30. |
இணர்ததை
ஞாழற் கரைகெழு பெருந்துறை
மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற்
பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
வாலிணர்ப் படுசினக் குருகிறை கொள்ளும் |
5 |
அல்குறு
கான லோங்குமண லடைகரை
தாழடும்பு மலைந்த புணரிவளை ஞரல
இலங்குநீர் முத்தமொடு வார்துகி ரெடுக்கும்
தண்கடற் படப்பை மென்பா லனவும்
காந்தளங் கண்ணிக் கொலையில் வேட்டுவர் |
10 |
செங்கோட்ட
டாமா னூனொடு காட்ட
மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு
பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்
குன்றுதலை மணந்த புன்புல வைப்பும்
கால மன்றியுங் கரும்பறுத் தொழியா |
15 |
தரிகா
லவித்தப் பலபூ விழவிற்
றேம்பாய் மருத முதல்படக் கொன்று
வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்
பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச்
சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம் |
20 |
முழவிமிழ்
மூதூர் விழவுக்காணூஉப் பெயருமூ
செழும்பல் வைப்பிற் பழனப் பாலும்
ஏன லுழவர் வரகுமீ திட்ட
கான்மிகு குளவிய வன்புசே ரிருக்கை
மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும் |
25 |
புன்புலந்
தழீஇய புறவணி வைப்பும்
பல்பூஞ் செம்மற் காடுபய மாறி
அரக்கத்தன்ன நுண்மணற் கோடு கொண்
டொண்ணுதன் மகளிர் கழலொடு மறுகும்
விண்ணுயர்ந்த தோங்கிய கடற்றவும் பிறவும் |
30 |
பணைகெழுவேந்தரும்வேளிருமொன்று
மொழிந்து
கடலவுங் காட்டவு மரண்வலியார் நடுங்க
முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக்
கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்
தருந்திறன் மரபிற் கடவுட் பேணியர் |
35 |
உயர்ந்தோ
னேந்திய வரும்பெறற் பிண்டம்
கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க
நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி
எறும்பு மூசா விறும்பூது மரபிற்
கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார |
40 |
ஓடாப்
பூட்கை யொண்பொறிக் கழற்காற்
பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவர்
உருமுநில னதிர்க்குங் குரலொடு கொளை புணர்ந்து
பெருஞ்சோ றுகுத்தற் கெறியும்
கடுஞ்சின வேந்தேநின் றழங்குகுரன் முரசே. |
துறை
- 1பெருஞ்சோற்றுநிலை. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - புகன்றவாயம் (19)
(ப
- ரை) 2.
மணிக்கலமென்றது நீலமணியாலே செய்த
பாத்திரம். மணிக்கலத்தன்ன கழி (3) எனக்கூட்டி நெய்தற்பூவின்
கருமையானும் அதன் பாசடைக்கருமையானும் மணிக்கலம் போன்ற
கழியென வுரைக்க.
5.
கானலென்றது தன்னிடத்து வந்து இரைகொள்ளுவதற்குக்
குருகு தங்கி வாழும் கானலென்றவாறு.
6.
புணரி வளை ஞர்லவென்றது கடல் கொண்டுவந்த சங்கு
திரையிலே துவண்ட வருத்தத்தாலே ஈனுகைக்கு மெய்வருந்திக்
கதறவென்றவாறு.
7.
முத்தமொடு வார் துகிரெடுக்குமென்றது கரை நின்றோரில்
வளைநரலக் (6) கேட்டார் அம்முத்தெடுக்க வென்று வந்து
முத்தையன்றி அதனோடு பவளத்தையும் எடுக்குமென்றவாறு.
பலபூவிழவினையுடைய
(15) வைப்பு (21) எனக் கூட்டுக.
17.
புனல் பரந்தென்றதனைப் பரக்கவெனத் திரிக்க.
18.
பலசூழ் பதப்பரென்றது பல புரியாலும் சூழப்பட்ட மணற்
கோட்டையென்றவாறு.
19.
புகன்ற ஆயமென்றது முன்புமணலணைக்கு நில்லாத
பெரு வெள்ளத்தின் அணைசெய்து முடித்த விருப்பத்தையுடைய
ஆயமென்றவாறு.
இச்சிறப்புப்
பற்றி, இதற்கு 'புகன்ற வாயம்' என்ற
பெயராயிற்று.
27-8.
மணற்கோடு கொண்டென்றது 2மணற்கோட்டைக்
கழலாடுதற்கு இடமாகக் கொண்டென்றவாறு.
