முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
26. தேஎர் பரந்தபுல மேஎர் பரவா
களிறா டியபுல நாஞ்சி லாடா
மத்துர றியமனை யின்னிய மிமிழா
ஆங்குப், பண்டுநற் கறியுநர் செழுவள நினைப்பின்
  5 நோகோ யானே நோதக வருமே
பெயன்மழை புரவின் றாகிவெய் துற்று
வலமின் றம்ம காலையது பண்பெனக்
கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூ
மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப்
  10 பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக்
காடுறு கடுநெறி யாக மன்னிய
முருகுடன்று கறுத்த கலியழி மூதூர்
உரும்பில் கூற்றத் தன்னநின்
திருந்துதொழில் வயவர் சீறிய நாடே.

     இதுவுமது. பெயர் - காடுறு கடூநெறி (11)

     (ப - ரை) 1. தேர்பரந்த புலம் ஏர் பரவாவென்றது ஒருகால்
தேர் பரந்த வயல் அத்தேர் பரந்த மாத்திரையாற் சேறாய்ப் பின்பு
உழுதற்கு ஏர் பரவாவென்றவாறு.

     2. களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடாவென்றது பன்றிகள்
உழுத 1கொல்லைத்தறை அவை உழுத மாத்திரையானே புழுதியாகிப்
பின்பு கலப்பை வழங்காவென்றவாறு.

     3. மத்து உரறிய மனை இன்னியம் இமிழாவென்றது மத்து
ஒலிக்கின்ற மனைகள் அம்மத்தொலியின் மிகுதியானே இனிய
இயங்களின் ஒலி கிளராவென்றவாறு.

     8. கட்பனியென்னும் ஒற்று மெலிந்தது.

     10-11. நெருஞ்சியின் அடர்ச்சியை நெருஞ்சிக்காடெனக் கூறிய
அடைச்சிறப்பான் இதற்கு,
'காடுறு கடுநெறி' என்று பெயராயிற்று.

     மூதூர்போல (12) என உவம உருபு விரித்து, அதனை வயவர்
சீறிய (14) என்னும் வினையொடு முடிக்க. இனிப் போலுமென விரித்து
வயவர் சீறிய நாடெனலும் ஒன்று. இனி மூதூர்க்கூற்றமெனக் கூட்டிக்
கூற்றுவன் கொடுமை மிகுதி கூறலுமொன்று.

     13. உரும்பில் கூற்றென்பது 'பிறிதொன்றால் நலிவுபட்டு மனக்
கொதிப்பில்லாத கூற்றமென்றவாறு. 2உருப்பென்னும் ஒற்று
3
மெலிந்தது.

     நின் (13) வயவர் சீறியநாடு அவ்வயவர் சீறுதற்குமுன்பு
இருக்கும்படி சொல்லின் (14). தேர் பரந்த புலம் ஏர் பரவா (1);
களிறாடிய புலம் நாஞ்சிலாடா (2); மத்து உரறிய மனை இன்னியம்
இமிழா (3); அவ்வாறு வளவியது இப்பொழுது காடுறு கடுநெறியை
உடைத்தாகா நின்றது (11); அதன் செழுவளத்தைப் பண்டு நற்கறியுநர்
நினைப்பின் (4) நோதக வரும்; நோவேன் யான் (5) என மாறிக்
கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக்
கூறியவறாயிற்று.

     நின் வயவர் சீறிய நாடு இவ்வாறு அழிந்ததென எடுத்துச்
செலவினை மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப்பாடாணாயிற்று.

     'தேஎர்பரந்த' (1) என்பது முதலாக மூன்றடி வஞ்சியடியாக
வந்தமையால் வஞ்சித்தூக்குமாயிற்று.

     'ஆங்கு' (4) என்பது அடிமுதற் கூன்.

     (கு - ரை) 1 - 3. இவ்வடிகளில் பகைவர்நாட்டின்
பழையநிலை கூறப்படும்.

     1. புலம் - விளை நிலங்கள். பரவா - எதிர்மறை வினைமுற்று.

