முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
24. நெடுவயி னொளிறு மின்னுப்பரந் தாங்குப்
புலியுறை கழித்த புலவுவா யெஃகம்
ஏவ லாடவர் வலனுயர்த் தேந்தி
ஆரரண் கடந்த தாரருந் தகைப்பிற்
  5 பீடுகொண் மாலைப் பெரும்படைத் தலைவ
ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல்
ஈத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும்
அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி
ஞால நின்வழி யொழுகப் பாடல்சான்று
  10 நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத்
திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ
குலையிழி பறியாச் சாபத்து வயவர்
அம்புகளை வறியாத் தூங்குதுளங் கிருக்கை
இடாஅ வேணி யியலறைக் குருசில்
  15 நீர்நிலந் தீவளி விசும்போ டைந்தும்
அளந்துகடை யறியினு மளப்பருங் குரையைநின்
வளம்வீங்கு பெருக்க மினிதுகண் டிகுமே
உண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது
குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றோ
  20 றடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின்
எஃகுறச் சிவந்த வூனத் தியாவரும்
கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி
வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர
வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி
  25 பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக்
கலிழுங் கருவியொடு கையுற வணங்கி
மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும்
கொண்டற் றண்டளிக் கமஞ்சூன் மாமழை
காரெதிர் பருவ மறப்பினும்
  30 பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே.

     துறை - இயன்மொழி வாழ்த்து. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு -சந்தூக்கு. பெயர் - சீர்சால் வெள்ளி
(24)

     (ப - ரை) 4 - 5. தாரருந் 1தகைப்பிற் பீடுகொண் மாலைப்
பெரும் படையென்றது தார்ப்படைக்கு அழித்தற்கரிய மாற்றார்
படைவகுப்பிலே வென்றிசெய்து பெருமைகொள்ளும் இயல்பையுடைய
அணியாய் நிற்கும் பெருபடை யென்றவாறு.

     6. அவை பிறர்ச்செய்தலென்புழிப் பிறரையென விரியும்
இரண்டாவதனை அவை செய்தலென நின்ற
செய்தலென்னந்தொழிலைப் போந்த பொருளாற் செய்வித்தலென்னும்
தொழிலாக்கி அதனோடு முடிக்க.

     12. குலையழிபு அறியாச் சாபமென்றது போர்வேட்கையான்
இன்ன பொழுது போருண்டாமென்று அறியாதே எப்பொழுதும்
நாணியேற்றியே கிடக்கும் வில்லென்றவாறு.

     13. அம்பு களைவறியாவென்றது போர்வேட்கையான்
எப்பொழுதும் கையினின்றும் அம்பைக் களைதலறியாவென்றவாறு.
தூங்கு துளங்கு இருக்கையென்றது படை 2இடம்படாது செறிந்து
துளங்குகின்ற இருப்பென்றவாறு.

     14. இடா ஏணி - அளவிடப்படாத எல்லை. இயலென்றது
பாசறைக்குள்ள இயல்பை; பாசறை அறையெனத் தலைக்குறைந்தது.

     18. உண்மாரும் தின்மாருமென்பன குறுகி நின்றன;
உண்மாரையும் தின்மாரையுமென்னும் இரண்டாவது 3விகாரத்தால்
தொக்கது. அறியாதென்பதனை அறியாமலெனத் திரிக்க.

     24-5. வறிது வடக்கு இறைஞ்சி சீர் சால் வெள்ளி பயம்கெழு
பொழுதோடு ஆநியம் நிற்பவென்றது சிறிது வடக்கிறைஞ்சின புகழான்
அமைந்த வெள்ளி மழைக்குப் பயன்படும் மற்றைக் கோட்களுடனே
தான் நிற்கும் நாளிலே நிற்கவென்றவாறு.

     4பொழுதென்றது அதற்கு 5அடியாகிய கோளை.

     வறிது வடக்கிறைஞ்சியவென்னும் அடைச்சிறப்பான் இதற்கு
'சீர்சால் வெள்ளி' என்று பெயராயிற்று.

     பெரும்படைத்தலைவ (5), திருந்திழை கணவ (11) குருசில்
(14), நீர்நிலமுதலைந்தினையும் (15) அளந்து முடிவறியினும் பெருமை
அளந்தறி தற்கரியை (16); நின் செல்வமிக்க பெருமை இனிது
கண்டேம் (17); அஃது எவ்வாறு இருந்ததென்னின், வாடாச்சொன்றி
(22), மழை (28) காரெதிர் பருவ மறப்பினும் (29), பேரா யாணர்த்து;
அப்பெற்றிப்பட்ட நின்வளம் வாழ்க (30) என வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் பெருமையும் கொடைச்சிறப்பும்
கூறி வாழ்த்தியவாறாயிற்று.

     (கு-ரை) 1. உயர்ந்த ஆகாயத்திடத்தே விட்டு விளங்கம்
மின்னல் பரந்தாற்போல்.

     2. புலித்தோலாற்செய்த உறையினின்றும் நீக்கிய புலால்
நாற்றத்தை யுடைய வேலை (பதிற். 19 4)

     1-2. வேலுக்க மின்னல் உவமை; புறநா. 42 : 4.

     3. ஏவல் ஆடவர் - அரசனது ஏவலிற் செல்லும் வீரர்கள்.
வலன் உயர்த்து-வலப்பக்கத்தே உயரத்தூக்கி; வெற்றிகளத்தே
தூக்கி எனலுமாம்; "வலவயி னுயரிய" (முருகு. 152) என்ற விடத்து
நச்சினார்க்கினியர் 'வெற்றிக்களத்தே எடுத்த' என உரை எழுதினர்.
"அடுகளத் துயர்கநும் வேலே" (புறநா. 58 : 29) என்பதில்
போர்க்களத்தில் வேலுயர்த்த்லைக் கூறல் காண்க.

     4-5. ஆரரண்கடந்த - பிறரால் அழித்தற்கரிய பகைவர்
அரணங்களை வென்ற. தூசிப்படையால் அழித்தற்கரிய பகைவரது
அமைப்பின் கண் வெற்றியாற் பெருமையைக்கொண்ட. தகைப்பு
என்றது இங்கே
அணிவகுப்பை. மாலை - இயல்பு (தொல். உரி, 15),
ஏந்தியென்னும் சினைவினை கடந்த என்னும் முதல் வினையோடு
முடிந்தது.