இனிக்
கழலென்றதனைக் 3கழலையுடைய தலைமகன்காலாக்கி
அக்காலொடு தலைமகளிர் புணர்ந்து உடன்போமென்பாருமுளர்.
29.
பிறவுமென்றது அவ்வாறு ஒருநிலமாகச் சொல்லப்படாத
பல நிலப்பண்புமுடைய இடங்களுமென்றவாறு.
முன்பு
எண்ணிநின்ற நிலங்களெல்லாம் ஆகுபெயரான்
அந்நிலத்து வாழ்வார் மேலனவாகக் கொள்க.
30.
ஒன்றுமொழிந்தென்றது ஒருவர் துணிந்ததே காரியமாக
அனைவரும் துணிந்து சொல்லியென்றவாறு.
கடுஞ்சினங்
கடாஅய் (33) எறியும் (43) முரசு (44) என
முடிக்க.
33.
முழங்கு மந்திரமென்றது முழங்க உச்சரிக்கப்படும் மந்திர
மன்றவாறு.
மந்திரத்தானென
உருபு விரித்து அதனைப் பேணியர்(34)
என்பதனோடு முடிக்க. 34. கடவுளென்றது முரசுறை கடவுளை.
கருங்கட்
பேய்மகள் கைபுடையூஉ நடுங்க (36)
உயர்ந்தோனேந்திய அரும்பெறற் பிண்டம் (35) எறும்புமூசா
இறும்பூது மரபின் (38) நெய்த்தோர் தூஉய நிறைமகிழ் இரும்பலி
(37) கருங்கட்காக்கையொடு பருந்து இருந்தார (39) எனக் கூட்டுக.
இறும்பூது
மரபிற் (38) பலி (37) என மாறிக் கூட்டுக.
பேய்மகளும்
(36) எறும்பும் அஞ்சிச் செல்லாத (38) பலிகளைக்
(37) காக்கையொடு பருந்திருந்தார (39) என்றது, அம்முரசுறை கடவுள்
தன் ஆணையால் தன்பலிகளை மேல் தன்னருளாலே போர்வென்றி
விளைவது அறிவித்தற்கு நிமித்தமாகக் காக்கையும் பருந்தும் இருந்து
ஆரவென்றவாறு.
இவ்விடத்துக்குப்
பிறவாறு கூட்டியுரைப்பாருமுளர்.
41.
பெருஞ்சமம் ததைந்த செருவென்றது பகைவர் செய்யும்
பேர் சிதையும்படி செய்யும் போரென்றவாறு.
41-2.
மறவர் குரலெனக் கூட்டுக.
ஆகுபெயரான்
உருமுநிலனதிர்க்குங் குரலோடு ஒத்த மறவர்
குரலை உருமுநிலனதிர்க்கும் குரலென்றானாகக் கொள்க.
43-4.
எறியு முரசென்க.
மென்பால்
(8) முதலாகக் கடறு ஈறாக 'எண்ணப்பட்ட ஐவகை
நிலத்து மக்களும் பிறவும் (29) அந்நிலத்து வேந்தரும் வேளிரும்
தங்களிலே ஒன்று மொழிந்து (30) அரண்வலியாதே நடுங்காநிற்கும்படி
(31) கடுங்குரல் விசும் படைந்து அதிரும்படி (32) கடுஞ்சினத்தைக்
கடாவிப் (33) பேய்மகள் கை புடையூஉ நடுங்க (36)
உயர்ந்தோனேந்திய பிண்டத்தினையும் (35) எறும்பு மூசா மரபின்
(38) நெய்த்தோர் தூஉய நிறைமகிழ் இரும்பலியினையும் (37)
கருங்கட்காக்கையொடு பருந்திருந்து ஆராநிற்கச் (39) செருப்புகள்
மறவரது (41) குரலொடே கோட்பாடு பொருந்திப் (42) பெருஞ்சோறு
உகுத்தற்கு எறியப்படா நின்றது. (43) நின்முரசு (44) என வினை
முடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1-8. நெய்தல் நிலத்தின் இயல்பு.
1.
இணர் ததை ஞாழல் - பூங்கொய்தலால் சிதைந்த ஞாழல்
என்னும் மரத்தையுடைய. மகளிர் கொய்தலால் சிதைந்தது. ஞாழல்-புலி
நகக் கொன்றை. ஞாழலையுடைய கரை.
2.
நீலமணியாற் செய்த பாத்திரத்தைப் போன்ற கரிய
இதழையுடைய நெய்தலினது. நெய்தற்பூவிற்கு நீலமணியுவமை:
மதுரைக். 282; அகநா.
