முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
54. வள்ளியை யென்றலிற் காண்குவந் திசினே
உள்ளியது முடித்தி வாழ்கநின் கண்ணி
வீங்கிறைத் தடைஇய வமைமருள் பணைத்தோள்

ஏந்தெழின் மழைக்கண் வனைந்துவர லிளமுலைப்
  5 பூந்துகி லல்குற் றேம்பாய் கூந்தல்
மின்னிழை விறலியர் நின்மறம் பாட
இரவலர் புன்கண் டீர நாடொறும்
உரைசா னன்கலம் வரைவில வீசி
அனையை யாகன் மாறே யெனையதூஉம்
  10 உயர்நிலை யுலகத்துச் செல்லா திவணின்
றிருநில மருங்கி னெடிதுமன் னியரோ
நிலந்தப விடூஉ மேணிப் புலம்படர்ந்து
படுகண் முரச நடுவட் சிலைப்பத்
தோமர வலத்தர் நாமஞ் செய்ம்மார்
    15 ஏவல் வியங்கொண் டிளையரொ டெழுதரும்
ஒல்லார் யானை காணின்
நில்லாத் தானை யிறைகிழ வோயே.

     துறை - காட்சி வாழ்த்து. வண்ணமும் தூக்கும்
அது. பெயர் - நில்லாத் தானை (17)

     (ப - ரை) 1. வள்ளியனென்பதற்கு வள்ளியையென்றது
1இடவழுவமைதி.

     2. உள்ளியது முடித்தியென்றது யான் 2நினைத்துவந்த
காரியத்தை முடியென்றவாறு. முடித்தியென்றது ஈண்டு முன்னிலை
யேவல்வினை.

     3. தடைஇய அமை - பெருத்த மூங்கில்.

     நின் மறம் பாட (6) வீசி எனக் கூட்டி நின் மறம் பாடாநிற்க
அதனைக் கேட்டிருந்து வீசியெனவுரைக்க.

     வீசி (8) என்னும் வினையெச்சத்தினை ஆகல் (9) என்னும்
தொழிற் பெயரோடு முடிக்க.

     9. அனையையாகன்மாறேயென்றது அவ்வீசுதற்கு ஏற்ற
அத்தன்மையையுடையை யாகையானென்றவாறு.

     மாறென்பது ஆனென்னும் உருபின் பொருள்படுவதோர்
இடைச்சொல்.

     அத்தன்மையாவது இன்முகமும் இன்சொல்லு முதலாயின.

     எனையதூஉமென்றது சிறிதுகாலமுமென்றவாறு; உம்மை
நெடுங்காலமே யன்றிச் சிறிதுகாலமுமென எச்சவும்மை.

     12. நிலந்தப இடூஉம் ஏணிப்புலமென்றது நிலவகலம் குறைபட
இட்ட எல்லையையுடைய பாசறையென்றவாறு. என்றது மாற்றார்
பாசறையை. முரசம் நடுவட் (13) படர்ந்து (12) சிலைப்ப (14) எனக்
கூட்டி 3முரசம் பாசறைநடுவே தான் நின்று தன்னொலி பாசறை
யெங்கும் படர்ந்து கொண்டு படையை ஏவியொலிப்பவெனவுரைக்க.

     
14. தோமரம் - தண்டாயுதம். வலத்தரென்றது வினையெச்ச
வினைக் குறிப்புமுற்று.

     நாமஞ்செய்ம்மார் (14) இளையரொடெழுதரும் (15) ஒல்லார் (16)
எனக் கூட்டுக.

     15. ஏவல் வியங்கொண்டென்றது இளையரை முன்பு போர்க்குக்
கையும் அணியும் வகுப்புழி ஏவித் தாமும் ஏவல்களைச்
செய்துகொண்டென்றவாறு.

     ஏவலையுடைய வியமென இரண்டாவது விரிக்க. வியம் - ஏவல்.

