முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
28. திருவுடைத் தம்ம பெருவிறற் பகைவர்
பைங்கண் யானைப் புணர்நிரை துமிய
உரந்துரந் தெறிந்த கறையடிக் கழற்காற்
கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப
  5 இளையினிது தந்து விளைவுமுட் டுறாது
புலம்பா வுறையு ணீதொழி லாற்றலின்
விடுநிலக் கரம்பை விடரளை நிறையக்
கோடை நீடக் குன்றம் புல்லென
அருவி யற்ற பெருவறற் காலையும்
  10 நிவந்துரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச்
சீருடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயர்
உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறைச்
செந்நீர்ப் பூச லல்லது
வெம்மை யரிது நின் னகன்றலை நாடே.

     துறை - நாடுவாழ்த்து. வண்ணமும் தூக்கும் அது. பெயர்
- உருத்துவரு மலிர்நிறை (12)

     (ப - ரை) 3. கறையடியென்றது குருதிக்கறையினையுடைய
அடி யென்றவாறு.

     4-5. மறவர் கதழ் தொடை மறப்ப இளை இனிது தந்தென்றது
நின்வீரர் போரில்லாமையால் விரைந்து அம்புதொடுத்தலை
மறக்கும்படி நாடு காவலை இனிதாகத் தந்தென்றவாறு.

     இளை - காவல். விளைவில் முட்டுறாமலெனத் திரிக்க.

     6. புலம்பா உறையுட்டொழிலென மாறிக் கூட்டுக.

     7. கரம்பை விடர் அளை நிறையவென்றது முன்பு நீரேறாத
கரம்பை வயல்களிற் 1கமர்வாய் நீர்நிறைய வென்றவாறு.

     விடரளை நிறைய (7) வாய்பரந்து மிகீஇயர் (11) என முடிக்க.

     கோடை நீடுகையாலே குன்றம் புல்லெனும்படி (8) அருவியற்ற
காலை (9) எனக் கூட்டியுரைக்க.

      11. வாய் பரந்து மிகீயரென்றது இடத்திலே பரந்து நீர்தான்
தன்னை மிகுக்க வேண்டி என்றவாறு.

     12. உவலை சூடி உருத்துவரும் மலிர்நிறையென்றது
தழைகளைச் சூடித் தோற்றிவரும் வெள்ளமென்றவாறு.

     தன்னை வயல் பொறுக்குமாறு காணவென்று போர்வேட்டு
வருவாரைப் போலுமென்று கூறிய இச்சிறப்பானே இதற்கு,
'உருத்துவரு மலிர் நிறை'
என்று பெயராயிற்று.

     வாய்பரந்து மிகீஇயர் (11) உருத்துக் (12) கரையிழிதரும்
நனந்தலைப் பேரியாற்று (10) மலிர்நிறைச் (12) செந்நீர் (13) என
மாறிக் கூட்டுக.

     பெருவறற்காலையும் (9) நின் அகன்றலைநாடு (14), புலம்பா
வுறையுட் டொழிலை நீ ஆற்றலின் (6) திருவுடைத்து (1) எனக் கூட்டி
வினை முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் நாடுகாத்தற் சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1 - 6. சேரனது அரசாட்சிச்சிறப்பு இவ்வடிகளிற் கூறப்படும்.

     1. பெருவிறற்பகைவர் - முன்பு பெரிய வெற்றியையுடைய
பகைவரது; 'வென்றிக்களிறு - முன்பு வெற்றியையுடைய களிறு'
(சீவக. 14, ந.)

     2. பைங்கண் யானைப் புணர்நிரை துமிய - பசிய
கண்ணையுடைய யானையினது, தம்மிற் கூடின வரிசை அழியும்படி.

     3. உரம் துரந்து எறிந்த - வன்மையினால் செலுத்தி
வேலையெறிந்த. கறையடி - இரத்தக் கறையையுடைய அடி; இது
மறவருக்கு அடை.

     4. கதழ் தொடைமறப்ப- விரைந்து அம்பு தொடுத்தலை
மறக்கும்படி.