240 : 3. 3. பசிய இலையையும்
குளிர்ச்சியையுமுடைய கழியைத் துழாவி. துழாவியது இரையின்
பொருட்டு.
3-4.
புன்னைமரத்தின் வெள்ளிய பூங்கொத்தையுடைய
நீரிற்படும் கிளையில் நாரை முதலிய பறவைகள் தங்குகின்ற.
5.
தங்கதற்குரிய கடற்கரைச் சோலை ஓங்கிய மணலடைந்த
கரையினிடத்து.
6.
மணலிலே தாழ்ந்த அடம்பங்கொடியை அணிந்த கடலில்
சங்குகள் ஒலிக்க; மலைந்த-மோதிய எனலுமாம்.
7.
இலங்குநீர் முத்தம்-விளங்குகின்ற தன்மையையுடைய முத்து;
விலங்குநீர் முத்தமெனக் கொண்டு, மாறுபட்ட அலைகளிலுள்ள முத்து
எனப் பொருள் கொள்ளுதலுமாம். வார் துகிர் எடுக்கும் - நீண்ட
பவளத்தின் கொடியை வேண்டுவார் எடுத்தற்கிடமாகிய.
8.
குளிர்ந்த கடற்பக்கத்தையுடைய நெய்தல் நிலத்திலுள்ள
மக்களும். நெய்தலும் மருதமும் மென்பாலெனக் கூறப்படும் (புறநா.
42 : 17-8 , உரை)
கழி
துழைஇச் சினையில் குருகு இறைகொள்ளும் கானல்
பொருந்திய கரையினிடத்து வளை ஞரலத் துகிர் எடுக்கும் மென்பால்
என்க.
9-13.
பாலைநிலத்து இயல்பு.
9.
காந்தட்பூவாற் செய்தகண்ணியையும் கொலை செய்யும்
வில்லையும் உடைய வேடர். 10. சிவந்த கொம்பையுடைய காட்டுப்
பசுவின் இறைச்சியோடு. காட்ட - காட்டிலுள்ள.
11.
வன்மையையுடைய யானையினது வெள்ளிய தந்தத்தையும்
கொண்டு.
12.
செல்வத்தையுடைய கடைத்தெருவில் தாம் வாங்கும்
கள்ளுக்கு விலையாக் கொடுக்கும். ஆமான் ஊனையும் வேழத்து
வெண் கோட்டையும் கள்ளுக்கு விலையாக் கொடுத்தனர். "அண்ணல்
யானை வெண்கோடு கொண்டு, நறவுநொடை நெல்லி னாண்மகி
ழயரும்", "வல்லி லிளையர் தலைவர்......................அரிய லாட்டிய
ரல்குமனை வரைப்பின், மகிழ்நொடை பெறாஅ ராகி நனைகவுட்,
கான யானை வெண்கோடு சுட்டி" (அகநா. 61
: 9 - 10,
245 : 7 - 11). பிழி-கள் நொடை - விலை.
13.
குன்றுகள் கலந்த புல்லிய பாலைநிலத்து மக்களும். வைப்பு:
ஆகுபெயர்.
14-21.
மருத நிலத்தின் இயல்பு.
14.
கரும்புதான் முற்றிவிளையும் காலத்தல்லாமலும்,
எப்பொழுதும் அறுத்து முடியாமல்; என்றது என்றும் கரும்பு
அறுக்கும் பாங்குடையதாயிற்று என்றபடி.
15.அரி
கால் அவித்து-நெல்லின் சூட்டை அவியச் செய்து.
பல பூ விழவின்-பல பூக்களால் கடவுளை வழிபடும் விழாவையுடைய;
"இந்திர விழவிற் பூவி னன்ன" (ஐங். 62
: 1) என்றலின் இவ்விழா
இந்திரனை நோக்கிச் செய்யப்பெறுவதுபோலும்.
16-7.
இனிமை பரவிய மருதமரத்தின் அடி விழும்படி மோதி
நுரையாகிய வெள்ளிய தலையையுடைய சிவந்த புதுப்புனல் எங்கும்
பரந்து தான் புகும் இடங்களை மிக்க வளமுடையதாகச் செய்யும்.
வெண்டலைச் செம்புனல்: பதிற். 87 : 2
- 3.
18.
பலசூழ் பதப்பர் பரிய-பல வைக்கோற்புரிகள் சூழ்ந்த
மணற்கோட்டை கரைய; மணற்கோட்டை வெள்ளத்துக்கு
அணைபோடும் பொருட்டு இடப்பட்டது.
