முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
17. புரைவது நினைப்பிற் புரைவதோ வின்றே
பெரிய தப்புந ராயினும் பகைவர்
பணிந்துதிறை பகரக் கொள்ளுநை யாதலிற்
றுளங்குபிசி ருடைய மாக்கட னீக்கிக்
 5 கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பணை
ஆடுநர் பெயர்ந்துவந் தரும்பலி தூஉய்க்
கடிப்புக் கண்ணுறூஉந் தொடித்தோ ளியவர்
அரணங் காணாது மாதிரந் துழைஇய
நனந்தலைப் பைஞ்ஞிலம் வருகவிந் நிழலென
 10 ஞாயிறு புகன்ற தீதுதீர் சிறப்பின்
அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக்
கடுங்கால் கொட்கு நன்பெரும் பரப்பின்
விசும்புதோய் வெண்குடை நுவலும்
பசும்பூண் மார்ப பாடினி வேந்தே.

     இதுவுமது.பெயர் - வலம்படு வியன்பணை (5)

     (ப - ரை) 5. வலம்படு வியன்பணையென்றது 1போர் செய்து வருந்தாமற் பகைவர் வெருவியோட முழங்கி அரசனுக்கு வென்றி
தன்பாலே படநின்ற முரசமென்றவாறு.

     இச்சிறப்பான் இதற்கு, 'வலம்படு வியன்பணை' என்று
பெயராயிற்று.

     6. ஆடுநரென்றது 2வினையெச்சமுற்று வினைத்திரிசொல்.
அமிழ்து திகழ் மழையென முடிக்க.

     3அமிழ்தென்றது நீர். தலைஇயென்பதனைத் தலையவெனத் திரிக்க.

     13. வெண்குடைநுவலுமென்றது வெண்குடையின்
4அருட்சிறப்பைச் சொல்லுமென்றவாறு.

     13-4. நுவலும் மார்பவென முடிக்க.

     இஃது 4ஏதுப்பெயர்.

     வியன்பணையைக் (5) கடிப்பைக் கண்ணுறும் இயவர் (7),
'அரணங் காணாது மாதிரந் துழைஇய (8) பைஞ்ஞிலம்
இந்நிழற்கண்ணே வருக' எனச் சொல்லி (9) வெண்குடையின்
அருட்சிறப்பைச் சொல்லுதற்குக் காரணமாய்நின்ற (13)
பசும்பூண்மார்ப, பாடினிவேந்தே (14), நினக்குப் புரைவது நினைப்பிற்
(1) பகைவர் பெரிய தப்புநராயினும் (2) பணிந்து திரைபகரக்
கொள்ளுநையாதலின், (3), புரைவதோ வின்று (1) என மாறிக்கூட்டி
வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது பொறையுடைமையொடு படுத்து அவன்
வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. புரைவது நினைப்பின் - நின்னைப்
பொறுமையினால் ஒப்பதாகிய பொருளை ஆலோசித்தால். 'புரைவது
இன்று - அங்ஙனம் ஒப்பாம் பொருள் யாண்டும் இல்லை.

     2-3 பகைவர்: எழுவாய். பெரிய தப்புநராயினும் -
பெரியனவாகிய பிழைகளைச் செய்தனரேனும். திறை பகர - நினக்குத்
திறையை வெளிப்படையாக அளிக்க. கொள்ளுநை - நின் சினம் மாறி
அத்திறைகளை ஏற்றுக் கொள்ளுவாய்.

     1-3. பெரும்பிழை செய்த பகைவராயினும் அவர் தன்னைப்
பணியும் காலத்து அவர் பிழையை மறந்து ஒழுகுபவனென்ற படி:
"இணரெரி தோய்வன்ன வின்னா செயினும். புணரின் வெகுளாமை
நன்று" (குறள், 308)

     4-5. பிசிர் உடைய - துளித்துளியாகச் சிதறும்படி (பதிற்.
11 : 1) கடம்பு சேரனது பகைவருக்குரிய காவல்மரம். கடலரணிடையே
இருந்த பகைவராதலின் கடலை நீக்கிச் சென்று அம்மரத்தை
அறுத்தனன்: நீக்கி - கடந்து. வலம் - வெற்றி. சேரன் கடல்கடந்து
சென்று கடம்பறுத்த செய்தி, "இருமுந்நீர்த்
துருத்தியுள்.......நெடுஞ்சேரலாதன் (பதிற். 20 : 2 - 5), "வலம்படு
முரசிற் சேர லாதன், முந்நீ ரோட்டிக் கடம்பறுத்து", சால்பொருந்
தானைச் சேரலாதன், மால்கட லோட்டிக் கடம்பறுத் தியற்றிய,
பண்ணமை முரசு" (அகநா. 127 : 3-4, 347 : 4-6), "கடற்கடம்பெறிந்த
காவலன்" (சிலப். 23 : 81) என்பவற்றாலும் உணரப்படும்.