     5. நாடுகாவலை இனிமையாகச் செய்து பயிர்விளைவுகள்
குறையாமல்.

     6. வருந்தாத இருப்பிடங்களிலே நீ தொழிலைச் செய்தலால்
புலம்பா உறையுள் என்றது குடிமக்கள் பகை பசி பிணி என்னும்
துன்பங்கள் இன்றி அமைதியாக உறையும் இடங்களை. தொழில்
என்றது அம் மூன்று வருத்தங்களையும் போக்கிப் புரக்கும்
தொழிலை.

     7-13. ஆற்று நீரின் சிறப்பு. 7. விளைவின்றி விடப்பட்ட
நிலத்தினையுடைய தரிசுகளிலுள்ள வெடிப்புக்களில் நீர் நிறையும்படி.

     8-9. கோடைத்தன்மை நீட்டித்திருத்தலின் மலைகள் பொலி
வழிய, அருவி ஒழுகாது அற்றுப்போன பெரிய வறட்சிக் காலத்திலும்;
"கல் காயும் கடுவேனிலொடு" (மதுரைக். 106)

     10. மிக்குக் கரையின்கண்ணே இறங்குகின்ற அகன்ற
இடத்தையுடைய பெரிய ஆற்றினது. பேரியாறு -
சேரநாட்டிலுள்ளதோர் ஆறு எனலுமாம்; "பெருமலை விலங்கிய
பேரியாற் றடைகரை" (சிலப். 25 : 22); பேரியாற்றினது மலிர் நிறை
(12) என முடியும்.

     11. சிறப்பையுடைய அகன்ற வயல்களிடத்திலே பரவி மிகும்
பொருட்டும்.

     12. தழைகளை மேலே போர்த்துத் தோற்றிவருகின்ற
வெள்ளத்தினது. உவலை - தழை.

     13. சிவந்த நீரினாலுண்டாகம் ஆரவாரம் அல்லாமல்; வெள்ளம்
கண்ட உழவரது ஆரவாரமும் நீர்விளையாட்டுச் செய்வார்
ஆரவாரமும் ஒருங்கு கொள்க.

     7-12. அளை நிறையவும் புலம் மிகவும் வருகின்ற மலிர்நிறை.

     14. வெம்மை அரிது - பகைவரால் உண்டாகும் கொடுமை
இல்லாதது.

     12-4. பதிற். 13 : 12, உரை. நீர்ப்பூசலல்லது பகைவர்களால்
உண்டாகும் பூசல் இல்லையென்பார் அந்நீர்ப் பூசலைப் பகைவர்
பூசல் போலத் தோற்றும்படி சொற்றொடர் அமைத்தார். உவலைக்
கண்ணியைச் சூடிக் கோபித்து வருகின்ற வெள்ளத்தின் சிவந்த
நீர்மையையுடைய பூசல் என ஒரு பொருள் தோற்றியது. வீரர்
உவலைக்கண்ணி சூடுதல்; "உவலைக்கண்ணி வன்சொ லிளைஞர்"
(மதுரைக் 311). "உருத்தெழு வெள்ளம்" (பதிற். 72 : 10) என்பதற்கு,
'கோபித்தெழு வெள்ளம் என உரையாசிரியர் எழுதிய உரை
இங்கே கருதற்குரியது.

     நின் அகன்றலை நாடு மறவர் தொடை மறப்ப, நீ ஆற்றலின்
வெம்மை யரிது; ஆதலால் திருவுடைத்து,

     (பி - ம்.) 5. வினையினிது. 10. கரையழிதரு, (8)


     1கமர் - வெடிப்பு.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

8. உருத்துவரு மலிர்நிறை
 
28.திருவுடைத் தம்ம பெருவிறற் பகைவர்
பைங்கண் யானைப் புணர்நிறை துமிய
உரந்துரந் தெறிந்த கறையடிக் கழற்காற்
கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப
 
5இளையினிது தந்து விளைவுமுட் டுறாது
புலம்பா வுறையு ணீதொழி லாற்றலின்
விடுநிலக் கரம்பை விடரளை நிறையக்
கோடை நீடக் குன்றம் புல்லென
அருவி யற்ற பெருவிறற் காலையும்
 
10நிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச்
சீருடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயர்
உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறைச்
செந்நீர்ப் பூச லல்லது
வெம்மை யரிதுநின் னகன்றலை நாடே.
 