     6. ஓதல் - வேதத்தை ஓதுதல். வேட்டல் - யாகம் செய்தல்.
அவை பிறர்செய்தலாவன ஓதுவித்தலும் வேட்பித்தலும்.

     7. ஏற்றல் - கொள்ளத்தகும் பொருளைப் பெற்றுக்கொள்ளுதல்.
ஆறு புரிந்து - ஆறு தொழில்களைச் செய்து.

     8. அறம்புரி அந்தணர் - தருமத்தை விரும்புகின்ற அந்தணர்;
"அந்தண ரென்போ ரறவோர்" (குறள். 30). அந்தணர்பாற் பணிவான
வார்த்தைகளைச் சொல்லி; "பார்ப்பார்க் கல்லது பணிபறியலையே"
(பதிற். 63 : 1) என்றலின் இங்ஙனம் கூறினார். வழி மொழிதல் :
புறநா.
239 : 6.

     6-8. அந்தணர் அறுதொழில் : "அறுவகைப்பட்ட பார்ப்பனப்
பக்கமும்" (தொல். புறத். 20); ‘’இருமூன் றெய்திய வியல்பினின்
வழாஅது ................இருபிறப் பாளர்’’ (முருகு. 177 - 82) அந்தணர்க்குக்
கூறிய பொதுத் தொழில்கள் ஆறென்புதற்கு மேற்கோள் தொல். புறத்.
20,ந ;

     9. பாடல்சான்று - புலவர் புகழும் பாடல்கள் அமைந்து; இது
நல்லிசைக்கு அடை.

     10. நாடு உடன் விளங்கும் - நாடு முழுவதும் விளங்கிய. நாடா
நல் இசை - ஐயுற்று ஆராயப்படாத உலகறிந்த நல்ல புகழையுடைய
(சிறுபாண். 82, ந.). பாடல் சான்றமையால் புகழ் நாடுமுழுவதும்
விளங்குவதாயிற்று.

     11. திருந்திய இயல்மொழி - பிறர் திருத்த வேண்டாதே
இயல்பாகவே குற்றத்தினின்றும் நீங்கித் திருந்திய மொழி. திருந்திழை
கணவ : பதிற். 14 : 15, குறிப்புரை. இத்தொடர் அனைத்தும் ஒரு
பெயராக நின்றது.

     12. நாணியை வளைத்தலினின்றும் இறக்குதலை அறியாத
வில்லையுடைய வீரர். "கொடுந்தொழில் வல்விற் குலைஇய கானவர்"
(முருகு. 194) என்ற பாடத்திற்கு உரை கூறும்பொழுது குலைஇய
என்னும் சொல்லுக்கு வளைத்த என நச்சினார்க்கினியர்
பொருளுரைத் தாராதலின், இங்கே வளைத்தலினின்றும் நீங்குதலை
அறியாத வில் எனலுமாம்.

     13. தூங்கு - செறிந்த. துளங்கு இருக்கை - வீரர்களின்
மிகுதியால் அசைகின்ற இடங்களையுடைய.

     14. அளவிடப்படாத எல்லையாகிய இயல்பையுடைய
பாசறைக்கண் தங்கும் உபகாரியே. ஏணி - எல்லை (புறநா. 35 : 1)

     12-4. வயவர் அம்பு களைதலை அறியாத இருக்கையையுடைய
அறையென்க.

     15-6. ஓடு: எண்ஓடு. கடை அறியினும் - எல்லையை
அறிந்தாலும். அளப்பரியை; குரை : அசைநிலை. ஐந்து பூதங்களை
அளவுப்பெருமைக்கு எடுத்துரைத்தல் மரபு (பதிற், 14 : 1 - 2,
குறிப்புரை).

     17. கண்டிகும் - கண்டோம்.

     18. வரைகோள் அறியாது - எல்லை அறியாது; தடைசெயப்
படுதலை அறியாமலெனலும் ஆம்.

     'என்பார் என்மரெனத் திரிந்தது, உண்மருந் தின்மரும் என்றாற்
போல' (சீவக. 1843, ந.)

     19. ஒலித்தலையுடைய பூண்மழுங்கிய உலக்கைகளையுடைய
இடந்தோறும். உணவுக்கு வேண்டிய நெல்லைக் குற்றிக் குற்றி
உலக்கையின் பூண் மழுங்கியது.

     20. இலையையுடைய சேம்பு மேலே வருகின்ற சமையல்
செய்தற்குரிய மடாவினையும். இலையென்றது முதலுக்கு அடை.
சேம்பு என்றது இங்கே உணவுக்குப் பயன்படும் அதன் தண்டையும்
கிழங்கையும் அவற்றை வேகவைத்தலின் மேலே எழுந்தன. ஆடு -
அடுதல். மடாவென்பது மிடா வெனவும் வழங்கும்.

     21. அரிவாள் செத்தும் பொருட்டுப் பட இரத்தத்தாற் சிவந்து
தோற்றும் இறைச்சியையும் உடைய.

     22. வாடாச்சொன்றி - என்றும் குறைவுபடாத உணவு. சொன்றி
யென்றது இங்கே உணவுப் பொதுவினைக் குறித்தது.

     18-22. "யாவர்க்கும், வரைகோ ளறியாச் சொன்றி" (குறுந்.
233 : 5 - 6)

     23. சுடர்வர - விளங்க. "விரிகதிர் வெள்ளி" (சிலப்.10 : 103).
ஆதலின் இங்ஙனம் கூறினார்.

     24. வறிது - சிறிதளவு. வடக்குத்திசையின் கண்ணே தாழ்ந்த
சிறப்புச் சான்ற வெள்ளியென்னும் கோள். மழைக் கோளாகிய
வெள்ளி வடக்கிறைஞ்சின் மழையுண்மையும், தெற்கெழுந்தால்
மழையின்மையும் நேரும்; 'விளங்குகின்ற வெள்ளியாகிய மீன் தான்
நிற்றற்குரிய வடதிசையில் நில்லாமல் தென்றிசைக் கண்ணே
போகினும்' (பட்டினப். 1 - 2, ந.) என்பதையும் மதுரைக். 108
உரையின் அடிக் குறிப்பையும் பார்க்க. மழை பெய்தற்குக்
காரணமாதலின் சீர்சால் வெள்ளியென்று சிறப்பித்தார்.

     வறிதென்னும் உரிச்சொல் சிறிதென்னும் குறிப்புணர்த்தும்
(தொல். உரி. 38, ந.)

