முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
20. நுங்கோ யாரென வினவி னெங்கோ
இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று
கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பின்
 5 நெடுஞ்சேர லாதன் வாழ்கவவன் கண்ணி
வாய்ப்பறி யலனே வெயிற்றுக ளனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பறி யலனே
 10 கனவினும், ஒன்னார் தேய வோங்கி நடந்து
படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டும்
கடாஅ யானைக் கணநிரை யலற
வியலிரும் பரப்பின் மாநிலங் கடந்து
புலவ ரேத்த வோங்குபுகழ் நிறீஇ
 15 விரியுளை மாவுங் களிறுந் தேரும்
வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசிக்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
நெடுமதி னிலைஞாயில்
அம்புடை யாரெயி லுள்ளழித் துண்ட
 20 அடாஅ வடுபகை யட்டுமலர் மார்பன்
எமர்க்கும் பிறர்க்கும் யாவ ராயினும்
பரிசின் மாக்கள் வல்லா ராயினும்
கொடைக்கட னமர்ந்த கோடா நெஞ்சினன்
மன்னுயி ரழிய யாண்டுபல மாறித்
 25 தண்ணிய லெழிலி தலையா தாயினும்
வயிறுபசி கூர வீயலன்
வயிறுமா சிலீயரவ னீன்ற தாயே.

     துறை - இயன்மொழி வாழ்த்து. வண்ணம் -
ஒழுகுவண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு - செந்தூக்கும்
வஞ்சித்தூக்கும். பெயர் - அட்டுமலர் மார்பன் (20)

     (ப - ரை) 3. 1முரணியோரையென விரியும் 'இரண்டாவதனைத்
தலைச்சென்றென்பதற்கு இடத்திலே சென்றென்பது பொருளாக்காது
முடிவிலே சென்றென்பது பொருளாக்கி, அதற்குப் போந்தபொருள்
முடிவு செயலாக்கி அதனொடு முடிக்க.

     மேலே கொடைக்கடனமர்ந்த கோடா நெஞ்சினன் (23) என்று
கொடை கூறுகின்றான் ஈண்டு ஓம்பாது வீசி (16) என்று கொடை
கூறியதற்குக் காத்தற்குச் 2சென்றவிடைக் கொண்டவற்றைக்
3
களம்பாடச் சென்றோர்க்குக் கொடுக்கும் கொடையென வுரைக்க.

     20. அடா அடுபுகை - ஊர்சுடு புகை. அட்டுமலர்
மார்பனென்றது, பகைவரைக் கொன்று அச்செருக்கானே அகன்ற
மார்பனென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'அட்டுமலர் மார்பன்' என்று
பெயராயிற்று.

     21. எமர்க்கும் பிறர்க்குமென நின்றவற்றைக்
கொடைக்கடனமர்ந்த வென்பதனோடு முடித்து, எமர்க்கென்றது
தன் பாணராகிய எமர்க்கென்றும், பிறர்க்கென்றது தன்பாணரல்லாத
பிறர்க்கென்றும் உரைக்க.

     21-2. பரிசின்மாக்கள் யாவராயினும் வல்லாராயினுமெனக்
கூட்டிப் பரிசின்மாக்களென்றதற்கு முன்சொன்ன எமர்க்கும் பிறர்க்கு
மெனப்பட்டாரையே ஆக்கி யாவராயினுமென்றதற்குக் கண்டார்
மதிக்கப்படும் தோற்றமிலராயினுமெனவும், வல்லாராயினுமென்றதற்கு
ஒரு கல்வி மாட்டா ராயினுமெனவும் உரைக்க.

     யாவராயினுமென்ற உம்மை இழிவுசிறப்பு; 4வல்லவராயினுமென்ற
உம்மை எதிர்மறை.

     நடந்து (10) கடந்து (13) நிறீஇ (14) வீசி (16) என நின்றவற்றை
நெஞ்சினன் (23) என்னும் முற்றுவினைக் குறிப்பொடு முடிக்க.

     26. வயிறுபசிகூரவீயலனென 5மூன்றாவதும் கொடை கூறியதற்கு,
மழை

     பெய்யா விளைவில்காலைத் தன் 6பரிகரமாயுள்ளார்க்கு
அவர்கள் பசித்து வருந்தாமல் வேண்டும் பொழுதுகளிலே
வேண்டுவன கொடுக்குமென்று ஓர் கொடைநிலையாக வுரைக்க.