     2. களிறு - பன்றி; "கேழற் கண்ணுங் கடிவரை யின்றே"
(தொல். மரபு. 34). நாஞ்சில் - கலப்பைகள்; பன்றிகள் உழுதமையால்
வயல்கள் பின்பு உழுதல் வேண்டாதனவாயின; ‘’கடுங்கட் கேழ லுழுத
பூழி, நன்னாள் வருபத நோக்கிக் குறவர், உழாஅது வித்திய பரூஉக்
குரற் சிறுதினை" (புறநா.168 : 4 - 6)

     3. மத்து உரறிய மனை - தயிர்கடையும் மத்துக்கள் ஒலித்த
வீடுகள்.இன்னியம் இமிழா - இனிய வாத்தியங்களின் ஓசைகள்
கேட்கப்படா.

     4. பண்டு நற்கு அறியுநர் - பழைய நிலைமையை நன்றாக
அறிபவர். நற்கு - நன்கென்பதன் விகாரம் (மலைபடு, 392, .)

     4-5. நினைப்பின் நோதக வரும் என்க. யான் நோகு - நான்
வருந்துவேன். ஓ : அசைநிலை.

     6.புரவு இன்றாகி - உலகத்தைக் காத்தல் இல்லையாகி.
வெய்துற்று வெம்மையுற்று.

     7. காலையது பண்பு வலம் இன்று என - சூரியனுடைய
வெம்மை நன்மையை யுடையதன்று என்று.

     8. கண்பனி மலிர்நிறை தாங்கி - கண்களில் பனிக்கின்ற
நீரைத்தாங்கி.

     8-9. கை புடையூ சிறுமை கூர - கைகளைப் புடைத்துத்
துன்பத்தை மிக அடைய.

     10. பீர் இவர் வேலி - பீர்க்கங்கொடி படர்ந்த
வேலியையுடைய; பாழ்மனையில் பீர்க்கங்கொடி படர்தல்: "ஊரெழுந்
துலறிய பீரெழு முது பாழ்", "முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப்
பீரெழுந்து, மனைபாழ்பட்ட" (அகநா. 167 : 10, 373 : 1 - 2).
பாழ்மனை நெருஞ்சி: "பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துச்,
சிறுபூ நெருஞ்சியோடறுகை பம்பி" (பட்டினப். 255 - 6); "பாழூர்
நெருஞ்சி" (புறநா. 155 : 4)

     11. மன்னிய - நிலைபெற்றன.

     12. முருகு உடன்று கறுத்த - முருகக்கடவுள் மாறுபட்டுக்
கோபித்த; முருகு - தெய்வத்தன்மை; முருகக்கடவுளுக்கு ஆகுபெயர்
(மதுரைக். 181, ந.). கலி அழி மூதூர் - ஆரவாரம் அழிந்த பழைய
ஊரைப்போல.

     13. உரும்பு இல் கூற்றத்து அன்ன - பிறிதொன்றால் கொடுமை
இல்லாத கூற்றுவனைப்போன்ற.

     14. திருந்துதொழில் வயவர் - பின்னிடாத
போர்த்தொழிலையுடைய வீரர்; 'திருந்தடி - பிறக்கிடாத அடி'
(புறநா. 7 : 2, உரை). சீறிய நாடு - கோபித்து அழித்த நாடுகள்.

     வயவர் சீறிய நாடு (14) சிறுமைகூர (9) நெருஞ்சிக் (10)
காடுறுகடு நெறியாக மன்னிய (11); அறியுநர் செழுவளம் நினைப்பின்
(4) நோதக வரும்; யான் நோவேன் (5) என முடிக்க.

     (பி - ம்.) 4 ஆங்கப். 7.வலனின்றம்ம. 9.நெலிவுடை
11.கடுநெறியாகு. (6)


     1கொல்லைத்தறை-தரிசாய்க் கிடந்த காடு.

     2உருப்பு-வெம்மை; நெருப்பெனச் சிவந்த வுருப்பவி ரங்காடு"
(அகநா. 11 : 2).