19.
அணை இடுகின்ற ஆராவாரத்தோடு விருப்பம் கொண்ட
மக்கட்டொகுதி.
20.
முழவு ஒலிக்கின்ற பழைய ஊரில் நிகழும் விழாவைக்
கண்டு தம் இடத்திற்குத் திரும்பிச் செல்லுகின்ற. மூதூர் விழவு:
பதிற். 15 : 18, 29 : 7.
15-20.
மணற்கோட்டை நீங்குதலால் மேலும் ஆரவாரஞ்செய்து
அணை கோலிய மக்கள் பின்னர் மூதூருக்குச் சென்று விழாவைக்
கண்டு பெயர்ந்தனர். மூதூர் என்றது இராசதானிநகரம் போலும்.
21.
வளத்தையுடைய பல ஊர்களையுடைய மருதநிலத்தின்
பகுதியிலுள்ள மக்களும்.
22-5.
குறிஞ்சி நிலத்தியல்பு கூறப்படும்.
22-3.
தினைக் கொல்லையை உழுவோர் வரகின்மேலே இட்ட
நறுமணம் மிக்க காட்டுமல்லி - கையையுடைய வன்மை பொருந்திய
இருப்பிடங்களில். வரகு மீதிட்ட-வரகின் வைக்கோலை மேலே
வேய்ந்த எனலுமாம்.
24.
மெல்லிய தினைமாவை முறைப்படியே விருந்தினர்க்குப்
பகுத்து அளித்துண்ணும். மென்திணை நுவணை: மலைபடு.
445 ;
ஐங் .285 : 2.
25.
புல்லிய நிலங்களைத் தழுவிய காட்டை அணிந்த
இடங்களில் உள்ளோரும்.
26-9.
முல்லைநிலத்தின்
இயல்பு கூறப்படும்.
26.
பலபூக்களின் வாடலையுடைய காடு தான் அளிக்கும்
பயன்கள் வேறுபட்டு. 27. செவ்வரக்கைப்போன்ற நுண்ணிய
மணலையுடைய குன்றுகளைத் தன்னிடத்தே கொண்டு.
26-7.
"அரக்கத் தன்ன செந்நிரப் பெருவழிக், காயாஞ்
செம்மறாஅய்" (அகநா. 14 : 1 - 2) 28.
கழலொடு
மறுகும்-கழற்சிக்காயோடு திரியும்.
29.
வானத்திலே உயர்ந்து வளர்ந்த மரங்களையுடைய
காடுகளை யுடைய முல்லை நிலத்திலுள்ளாரும். கடறு - காடு.
28-9.
காலென்பதற்குச் செருப்பென்று பொருள்கூறி
இவ்வடிகளை மேற்கோள் காட்டினர் (சீவக, 1648,
ந.)
30.
முரசைப் பெற்ற முடியுடை மன்னரும் குறுநிலமன்னரும்
வஞ்சினங் கூறி. வேந்தரும் வேளிரும் : பதிற். 88
: 13.
31.
கடலிலுள்ளனவும் காட்டிலுள்ளனவுமாகிய அரண்களால்
நன்மை பெறாராய் நடுங்கும்படி.
32.
போரை மிகுவிக்கின்ற கடிய (முரசினது) முழக்கம்
வானத்தை அடைந்து அதிரும்படி.
33.
கடுஞ்சினங் கடாஅய்-மிக்க சினத்தைச் செலுத்தி.
முழங்கும் மந்திரத்து - உரக்க உச்சரிக்கப்படுகின்ற மந்திரங்களால்.
34.
கடவுள் பேணியர்-முரசில் உறையுங் கடவுளை வழிபடும்
பொருட்டு.
35.
உயர்ந்தோன் - முரசுறை கடவுளை வழிபடுவோன்.
36.
கொடிய கண்ணையுடைய பேய்மகள் கையை அடித்து
நடுங்க. அப்பலியைக் கொள்ளமாட்டாமையின் நடுங்கியது. கருங்கட்
பேய் மகள் : பதிற். 22 : 37.
37.
நெய்த்தோர்-இரத்தம். நிறை மகிழ் இரும்பலி-நிறைந்த
கள்ளை யுடைய பெரிய பலி; பதிற். 19 :
6, உரை.
38.
முரசுறை கடவுள் விரும்புதலால் எறும்பும் மொய்யாத
வியப்பைத் தரும் முறையினால்.
34-9.