     பகைவரது காவல்மரத்தால் முரசு செய்தல்: பதிற். 11 : 12-4,
குறிப்புரை. வலம்படுபணை: புறநா. 304 : 9.

     5-7 பணைக்குப் பலிதூவி. ஆடுநர் - ஆடுவாராகி. பலி - மலர்
முதலிய பூசைக்குரிய பொருள்கள்; "உருவச் செந்தினை குருதியொடு
தூஉய்,

     மண்ணுறு முரசங் கண்பெயர்த்து" (பதிற். 19 : 6-7) எனப்
பின்னரும் வருதல் காண்க. முரசைப் பூசித்தல் : "கோற்றொழில்
வேந்தன் கொற்ற முரசம், பெரும்பணைக் கொட்டிலு
ளரும்பலியோச்சி" (பெருங். 2. 2:29-30). கடிப்பு-முரசை அடிக்கும்
குறுந்தடி. அதனைக் கண்ணுற்றது எடுத்து அடிப்பதற்கு. இயவர்
இங்ஙனம் செய்தல் 19-ஆம் பாட்டாற் புலப்படும். இயவர்-அதனை
அடித்தற்குரிய வள்ளுவர்; எழுவாய். ஆடுவாராகிப் பணைக்கப்
பலி தூவிக் கடிப்பைக் கண்ணுற்றுப் பின்வருவனவற்றைக் கூறினர்.

     8-9. இயவர் கூற்று. அரணம் - பாதுகாப்பு. மாதிரம் துழைஇய
- திசைகளெல்லாம் சென்று தேடிய. நனந்தலைப் பைஞ்ஞிலம் -
விரிந்த இடமாகிய உலகிலுள்ள மக்கட்டொகுதி. இந்நிழலென்றது
சேரலாதன் குடை நிழலை. என (9), நுவலும் (12) என்று முடிக்க.

     10-13. ஞாயிறு புகன்ற விசும்பு; தீதுதீர் சிறப்பின் விசும்பு;
புகன்ற - விரும்பிய. அமிழ்து - நீர். கருவிய - நீர் முதலிய
தொகுதியை உடைய. கணமழை - மேகக்கூட்டம். தலைஇ - பெய்ய;
எச்சத்திரிபு. கடுங்கால் கொட்கும் - வேகமாகிய காற்றுச்சுழன்று
அடிக்கும். ஞாயிறு புகலுதல் முதலியன விசும்புக்கு அடை.
ஞாயிற்றின் வெயிலாலும், மேகத்தின் மழையாலும், காற்றின்
வேகத்தாலும் தடையுறாது நின்று பாதுகாக்கும் குடையென்பது
குறிப்பு. நுவலும் - புகழும். இயவர் (7) நுவலும் என்க.

     14. பசும்பூண் - பசும்பொன்னாலாகிய பதக்கம். பாடினி வேந்து:
பதிற் 14 : 17, குறிப்புரை.

     தன்பாற் புக்கோரைப் பாதுகாக்கும் அறிவுடையானென்பதை
அவன் இயல்பாகவும் அவனது குடையின் இயல்பாகவும்
கூறிப்
பாராட்டியவாறு.

     (பி - ம்) 1. புரைவதோ வன்றே 9. பஞ்ஞிலம் (7)


     1"வலனிரங்கு முரசு" (பரி. 7 : 6) என்பதற்கு, 'வெற்றியுண்டாக ஒலிக்கும் முரசு' எனப் பரிமேலழகர் எழுதிய உரை இங்கே ஒப்பு நோக்குதற்குரியது.

     2"வானின் றுலகம் வழங்கி வருதலாற், றானமிழ்த மென்றுணரற் பாற்று" (குறள். 11) என்பது இங்கே நினைத்தற்குரியது.