     3திருந்துதொழில் வயவரென்பது நோக்கி மெலிந்தது.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

6. காடுறு கடுநெறி
 
26.தேஎர் பரந்தபுல மேஎர் பரவா
களிறா டியபுல நாஞ்சி லாடா 
மத்து ரறியமனை இன்னிய மிமிழா
ஆங்குப், பண்டுநற் கறியுநர் செழுவள நினைப்பின்
 
5நோகோ யானே நோதக வருமே
பெயன்மழை புரவின் றாகிவெய் துற்று
வலமின் றம்ம காலையது பண்பெனக்
கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூ
மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப்
 
10பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக்
காடுறு கடுநெறி யாக மன்னிய
முருகுடன்று கறுத்த கலியழி மூதூர்
உரும்பில் கூற்றத் தன்னநின்
திருந்துதொழில் வயவர் சீறிய நாடே.
 

இதுவுமது.
 
பெயர்  : காடுறு கடுநெறி. 

1 - 5 தேஎர்...........வருமே.

உரை : தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா - தேர்கள்  செல்லுதலாற்
சேறுபட்ட வயல்கள் பின்னர் ஏர்கள் சென்றுலவி உழுதலை  வேண்டா;
களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா - பன்றிகள் உழுத  கொல்லைகள்
கலப்பையால்   உழப்படுதலை   வேண்டா;   மத்து   உரறிய  மனை
இன்னியம்   இமிழா  -  தயிர்  கடையும்  மத்தின்  ஒலி   முழங்கும்
ஆய்ச்சியர்    மனைகள்    இனிய   வாச்சியங்களின்     முழக்கிசை
கேட்கப்படா; ஆங்கு - அவ்விடத்தை; பண்டு நற்கு அறியுநர் - முன்பு
நன்றாகக்  கண்டறிந்தவர்; செழு வளம் நினைப்பின -  அப்போதிருந்த
செழுமையான  வளத்தை இப்போது நினைப்பா ராயின்; நோதக வரும்
- நினைக்கும் நெஞ்சு நோவத்தக்க வருத்தமுண்டாகும்; யான் நோகு -
யானும் அதனை நினைந்து வருந்தாநிற்கின்றேன் எ - று.

பகைவர்     நாடழிந்தது  கண்டு,  அவ்  வழிவின்    மிகுதியைப்
புலப்படுத்தற்கு   அவற்றின்   பண்டைய   நிலையினையும்    உடன்
குறிக்கின்றார்.  அந் நாட்டவர் பலரும் செல்வராதலின் அவர்  தேர்கள்
வயலிடத்தே   செல்லின்,   அவை   பின்பு   ஏரால்   உழப்படுதலை
வேண்டாதே சேறுபட்டு வித்தி்ப் பயன்கொள்ளற் குரிய  பண்பாட்டினை
யெய்தும் என்பார், “தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா” என்றார்.  ஏஎர்,
மென்புலமாகிய  நன்செய்களையுழும்  கலப்பை  “தேஎர் பரந்த  புலம்
ஏஎர்  பரவாவென்றது,  ஒருகால் தேர் பரந்த வயல் அத் தேர்  பரந்த
மாத்திரையாற்   சேறாய்ப்  பின்பு  உழுதற்கு  ஏர்  பரவா  என்றவா”
றென்பர்  பழையவுரைகாரர்.  இது மென்புல வைப்பின் நலம்  கூறிற்று.
புன்     செய்களாகிய     கொல்லைகளைப்     பன்றிகள்    உழுது
பண்படுத்திவிடுதலின், அவையும் முற்கூறிய நன்செய்களைப்  போலவே
கலப்பைகளைக்  கொண்டு உழவேண்டாவாம் என்பார், “களிறா டியபுல
நாஞ்சி  லாடா”  வென்றார்.  “கடுங்கட்  கேழ  லுழுத பூழி, நன்னாள்
வருபத  நோக்கிக் குறவர், உழாஅது வித்திய பரூஉக்குரற்  சிறுதிணை”
(புறம்.  168)  எனப்  பிறரும்  கூறுதல்  காண்க. களி றென்றது ஈண்டு
ஆண்பன்றியினை;  “வேழக்  குரித்தே  விதந்துகளி  றென்றல்” என்ற
ஆசிரியர்,  “கேழற்  கண்ணும் கடிவரை யின்றே”  (தொல். மரபு 34-5)
என்றலின்,  ஆண்  பன்றி  களிறெனப்பட்டது.  கொல்லையில் தானே
முளைத்திருக்கும்   கோரையின்   கிழங்கை  யுண்டற்குப்    பன்றிகள்
நிலத்தைக்    கிளருதல்    பற்றி,   “களிறாடிய   புலம்”    என்றார்;
“கிழங்ககழ்கேழல்  உழுத சிலம்பு” (ஐங். 270) என்று பிறரும்  கூறுவர்.
பழையவுரைகாரர்,  “களிறாடிய புலம் நாஞ்சி லாடா வென்றது,  பன்றிக
ளுழுத  கொல்லைத் தறை அமை உழுத மாத்திரையானே  புழுதியாகிப்
பின்பு  கலப்பை வழங்கா வென்றவா” றென்பர். மென்புலம்  உழுவதை
ஏர் என்றும், வன்புல முழுவதை நாஞ்சில் என்றும் வழங்குப.