     யானை காணின் (16) நில்லாத்தானை (17) என்றது 4காலாள்
முதலாயினவற்றைத் தரமல்லவென்று கழித்துநின்று யானை காணின்
நில்லாது செல்லும் தானையென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'நில்லாத் தானை' என்று பெயராயிற்று.

     17. இறைகிழவோயென்றது இறைவனாதற் றன்மையையுடையா
யென்றவாறு.

     இறைகிழவோய், நின்னை (17) வள்ளியனென்று யாவரும்
கூறுதலானே நின்னைக் காண்பேன் வந்தேன் (1); யான்
உள்ளியதனை நீ முடிப்பாயாகவேண்டும்; நின்கண்ணி வாழ்வதாக (2);
விறலியர் நின் மறம் பாட (6) இரவலர் புன்கண் தீரும்படி (7)
நன்கலங்களைவரைவில வீசி (8) அத்தன்மையையாகையாலே,
என்போலும் இரவலரது ஆக்கத்தின் பொருட்டுச் சிறிதுகாலமும் (9)
இவ்வுலகத்திலே நின்று உயர்நிலை யுலகத்திற் செல்லாதே (10)
இவ்விருநிலமருங்கிலே நெடுங்காலம் நிலை பெறுவாயாக (11) எனக்
கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் கொடைச்சிறப்பும் தன்குறையும்
கூறி வாழத்தியவாறாயிற்று.

     (கு - ரை) 1. மக்களெல்லாரும் நின்னை
வண்மையையுடையாயென்று கூறுதலால் நின்னைக் காணவந்தேன்.

     2. யான் நினைத்ததை அங்ஙனமே முடிப்பாய்; நின் கண்ணி
வாழ்க.

     3-6. விறலியரது வருணனை. 3. வீங்கிய சந்துகளையுடைய,
திரண்ட மூங்கிலைப் போன்ற பெருத்த தோளையும்   (கலித்.
45 : 13 -5)

     4. ஏந்திய எழுச்சியையுடைய குளிர்ந்த கண்களையும்,
எழுதப்பட்டாற் போன்று எழுதலையுடைய இளைய நகிலையும்.

     5. பூத்தொழிலையுடைய துகிலையணிந்த அல்குலையும்,
தேனீக்கள் பரவிய கூந்தலையும்; "சுரும்புண வொலிவரு மிரும்பல்
கூந்தல்" (அகநா. 161 : 10). தேம் - தேனீ (பதிற். 53 : 17, ) உரை.

     6. மின்னுகின்ற இழையையும் உடைய விறலியர் நினது
வீரத்தைப் பாட (பதிற். 46 : 1 - 6) ; "புறம்பெற்ற வயவேந்தன்,
மறம் பாடிய பாடினி யும்மே" (புறநா. 11 : 10 - 11)

     7-9. சேரனது கொடைச் சிறப்பு.

     7-8. இரவலர் துன்பம் நீங்கும்படி நாள்தோறும்
புகழ்ச்சியமைந்த நல்ல ஆபரணங்களைத் தனக்கென்று வரைதல்
இல்லாதனவாகக் கொடுத்து.

     9. அத்தன்மையையுடையாயாதலால் சிறிது காலமும்.

     10-11. சேரனை வாழ்த்துதல்.

     உயர்ந்த நிலையையுடைய தேவருலகத்துச் செல்லாமல்
இவ்வுலகத்தே நிலைபெற்றுப் பெரிய பூமியிலே நீண்ட காலம்
வாழ்வாயாக.

     12. நிலத்தின் அகலம் குறைபட இடப்பட்ட எல்லையையுடைய
பாசறையையுடைய பகைவர் நாட்டினிடத்தே சென்று. நிலத்தின்
பரப்பினும் பாசறைகள் மிதியாயின வென்றபடி.

     13. ஒலிக்கின்ற கண்ணையுடைய வீரமுரசு போர்க்களத்தின்
நடுவே ஒலிக்கும்படி; "படுகண் முரசங் காலை யியம்ப, வெடிபடக்
கடந்து" (மதுரைக். 232 -3)

     14. தண்டாயுதத்தை வலப்பக்கத்தில் ஏந்தியவராய்ப் பகைவர்க்கு
அச்சத்தைச் செய்யும் பொருட்டு.