துறை  : நாடு வாழ்த்து.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : உருத்துவருமலிர்நிறை. 

உரை : கோடை  நீட  -  வேனிற்காலம்  நீட்டித்தலால்;  குன்றம்
புல்லென  -  குன்றுகள்  பொலிவழிந்து தோன்ற; அருவி அற்ற பெரு
வறற்   காலையும்   -   அருவிகள்   நீர்   வற்றி  யுலர்ந்த  பெரிய
வறட்சிக்காலத்தும்;  கரை நிவந்து இழி தரு நனந்தலைப் பேரியாற்று -
கரை   யளவும்   உயர்ந்து   நீர்   பெருகி   வழிந்திழியும்  அகன்ற
இடத்தையுடைய     பேரியாறு    பாயும்;    சீருடை    வியன்புலம்
சிறப்புப்பொருந்திய  அகன்ற  புலத்தில்; விடு நிலக்கரம்பை விடரளை
நிறைய  -  விலங்கினங்கள் புல் மேய்தல் வேண்டி விடப்பட்ட கரம்பு
நிலத்தில் உண்டாகிய வெடிப்புக்களில் நீர் நிறைந்து தேங்குமாறு; வாய்
பரந்து  மிகீஇயர்  -  இடந்தொறும் பரந்து மிகுதல் வேண்டி; உவலை
சூடி  - தழைகளைச் சுமந்து; உருத்து வரும் மலிர் நிறை - சினமுற்று
வருவதுபோல   ஓலிட்டு   மிக்குவரும்   பேரியாற்று  வெள்ளத்தின்;
செந்நீர்ப்  பூசல்  அல்லது  -  சிவந்த  நீரின் ஆரவார மல்லது; நின்
அகன்றலை  நாடு வெம்மை அரிது - நினது அகன்ற இடத்தையுடைய
நாட்டிடத்தே  வேறே  உயிர்கட்குக்  கொடுமை செய்யும் போர்ப்பூசல்
என்பது  இல்லை;  (இதற்குக்  காரணந்தான்  யாதோ வெனின்) பெரு
விறல் பகைவர் - மிக்க வலி படைத்தபகைவருடைய;     பைங்கண் யானைப்          புணர்         நிரை         துமிய -   பசிய
கண்ணையுடைய  யானை கலந்த படை வரிசை கெடுமாறு; உரம் துரந்
தெறிந்த  -  தமது  வலியைச் செலுத்தி யெறிந்த; கறையடிக் கழற்கால்
கடுமா  மறவர்  -  குருதிக் கறைபடிந்த கழற் காலும்  கடுமாப்போலும்
விரைந்த   செலவுமுடைய  வீரர்;  கதழ்  தொடை  மறப்ப  -  மிக்க
விசையுடன்  செலுத்தும்  தமது விற்றொழிலை மறக்கும்படியாக; இளை
இனிது  தந்து - காவற் றொழிலை இனிது செய்து; விளைவு முட்டுறாது
விளை   நலம்   குன்றாதாக;   புலம்பாவுறையுள்  தொழில்-அவ்வீரர்
தமக்குரியவரைப்  பிரிந்துறைதலின்றி  அவரோடு  கூடி இனிதிருக்கும்
செயலை;  ஆற்றலின்  -  நீ  நின்  நாடு  காத்தற்  றொழிலால்  எய்
துவிக்கின்றா  யாகலான்; திருவுடைத்து - நினது நாடு மிக்க திருவினை
யுடைத்து எ- று. 
 

நின்     அகன்றலை நாடு, செந்நீர்ப் பூச லல்லது வெம்மை யரிது;
அதற்குக்  காரண  மென்னையெனின், நீ தொழி லாற்றலின், நின்னாடு
திருவுடைத்து  என  இயையும். அம்ம, உரையசை. அருமை,  இன்மை
குறித்துநின்றது.