இக்   கொல்லைகளைச்   சார்ந்துள்ள ஆயர் மனைகளின்  வளம்
விளம்புவார், ஆங்குப்  பால் வளம்   சிறந்திருத்தலால்  மனைதோறும் தயிர்கடைபவரின்     மத்தொலியே   பெரிதும்     முழங்குதலால்,
அம்   முழக்கினை   விஞ்சமாட்டாது   ஆண்டுள   தாகும்  மங்கல
முழவு   முதலியவற்றின்   இசையொலி   கேட்பார்   செவிப்புலத்தை
யெட்டா தொழியு  மென்பார்,  “மத்து ரறிய  மனை யின்னிய மிமிழா”
என்றார்.  “மத்தொலிக்கின்ற     மனைகள்    அம்    மத்தொலியின்
மிகுதியானே இனிய  இயங்களின்  ஒலிகிளரா” என்று பழையவுரைகாரர்
கூறுவர்.
 

அந்     நாடுகளின் வள மிகுதியைப் பொதுவாக  அறிந்தோரினும்
சிறப்பாக  அறிந்தோர்க்கே  அவ்  வளத்தின் கேடு  இனிது விளங்கும்
என்பதுபற்றி,  “ஆங்குப்  பண்டு  நற்கறியுநர்” என்றும், அவர் கண்ட
மாத்திரையே    அழிவு   மிகுதியாற்   செயலற்றுப்   போவராதலின்,
“நினைப்பின்”  என்றும்,  நினைக்கலுற்றவழி, பண்டு கண்ட  வளத்தின்
மிகுதி    அவர்   நினைவில்   தோன்று   மாதலின்,   “செழுவளம்
நினைப்பின்”  என்றும்,  அதனால்  அவர் நெஞ்சு நொந்து வருந்துவ
தொருதலையாதலால்  “நோதக  வருமே”  யென்றும் கூறினார். நன்கு,
நற்கென  விகாரமாயிற்று;  “அது  நற்  கறிந்தனையாயின்” (புறம். 121)
என்றாற்போல  நன்கு  அறிந்தோருள்  தாமும்  ஒருவராதல் தோன்ற,
“நோகோ  யானே”  யென்றார். ஓகாரம், அசைநிலை. நோகு, தன்மை
வினைமுற்று.

இவ்வாற்றல்  பகைவர்  நாட்  டழிவின் பொதுவியல்பு   கூறினார்.
இனி, அதன் இயல்பைச் சிறப்புறக் கூறுகின்றார்.

6 - 14. பெயல்மழை..............நாடே.