     3உலகத்திலுள்ளார் யாராயினும் தன் நிழற்கீழ் வரின்
பாதுகாக்கும் தன்மையாதலின் 'தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேற்
செல்வதாய' (
குறள். 757, பரிமேல்.) அருளுடையதாயிற்று.
சேரலாதனது அருளைக் குடைமேலேற்றியது இலக்கணை.

     4ஏதுப்பெயரென்றது மார்ப என்பதை. ஏதுப்பெயர் - காரணப்
பெயர். நுவலுமென்னும் எச்சம் மார்பவென்பதைக் கொண்டு முடிந்தது.
நுவலுதற்குக் காரணமாகிய மார்பவென்னும் பொருள்படுதலின் இங்கே
நுவலும் வினைக்கு அப்பெயர்ப் பொருள் ஏதுவாயிற்று. தன்னை
அடைந்தோரைக் காத்தற்கு மார்பின் வலி காரணமாயிற்று; "மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப், பரிசிலர்த் தாங்கு முருகெழு
நெடுவேஎள்" (
முருகு. 272 - 3), 'கொடுக்கும் பொருள் மார்பின்
வலியான் உளதாமாகலின், அகல நோக்கின வென்றதாகக் கொள்க'

(புறநா. 155 : 9. உரை) என்பவற்றையும் காண்க.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

7. வலம்படு வியன்பணை
 
17.புரைவது நினைப்பிற் புரைவதோ வின்றே
பெரிய தப்புந ராயினும் பகைவர்
பணிந்துதிறை பகரக் கொள்ளுநை யாதலின்
துளங்குபிசி ருடைய மாக்கட னீக்கிக்
 
5கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பணை
ஆடுநர் பெயர்ந்துவந் தரும்பலி தூஉய்க்
கடிப்புக் கண்ணுறூஉந் தொடித்தோ ளியவர்
அரணங் காணாது மாதிரந் துழைஇய
நனந்தலைப் பைஞ்ஞிலம் வருகவிந் நிழலென
 
10ஞாயிறு புகன்ற தீதுதீர் சிறப்பின்
அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக்
கடுங்கால் கொட்கு நன்பெரும் பரப்பின்
விசும்புதோய் வெண்குடை நுவலும்
பசும்பூண் மார்ப பாடினி வேந்தே.
 

இதுவு மது.

பெயர் : வலம்படுவியன்பணை.

1 - 7. துளங்குபிசிர்...............இயவர்.

உரை : துளங்கு பிசிர் உடைய - அலைகின்ற அலைகள் சிறு சிறு
திவலையாகவுடையும்படி;  மாக்கடல்  நீக்கி  - கரிய கடலைக் கடந்து
சென்று;  கடம்பு அறுத்து - ஆங்கே யிருந்து கொண்டு குறும்புசெய்து
திரிந்த   பகைவரது  காவல்  மரமாகிய  கடம்பினை  வெட்டிவீழ்த்து;
இயற்றியவலம்படு    வியன்பணை    -   அதனால்   செய்யப்பட்ட
வெற்றிதரும்   பெரிய  முரசுக்கு;  ஆடுநர்  -  பகைவரை  வெல்லும்
போர்வீரர்; பெயர்ந்து வந்து - திரும்பப் போந்து; அரும்பலி தூஉய் -
அரிய    பலியினையிட்டுப்    பரவ;    கடிப்புக்கண்   உறூஉம்  -
கடிப்பினைக்கொண்டு  அம்  முரசின்  கண்ணில் அறைந்து முழக்கும்;
தொடித் தோள் இயவர் - தொடியணிந்த தோளையுடைய இயவர்கள்;