வேந்தர்க்குப்     பெருமை தருவது அவருடைய அறிவு ஆண்மை
பொருள்களே   யன்றிப்   படையுமாதலின்,   அப்படைப்   பெருமை
தோன்ற,   “பெருவிறற்  பகைவர்  பைங்கண்  யானைப்  புணர்நிரை”
யென்றார்.  “யானையுடைய  படை காண்டல் முன்னினிதே”  (இனியது
40)  என்பது  பற்றி  யானைப்படை விதந்து கூறப்பட்டது.  யானைகள்
இயல்பாகவே  தம்மில்  ஒருங்கே  அணிவகுத்துச் செல்லும் இயல்பின
வாதலின்,  அவற்றைப்  “புணர்நிரை”  யென்றார்.  அப் படையினைப்
பொருது  சிதைப்ப  தென்பது மிக்க வன்மையுடையார்க்கே இயலுவதா
மென்பது  எய்த,  “துமிய”  என்றும்,  துமிக்கு மிடத்தும், வீரர் தமது
வன்மை  முழுதும்  செலுத்திப்  பொருவர்  என்பார்.  “உரம்  துரந்து
எறிந்த”  என்றும்  கூறினார்.  வில்  வீரரது வென்றி மாண்பு அவரது
அகன்றுயர்ந்த     மார்பின்    வன்மையைப்    பொறுத்திருத்தலால்
உரத்தையெடுத்   தோதினா   ரென்றுமாம்.   துமிந்தவற்றின்   குருதி
வெள்ளத்தில்  நின்று  பொருதலால், அவருடைய காலடி  குருதிக்கறை
படிதலின்  “கறையடி”  யெனப்பட்டது. பழையவுரைகாரரும்  “கறையடி
யென்றது குருதிக் கறையினையுடைய அடியென்றவா” றென்பர்.  கடுமா,
விரைந்து  செல்லும்  இயல்பினவாகிய  விலங்குகள். கடுமாப்  போலும்
விரைந்து  செல்லும்  இயல்பின்வழி  யானைப்போரில் வென்றி பெறல்
அரிதாதலின்,   “கடுமா   மறவர்”   என்றார்;   “கடுமாப்  பார்க்கும்
கல்லாவொருவன்”  (புறம்  189),  என்புழிப் போல. இனி, கடுமாவைக்
குதிரை யென்று கொண்டு, கடுமா மறவ ரென்றது, குதிரைமேல் வீரரை
யெனக் கூறுவாரு முண்டு.

இவ்வாறு     போர் கிடைத்தவழிப் பேராண்மை காட்டிப் பொருது
வென்றி  மேம்பட்ட  வீரர்  அது  கிடையாமல்  மடிந்திருக்கும் திறம்
கூறலுற்று, மிக்க விரைவொடு செல்லும் அம்பு தொடுக்கும் விற்றிறத்தை
அவர் மறந்தனர் என்பார், “கதழ் தொடை மறப்ப” என்றும்,  அதற்குக்
காரணம்  குட்டுவன்  நாடு  காவலை  நன்கு  ஆற்றியதும் வேண்டும்
பொருள் இனிது விளைந்ததுமேயென்பார், “இளை    யினிது   தந்”
தென்றும்,  “விளைவு       முட்டுறாது”      அம்பு   தொடுத்தலை
மறக்கும்படி நாடு   காவலை   இனிதாகத் தந்தென்றவா”    றென்பர்.
இளை,         காவல்.              முட்டுறாது         என்றது,
முட்டுறாதாக  என்றவாறு;  “விளைவில்  முட்டுறாமல்  எனத் திரிக்க”
வென்பர்   பழையவுரைகாரர்.   இவ்வாற்றல்   வினைவயிற்  பிரிவும்
பொருள்வயிற்     பிரிவும்     ஆண்மக்கள்பால்      இன்மையின்,
மனைவாழ்க்கையில்   தனித்திருந்து  வருந்தும்  பிரிவு  இலதாதலின்,
“புலம்பாவுறையுள்  தொழில்” உளதாயிற்று. இதற் கேதுவாய அரசாட்சி
நலத்தை    யாப்புற    வுணர்த்தற்பொருட்டு,    “இளையினி   தந்”
தென்றதனையே “நீ ஆற்றலின்” என்று மீட்டும் கூறினார்.
 