     25. பயன்பொருந்திய மற்றைக் கோள்களோடு தனக்குரிய நல்ல
நாளிலே நிற்க.

     24-5. "நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப், பயங்கெழு
வெள்ளி யாநிய நிற்ப" (பதிற். 69 : 13 - 4)

     26. கலங்கி வருகின்ற நீர்முதலிய தொகுதியோடு பக்கத்திற்
பொருந்த இறங்கி; மழை அமரர்கண் முடியும் ஆறில் ஒன்றாதலின்
(தொல் புறத். 26, ந.) கையினால் மிக வணங்க எனலுமாம்; வணங்கி
- வணங்க.

     27. உலகில் நிலைபெற்ற உயிர்கள் உயரும் பொருட்டு
வானத்தில் வலமாக எழுந்து முழங்கும்.

     28. கொள்ளுதலையுடைய தண்ணிய துளிகளாகிய நிறைந்த
சூலையுடைய கரியமேகத்தின் மழை.

     29. காரை எற்றுக்கொள்ளும் கார்காலத்திற் பெய்தலை
மறந்தாலும்.

     30. மாறாத புதுவருவாயையுடையது. வளன் - செல்வச் சிறப்பு.
சொன்றி (22) பேராத யாணர்த்து (30) என்க.

     நின் வளத்தின் மிகுதியைக் கண்டோம்; அது பேரா யாணர்த்து;
அவ்வளன் வாழ்கவென வாழ்த்தினார். (4)


     1கைப்பு என்பது கட்டப்பட்ட மாளிகைக்கு ஆவதுபோல
இங்கே வகுத்து அமைக்கப்பட்ட படையணிக்கு ஆயிற்று.

     2இடம்படாது - இடம்பற்றாமல் (புறநா. 62 : 10 - 11)     

     3உயர்திணை மருங்கின் ஒழியாது வரவேண்டு மாதலின்
(தொல். தொகைமரபு, 15) விகாரத்தால் தொக்கதென்றார்.

     4பொழுதென்றது இங்கே ஆகுபெயர்.

     5அடி- காரணம்.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

4. சீர்சால் வெள்ளி
 
24.நெடுவயி னொளிறு மின்னுப் பரந்தாங்குப்
புலியுறை கழித்த புலவுவா யெஃகம்
ஏவ லாடவர் வலனுயர்த் தேந்தி
ஆரரண் கடந்த தாரருந் தகைப்பிற்
 
5பீடுகொண் மாலைப் பெரும்படைத் தலைவ
ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல்
ஈத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும்
அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி
ஞால நின்வழி யொழுகப் பாடல்சான்று
 
10நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத் 
திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ
குலையிழி பறியாச் சாபத்து வயவர்
அம்புகளை வறியாத் தூங்குதுளங் கிருக்கை
இடாஅ வேணி யியலறைக் குருசில்
 
15நீர்நிலந் தீவளி விசும்போ டைந்தும்
அளந்துகடை யறியினு மளப்பருங் குரையைநின்  
வளம்வீங்கு பெருக்க மினிதுகண் டிகுமே
உண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது
குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றோ
 
20றடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின்
எஃகுறச் சிவந்த வூனத் தியாவரும்
கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி
வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர
வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி
 
25பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக்
கலிழுங் கருவியொடு கையுற வணங்கி
மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும்
கொண்டற் றண்டளிக் கமஞ் சூன் மாமழை
காரெதிர் பருவ மறப்பினும்
 
30பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே.
 

துறை  : இயன்மொழிவாழ்த்து.
வண்ணம் : ஒழுகுவண்ணம்.
தூக்கு  : செந்தூக்கு.
பெயர்  : சீர்சால்வெள்ளி.

 1 - 5. நெடுவயின்..............தலைவ.

உரை : நெடு வயின் ஒளிறும் மின்னுப் பரந் தாங்கு -    நெடிய
விசும்பின்கண்   விளங்குகின்ற  மின்னல்  பரந்தாற்போல;  புலியுறை
கழித்த  புலவுவாய்  எஃகம்  - புலித்தோலாற் செய்த உறையினின்றும்
வாங்கிய புலால் நாறும் வாளை; மேவல் ஆடவர் வலனுயர்த் தேந்தி -
நாளும் போரைவிரும்பும்   வீரர் தம் வலக்கையில் விளங்க   வேந்தி;
ஆர் அரண்கடந்த  தார்  பகைவருடைய அரிய  அரண்களை  யழித்
தேகும்   தமதுதூசிப்  படையால்; அருந்தகைப் பின் -  கடத்தற்கரிய
பகைவரது   அணி   நிலையுட்  பாய்ந்து;   பீடு  கொள்   மாலைப்
பெரும்படைத் தலைவ -வென்றி    கொள்ளும்    இயல்பினையுடைய
பெரிய   தானைக்குத் தலைவனே எ - று.
  

நிலத்தினும்  கடலினும் நெடுமையும் பரப்பு முடைமைபற்றி விசும்பு
‘நெடுவயி’    னெனப்பட்டது.   இது   நெடிதாகிய  இடத்தையுடைய
விசும்பென    விரிதலின்,   அன்மொழித்தொகையாய்  விசும்பிற்குப்
பெயராயிற்று.   புலியுறையினின்றும்   கழித்த   எஃகம், முகிலிடைத்
தோன்றும்  மின்னுப்போறலின்,  “நெடுவயின்  மின்னுப் பரந்தாங்குப்
புலியுறை    கழித்த     எஃகம்”   என்றார். வாள்வாய்ப் பட்டாரது 
ஊன்   படிந்து     புலவு   நாற்றம்       நாறுதலின்,   “புலவுவா
யெஃகம்”      எனப்பட்டது.     படைவீரர்    போரே  விரும்பும
புகற்சியினராய்     நாளும்     அதன்மேற்   சென்ற  உள்ளத்தாற்
சிறந்து    நிற்குமாறு     தோன்ற     “மேவல்  ஆடவர்”என்றார்.
ஏவ  லாடவரெனக்கொண்டு     வேந்தனது    ஏவல்வழி   நிற்கும்
வீரரென   றுரைப்பினுமாம்;   “புட்பகைக்   கேவானாகலிற் சாவேம்
யாமென,   நீங்கா   மறவர்  வீங்கு  தோள்  புடைப்ப” (புறம்.  68)
என்பதனால்  வீரர் ஏவல்வழி நிற்குமாறு பெறப்படும் போர், என்பது
அவாய்நிலை.   இடக்கையில்   தோலையேந்துதலின் “வாளை  வல
னுயர்த்தேந்தி”     யெனல்     வேண்டிற்று.       புலித்தோலாற்
செய்யப்பட்டதனைப் புலியுறையென்றார்.