     15-6. இளையரை ஏவுதலையுடைய வியத்தைக்கொண்டு
அவ்விளைய ரொடு எழுகின்ற பகைவரது யானைப் படையைக்
கண்டால்.

     17. நில்லாமல் அதன்மேற் செல்கின்ற தானையையுடைய
இறையாதற் றன்மையையுடையாய்.

     இறைகிழவோய் (17) வள்ளியை என்றலிற்காண்கு வந்திசின் (1);
நின் கண்ணி வாழ்க; உள்ளியது முடித்தி (2); நெடிது மன்னியர் (11)
என முடிக்க.

     (பி - ம்.) 3. வீங்கறை. 8. வரைவிலை. (4)


     1படர்க்கைக்கு முன்னிலை வந்தது.

     2"முன்ன முகத்தி னுணர்ந்தவர், இன்மை தீர்த்தல் வன்மை
யானே" (
புறநா. 3 : 25 - 6)

     3பதிற். 39 : 5, உரை.

     4நின்படைவழி வாழ்நரும் காலாண்மேற் செல்லாது தாங்குநர்
யானைக்கோடு துமிக்கும் எஃகுடைவலத்தராயிருப்பர்' (
பதிற். 51 : 29,
உரை)




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

4. நில்லாத் தானை
 
54.வள்ளியை யென்றலின் காண்குவந் திசினே
உள்ளியது முடித்தி வாழ்கநின் கண்ணி
வீங்கிறைத் தடைஇய வமைமருள் பணைத்தோள்
ஏந்தெழில் மழைக்கண் வனைந்துவர லிள முலைப்
 
5பூந்துகி லல்குற் றேம்பாய் கூந்தல்
மின்னிழை விறலியர் நின்மறம் பாட
இரவலர் புன்கண் தீர நாடொறும்
உரைசா னன்கலம் வரைவில வீசி
அனையை யாகன் மாறே யெனையதூஉம்
 
10உயர்நிலை யுலகத்துச் செல்லா திவணின்
றிருநில மருங்கி னெடிது மன்னியரோ
நிலந்தப விடூஉ மேணிப்புலம் படர்ந்து
படுகண் முரச நடுவட் சிலைப்பத்
தோமர வலத்தர் நாமஞ் செய்ம்மார்
 
15ஏவல் வியங்கொண் டிளையரொ டெழுதரும்
ஒல்லார் யானை காணின்
நில்லாத் தானை யிறைகிழ வோயே .
 

துறை  : காட்சி வாழ்த்து.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : நில்லாத் தானை.

 12 - 17. நிலம் ................................ கிழவோயே.

உரை : நிலம்தப இடூஉம் ஏணிப் புலம் படர்ந்து - பகைவர்க்குரிய
நிலப்பகுதி  குறைபடுமாறு  அவர் எல்லைக்குட்பட்ட நிலத்தே சென்று
பாசறை  வகுத்து  ;  படுகண் முரசம் நடுவண் சிலைப்ப - ஒலிக்கின்ற
கண்ணையுடைய   போர்   முரசம்    பாசறை   நடுவே    முழங்கி 
வீரரை       யேவ ;     தோமரவலத்தர்       -    வலக்கையில்
தண்டேந்தி;நாமம்செய்ம்மார்-போரினைச்  செய்தற்காக ; ஏவல்  வியம்
கொண்டு - அம் முரசொலியின் ஏவலை மேற்கொண்டு ; இளையரொடு
எழு   தரும்  ஒல்லார்  -  அணிவகுக்குப்பெற்ற  இளைய  வீரருடன்
செல்லும் தானைத் தலைவர் முதலாகிய பகை வேந்தருடைய ; யானை
காணின்   -   யானைப்படையைக்  கண்டால்;  நில்லாத்  தானை  -
நொடிப்போதேனும்  நில்லாது  சென்று தாக்கும் தானைகளையுடைய ;
இறை  கிழவோய்  -  அரசனாந்  தன்மையைத் தனக்கே யுரிமையாக
வுடையவனே எ - று.

