாங்கரிற்
செல்லாது தன்னையே நின்று தின்னும்படி தான் போதவுண்ட
எருமை நிரையைத் தடுக்கும் இடங்களுமென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'பூத்த நெய்தல்' என்று பெயராயிற்று.
6. மூதா
ஆம்பலார்நவுமென்றது புறத்துப் போய் இரை
3தெவிட்டாத முதிய ஆக்கள் துணங்கையாடிய இடத்து நின்று (5)
ஆம்பலையே தின்னும் இடங்களுமென்றவாறு.
என்றது
பெருக ஆம்பல் சூடித் துணங்கையாடுவாரை
உடையனவென அவ்விடங்களின் செல்வச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
7. இமிழ்
மருதென்றதற்குப் புள்ளிமிழ் மருதென்று ஒரு பெயர்
வருவிக்க.
8. புனல்வாயில்
- 4வாய்த்தலை.
1 - 10.
ஒலிதெங்கென்னும் பெயர்க்கு முன்னின்ற பெயர்கள்
எண்ணும்மையோடு நின்றமையால் அவற்றையுடைய நாடென
இரண்டாவதன் தொகையாய், அச்சொல் (?)
...................அவற்றையெல்லாம் எழுவா யாக்க
நாட்டிற்கு அவ்விடங்கள்
சினையாகலின், நாடு கவினழியவென்னும் முதற் பயனிலையோடு
5வழுவமைதியாக முடிக்க.
10 -
11. கூற்றடூஉ நின்ற யாக்கைபோல நாடு கவினழியவென
மாறிக் கூட்டிக் கூற்றுவனாலே கொல்லப்படாநின்ற யாக்கை ஒரு
காலைக்கு ஒருகால் அழகழியுமாறுபோல, நாடு அழகழியும்படியென
உரைக்க.
இனி,
மாறாதே போலும்படி யென, போலவென்பதனை
வினையெச்ச நீர்மையாக்கி, போல்கின்றது மேல்வருகின்ற பாக்கமாக
உரைப்பினும் அமையும். 6இனி, கூற்றுவனை அட்டுநின்ற யாக்கையை
உடையானொருவன் உளனாயினும் அவனைப்போல நீ
சிவந்தென்றுரைப்பாரும் உளர்.
12.
நீரழி பாக்கமென்றது 7வெள்ளத்தான் அழிவுபடினல்லாது
பகைவரான் அழியாத பாக்கமென்றவாறு.
பாக்கமென்றது
நெய்தனிலத்து ஊர்க்கேயன்றி, 8"கட்கொண்டிக்
குடிப்பாக்கத்து, நற்கொற்கை" (மதுரைக்.
137-8) என்று வந்தமை யான்
ஒரோவழி 9அரசனிருப்புக்கும் பெயராமாகலின் ஈண்டு பாக்கமுடைய
பேரூர்களெனப்பட்டது.
14.
உடைபோகவெனத் திரிக்க.
17-9.
மன்றத்து உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து
உள்ளுநர் பனிக்கும் பாழென்றது அம்மன்றிலே போதற்கு உள்ளம்
10அழியச் செய்தே பின்னும் தம் கரும வேட்கையாற் போக
மேற்கொண்டவருடைய வலியைக் கெடுத்தலானே பின்பு போக
நினைப்பார் நடுங்குதற்குக் காரணமாகிய பாழென்றவாறு.
18. தபுத்து:
தபுக்கவெனத் திரிக்க.
20. காடே
கடவுள் மேனவென்றது நின் நாட்டுப் பெருங்காடான
இடங்களெல்லாம் (முதற்காலத்துக்) கோயில்களான வென்றவாறு.
மேயினவென்பது
மேனவென்று இடைக் குறைந்தது.
20-21.
புறவு மகளிரொடு மள்ளர்மேனவென்றது சிறுகாடான
இடங்களெல்லாம் நின்படையாளர்கள் மகளிரொடு உறையும் 11படை நிலைகளாயின
வென்றவாறு.
22. ஆறே
அவ்வனைத்தென்றது காடும் புறவும் அல்லாத
பெருவழிகளும், ஆறலைகள்வரும் 12பிற இடையூறுமின்றி
முன்சொன்ன கடவுளும் மள்ளரும் உறையும் இடமாயின வென்றவாறு.