இனி,    அவன் காவற் சிறப்பைக் கட்டுரைக்கலுற்ற ஆசிரியர், நீர்
நலத்தை   விரித்தோதுமாற்றல்  விளக்குகின்றார். மாரிக்கண்  உண்ட
நீரைக்  கோடைக்கண் அருவி வாயிலாக உமிழும் வாய்ப்பினையுடைய
குன்றம்,   அக்கோடை   நீட   எங்கும்   பெருவறங்   கூருமிடத்து,
உயர்ச்சியால்  குளிர்ந்து பசுந்தழை போர்த்து அழகு திகழ விளங்கும்
பொலி  விழந்து புல்லென்றாதலின், “கோடை நீடக் குன்றம் புல்லென”
என்றும்,  எனவே,  அக்காலத்து  அருவிகளும்  நீர் வற்றி விடுதலின்,
“அருவியற்ற     பெருவறற்    காலையும்”    என்றும்    கூறினார்.
பழையவுரைகாரர்,   கோடை  நீடுகையாலே  குன்றம்  புல்லெனும்படி
அருவியற்ற  காலையும் எனக் கூட்டி யுரைக்க வென்பர். இக்காலத்தும்
குட்டுவன்    நாட்டில்    பேரியாறு   கரை   புரண்டோடும்  மிக்க
நீருடையதாமென்பார்,   “நிவந்து   கரை   யிழிதரும்   நனந்தலைப்
பேரியாறு”  என்றார். யாற்றுநீர்  பாயும்  பக்கத்தே  கிடப்பது விளை
புலத்துக்குச் சிறப்பாதல் பற்றி, “சீருடை வியன்புல” மென்றார்.

கோடையிலும்   மிக்க நீர் பெருகு மென்றலின், அது பாயுமிடத்துக்
கோடையால்     உலர்ந்து    வெடித்துக்    கரம்பாய்க்    கிடக்கும்
புலங்களெல்லாம்  அவ்  வெடிப்பு  நிறைய  நீர்  நிரம்பித்  தேங்கும்
என்பார்,  “விடுநிலக்கரம்பை  விடரளை நிறைய” என்றார். நீர் இனிது
ஏறமாட்டாமையின்   வேளாண்மைக்குப்   பயன்படாது   புல்  வகை
வளர்ந்து   விலங்குகள்   மேயுமாறு   விடப்பட்ட  கரம்பு  நிலத்தை
“விடுநிலக்   கரம்பை”   என்றார்.   வேளாண்மைக்குப்  பயன்படாக்
கரம்பாயினும்,  விலங்குகள்  மேய்தற்குப் பயன்படுதல் குறிக்கற்பாற்று.
இதனால்,  ஏறமாட்டாத  மேட்டுப்  பாங்கரினும்  நீரேறி  நிரம்புமாறு
கோடையிலும்  பேரியாறு  நீர்  பெருகிப் பாயுமென்பது கருத்தாயிற்று.
“கரம்பை  விடரளை  நிறைய  வென்றது,  முன்பு  நீரேறாத கரம்பை
வயல்களில்    கமர்வாய்    நீர்    நிறைய   வென்றவா”  றென்பர்
பழையவுரைகாரர்.