இனி,  தார்ப்படையின் வன்மை கூறுவார், பல்வகைப் பொறியாலும்
காத்து   நிற்கும்   வயவராலும்   நெருங்குதற்கரிய  அரண்  பலவும்
வருத்தமின்றி  எளிதிற் கடக்கும் வன்மையுடைய தென்றற்கு “ஆரரண்
கடந்ததார்”  என்றார்.  தார், தூசிப்படை, இதனைத் தாங்கிப் பின்னே
அணியுற்று வரும் படை தானை யெனப்படும்; “தார் தாங்கிச் செல்வது
தானை”  (குறள்.  767) எனச் சான்றோர் விளக்குவது காண்க. போர்க்
கருவிகளான  வில்,  வேல்,  வாள்  முதலியனவேயன்றி,  படையினது
அணிவகுப்பும்  நிலையும்  வன்மை  நல்குவனவாதலின், அச்சிறப்பை
விதந்து,  “அருந்  தகைப்பில்”  என்றும், அதன் உட்புகுந்து பொருது
கலக்கிச்   சிதைத்து   வென்றி   காண்பதே   வீரர்க்கு  மிக்க  வீறு
தருவதாதலின்,  “அருந்தகைப்பிற்  பீடுகொள் மாலைப் பெரும்படைத்
தலைவ”   என்றும்  கூறினார்.  மாற்றாரது  அருந்தகைப்புட்  புகுந்து
கலக்கக்     கருதுவோர்,    முன்பாகக்    களிற்றினைச்    செலுத்தி
இடமகல்வித்து,  அதன்  வழியே நுழைந்து தாக்குவரென்ப;  இதனைக்
“களிறு   சென்ற   கள   னகற்றவும்,   களனகற்றிய   வியலாங்கண்,
ஒளிறிலையே   வெஃகேந்தி,   அரைசுபட  வமருழக்கி”  (புறம்.  26)
என்பதனா  லறிக.  இன்னோ  ரன்ன அருஞ்செயல் வழிப்படும்  பீடே
வீரர்  மம்  நடுகல்லினும் பிறங்குவதா மென் றறிக. “நல்லமர்க் கடந்த
நாணுடை  மறவர்,  பெயரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய
பிறங்குநிலை   நடுகல்”  (அகம்.  67)  என்புழி  “நல்லமர்”  என்றது
இதனையும்  உட்கொண்டு  நிற்றலை யுணர்க இத்தகைய பீடு பெறுதல்
நின்   படைக்கு   இயல்பா   யமைந்துள   தென்பார்,   “பீடுகொள்
பெரும்படை”   யென்னாது,   “பீடுகொள்   மாலைப்   பெரும்படை”
யென்றார். மாலையென்ற
அடைநலத்தால்,   பெருமை    படையினது
மிகுதி மேற்றாயிற்று. இனிப் பழையவுரைகாரர்,  “தாரருந்   தகைப்பின்
பீடு  கொள் மாலைப்  பெரும்படை    யென்றது,   தார்ப்  படைக்கு
அழித்தற்  கரிய  மாற்றார் படை    வகுப்பிலே    வென்றி  செய்து
பெருமை   கொள்ளும்    இயல்பையுடைய      அணியாய்  நிற்கும்
பெரும்படை   யென்றவா” றென்பர்.  படையெனவே,  அணிநிலையும்
தொகை மிகுதியும் கருவிப் பெருமையும் வினைத் தூய்மையும் பிறவும்
அகப்படுதல் காண்க.
 

இப்பெரும்   படையை இதன் பெருமைப்பண்பு குன்றாத வகையில்
வைத்தாளுந்திறன்  தலைமைப்  பண்பு  முற்றும்  நிரம்ப வுடையார்க்
கன்றியின்மையின்,     பல்யானைச்     செல்கெழு    குட்டுவனைப்
“பெரும்படைத்  தலைவ” என்றார். திருவள்ளுவனாரும், “நிலைமக்கள்
சால    வுடைத்தெனினும்      தானை,   தலைமக்கள்     இல்வழி
இல்”     (குறள்.  770)  என்பது  காண்க.  மேலும்,    குட்டுவனை,
பெரும்படை  வேந்தே  யென்னாது  “தலைவ”  என்றதனால், அவன்
படையினை  யேவி  யிராதே  அதற்குத் தானே முன்னின்று தலைமை
தாங்கிப்   பொருது   பீடு   கொள்ளும்   செயலுடைய  னென்பதும்
உய்த்துணரப்படும்.

6 - 11. ஓதல்............கணவ.

உரை : ஓதல் வேட்டல்    அவை  பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றல்
என்று  ஆறுபுரிந்  தொழுகும்  - மறை யோதுதல், வேள்வி வேட்டல்,
அவையிரண்டையும்   பிறரைச்   செய்வித்தல்,  வறியார்க்கொன்றீதல்,
தமக்கொருவர்   கொடுத்ததை   யேற்றல்   என்ற   தொழி   லாறும்
செய்தொழுகும்;  அறம்  புரி அந்தணர் - அறநூற் பயனை விரும்பும்
அந்தணர்களை;  வழி  மொழிந்தொழுகி  - வழிபட் டொழுகி; ஞாலம்
நின்  வழி யொழுக - அதனால் உலகத்தவர் நின்னை வழிபட்டு நிற்ப;
பாடல் சான்று - புலவர் பாடும் புகழ் நிறைந்து; நாடு உடன் விளங்கும்
-  நில  முழுதும்  பரந்து விளங்கும்; நாடா நல்லிசை விளங்கிய நல்ல
புகழையும்;  திருந்திய  இயல்  மொழி - அறக் கேள்வியால் திருந்திய
இனிய இயல்பிற் றிரியாத மொழியினையுமுடைய;  திருந்திழை கணவ -
திருந்திய இழையணிந்தவட்குக் கணவனே எ - று.