பகைவர்   எல்லைக்குட் புகுந்து அவர் நிலப்பகுதியை வளைத்துப்
பல்வகைப்   படை   தங்குதற்கும்   பாசறைக்கும்   இடஞ்   செய்து
கொள்ளுங்கால்  பகைவர்  எல்லை  குறைவதால்,  “நிலம்தப இடூஉம்
ஏணிப்  புலம்”  என்றார்  . எல்லையைச் சார்ந்த இடம் ஏணிப் புலம்
எனப்பட்டது . ஏணி, எல்லை ; “இடாஅ வேணி யியலறை” (பதிற். 24)
என  வருதல்  காண்க.  ஏணிப்புலம்  படர்ந்து  என  வரையறுத்துக்
கூறியதனால்,    பாசறை    வகுத்தல்    பெறப்பட்டது   .   இனிப்
பழையவுரைகாரர்,  நிலந்தப  விடூஉம் ஏணிப்புலமெனற்து, “நிலவகலம்
குறைபட விட்ட வெல்லையையுடைய பாசறை யென்றவாறு” என்பர்.

பாசறையுள்     இருக்கும் வேந்தன்   குறிப்பறிந்து   தெரிவித்தல்
வேண்டுமாதலின்,  முரசம் பாசறை நடுவண் இருந்து முழங்குவதாயிற்று.
போர்க்கு  ஏவிய குறிப்புத் தோன்றும் முழக்கம் கேட்டதும் படைவீரர்
அனைவரும்  போர்க்கெழுதல்  கூறுவார்,  “படுகண்  முரசம் நடுவண்
சிலைப்ப”   என்றார்.   தோமரம்,   தண்டு.   “தண்டுடை   வலத்தர்
போரெதிர்ந் தாங்கு” (பதிற். 41)    என்று பிறரும் கூறுவர் .   நாமம்,
ஆகுபெயராய்ப் போரைக்   குறித்தது   ;   அச்சம்    செய்வதனை  
அச்ச          மென்றாரென்க.      செய்ம்மாரென்னும்    மாரீற்று 
வினைமுற்று   எழுதரும்   என்னும்  வினைகொண்டது  ;  “மாரைக்
கிளவியும் பல்லோர் படர்க்கை, காலக் கிளவியொடு  முடியு  மென்ப”
(தொல்.  சொல்.  வினை. 10)   என்பது    தொல்காப்பியம்.  ஏவல்,
வியம்   என்பன ஒரு  பொருளன  . இனி,  ஏவலை  இளையர்க்கும்
வியம்   தானைத்  தலைவர்க்கும்  ஏற்றினும்  அமையும்  .  “ஏவல்
வியங்கொண்  டென்றது,  இளையரை  முன்பு   போர்க்குக்  கையும்
அணியும்  வகுப்புழி யேவித் தாமும்   ஏவல்களைச்   செய்துகொண்
டென்றவா”     றென்பர்       பழையவுரைகாரர் .     போர்க்குக்
கையும்    அணியுமாய்    முற்பட்டுச்    செல்லும்    சிறப்புப்பற்றி,
“இளையரொடு”    என்றார்.   ஒல்லார்,   வேந்தரையும்   தானைத்
தலைவரையும் உளப்படுத்தி நின்றது. கை, பக்கம்.
 

இனி,    “முரசும் நடுவண் படர்ந்து சிலைப்ப எனக் கூட்டி முரசம்
பாசறை  நடுவே  தான் நின்று தன்னொலி பாசறை யெங்கும் படர்ந்து
கொண்டு  படையை  யேவி  யொலிப்ப  வென  வுரைக்க” வென்றும்,
வலத்த   ரென்றது  வினையெச்ச  வினைக்குறிப்பு  முற்”  றென்றும்,
“ஏவலையுடைய  வியமென   இரண்டாவதுவிரிக்க  ;  வியம்  ஏவல்”
என்றும் பழையவுரை கூறும்.