     நுங்கோ யாரென வினவின், எங்கோ (1), சேரலாதன், அவன்
கண்ணி வாழ்க (5); அவனியல்பிருக்குமாறு சொல்லின், மற்றோர்
தேஎத்து மாறிய வினையே (7) வெயிற்றுகளனைத்தும் வாய்த்தலறியான்
(6); பொய்த்தலறியான் (9); அட்டுமலர்மார்பன் (20),
கொடைக்கடனமர்ந்த கோடாநெஞ்சினன் (23); கோடையிடத்து எழிலி
தலையாதாயினும் (25) வயிறுபசிகூரவீயலன் (26); ஆதலான்,
அவனையீன்றதாய் வயிறுவிளங்குவாளாக (27) என வினைமுடிவு
செய்க.

     இதனாற் சொல்லியது அவன்றன் செல்வப் பொலிவு கண்டு நீ
யாருடைய பாணனென்று வினவியாற்கு, யான் இன்னாருடையேனென்று
சொல்லிமுடிக்க, அவன் குணங்கள் இன்ன கூறிப் பின் அவனை
வாழ்த்தி, முடித்தவாறாயிற்று.

     'இருமுந்நீர்' (2) எனவும், 'முரணியோர்' (3) எனவும், 'கடிமிளை'
(17) எனவும், 'நெடுமதில்' (18) எனவும் எழுந்த நான்கடியும் வஞ்சியடி
யாகலான் வஞ்சித்தூக்குமாயிற்று.

     கனவினுமென்பது கூன்.

     (கு - ரை) சேரலாதனாற் சிறப்புப் பெற்ற பாணன் ஒருவன்
தன் எதிரே வந்த பாணன் ஒருவனுக்கு அச்சேரலாதனது
பெருமையைக் கூறி வாழ்த்தியதாக அமைந்தது இச்செய்யுள்.

     1. நும் கோ - உம்முடைய இறைவன். நும் என்றது தன்
சுற்றத்தினரையும் உளப்படுத்தியது. மு. புறநா. 212 : 1.

     2. கடலிடையே உள்ள குறைநிலத்தில்

     3. முரணியோர் - பகைவர்

     4, கடம்பு முதல் தடிந்த - கடம்பினது அடிமரத்தை வெட்டிய
(பதிற். 11: 12 - 4, குறிப்புரை). முன்பு - வலி. எங்கோ (1)
நெடுஞ்சேரலாதன் (5) என்க.

     5.கண்ணி - அடையாள மாலை; இது தலையிற் சூடுவது.

     6-7. மாற்றோர் தேத்துமாறிய வினை வெயில் துகளனைத்தும்
வாய்ப்பு அறியலன் - பகைவரது நாட்டிற் சென்று செய்த போரிற்
பின் வாங்குதலை வெயிற்கதிரிலே தோற்றும் அணுவளவேனும்
பொருந்து தலையறியான்; மேற்கொண்ட வினையை முடித்தல்லது
மீளான் என்பது கருத்து. வெயில் துகள் - சூரியன் கதிரினிடையே
தோற்றும் தூசி; இதனைச் சிறுமைக்கு உவமை கூறுதல் மரபு;
"இன்னுழை கதிரின் றுன்னணுப் புரையச், சிறிய வாகப் பெரியோன்"
(திருவா. திருவண்டப். 5 - 6)

     8-9. கண்ணின் உவந்து - கண்ணின் முன்னர் உவப்பை
வெளிப்படுத்தி; நெஞ்சு அவிழ்பு அறியா - உட்கோளை
வெளிப்படுத்துதலையறியாத; புறத்தே மகிழ்வுடையாரைப் போலக்
காட்டி அகத்தே பகைப்பாரைச் சுட்டியது. பொய்ப்பு - பொய்த்தல்.
தேஎத்தும் : உம்மை உயர்வு சிறப்பு; அரசியல் அடைவாற் பொய்கூற
வேண்டிய செவ்வி நேருமாயினும் அப்பொழுதும் பொய்த்தலறியான் என்றபடி, இக்குணம் தருமபுத்திரர் செயலால் அறியப்படும்.

     9-10. கனவினும் பொய்ப்பு அறியலன் எனக் கூட்டுக.

     பகைவர் அழியும்படி எழுச்சியோடு எடுத்துச் சென்று.

     11. படியோர் - பகைவர்; இச்சொல் பிரதியோர் என்பதன்
திரிபென்பர். (அகநா. 22 : 5, உரை); "படியோர்த் தேய்த்த
பணிவிலாண்மை" (மலைபடு. 423) என்றவிடத்து வணங்காதார்
எனப்பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். படியோர்த் தேய்த்தல்
களிற்றுக்கு அடை. வடிமணி - வடித்துச் செய்த மணி; "வடிமணிப்
புரவி" (பட்டினப். 232). இரட்டும் - மாறி யொலிக்கும்.

     12. கடாஅ யானை - மதம் மிக்க யானை. அலற என்றமையின்
இவை பகைவர் படையிலுள்ள யானையெனக் கொள்க.

     13. வியலிரும் பரப்பின் - மிக்க பெரிய பரப்பையுடைய.
கடந்து - வஞ்சியாது எதிர் நின்று வென்று.