ஓதுவித்தலும்   வேட்பித்தலும் அந்தணர்க்குரிய தொழில் ஆறனுள்
அடங்குவனவாதலின்,  “அவை  பிறர்ச்  செய்தல்” என்றார். செய்தல்:
பிறவினைப்பொருட்டு. செய்தல், செய்வித்தல் என்ற வினைவகைகளுள்
செய்தல்  வகை நான்கினையும் முன்னும் பின்னும் கூறலின், இடையே
செய்வித்தல்  வகை  இரண்டனையும்  ஒன்றாய்த்  தொகுத்துரைத்தார்,
சொற்சுருங்குதல்  குறித்து. பழையவுரைகாரர், “அவை பிறர்ச் செய்தல்
என்புழிப்  பிறரையென  விரியும்  இரண்டாவதனை,  அவை செய்தல்
என   நின்ற   செய்தலென்னும்   தொழிலாற்   போந்த பொருளால்
செய்வித்தலென்னும் தொழிலாக்கி அதனொடு முடிக்க” என்றார். என்று
என்பதனை   எல்லாவற்றோடும்   ஒட்டுக.  ஆறென்புழி முற்றும்மை
விகாரத்தால்    தொக்கது.   இவ்வாறு   தொழிலையும்  வழிவழியாக
வருத்தமின்றிக்    கற்றுப்   பயின்று     வருதலின்     அந்தணரை
“ஆறுபுரிந்தொழுகும்               அந்தணர்”            என்ற
ஆசிரியர்.  அவர்தம்  உள்ளத்தே அறநூல்களின் முடி பொருளையே
விரும்பா நிற்கின்றன ரென்பார். “அறம்புரி யந்தணர்” என்றார்; அறம்,
அறநூல்களின்  முடிபொருண்மேற்று.  அது வேத முதலிய நூல்களாற்
கற்றுணரப்படாது  இறைவனால் உணர்த்தப்படுவது. “ஆறறி யந்தணர்க்
கருமறை  பல  பகர்ந்து”  (கலி.கடவுள்) என்றும், “ஒருமுகம், எஞ்சிய
பொருள்களை  யேமுற  நாடித், திங்கள் போலத் திசைவிளக் கும்மே”
(முருகு  16-8)  என்றும் சான்றோர் கூறுவது காண்க. சைவ நூல்களும்,
வேத  முதலியவற்றின்  ஞானம் கீழ்ப்பட்டதாகிய பாச ஞானம் என்று
கூறுவது ஈண்டுக் குறிக்கத்தக்கது.
 

உலகியற்   பொருளையும்     அதற்குரிய     அறநெறிகளையும்
உள்ளவாறுணர்த்தும்     உரவோராதலின்,   அந்தணர்  வழிமொழிந்
தொழுகுதல்     அரசர்க்குக்   கடனாதல்   பற்றி,       “அந்தணர்
வழிமொழிந்      தொழுக”      வென்றார்.    அவ்வொழுக்கத்தாற் 
பயன்  இதுவென்பார்,   “ஞாலம்   நின்வழி             யொழுக”
என்றும்,  அதனால் நாடு நாடா வளம் படைத்து நல்லோர் பாராட்டும்
நலம்  பெறுதலின் “பாடல் சான்று” என்றும் கூறினார். நாட்டின் புகழ்
நாட்டின்   அரசர்க்குச்   சேறலின்,  அரசன்  மேலேற்றிச்  “சான்று”
என்றார். இக் குட்டுவனைப் பாடப் போந்த கௌதமனார், “உருத்துவரு
மலிர்நிறை”  யென்ற  பாட்டினை  நாடு  வாழ்த்தாகவே பாடியிருப்பது
காண்க.  அவன்  புகழ்  பரவாத  இடம்  நாட்டில்  ஒரு சிறு பகுதியு
மின்மையின்  “நாடுடன்  விளங்கும்  நல்லிசை”  யென்றார். இசைக்கு
நன்மை,  அழியாமை, நல்லிசைக்குரிய குணஞ் செயல்கள் அவன்பால்
நன்கு   விளங்கித்   தோன்றலின்,   “நாடா   நல்லிசை”  யென்றார்.
விளக்கமில்வழியே நாடுதல் வேண்டுதலின், நாடாமை விளக்க மாயிற்று.
இனி,  நாடாது செய்தாரை நாடி யடைதலும், நாடிச் செய்தாரை இனிது
நாடாமையும்     புகழ்க்கு    இயல்பாதலின்    “நாடா    நல்லிசை”
யென்றாரென்றமாம்.

அறம்புரி    யந்தணர் வழிமொழிந் தொழுகும் ஒழுக்கத்தின் பயன்
அவன்    சொல்லின்கண்    அமைந்து    கிடத்தலின்   “திருந்திய
இயன்மொழி”   என்றார்.  சொல்லிற்  றோன்றும்  குற்றங்கள்  இன்றி
இனிமைப்  பண்பே  பொருந்திய மொழி இயல்மொழி. இனி, திருந்திய
இயல்மொழி  யென்பதற்குப்  பிறர் திருத்த வேண்டாதே இயல்பாகவே
குற்றத்தினின்றும்    நீங்கித்    திருந்தியமொழியென்றும்    கூறுவர்.
திருந்திழை   யென்னும்  அன்மொழித்தொகை  அரச  மாதேவிக்குப்
பெயராயிற்று.

12 - 14. குலையிழிபு...........குருசில்.

உரை : குலை  இழிபு  அறியாச் சாபத்துக் களைவு அறியா அம்பு
வயவர்    -   நாண்   களைதலறியாத   வில்லையும்   கையினின்று
களைதலில்லாத   அம்பையுமுடைய  வீரரது;  தூங்கு  துளங்கிருக்கை
போர்    வேட்கையால்    விரையும்   குறிப்பொடு   செறிந்திருக்கும்
இருக்கையும்;  இடாஅ ஏணி இயல் அறை - வன்மைக் கெல்லையாகிய
எல்லா  நலங்களும்  பொருந்த  வியன்ற பாசறையுமுடைய; குருசில் -
வேந்தே எ - று.