யானைப் படையைக் கண்ட மாத்திரையே நில்லாது ஞெரே லெனப்
பாய்ந்து  தாக்கும்  வீரமும்  கடுமையும்  தோன்ற,  “நில்லாத்தானை”
யென்றார்  .  “ஓடாத்  தானை”  யென்னும் வழக்குப் போல யானைப்
போரை விரும்பிக் கடுகச் செல்லும் இத் தானையை “நில்லாத் தானை”
யென்று சிறப்பித்தமையால் இப் பாட்டிற்கு இது பெயராயிற்றென்றுமாம்
.  பழையவுரைகாரர்,  “யானை  காணின்  நில்லாத் தானை யென்றது,
காலாள்  முதலாயினவற்றைத் தரமல்ல வென்று கழித்து நின்று யானை
காணின்  நில்லாது  செல்லும்  தானை  யென்றவா”  றென்றும்,  “இச்
சிறப்பானே  இதற்கு  நில்லாத் தானை யென்று பெயராயிற்” றென்றும்
கூறுவர்  .  “தாங்குநர்  தடக்கை  யானைத்  தொடிக்கோடு துமிக்கும்,
எஃகுடை  வலத்தர்  நின்  படைவழி வாழ்நர்” (பதிற் 51) என்புழியும்
“நின்    படை  வாழ்நரும்   காலாண்மேற்   செல்லாது   தாங்குநர்
யானைக்கோடு  துமிக்கும்  எஃகுடை  வலத்தரா  யிருப்பர்”  என்று
பழையவுரை கூறுவது காண்க.

1 - 2. வள்ளியை..............................கண்ணி.

உரை: வள்ளியை  என்றலின் - வள்ளன்மை யுடையை யென்றுநீ
சான்றோரால்  பாராட்டிக் கூறப்படுவதால் ; காண்கு வந்திசின் - யான்
நின்னைக்  காண்டற்கு  வந்துளேன்  ;  உள்ளியது  முடித்தி - யான்
கருதியதை  முடித்துத்  தருவாயாக  ;  நின்  கண்ணி  வாழ்க - நின்
முடிக்கண்ணி வாழ்வதாக எ - று.

சேரநாட்டிலிருந்து   வந்த பரிசில ரனைவரும் பெருவளம் பெற்று
வரக்  கண்டதோடு,  அவரனைவரும்  சேரலாதனது வள்ளன்மையைப்
பாராட்டிக்   கூறக்  கேட்டமை  தோன்ற,  “வள்ளியை  யென்றலின்”
என்றும்,  அத்தகைய வள்ளியோரைக் காண்டலே தமக்கும் பேரின்பந்
தருவ தென்பார், “காண்கு வந்திசின்” என்றும், காண வருவோர் தகுதி
நோக்கி   அவர்  குறிப்பறிந்து தகுவன    வழங்குவது வள்ளியோரது
செயலாதலால், யான் கருதியது  தேர்ந்து  அதனை  முடித்துத்  தருக
என்பார், “உள்ளியது முடித்தி” என்றும் கூறினார். பழையவுரைகாரரும்,
“வள்ளிய  னென்பதற்கு   வள்ளியை    யென்றது   இடவழுவமைதி”
யென்றும், உள்ளியது முடித்தி  யென்றது,  “யான்  நினைத்து   வந்த
காரியத்தை    முடி    யென்றவா”   றென்றும்,  “முடித்தி  யென்றது
முன்னிலை  யேவல்   வினை”    யென்றும்    கூறுவர்  .  பதிகம்
கூறுவதுபோல,  சேரமான்  பக்கத்துத்  தம்மைக் கொள்ளல்  வேண்டு
மென்பது  ஈண்டு  முன்னிய கருத்து என்பதும் ஒன்று.
 