அனைத்தென்னாது
அவ்வனைத்தென்று சுட்டு இரட்டித்தது
அந்த அந்தத் தன்மையதென முன்நின்றவற்றின் பன்மை
தோற்றற்கென்பது.
23. தாராவென்பது
தராவெனக் குறுகிற்று.
24. குடிபுறந்தருநரென்றது
தம் 13கீழ்க்குடிகளாகிய
வரிசையாளரைப் புறந்தரும் மேற்குடிகளாகிய காணியாளரை.
பாரமோம்பி
(24) நீ காத்த (28) என மாறிக் கூட்டுக.
வெள்ளி
யோடாமல் (25) எனவும் பசியிகந்தொருவ (27)
எனவும் திரிக்க.
22-6.
இனி, ஆறு முன் சொன்ன அவ்வனைத்தாவதுமன்றி
ஆறலை கள்வரின்றிக் கூல் பகர்வார் இயங்கும்படியான வழக்காலே
அந்தக் கூலம் பகர்வார் குடிகளைப் புறந்தந்தென்றும், குடிபுறந்தருநர்
பாரத்தை ஓம்பி மழைவேண்டு புலத்து மாரிநிற்பவென்றும், கூலம்
பகர்நர் குடிபுறந்தருதலை ஆற்றின் தொழிலாகவும் குடிபுறந்தருநர்
பாரமோம்புதலை மழையின் தொழிலாகவும் கூட்டி உரைப்பாரும்
உளர்.
கூற்றடூஉநின்ற
யாக்கைபோல (11) நாடுகவினழிய நாமந்தோற்றி
(10) நீ சிவந்திறுத்த நீரழி பாக்கங்கள் (12) கழனி புல்லெனக் (13)
காருடைபோகக் (14) கழுது ஊர்ந்து இயங்கப் (15) பாழாயின (19); நீ
காத்த நாட்டிற் (28) காடு கடவுளான் மேவப்பட்டன (20); அந்நாட்டுப்
புறவுகள் மள்ளரான் மேவப்பட்டன. (21); அந்நாட்டு ஆறு
அவ்வனைத்தாயிற்று; அன்றியும் (22) கூலம்பகர்நர் குடிபுறந்தராக்(23)
குடிபுறந்தருநர் பாரமோம்பி (24) நீ காத்த நாடு (28), மழைவேண்டிய
புலத்து மாரிநிற்ப (26) நோயொடு பசியிகந்தொருவப் (27) பூத்தது (28)
எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச் சிறப்பும் தன்
நாடுகாத்தற் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.
'தொறுத்த'
(1) என்றும், 'ஏறுபொருத' (2) என்றும், ஒலிதெங்கின்'
(7) என்றும், 'புனல்வாயில்' (8) என்றும், இருந்த நான்கடியும்
வஞ்சியடியான் வந்தமையான், வஞ்சித்தூக்குமாயிற்று.
(கு
- ரை) 1-10. பகைவர் நாட்டின் பழையநிலை கூறப்படும்.
1. தொறுத்த
வயல்-ஆட்டுக்கிடைகட்டிய வயல்கள்; தொறு -
ஆடு. ஆரல் பிறழ்ந - தம்பால் நீர் நிரம்பி நிற்றலின், ஆரல்மீன்
உகளுவதற்கு இடமாயிருப்பவை.
2. ஏறு
தம்முட் பொருதமையினாலே வயல் சேறு பட்டு
உழவேண்டாதனவாயின; செறு-வயல் (பெரும்பாண்.
210-11)
3. பாத்தியின்கண்
பூத்த நெய்தல். கரும்பின் பாத்தி; குறுந்.
262 : 7, குறிப்புரை
4. எருமையின்
நிரை - எருமையின் வரிசை.
5-6.
ஆரவாரம் மிக்க துணங்கைக் கூத்தை மகளிர் ஆடிய
இடங்களில் அவர்கள் அணிந்து வீழ்த்திய ஆம்பல்மலர்களை
வளைந்த தலையை யுடைய முதிர்ந்த பசுக்கள் உண்டன. துணங்கை;
"மகளிர் தழீஇய துணங்கை யானும்" (குறுந்.