வில்லை     வளைத்துப்  பிணித்து  நிற்கும்  நாணினது   நிலை
குலையெனப்பட்டது; “வில்குலை  யறுத்துக் கோலின்வாரா வெல்போர்
வேந்தர்” (பதிற்.  79) எனப் பிறாண்டும் வருதல் காண்க. களைவறியா
அம்பெனவியைத்து,  சாபத்தையும்   அம்பையுமுடைய வயவரென்றும்,
வயவரது  இருக்கையென்றும் இயைக்க. இருக்கையும் பாசறையுமுடைய
குருசில்  என  முடிக்க.  இன்னபொழுது  போருண்டாமென் றறியாதே
எப்பொழுதும்  நாணேற்றியே  கிடக்கும்  வில்லென்றற்கு,  “குலையிழி
பறியாச்  சாபம்” என்பது பழையவுரை. குலையிழிபறியாச் சாபமேந்திய
வழி,   அதற்கேற்ப   அம்புகளும்   கையகலாது   செவ்வேயிருத்தல்
வேண்டுமாகலின்,     “அம்பு     களை     வறியா”     என்றார்.
பழையவுரைகாரரும்,     “அம்பு     களைவறியா        வென்றது,
போர்வேட்கையான்  எப்பொழுதும்  கையினின்றும் அம்பைக் களைத
லறியா வென்றவா” றென்பர்.
 

போர்     நிகழ்ச்சியை யெதிர் நோக்குதலால் உள்ளம்  பரபரப்பும்
துடிப்பும் கொண்டு விரையும் வீரர் சோம்பி ஓரிடத்தே  குழீஇயிருக்கவு
மாட்டாது,   அரசன்   ஏவாமையின்   போர்க்குச்  செல்லவுமாட்டாது
இருக்கும் அவர்தம் இருப்பினை, “தூங்கு துளங் கிருக்கை”  யென்றார்;
“புட்பகைக்  கேவானாகலிற்  சாவேம்  யாமென,  நீங்கா மறவர் வீங்கு
தோள்   புடைப்ப”  (புறம்.  68)  என்பதனாலும்  இப்  பொருண்மை
யுணரப்படும்.   இனிப்   பழையவுரைகாரர்,  “தூங்கு  துளங்கிருக்கை
யென்றது,   படை  இடம்  படாது  செறிந்து  துளங்குகின்ற  இருப்பு
என்றவா” றென்பர்.

இடாஅ     ஏணி என்றது, எல்லையாகிய பொருட்கு  வெளிப்படை.
இனி, ஏணிக் குருசில் என இயைத்து, போர் வன்மைக்  கெல்லையாகிய
குருசில்   என்றுரைப்பினுமாம்;   “கற்றோர்க்குத்   தாம்   வரம்பாகிய
தலைமையர்”  (முருகு.  133-4)  என்றாற்போல.  இடாஅ  ஏணியாவது
“அளவிடப்படாத     எல்லை”    என்று    பழையவுரை     கூறும்.
பழையவுரைகாரர்,  “பாசறை அறையெனத் தலை குறைந்த”  தென்றும்,
“இயலென்றது    பாசறைக்குள்ள    இயல்”    பென்றும்    கூறுவர்.
பாசறைக்குரிய    நலங்கள்,    புரிசையும்   இருக்கையும்    அரணும்
மெய்காப்பாளரும்   காலக்   கணக்கரும்   உழையரும்   நன்கமைந்த
நலங்கள்.   “காட்ட  இடுமுட்  புரிசை  யேமுற  வளைஇப்,  படுநீர்ப்
புணரியிற் பரந்த பாடி” (முல்லைப். 26-8) எனப் புரிசையும்,  “நற்போர்,
ஓடா  வல்வில்  தூணி  நாற்றிக்,  கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கை”
(38-40)   என   இருக்கையும்,  “பூந்தலைக்  குந்தம்  குத்திக்  கிடுகு
நிரைத்து,   வாங்கு  வில்லரணம்”  (41-2)  என  அரணமும்,  “துகில்
முடித்துப் போர்த்த தூங்க லோங்க நடைப், பெருமூதாளர்” (53-4) என
மெய்காப்பாளரும், “பொழுதளந்தறியும் பொய்யா மாக்கள்” (55)  எனக்
காலக்கண கரும்,        “உடம்பினுரைக்கு    முரையா      நாவிற்,
படம்புகு    மிலேச்சர்    உழையராக”   (65-6)   என   உழையரும்
பாசறைக்கு நலங்களாக ஆசிரியர் நப்பூதனார் கூறுதல் காண்க.

15 - 17. நீர்நிலம்.................கண்டிகுமே.

உரை : நிலம் நீர் தீ வளி விசும்போடு  ஐந்தும்   அளந்து கடை
அறியினும்   -  நிலமும்  நீரும்  நெருப்பும்  காற்றும்  விசும்புமாகிய
ஐந்தனையும்  அளந்து  முடிவு  காணினும்;  அளப்பரும் குரையை -
அறிவு  முதலியவற்றால்  அளந்து  எல்லை காண்பதற்கரியை யாவாய்;
நின் வளம் வீங்கு பெருக்கம்   -  நின்னுடைய  செல்வம்  பெருகிய
நலத்தை;  இனிது கண்டிகும் யாங்கள் இனிது கண்டறிந்தோம் எ - று.
 

நில   முதலிய ஐந்தும் கலந்த மயக்கமே உலக மென்பதைக் கண்ட
பண்டைத் தமிழ் நன்மக்கள், நிலமுதலிய ஒவ்வொன்றின் அளவையும்
அளந்து   காண   முயன்று  அளத்தற்  கரியவையெனத்  துணிந்தன
ராதலின்,      அளப்பரிய     பிற      பொருள்கட்கு   அவற்றை
உவமமாக       எடுத்தோதுவதை   மரபாகக் கொண்டனர்; அதனால்
குட்டுவனுடைய   அறிவு,  ஆண்மை,  பொருள்  முதலியவற்றாலாகிய
பெருமையைச்  சிறப்பித்து, “அளப்பருங் குரையை” என்றார். பிறரும்,
“நிலநீர்  வளிவிசும்  பென்ற நான்கின், அளப்பரி யையே” (பதிற். 14)
என்றும்,  “நிலத்தி்னும்  பெரிதே வானினு முயர்ந்தன்று, நீரினு மாரள
வின்றே”  (குறுந்.  3)  என்றும் கூறுதல் காண்க. கடை, முடிவு, நிலம்,
நீர்,   தீ   வளி   விசும்பென்றல்   முறையாயினும்  செய்யுளாதலின்
பிறழ்ந்துநின்றன.  அறியினும்  என்புழி  உம்மை  எதிர்மறை. குரை :
அசைநிலை.