துளங்குதல்,     அசைதல். துளங்குதலை   இடையறவின்றியுடைய
அலையைத்   துளங்கு   என்றது  ஆகுபெயர்;  “வரைமருள்  புணரி
வான்பிசிருடைய”     (11)     என்று     பிறாண்டும்      கூறினர்.
கடலையரணாகக்கொண்டிருந்த  பகைவராதலின்,  அது  கடந்துசென்று
அவரைத்  தாக்கிய சிறப்பை, “மாக்கடல் நீக்கி” என்றார். பகைவர்க்கு
அரணாயிருந்த   நிலையினைக்  கெடுத்து  அவரை  அண்மிச்சென்று
தாக்குதற்கு  நெறியாயினது  பற்றி  “நீக்கி”  யென்றுமாம்.  மாக்கடல்,
பெருங்கட     லென்றுமாம்.      அக்      கடம்பர்      கடலை
யரணாகக்கொண்டிருந்ததனை,      “இருமுந்நீர்த்       துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று, கடம்புமுதல் தடிந்த நெடுஞ்சேரலாதன்”
(20)  என்று  பிறாண்டுக்  கூறுதல் காண்க. அக் கடம்பினைத் தடிந்து
முரசு  செய்துகொண்ட  செய்தியைச் “சால்பெருந்தானைச் சேரலாதன்,
மாக்கடலோட்டிக் கடம்பறுத்தியற்றிய, பண்ணமை முரசு” (அகம். 347)
என்று   பிறரும்   கூறுவர்.   பகைவரைப்   பொருதழித்துப்  பெற்ற
வெற்றிக்குறியாகச்  செய்த பெருமுரசாதலால், “வலம்படு வியன்பணை”
யென்றார்.   இனிப்   பழையவுரைகாரர்,   “வலம்படும் வியன்பணை
யென்றது  போர் செய்து வருந்தாமற் பகைவர் வெருவியோட முழக்கி
அரசனுக்கு   வெற்றி   தன்பாலே   படநின்ற   முரசமென்றவாறு  ;
இச்சிறப்பானே இதற்கு இப்பாட்டிற்கு, வலம்படு வியன்பணை யென்று
பெயராயிற்று” என்பர். “வலன் இலங்கு முரசின் வாய் வாள் வளவன்”
(புறம்   60)   என்று   பிறரும்   கூறுதல்   காண்க.  பகைவர்க்குக்
காவலாயிருந்தது  போய்த்  தமக்கு  முரசாய் வெற்றி முழக்கம் செய்து
தன்னை  யோம்பிய  அப்  பகைவர்  அஞ்சி   யோடச்செய்வதுபற்றி,
“வலம்படு  வியன் பணை” யென இதற்குப் பெயராயிற்றெனக் கோடல்
சீரிதாம்.
 

ஆடுநர்,   வெற்றி பயக்கும் போர் வீரர். போரிடத்தே தாம் பெற்ற
வென்றி   குறித்து   அவர்கள்   பலி  தூவி  முரசினை  வழிபடுதல்
மரபாதலின்,  “ஆடுநர் பெயர்ந்துவந் தரும்பலி தூஉய்” என்றார். தூவ
என்பது  தூஉய்  என  நின்றது.  “பெயர்ந்து  வந்து” எனவே, அவர்
சேரலாதனுடன்   சென்று  பொருது  பகைவரை  யழித்தவ  ரென்பது
பெற்றாம்.  “ஆடுநர்  என்றது வினையெச்சமுற்று வினைத் திரிசொல்”
என்று  பழையவுரை கூறும். கூறவே, இயவர் ஆடுநராய்ப் பலிதூஉய்க்
கடிப்புக்  கண்ணுறுவர்  என்று  அவ்வுரைகாரர்  கருதுமாறு பெற்றாம்.
இயவர்  பெயர்ந்து  வந்து  பலிதூஉய் ஆடுவாராய்க் கடிப்புக்கொண்டு
முழக்குவரென்று கொள்க.

மறி     யறுத்து அதன் குருதியில் செந்தினை கலந்து பூத்தூவிப்
பரவுபவாதலின்,  “அரும்பலி  தூஉய்”  என்றார். “உருவச் செந்தினை
குருதியொடு  தூஉய்  மண்ணுறு  முரசம்  கண்பெயர்த்து”  (பதிற். 19)
என்றும், “பொன்புனை யுழிஞை சூடி மறியருந்தும், திண்பிணி முரசம்”
(பு. வெ. மா. 98) என்றும் வருதல் காண்க. இயவர், இயம் இயம்புபவர்.
முரசு   முழக்குவோரை  வள்ளுவர்  என்பவாதலின்,  இவ்  வியவரை
வள்ளுவ ரென்று கொள்வாரு முளர்.

8 - 14. அரணம்..............வேந்தே.