உரை : முருகு  உடன்று  கறுத்த  கலியழி  மூதூர் - முருகவேள்
வெகுண்டு  பொருதழித்தலால்  செல்வக்  களிப்பிழந்த  மூதூர்களைப்
போல;  உரும்பில் கூற்றத் தன்ன நின் திருந்து தொழில் வயவர் சீறிய
நாடு பிறரால்  நலிவுறுதல்  இல்லாத  கூற்றினை யொத்த நின்னுடைய
திருந்திய தொழிலையுடையவீரர்கள் வெகுண்டு பொருதழித்த  நாடுகள்;
பெயல்மழை   புரவின்றாகி   -  காலத்தி்ற்  பெய்தலையுடைய  மழை
பெய்யாமற்   பொய்த்தமையால்;  வெய்  துற்று  வெயிலது  வெம்மை
மிகுதலால்;  வலம் இன்று - நாடு நலம் பயப்பதின்றாயிற்று; காலையது
பண்பு என - இஃது அல்லற் காலத்தது பண்பா மெனச் சொல்லி; கண்
பனி  மலிர்  நிறை  தாங்கி  - பனித்த கண்ணில் நீர் நிரம்பத் தாங்கி;
மெலிவுடை  நெஞ்சினர்  - வலியழிந்த மனமுடையரான பகைப்புலத்து
மக்கள்;   கை  புடையூஉ  -  செயலறுதி  தோன்றத்  தம்  கையைப்
புடைத்து;   சிறுமை  கூர  -  வருத்த  மெய்த;  பீர்  இவர்  வேலிப்
பாழ்மனை   -   பீர்க்கின்   கொடிபடர்ந்த   வேலி   சூழ்ந்த  பாழ்
மனைகளும்;  நெருஞ்சிக்  காடுறு  கடு நெறியாக மன்னிய - நெருஞ்சி
முட்கள் காடுபோல் செறிந்த வழிகளுமாக நிலைபெற்றன எ - று.

உரிய     காலத்தில் மழையினைப் பெய்து உலகத்   துயிர்களைப்
புரத்திற்குரிய  மழை  பெய்யாது  பொய்த்தமையின்,  “பெயல்  மழை
புரவின்றாகி”   யென்றும்,   அதனால்   வெயிலது  வெம்மை  மிக்கு
உயிர்கட்கு        வருத்தம்       மிகுவித்தல்      இயல்பாதலின்,
“வெய்துற்று”                என்றும்                 கூறினார்.
செய்தெனெச்சங்கள்   காரணப்பொருள்.   இந்நிலையில்   செய்வோர்
செய்வினைப் பயன் பெறுதல் இ்ல்லை யாதலால், “வலமின்”  றென்றும்,
அவர்தம்   வருத்தமிகுதி  தோன்ற,  “அம்ம”  வென்றும்   குறித்தார்.
நாடழிந்து   விளை  பொருளின்றிக்  கெட்டு  வெம்மை   மிக்கதற்குச்
சேரனையாதல்,  அவன் வயவரையாதல், தம் நாட்டு வேந்தரை யாதல்
பிறரையாதல்  நோவாது  காலத்தை  நொந்து, “காலையது பண்பெனக்
கண்பனி  மலிர்  நிறை  தாங்கிக்  கைபுடையூஉ” வருந்தினர் என்றார்.
ஊழையும்   உப்   பக்கம்   காணும்   உரனுடைய   ரல்லரென்றற்கு,
“மெலிவுடை    நெஞ்சினர்”   என்றும்   அதனால்   அவரெய்துவது
சிறுமையே  யென்பது  விளங்க,  “சிறுமை  கூர  என்றும்   கூறினார்.
எனவே,  சேரனது  சீற்றத்தையும் அவனுடைய வீரரது  ஊற்றத்தையும்
முன்னே  தெரிந்து  புகலடையாத  சிறுமையும் அதற்  கின்றியமையாத
உரனின்மையும்    ஓராற்றால்   உணர்த்தினா   ராயிற்று.   நெஞ்சில்
திண்மையிலதாகவே,   எய்துவது  சிறுமையாயிற்று.  இனி,  காலையது
பண்பென்புழிக்  காலை  ஞாயி  றென்றும்  அதன்  பண்பு  வெம்மை
யென்றும்   கொண்டு,  காலையது  பண்பு  வெய்துற்றென   இயைத்து
ஞாயிற்றின்  வெம்மையால் வெயின் மிகுந்து என்பாரு முளர்.  கட்பனி
யெனற்பாலது   கண்பணி  யென  நின்றது.  கைபுடையூஉ   வென்றது
கையாறு. 
 