குட்டுவனுடைய  செல்வம் முதலிய நலங்கள் நாளும் பெருகுதலால்,
“வளம்  வீங்கு பெருக்க” மாயிற்று. அளத்தற் கரியனாயினும், காட்சிக்
கெளிமையும்  இனிமையு  முடையனாதல்  பற்றி,  “இனிது கண்டிகும்”
என்றும்,    அவ்வெளிமை    யொன்றே   அவனது   பெருநலத்தை
வெளிப்படுத்தலின்,  “வளம்  வீங்கு  பெருக்கம்”  என்றும் கூறினார்;
“பணியுமா  மென்றும்  பெருமை”  (குறள்.  978)  என்று  சான்றோர்
கூறுதல்  காண்க.  வளம்  வீங்கு பெருக்கமெனத் தொகுத்தது மேலே
விரிக்கப்படுகிறது.

18 - 30. உண்மரும்...............வளனே.

உரை : வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர -  விளங்குகின்ற
கதிர் வானமெங்கும் பரந்து திகழ; வடக்கு வறிது இறைஞ்சிய சீர் சால்
வெள்ளி  -  வடதிசைக்கண் சிறிதே சாய்ந்து தோன்றும் சிறப்பமைந்த
வெள்ளியாகிய  கோள்;  பயங்கெழு  பொழுதொடு  ஆநியம்  நிற்ப -
பயன்  பொருந்திய  ஏனை  நாண் மீன்களுடனே தனக்குரிய நாளிலே
நிற்க;  கலிழும் கருவியொடு - நீரைச் சொரியும் மழைத்தொகுதியுடன்;
கையுற  வணங்கி  -  பக்க வானத்திற் றாழ்ந்து; மன்னுயிர் புரைஇய -
மிக்குற்ற  உயிர்களைப்  புரத்தல்  வேண்டி;  வலன் ஏர்பு இரங்கும் -
வலமாக எழுந்து முழங்கும்; கொண்டல் தண்டளிக் கமஞ்சூல் மாமழை
கீழ்க்காற்றுக்  கொணரும்  தண்ணிய  மழைத் துளியால் நிறைந்த சூல்
கொண்ட கருமுகிற் கூட்டம்; கார்எதிர் பருவம் மறப்பினும் கார்காலத்து
மழைப்பெயலைப்  பெய்யாது மறந்தவழியும்; தொடி மழுகிய உலக்கை
வயின்தோறு  -  பூண்  தேய்ந்த  உலக்கையிருக்கும்  இடங்கடோறும்;
அடைச்சேம்பு எழுந்த ஆடுறுமடாவி்ன் - அடையினையுடைய  சேம்பு
போன்ற   சோறு   சமைக்கும்  பெரும்பானையும்;  எஃகுறச்  சிவந்த
ஊனத்து - கூரிய   வாள்    கொண்டு   ஊனை      வெட்டுதலால்
ஊனும்     குருதியும் படிந்து சிவந்து  தோன்றும்    மரக்கட்டையும்
கண்டு  -  பார்த்த  துணையானே;  யாவரும் மதிமருளும் - யாவரும்
அறிவு   மயங்குதற்குக்   காரணமான;   உண்மரும்   தின்மரும்   -
உண்பாரும் தின்பாருமாய் வரும் பலரையும்; வரைவு கோள் அறியாது
-  வரைந்துகொள்வ தின்றாமாறு வழங்கியவழியும்; வாடாச் சொன்றி -
குறையாதசோறு;  பேராயாணர்த்து - நீங்காத புதுமையினை யுடைத்து;
நின் வளன் வாழ்க- இதற்குக் காரணமாகிய நின் செல்வம் வாழ்வதாக
எ - று. குரை : அசை.
 

இடையற   வின்றிச்   சமைத்தற்கு  வேண்டும்       அரிசியைக் 
குற்றிக் குற்றித் தேய்ந்தொழிந்தமை     தோன்றத், “தொடி மழுகிய
உலக்கை”   எனக்     கூறப்பட்டது.     குற்றந்தோறும்      ஓசை
யெழுப்புவதுபற்றித்  தொடி, குரைத்தொடி  யெனப்பட்ட  தென்றுமாம்.
உலையிடும்   அரிசியைத் தீட்டிக்     கோடற்பொருட்டு     அட்டிற்
சாலைக்கண்    மரவுரலும்  தொடியிட்டவுலக்கையும்    உளவாதலின்,
“உலக்கை  வயின்றோறும்”   என்றார்.      இலையோடு     கூடிய
சேம்புபோல     அகன்ற வாயையுடையதாதலால்,  சோறு  சமைக்கும்
மடாவினை “அடைச்சேம்  பெழுந்த     ஆடுறுமடா”     வென்றார்.
சேம்பின்அடி   மடாவின் அடிப்பகுதிக்கும்   அதன் இலை   அகன்ற
வாய்க்கும்  உவமம். இதுபோலும் வடிவில்    இக்காலத்தும்    சோறு
சமைக்கும் மண்  மிடாக்கள்  நாட்டுப்புறங்களிற்    காணப்படுகின்றன.
எழுந்த; உவமப்பொருட்டு. இம் மடாக்களை     நேரிற் கண்டறியாதார்
தத்தமக்கு வேண்டியவா றுரைப்பர்.  மடா,   மிடா   வெனவும் வரும்
இக்காலத்தவர் முடா வென வழங்குவர். சிவந்த  நிறமுடைய  ஊனைக்
கொத்திச்   சோற்றோடு    கலந்து   சமைப்பவாதலின்,   மடாவொடு
ஊனமும்  உடன்  காணப்படுகின்றன. “கோழூன் குறைக் கொழுவல்சி”
(மதுரை.  141)  என்பதனுரையில், “ஊனைக்கூட  இட்டு  ஆக்குதலின்
கொழுவல்சி”   யென்றார், ன நச்சினார்க்கினியர்  உரைப்பது  காண்க.
ஊனம், ஊனைக்   கொத்துதற்குக்     கொள்ளும்  அடிமணையாகிய
மரக்கட்டை; ஊனைக் கொத்துதலால் அதன் குருதி    படிந்து சிவந்து
தோன்றுதலால் “எஃகுறச் சிவந்த   வூனத்”    தென்றார்.  இவற்றைக்
காணுமிடத்து  இவற்றால் ஆக்கப்படும்     சோறும்   ஊனும்  என்ற
இவற்றின்  மிகுதி, காண்பார்  கருத்திற்றோன்றி, அவர்  தம் அறிவை
மயக்குதலின், யாவரும் கண்டு மதி மருளுவ  ரென்றார்.    யாவரும்”
என்றார். சமைக்கும் மடையர்க்கும்  மதிமருட்சி பயக்கும்    பெருமை
யுணர்த்தற்கு. இவற்றை முறையே  உண்ணவும்  தின்னவும் வருவாரை
வரையா  தேற்று வழங்குதலி்ன்,    குறைவுண்டாகாவாறு இடையறாது
சமையல் நிகழ்ந்தவண்ணமிருத்தலின்,   “உண்மரும் தின்மரும்  வரை
கோளறியாது   வாடாச்   சொன்றி”   யென்றார். அறியா   தென்புழி
வழங்கவும்  என ஒருசொற் பெய்து கொள்க. இனி, வரைகோ ளறியாது
ஆடுறு மடாவெனவியைத்து, இத்துணையரென வெல்லை யறியப்படாது
பன்முறையும்   சமைத்துக்      கொட்டுதலைப்        பொருந்திய
மடாவென் றுரைப்பினு மமையும்.  