31 : :2) என்பதன் உரை
முதலியவற்றைப் பார்க்க.
7. ஒலித்தல்
- தழைத்தல் என்பதற்கு மேற்கோள் (சீவக,
653, ந.)
7-10.
ஒலி தெங்கு- தழைத்த தென்னை. இமிழ் மருது - கிளி
முதலிய பறவைகள் ஒலிக்கின்ற மருதமரம். வைப்பு - ஊர்கள். கவின்
- அழகு. நாமம்-அச்சம்.
1-10.
பிறழ்ந, வித்துந, தடுக்குந, ஆர்ந: வினையாலனையும்
பெயர்கள். பிறழ்ந முதலியவற்றையும், தெங்கையும், மருதையும்,
பொய்கையையும், வைப்பையும் உடைய நாடு.
11-9.
பகைவர் நாடு அழிந்தபின் நின்ற நிலை கூறப்படும்.
11. கூற்றால்
அடப்பட்டு நின்ற உடலைப்போல; என்றது
பிணத்தை.
12. சிவந்து-கோபித்து,
நீரழி பாக்கம்: உரையைப் பார்க்க; தமது
இயல்பான நீர்மை அழிந்த ஊர்கள் எனலும், நீர்நிலைகள் அழிந்த
ஊர்கள் எனலும் ஆகும். சிவப்பென்னும் உரிச்சொல்
வெகுளிப்பொருளில் வருவதற்கு மேற்கோள் (தொல்.
உரி. 74, ந.)
13. புல்லென-பொலிவழிய.
14. திரிந்த
காயையுடைய விடத்தேரையென்னும் முள்மரத்தோடு
கரிய உடைமரமும் வளரப்பெற்று; விடத்தர், உடை : முள்
மரவகைகள். விடத்தர் என்பது விடத்தேர், விடத்தேரை, விடத்தே
தொடரி எனவும் வழங்கும் (பெரும்பாண். 184
- 5, ந. குறிப்புரை).
போகல் என்னும் உரிச்சொல் நெடுமையை உணர்த்துதற்கு மேற்கோள்
(தொல். உரி. 19, 91, ந.)
15. 'கவைத்தாட்
பேய்மகள்' என்பது பெருவழக்கு. பேய்மகள்
பேயை ஊர்ந்து செல்ல. பேய்மகளும் கழுதும் பரந்து செல்ல எனலும்
ஆம்.
16. ஊரிய-பரந்த.
நெருஞ்சியை யுடைய பறந்தலை, நீறாடு
பறந்தலை என்க; நீறு-புழுதி. பறந்தலை-வறுங்களம்.
17. சாணம்
இல்லையான, ஆரவாரம் அழிந்த மன்றம்; மன்றம்
பசுக்கள் தங்கும் இடம். முன்பு தாதெரு நிறைந்து கலிமிக்க மன்றமாக
இருந்தது. இப்பொழுது அவ்விரண்டும் இலதாயிற்று.
18. உள்ளம்-மனவெழுச்சி.
மிடல் தபுத்து வலியை அழித்து.
19. பனிக்கும்-நடுங்கும்.
11-9.
பாக்கம் யாக்கைபோல, போகி, இயங்க, பறந்தலையையும்
மன்றத்தையுமுடைய பாழ்நிலமாயின; உரையாசிரியர்வேறு முடிபு
கூறுவர்.
20-28.
சேரமன்னனாற் பாதுகாக்கப்பட்ட நாட்டின் நிலை
கூறப்படும்.
20. காடு-பெருங்காடு.
மேன - மேயின = விரும்பப்பட்டன.
புறவு - சிறுகாடு.
21. மள்ளர்-வீரர்.
20-21. சீவக.
2578, ந. மேற்.
22. ஆறு-பெருவழி.
அவ்வனைத்து : முற்று.
23. கூலம் பகர்நர்-நெல்
முதலிய பண்டங்களை விற்கும்
வணிகர். புறந்தரா-பாதுகாத்து.