உரை : ஞாயிறு   புகன்ற  -  ஞாயிறு   பகையாகிய  இருளைக்
கெடுப்பான்  விரும்பிச்  செல்லும்; தீது தீர் சிறப்பின் - குற்றமில்லாத
சிறப்பினையும்;  அமிழ்து  திகழ்  கருவிய  கணமழை  தலைஇ - நீர்
நிரம்பக்கொண்டு  திரண்டெழும்  முகிற்  கணம் பரவுமாறு; கடுங்கால்
கொட்கும்  -  மிக்க  காற்று  நிலவும்; நன் பெரும் பரப்பின் - நல்ல
பெரிய பரப்பினையுமுடைய; விசும்பு தோய் வெண்குடை - வானளாவி
நிழல்  செய்யும்  நின்  வெண்குடையைச்  சுட்டி;  அரணம் காணாது
மாதிரம்  துழைஇய அரணாவது ஒன்றனையும் காணாது அதுகுறித்துத்
திக்கனைத்தும்  தேடி  யலையும்; நனந்தலைப் பைஞ்ஞிலம் - விரிந்த
இடத்தையுடைய  பசுமையான  நிலத்து வாழும்  மக்களெல்லாம்; இந்
நிழல் வருக  என நுவலும் - இக்குடை நிழற்கண்ணே வருவார்களாக
என்று  சொல்லிப்  பரவுதற் கேதுவாகிய;  பசும் பூண் மார்ப - பசிய
பூணணிந்த  மார்பினையுடையோய்;  பாடினிவேந்தே  -  பாடினிக்கு
அவள் வரிசையறிந்து சிறப்பிக்கும் அரசே எ - று.

பகைவராகிய    இருளைக் கெடுத்தற்கு விரும்பி, அவர் நேர்படும்
போர்க்குச்  செல்வதுபற்றி  அவர்களைப் “போரெனிற் புகலும் மறவர்”
(புறம்.  31)  என்பது  போல,  இருள்  கெடுப்பான் ஞாயிறு விரும்பிச்
செல்லும்  விசும்பினை,  “ஞாயிறு  புகன்ற விசும்பு” என்றார். ஞாயிறு
புகன்  றெழுதலால்,  தன்கட் படிந்த இருள் நீங்கி விளக்க முறுதலால்,
“தீ துசீர் சிறப்பின் விசும்பு” என்றார். “மாகஞ் சுடர மாவிசும் புகக்கும்
ஞாயிறு”  (பதிற். 88) என்று பிறரும் கூறுதல் காண்க. அமிழ்து, மழை
நிர்;    “வானின்    றுலகம்    வழங்கி    வருதலாற்   றானமிழ்த 
மென் றுணரற்     பாற்று”   (குறள். 11)   என்றார்   திருவள்ளுவர்.
தலைஇய  என்பது   தலைஇ  எனத் திரிந்தது. கொட்குதல் - சுழன்று
மோதுதல்.  மழைக் கணம் பரவி அமிழ்து பொழிதற்கிடம் தருதல்பற்றி
“நல்   விசும்பு”  என்றும்,  ஞாயிறும்  திங்களும்  இயங்கி  முறையே
பகலினும்  இரவினும்  நல்லொளி  செய்து  உலகுயிர்களை யோம்புதற்
கிடமாகும்.   பெருமையுடைமையின்   “பெரும்   பரப்பின்  விசும்பு”
என்றும் கூறினார்.
 

அமிழ்து     திகழ் கணமழை   நிலவும்  விசும்பிடத்தே தோயும்
வெண்குடையென்றது,  வெண்குடை நிழலும் அமிழ்த நீழல் என்றற்கு;
“முழுமதிக்  குடையின்  அமுதுபொதி  நீழல், எழுபொழில் வளர்க்கும்
புகழ்சால்  வளவன்”  (தொல்.  பொ.  அக.  நச். மேற்) என வருதல்
காண்க.

பகைவர்     நாட்டு மக்கள்  இவ்  வேந்தனுக்கு அஞ்சித் தமக்கு
அரணாவாரைப்    பெறாமையால்   உலகமுற்றும்   சுற்றி  யலைந்து
வருந்துதல் கண்டு இரங்கி அவர்கட்குப் புகல் கூறுமாற்றால், “அரணம்
காணாது   மாதிரந்   துழைஇய   நனந்தலைப்   பைஞ்ஞிலம் வருக
விந்நிழல்” என இயவர் கூறுவாராயினர். பைந்நிலம், பைஞ்ஞிலம் என
வந்தது    மரூஉ.   ‘நுவலும்’   என்பது   நுவறற்குக்  காரணமாகிய
சேரலாதனது மார்பென்னும் பெயர் கொண்டது. “நுவலும் மார்ப வென
முடிக்க;   இஃது  ஏதுப்பெயர்”  என்பர்  பழையவுரைகாரர். “இஃது”
என்றது,  மார்ப  என்னும்  பெயரை  யென்க.  வெண்குடை நுவலும்
என்றது,  “வெண்குடையின்  அருட் சிறப்பைச் சொல்லும் என்றவாறு”
என்பது பழையவுரை.