முரசுறை கடவுளுக்குப்பலியாக ஓச்சிய பிண்டத்தைப்
பேய் மகளும் எறும்பு முதலியனவும் பெறாமல் இருப்ப, காக்கையும்
பருந்தும் உண்டன.
40.
புறங்கொடுத்து ஓடாத கொள்கையையும், தாங்கள் செய்த
அரிய போர்த்தொழில்களைப் பொறித்தலையுடைய கழற்காலையும்
உடைய. ஒண்பொறிக் கழற்கால் : பதிற்.
34 : 2.
41.
பெரிய போரிலே பகைவரைச் சிதைத்த, மேலும் போரை
விரும்பும் வீரரது.
42.
இடி பூமியை அதிரச் செய்யும் குரலைப்போன்ற
ஆரவாரத்தோடு. கொளை புணர்ந்து-யாழிசை சேரப் பெற்று; கொளை
- நரம்புக்கட்டு; அது யாழுக்காகி இங்கே யாழிசைக்காயிற்று.
கோட்பாடென்பர் உரையாசிரியர்.
43.
போர்வீரருக்கு மிக்க சோற்றை அளித்தற்கு ஒலிக்கும்.
பெருஞ்சோறு உகுத்தல் : புறநா. 2 : 16,
குறிப்புரை.
43-4.
தழங்கு-ஒலிக்கும். முரசு எறியும் என்க; எறியும்; முற்று.
மு. 'வேந்தன் போர்தலைக் கொண்ட பிற்றைஞான்று போர் குறித்த
படையாளரும் தானும் உடன் உண்பான் போல்வதோர் முகமன்
செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயின
பெருஞ்சோற்று நிலை' (தொல். புறத். 8,
ந.)
(பி
- ம்.) 1. இணர்த்ததை. 38. இறும்பூதுபிரப்பின். (10)
3.
இதன் பதிகத்து அகப்பாவெறிதலைப் பகற்றீ வேட்டற்கு
அடை யாக்கியுரைக்க.
4-5.
முதியரை மதியுறழ்மரபிற்றழீஇ மண்வகுத்தீத்தெனக்
கூட்டித் 4தன் குலத்தில் தனக்கு முதியாரை மதியோடொத்த தன்
தண்ணளியால் தழீஇக்கொண்டு அவர்க்குத் தன்னாட்டைப் பகுத்துக்
கொடுத்தென உரைக்க.
7.
இருகடலுமென்றது தன்னதாய மேல்கடலும் பிறநாட்டதாய்ப்
பின்பு தான் பொருதுகொண்டு தன்னாடாக்கிய நாட்டிற்
கீழ்கடலுமென்றவாறு.
6-7.
கருங்களிற்றியானைப் புணர்நிரைநீட்டி இருகடனீரும்
ஒரு பகலாடியென்றது அவ்விருமுந்நீரும் ஒருபகலிலே வரும்படி
யானைகளை நிரைத்து அழைப்பித்து ஆடியென்றவாறு.
8.
அயிரை பரைஇயென்றது தன்னாட்டு 5அயிரையென்னும்
மலையில் வாழும் கொற்றவைக்கடவுளைத் தன்குலத்துள்ளார் செய்து
வரும் வழிபாடு கெடாமல் தானும் வழிபட்டென்றவாறு.
ஆற்றல்சான்
முன்போடு (8) காடுபோந்த (10) எனக்கூட்டுக.
10.
நெடும்பாரதாயனார் முந்துறக் காடுபோந்தவென்றது தன்
புரோகிதராகிய நெடும்பாரதாயனார் தனக்குமுன்னே துறந்து காடு
போக அதுகண்டு தானும் துறவுள்ளம் பிறந்து துறந்து காட்டிலே
போன வென்றவாறு.
1தொல்.
புறத். 8; பு.
வெ. 58.
2மகளிர்
மணலில் கழல் முதலியன விளையாடுதல் இயல்பு; பெரும்பாண்.
327 - 35; புறநா.
36 : 4 - 5.
3உடன்
போக்கினை நினைத்துக் கூறியது இது.
4இங்ஙனம்
தன் குலத்து முதியோருக்கு நாட்டைப் பகுத்துக்
கொடுத்து ஆளச் செய்யும் வழக்கம் பிற்காலத்துச் சோழ மன்னர்
சிலரிடத்தும் இருந்ததென்பது அவர்கள் மெய்க் கீர்த்திகளால்
அறியப்படுகின்றது.
5"கடவு
ளயிரையி னிலைஇ" (பதிற்.
79 : 18, உரை)
|