நாடு    முற்றும் வயவர் பொருதழித்துக் கொண்டமையின், நாடுகள்
மனை   பாழ்பட்டுப்  -பீர்  படர்ந்த  வேலியும்  நெருஞ்சி   செறிந்த
கடுவழிகளும்  உடையவாயின  என்பார்;  “பீரிவர் வேலிப்  பாழ்மனை
நெருஞ்சிக்    காடுறு    கடுநெறியாக”    என்றார்;   “முனைகவர்ந்து
கொண்டெனக்   கலங்கிப்  பீரெழுந்து  மனைபாழ்  பட்ட   மரைசேர்
மன்றம்”   (அகம்   373)  எனப்  பிறரும்  கூறுதல்  காண்க.   பாழ்
மனைகளில்  பீரும்  நெருஞ்சியும்  அறுகும்  பிறவும்   மிடைந்திருக்கு
மென்பது  இன்றும்  காணக்கூடியது.  மக்கள்    வழங்குதலின்மையின்,
நெருஞ்சியும்  பிறவும் காடுபோற் செறிதலால் வழிகள்  சிறுகிக்கப்பணம்
பரந்த   கலலதர்   போலச்   செல்வார்க்கு   வருத்தம்   பயத்தலின்,
“நெருஞ்சிக்   காடுறு   கடுநெறி   யாக”  என்றும்,  அதனைத்  தாம்
வரும்போது கண்டு போந்தமை தோன்ற “மன்னிய” வென்றும்கூறினார்.
“மன்னிய”  வென்றதனால்  மீளவும்  நாடாதல் அருமை தோன்றிற்று.

முருகன் சூரனைச் சினந்து சென்று அவனிருந்த மூதூரைச்  செறுத்த
காலத்தே  அவன் இனத்தவரது உயிர் குடித்த கூற்றுவனைப் போல  நீ
சினந்து   சென்று  போருடற்றிய  காலத்தே  பகைவரை   நின்வயவர்
கொன்று  குவித்தனரென்பார்,  “முருகுடன்று  கறுத்த  கலியழி  மூதூர்
(போல) உரும்பில் கூற்றத் தன்னநின் வயவர் சீறிய நாடே”  யென்றார்.
முருகு,  முருகன்;  “முருகுபுணர்ந்தியன்ற  வள்ளி  போல”   (நற். 82)
என்றார்  போல. மூதூர் போல நாடுகள் மன்னிய என முடிக்க  “மூதூர்
போல  வென  உவமவுருபு  விரித்து அதனை வயவர் சீறிய  என்னும்
வினையொடு  முடிக்க;  இனி,  போதும்  என  விரித்து வயவர்  சீறிய
நாடெனலும்  ஒன்று;  இனி மூதூர்க் கூற்ற மெனக் கூட்டிக்  கூற்றுவன்
கொடுமை மிகுதி கூறலு மொன்” றென்பர் பழைய வுரைகாரர்.

முருகன்   சூரனைச் சினந் துடற்றிய போரால் அச் சூரனது  மூதூர்
கலியழிந்து  மாறிய  செய்தி  உலகறிந்த  தாதலின்,  “கலியழி  மூதூர்”
என்று    எடுத்தோதி, அச்   சூரனாலும்  பிற    ரெவராலும்  நலிவு
படாதவன்மையுடைமைபற்றிக் கூற்றுவனை, “உரும்பில் கூற்ற” மென்றும்
குறித்தார்.   நாட்டிற்கு   மூதூரும்,  வயவர்க்குக்  கூற்றமும்  உவமம்
கூறலின்,   கூற்றுவனை   யேவல்  கொள்ளும்  சேரனது   வலிமிகுதி
குறிப்பால்     உணர்த்தினாராயிற்று.     “உரும்பில்    கூற்றென்பது
பிறிதொன்றால்  நலிவுபட்டு  மனக்கொதிப்பில்லாத கூற்ற  மென்றவாறு;
உருப்பென்னும்  ஒற்று  மெலிந்து நின்றது” என்பர்  பழையவுரைகாரர்.
படையழிந்து     மாறினார்    மேலும்    மகளிர்    மேலும்    பிற
பொரற்காகாதார்மேலும்    படையெடாச்    சீர்மை     யுடைமைபற்றி
வயவரைத்  “திருந்துதொழில்  வயவர்” என்றார். சீறிய-சீறிய  வதனால்
அழிந்த வெனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது.
  