1 - 3. புரைவது........யாதலின்.

உரை : பகைவர்  பெரிய தப்புந ராயினும் - நின்  பகைவராயினும்
பொறுத்தற்கரிய பெரும் பிழை செய்தாராயினும்; பணிந்து  திறை பகரக்
கொள்ளுநை   -  அப்  பிழையினை   யுணர்ந்து  வருந்தி  நின்பால்
அடைந்து பணிந்து நின்று திறை செலுத்த  அவரைப் பொறுத்து அவர்
செலுத்தும் அத்திறையினை ஏற்றருளுகின்றாய்;  ஆதலின் - ஆதலால்;
புரைவது   நினைப்பின்   -  நின்  அருட்கு  ஒப்பாவ  தொன்றனை
ஆராய்ந்து காணலுறின்; புரைவதோ இன்று - உயர்பும் ஒப்பும் உடைய
தொன்றும் இ்ல்லை எ - று.

உவமமும்   பொருளும் ஒத்திருத்தல் வேண்டி, நின்னருளாட்சிக்கு
ஒப்பதொன்று  மின்மையின்,  உயர்ந்ததேனும்  உளதோ வென நன்கு
ஆராய்ந்து    காணவேண்டி    யிருக்கின்ற   தென்பார்,  “புரைவது
நினைப்பின்”  என்றும், அவ்வாறு கண்டவழி உயர்ந்ததால் ஒப்பதாதல்
இல்லையென்பது  துணியப்பட்ட  தென்றற்கு,  “புரைவதோ  வின்றே”
என்றும் கூறினார். ஓகாரம், தெரிநிலை. ஏகாரம், தேற்றம். “புரைவதோ
இன்றே”  என்றது  மேற்கோள்; இனி, இதனைச் சாதித்தற்குக் காட்டும்
ஏது,   “பெரிய  தப்புந  ராயினும்  பகைவர்  பணிந்து  திறை பகரக்
கொள்ளுகை  யாதலின்”  என்பது.  இஃது உடம்பொடு புணர்த்தலாய்,
புரைவது  நினைத்தலை  வற்புறுத்தி  நிற்பது  காண்க. தப்புநராயினும்
என்றது  தப்பாமை தோன்ற  நின்றது. பகைவர் வாளாது பணிந்தவழி
அவர்பால்  பகைமையின்மை விளங்காமையின், “பணிந்து திறை பகர”
என்றார். பணிதல் மெய்யின் வினை;பகர்தல் வாயின் வினை. மனத்தின்
பான்மை     சொல்லாலும்    செயலாலும்   புலப்படுதலால்,   அவ்
விரண்டனையும் எடுத்தோதினார்.  பகர்தல்,  ஒன்று கொடுத்து ஒன்று
வாங்குதல்;   ஆகவே,  பகைவர்  திறை கொடுத்து  அருள்பெறுமாறு
பெற்றாம்;  திறை பெறாது  அருளுதல்  கழிகண்ணோட்ட  மென்னும்
குற்றமா   மென   வறிக.   பகைவர்பால்   செலுத்தும்  நின்  அருட்
பெருமைக்கு    அவர்தம்    உயிரல்லது   திறை   ஆற்றாதாயினும்,
அருள்செய்தற்பொருட்டு,    திறைகொள்   வாயாயினை   யென்பார்,
“கொள்ளுநை”  யென்றார். கொள்ளுநை, அடுநை, விடுநை (புறம். 36)
என்றாற் போல்வதோர் முற்றுவினைத் திரிசொல்.
 

வலம்படு    வியன்பணையை ஆடுநர் பலிதூஉய்ப் பரவ, கடிப்புக்
கண்ணுறும்  இயவர்,  பைஞ்ஞிலம்  வருக இந் நிழலென வெண்குடை
நுவலும் மார்ப, வேந்தே, பகைவர் பணிந்து திறை பகரக் கொள்ளுநை
யாதலின், புரைவது நினைப்பின் புரைவதோ இன்று என வினைமுடிவு
செய்க.

“இதனாற்  சொல்லியது  பொறையுடைமையொடு  படுத்து  அவன்
வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று”.


 மேல்மூலம்