ஏனைக்     கோளினும்    நாளினும்        வெள்ளி    மிக்க
வொளியுடையதாதலால்,  “வயங்குகதிர்  விரிந்து வானகம்  சுடர்வரு”
மென்றார்.   நேர்   கிழக்கில்   தோன்றுவதின்றிச்  சிறிது  வடக்கே
ஒதுங்கித்    தாழ்ந்து  விளங்குதலின்,        வறிதுவடக்கிறைஞ்சிய
வெள்ளியென்றும்,    அது          மழை            வளந்தரும்
கோள்களிற்றலைமை   பெற்றதாதலின்,   சீர்சால்   வெள்ளியென்றும்,
தலைமை  பெற்றதாயினும்  ஏனைக்  கோள்களும்  கூடியிருந்தாலன்றி
மழை  வளம்  சிறவாமை தோன்ற, “பயங்கெழு பொழுதொடு ஆநியம்
நிற்ப”  என்றும்  சிறப்புற  மொழிந்தார். நாளாவது நாண்மீன் கூட்டம்
பொழுது:  ஆகுபெயர்.  ஆநியம்  மழை  பெய்தற்குரிய  நல்ல நாள்.
“பயங்கெழு வெள்ளி ஆநிய நிற்ப” (பதிற். 69) எனப் பிறரும் கூறுவர்.
இனிப்  பழையவுரைகாரர்,  “வறிது  வடக்கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி
பயங்கெழு   பொழுதொ   டாநிய   நிற்ப   வென்றது,  சிறிது வடக்
கிறைஞ்சின  புகழானமைந்த வெள்ளி மழைக்குப் பயன்படும்  மற்றைக்
கோட்களுடனே  தான்  நிற்கும் நாளிலே நிற்க வென்றவாறு” என்றும்,
“பொழுதென்றது  அதற்கு  அடியாகிய  கோளை”  யென்றும், “வறிது
வடக்  கிறைஞ்சிய  வென்னும்  அடைச்  சிறப்பான்  இதற்குச்   (இப்
பாட்டிற்குச்) சீர்சால் வெள்ளியென்று பெயராயிற்” றென்றும் கூறுவர்.  
  

மழை    பொழியும் முகிற்கூட்டம் பக்க வானத்தே கால்  வீழ்த்துப்
பெய்தல்  இயல்பாதலால்,  “கையுற  வணங்கி”  என்றார். கை, பக்கம்,
மன்,  மிகுதிகுறித்து  நின்றது. ஞாயிறுபோல முகிற் கூட்டமும் வலமாக
எழுதல்   பற்றி,   “வலனேர்   பிரங்கும்”  என்றார்.  கீழ்க் காற்றாற்
கொணரப்படும்   மழைமுகில்  பெய்யாது  பொய்த்தல்  அரிதெனற்கு,
“காரெதிர்  பருவம்  மறப்பினும்”  என்றார். ஒருகால் அது மறப்பினும்
இச்   சேரமான்   வழங்கும்   சோறு   குன்றா  தென்பது  இதனால்
வற்புறுத்தவாறு.

இதுகாறும்   கூறியது, பீடு கொள் மாலைப் பெரும் படைத்தலைவ,
திருந்திழை  கணவ,  இயலறைக்  குருசில்,  நீர் முதலிய ஐந்தினையும்
அளந்து  முடிவறியினும்  பெருமை  யளத்தற்  கரியை; நின் வளன் -
வீங்கு   பெருக்கம்   இனிது   கண்டேம்;  மழை  காரெதிர்  பருவம்
மறப்பினும்  நின்  வாடாச்  சொன்றி  பேரா  யாணர்த்து; நின் வளன்
வாழ்க   என்பதாம்.   பழையவுரைகாரர்,   “பெரும்படைத்  தலைவ,
திருந்திழை கணவ, குருசில், நீர் நில முதலைந்தினையும் அளந்து முடி
வறியினும் பெருமை யளந்தறிதற் கரியை; நின் செல்வ மிக்க பெருமை
இனிது   கண்டேம்;  அஃது  எவ்வாறு  இருந்த  தென்னின் வாடாச்
சொன்றி  மழை  காரெதிர்  பருவம்  மறப்பினும்  பேரா  யாணர்த்து;
அப்பெற்றிப்  பட்ட  நின்  வளம் வாழ்க வென வினைமுடிவு செய்க”
என்பர்.

நேர்     கிழக்கே நில்லாது சிறிது வடக்கண் ஒதுங்கித் தோன்றிய
சீர்சால் வெள்ளியை “வறிது வடக் கிறைஞ்சிய” என அடை கொடுத்து,
சீர்  மாசு  பட்டார்  வடக்கிருப்பாராக,  வடக்கொதுங்கிய வெள்ளியை
வடக்   கிறைஞ்சிய   வென்றதன்   மாசின்மை  தோன்றச்  “சீர்சால்
வெள்ளி”   யென்றும்,   வறிது   வடக்கிறைஞ்சிய  வென்றும் கூறிய
சிறப்பால்,   இப்பாட்டு  இவ்வாறு  பெயர்  பெறுவதாயிற்  றென்றறிக.
சீர்மாசு    பட்டதனால்   கோப்பெருஞ்   சோழனும்   சேரலாதனும்
வடக்கிருந்தமை யறிக.

இதனாற்  சொல்லியது  அவன்  பெருமையும் கொடைச்  சிறப்பும்
கூறி வாழ்த்தியவா றாயிற்று.


 மேல்மூலம்