காடு     நிலந்  தெரியாவண்ணம்  பசுந்   தழையும்    முள்ளும்
மண்டிமாவும்  மாக்களும்  இனிது  வழங்காவாறு  வருத்தம்  செய்வது
போல,  நெருஞ்சியும்  பச்சிலையுங்  முள்ளும் மண்டி மக்கள்  இனிது
நடந்து   செல்லவொண்ணாதபடி   வருத்தும்  இயல்பு   கொண்டுள்ள
திறத்தினைவிதந்தோதிய  சிறப்பால் இப் பாட்டிற்குக் “காடுறு கடுநெறி”
யென்பது   பெயராயிற்று.  “நெருஞ்சியின்  அடர்ச்சியை   நெருஞ்சிக்
காடெனக்  கூறிய  அடைச்சிறப்பால் இதற்குக் காடுறு கடுநெறி யென்று
பெயராயிற்று” என்பர் பழையவுரைகாரர்.

இதுகாறும்    கூறியது வேந்தே நீ சிறிய நாடுகள் மக்கள் கண்பனி
மலிர்நிறை தாங்கி வலமின் றம்ம, காலையது பண்பெனக்  கைபுடையூஉ
மெலிவுடை  நெஞ்சினராய்ச்  சிறுமை கூர, நெருஞ்சிக் காடுறு கடுநெறி
யாக  மன்னிய;  பண்டு அறியுநர் அவற்றின் செழுவளம்  நினைப்பின்,
தேர்பரந்த  புலம்  ஏர்பரவா  நலமும்,  களிறாடிய புலம் நாஞ்சிலாடா
நலமும்  மத்து  ரறியமனை  இன்னியம்  இமிழா  நலுமும்   நெஞ்சிற்
றோன்றி  நோதக  வரும்;  யான்  நோகு  என்பதாம். இனிப் பழைய
வுரைகாரர்,  “நின்  வயவர்  சீறிய நாடு அவ் வயவர் சீறுதற்கு முன்பு
இருக்கும்படி சொல்லின், தேர்பரந்த புலம் ஏர் பரவா, களிறாடிய புலம்
நாஞ்சி   லாடா,  மத்து  ரறியமனை  இன்னியம்  இமிழா,  அவ்வாறு
வளவியது   இப்பொழுது   காடுறு  கடுநெறியை  யுடைத்தாகாநின்றது;
அதன்   செழுவளத்தைப்  பண்டு  நற்கறியுநர்  நினைப்பின்  நோதக
வரும்;  நோவேன்  யான்  என  மாறிக்  கூட்டி வினைமுடிவு செய்க”
வென்பர்.

இதன்கண்     நின் வயவர் சீறிய நாடு இவ்வாறு அழிந்த   தென
எடுத்துச்   செலவனை   மேலிட்டுக்  கூறினமையால்  வஞ்சித்துறைப்
பாடாணாயிற்று;  தேர் பரந்த என்பது முதலாக மூன்றடி வஞ்சியடியாக
வந்தமையால்  வஞ்சித்தூக்கு  மாயிற்று;  ஆங்கு  என்பது  அடிமுதற்
கூன்.   “சீர்கூ   னாதல்   நேரடிக்  குறித்தே”  (தொல்.  செய்.  49)
என்பவாகலின், நேரடி முதற்கண் வந்தது.

இப் பாட்டால்  சேரனது வென்றிச்  சிறப்புக்    கூறியவாறாயிற்று.


 மேல்மூலம்