வேறே     பொருவா ரின்மையின் குட்டுவன் நாட்டொடு   போர்
செய்தற்கெழுந்தது  போலப் பேரியாற்று நீர் வருகிற தென்பார், “வாய்
பரந்து  மிகீஇயர்” என்றார். வாய் பரந்து மிகீஇயர் உருத்துக் கரையிழி
தரும்  நனந்தலைப்  பேரியாற்று  மலிர்நிறைச்  செந்நீர்  என மாறிக்
கூட்டுக என்பர் பழையவுரைகாரர். வாய், இடம். யாற்று நீர் எவ்வாயும்
பரந்து  மிகுதல்  வேண்டிப்  பெருகிற்  றென்றவாறாம். பெருகி மிக்கு
வரும்  செம்புனல்  பொருவது  குறித்துவரும்  மள்ளர்போல  வருகிற
தென்பார், “உவலை சூடியுருத்துவரு மலிர்நிறை” யென்றார். உவலை,
தழைகள், கண்ணியும்மாலையும்  சூடி வரும் மள்ளர் போல வெள்ளம்
உவலை சூடி  வந்த தென்பதாம்; இளங்கோவடிகள் இப்  பேரியாற்று
நீரைக்கூறலுற்றவிடத்து,  “கோங்கம் வெங்கை தூங்கிணர்க் கொன்றை,
நாகந் திலக  நறுங்கா  ழார, முதிர்பூம் பரப்பி னொழுகுபுனலொழித்து,
மதுகர ஞிமிறொடு   வண்டினம்  பாட,  நெடியோன்    மார்பிலாரம்
போன்று,பெருமலை  விலங்கிய  பேரியாறு”  (சிலப்.25:17-22)  என்பது
காண்க.இனிப்   பழையவுரைகாரர்,  “உவலை  சூடியுருத்துவரு  மலிர்
நிறை    யென்றது,  தழைகளைச்   சூடித்   தோற்றிவரும்   வெள்ள
மென்றவா”  றென்றும், “தன்னை  வயல் பொறுக்குமாறு காணவென்று
போர்  வேட்டு வருவாரைப்போலு  மென்று  கூறிய  இச் சிறப்பானே
இதற்கு உருத்துவரு மலிர்நிறை யென்று பெயராயிற்று” என்றும் கூறுவர்.
 

மலிர்   நிறை கலங்கிச் சிவந்து தோன்றலின், புதுநீர்ப் பெருக்கைச்
செந்நீர்     என்றும்,     அதுதானும்     மடைகளை    யுடைத்துக்
கெடுக்காவண்ணம்  மடை  யமைத்துச்  செறுத்தும், காலிற் போக்கியும்
வயலிடைப்  பரப்பியும்  உழவர்  செய்யும்  பூசல்  மிக்கு   நிற்றலின்,
“செந்நீர்ப்    பூசல்”   என்றும்,   அப்   பெருக்கின்   தன்மையால்
மழையின்மை  காரணமாகப்  பிறந்த  வெயில்  வெம்மையும்  பிறவும்
நின்னுடைய  பரந்த  நாட்டிடத்துக்  காண்ப  தரிது என்பது தோன்ற,
செந்நீர்ப்  பூச லல்லது வெம்மை யரிது நின் னகன்றலை  நாடென்றும்,
இவ்வாற்றால்,  சேரனது நாடு ஏனை நாட்டவர் யாவரும் நயத்தற்குரிய
வளம்  வாய்ந்திருக்கிற  தென்பார்,  “திருவுடைத்  தம்ம”  வென்றும்
கூறினார்.

இதனால்  அவன்   நாடுகாத்தற்   சிறப்புக்    கூறியவாறாயிற்று.

இதுகாறும்   கூறியது, மறவர் கதழ் தொடை மறப்ப, இளை இனிது
தந்து  விளைவு முட்டுறாது புலம்பா வுறையுள் தொழில் நீ ஆற்றலின்,
பெருவறற்  காலையும், விடரளை நிறைய, புலம் வாய் பரந்து மிகீஇயர்
உருத்துவரு   பேரியாற்று  மலிர்நிறைச்  செந்நீர்ப்  பூசலல்லது  நின்
அகன்றலை   நாடு   வெம்மை   யரிது;  இவ்வகையால்  நின்  நாடு
திருவுடைத்து   என்பதாம்;   இனிப்  பழையவுரைகாரர்,  “பெருவறற்
காலையும்   நின்னகன்றலை  நாடு   புலம்பா  வுறையுட்டொழில்  நீ
ஆற்றலின் திருவுடைத்து எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர்.

இப்பாட்டு முற்றும் சேரன்  தனது  நாடு  காக்கும்  சிறப்பே கூறி
நிற்றலின், இது நாடு வாழ்த்தாயிற்று.


 மேல்மூலம்