     14. நிறீஇ - நிறுத்தி.

     15. விரியுளை மா - விரிந்த தலையாட்டத்தையுடைய குதிரை.

     16. வயிரியர் - கூத்தர். கண்ணுளர் - சாந்திக் கூத்தர் (சிலப்.
5 : 49, அடியார்.). ஒம்பாது வீசி - தனக்கென்று பாதுகாவாமல்
வழங்கி.

     15-6. பரிசிலர்க்கு யானை முதலியன வழங்குதல்: சிறுபாண்.
142 - 3, குறிப்புரை.

     17-9. மிக்க காப்பையுடைய காவற்காட்டையும், ஆழமாகிய
அகழியையும், உயர்ந்த புறமதிலையும், நிலையான மதிலுச்சியையும்,
அம்புக் கட்டுக்களையுமுடைய அழித்தற்கரிய மதிலை உட்புக்கு
அழித்து, கடி - காவல். குண்டு - ஆழம். எயில் - அரண். ஒப்பு:
மதுரைக். 64 - 7; புறநா. 21 : 2 - 6.

     19-20. அடாஅ அடு புகை - சமையல் செய்தலால்
உண்டாகாத ஊர் சுடு புகை. உண்ட மார்பன், புகையையுடைய
மார்பன் என்க. எயிலை அழித்துப் பின்னர் அவ்வெயிற்குள்ளிருந்து
உண்ணுதல் ஒரு மரபு (பதிற். 58; 6. 7; பு. வெ. 117; புறத்திரட்டு,
1327). நாட்டைச் சுட்ட புகை மார்பில் வந்து தவழ்ந்தது (புறநா.
6 : 21 - 2)

     22. வல்லாராயினும் - எவ்விதக் கலையிலும்
வன்மையில்லாராயினும் (அகநா. 152 : 19; புறநா. 57 - 1); தமக்கு
வேண்டியதைச் சொல்லும் ஆற்றலிலராயினும் எனலும், தாம்
கற்றவற்றை மனங்கொள்ளக் கூற மாட்டாராயினும் (மலைபடு. 78, ந.)
எனலுமாம்.

     23. கொடுத்தலாகிய கடமையை விரும்பிய ஒருபால் கோடாத
நெஞ்சையுடையோன்; நம்மவரென்றும் பிறரென்றும் பாராமையின்
கோடா நெஞ்சினன் என்றார்.

     24. மாறி - நீங்கி.

     25. தண்ணிய இயல்பையுடைய மேகம் பெய்யாமற் போயினும்.

     26. தன்னைச் சார்ந்தார் வயிறு பசி மிகும்படி ஈயாமல் இரான்;
பசி கூர்தல் ஈயாமையின் விளைவு. 24-6. பதிற். 18 : 8 - 12.

     27.அவனைப் பெற்ற தாய் வயிறு குறையின்றி விளங்குவாளாக.

     (பி - ம்) 10. ஒருங்கு நடந்து, ஓங்கு நடந்து 21. எமக்கும் (10)

     8. இதன் பதிகத்து யவனர்ப்பிணித்தென்றது யவனரைப்போருள்
அகப்படுத்தியென்றவாறு.

     9. நெய் தலைப்பெய்து கைபிற்கொளீஇ யென்பதற்கு
அக்காலத்துத் தோற்றாரை நெய்யைத் தலையிற் பெய்து கையைப்
பிறகு பிணித்தென்றுரைக்க.

     10. அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டென்றது அந்த
யவனரைப் 7பின்தண்டமாக அருவிலைநன்கலமும்
வயிரமுங்கொண்டென்ற வாறு.


     1பகைவரை முடிவு செய்து எனப் பொருள் கொள்க;
தகரவொற்று விரிந்திருத்தலின் இவ்வாறு பொருள் கொண்டார். தலைச்
சென்று - முடித்து. இத்தொடர் 'தலைக்கட்டி' என்பது போல நின்றது.

     2சென்ற இடை - சென்ற இடத்தில்.

     3களம்பாடச் சென்றவர் பொருநரும் பாணரும்.    

     4வன்மையுடையாருக்கும் கொடுப்பான் என்பது பெறப்படுதலின்
எதிர்மறை உம்மையாயிற்று.

     5வீசி (16) எனவும், கொடைக்கடனமர்ந்த (23) எனவும்
இருமுறை கொடை கூறினமையின் இங்கே மூன்றாவது என்றார்.

     6பரிகரம் - ஏவலர் முதலிய சுற்றத்தார் : இக்காலத்துப்
பரிகலமென்றுவழங்கும்.

     7பின்தண்டம் - சிறைகொண்டாரை விடுத்தற்பொருட்டுக்
கொள்ளும் திறை.

Try error :java.sql.SQLException: Closed Resultset: next