24. குடிபுறந்தருநரென்றது
வேளாளரை. பாரம் இங்கே
குடும்பத்தைக் குறித்தது; "பகடுபுறந் தருநர் பார மோம்பி"
(புறநா. 35 : 32)
25. அழல்-செவ்வாய்.
வெள்ளி-சுக்கிரன். செவ்வாயும் சுக்கிரனும்
சேர்ந்தால் மழை இலதாகும் என்பது சோதிட நூற்றுணிபு.
26. புலம்-இடம்.
மாரி நிற்ப- மழை பெய்ய.
27. நோயும் பசியும்
நீங்கல் ஒரு நாட்டுக்கு இலக்கணம்
(குறள், 734; சிலப்.
5 : 72; மணி. 1 : 71). இகந்து ஒரீஇ -
விட்டு
நீங்க; ஒரீஇ : எச்சத்திரிபு.
28 பூத்தன்று-பொலிவு
பெற்றது.
23-8. புறந்தரா,
ஓம்பி, காத்த நாடு, ஓடாது நிற்ப ஒரீஇப்
பூத்தன்று.
மு.
'இதனுள் மறத்திற் சென்று நாட்டை அழித்தவாறும்,
அறத்திற்றிரிந்த வேந்தனை அழித்து அவன் நாட்டைக் குடியோம்பிக்
காத்தவாறும் கூறிற்று' (தொல். புறத். 20,
ந.)
(பி
- ம்) 1. தொறுத்தகு நீள்வயல். 16. ஊறிய நெருஞ்சி. 24.
குடிபுறந்தாரா. (3)
1
வினைப்பெயர் - வினையாலணையும் பெயர்.
2
“செலல் விலங்குதேன்" (தக்க.
360) என்பதும், 'தன்னை
விட்டுப் போகையை விலக்கும் தேன்' என்னும் அதன் உரையும்
இதனோடு ஒப்பிடற்பாலன.
3
தெவிட்டாத - உண்டு அசைபோடாத. 'இரைதேர மாட்டாத'
என்றிருப்பின் நலம்.
4
வாய்த்தலை - வாய்க்காலின் தலைப்பு; வாத்தலை என
இப்பொழுது வழங்கும்.
5
வழுவமைதி என்றது சினைப்பெயர்கள் முதற்பயனிலையோடு
முடிந்தமையை.
6
இப்பொருள் சிறப்புடையதன்று.
7
“செந்நீர்ப் பூச வல்லது, வெம்மை யரிதுநின் னகன்றலை
நாடே” (பதிற். 28
: 13 - 4), “தண்புனற் பூச லல்லது நொந்து,
களைகவாழி வளவ வென்றுநின், முனைதரு பூசல் கனவினு மறியாது”.
(புறநா. 42 : 7
- 9) என்பவற்றை இவ்வுரை நினைப்பிக்கின்றது.
8
இங்கே காட்டிய பகுதிக்கு நச்சினார்க்கினியர்,
'கள்ளாகிய
உணவினையுடைய இழிந்த குடிகளையுடைய சீறூர்களையுமுடைய
நன்றாகிய கொற்கை' என உரை வகுத்தார்.
9
அரசனிருப்பு - இராசதானி
10
அழியச் செய்தே - அழிந்துகொண்டிருக்கும்போதே;
இச்சொல் அழியச்சே என வழங்கும்.
11
படைநிலை - படை தங்குமிடம்; இதனைப் பாடி என்றும்,
கைந்நிலை என்றும் வழங்குவர்.
12
பிற இடையூறுகளாவன: இடி வீழ்ச்சி, அரவு, காட்டுவிலங்கு
முதலியவற்றால் வருந்துன்பங்கள் (பெரும்பாண்.
39 - 43; சிலப்.
13 - 5 - 9)
13
கீழ்க்குடிகளென்றது உழுதுண்ணும் வேளாளரையும்,
மேற்குடிகளென்றது உழுவித்துண்ணும் வேளாளரையும் குறித்தன.
வரிசையாளர்-வாரம் முதலிய பகுதி தருபவர்; காணியாளர் -
நிலத்துக்குரியோர். இவ்விரு வகையினரையும், “வீழ்குடி யுழவர்”
(சிலப். 5 :
43) என இளங்கோவடிகளும் குறித்தனர்.
|