இனி,     உள்ளியது  முடித்தி   யென்பதற்கு, கருதிய கருத்தைக்
கருதியவாறே  முடிக்கின்றா  யென்றும், அத்தகைய வினைத்திட்பமும்
தூய்மையு  முடைய  நீ,  நீடு வாழ்க என்பார், “வாழ்க நின் கண்ணி”
என்றாரென்றும் உரைத்தலு மொன்று.

3 - 9. வீங்கிறை..................................மாறே.

உரை :வீங்கு இறை - அகன்ற சந்து பொருந்திய வளை யணி்ந்த ;
தடைஇய  -  பெருத்த  ;  அமை  மருள் பணைத் தோள் - மூங்கில்
போலும்  பருத்த தோளையும் ; மழைக்கண் - குளிர்ந்த கண்களையும்
; ஏந்து எழில் - உயர்ந்தெழுதலையும் ; வனைந்து வரல் இள முலை -
தொய்யில்  எழுதப் பட்டு வருதலுமுடைய இள முலையினையும் ; பூந்
துகில்   அல்குல்   -   பூத்தொழில்   செய்யப்பட்ட   உடையணிந்த
அல்குலையும்   ;  தேம்பாய்  கூந்தல்  -  வண்டு  பாய்ந்தொலிக்கும்
கூந்தலையும்     ;     மின்    இழை    விறலியர்    மின்னுகின்ற
இழையினையுமுடைய  விறலியர்  ;  நின்  மறம்  பாட - நின்னுடைய
போர்   வீரத்தைப்   புகழ்ந்து  பாட  ;  இரவலர்  புன்கண்  தீர  -
அவ்விறலியர்க்கே யன்றி, இரப்பவர் வறுமை கெடுதற்கும் ; உரை சால்
நன்  கலம்  -  புகழமைந்த  நல்ல  அணிகலன்களை  ;  நாடொறும்
வரைவில  வீசி  - நாள்தோறும் வரையாது வழங்கி ; அனைய ஆகல்
மாறு - அத்தன்மையையுடைய னாதலாலே எ - று.

இறை,     ஆகுபெயரால்  வளைக்காயிற்று . இறையை மூங்கிற்கே
ஏற்றுவாரு   முளர்.   தடைஇய,  தடவென்னும்  உரிச்சொல்லடியாகப்
பிறந்த   பெயரெச்சக்குறிப்பு.     தடைஇய  அமை  என்றதற்கேற்பப்
பணைத்தோள்   என்றார்.     ஏந்தெழில்   இளமுலை,   வனைந்து
வரலிளமுலை  யென  இயையும்.  வனைதல்,  தொய்யி   லெழுதுதல்.
“நற்றோ ளிழைத்த கரும்புக்கு நீ கூறு” (கலி. 64) என்றும், “தொய்யில்
சூழ்  இளமுலை”  (கலி.  125)  என்றும் வருதல் காண்க. எச்சவும்மை
தொக்கது.

இனிப்     பழையவுரைகாரர், “தடைஇய அமை,  பருத்த மூங்கி”
லென்றும்,  “நின்  மறம்  பாட வீசி யெனக் கூட்டி, நின் மறம் பாடா
நிற்க,   அதனைக்   கேட்டிருந்து  வீசி  யென  வுரைக்க”  என்றும்,
“வீசியென்னும்   எச்சத்தினை  ஆக  லென்னும்  தொழிற்பெயரொடு
முடிக்க”  என்றும், “அனையை யாகன்மாறே யென்றது, அவ் வீசுதற்கு
ஏற்ற  அத்தன்மையை  யுடையை  யாகையா  னென்றவா” றென்றும்,
“மாறென்பது ஆனென்னும் உருபின் பொருள் படுவதோ ரிடைச்சொல்”
என்றும், “அத்தன்மையாவது  இன்முகமும்  இன்சொல்லு முதலாயின”
வென்றும் கூறுவர்.
 

9 - 11. எனையதூஉம்..........................மன்னியரோ.

உரை :   எனையதூஉம்  -  எத்துணைச்  சிறிது   காலமேனும்;
உயர்நிலை  உலகத்துச்  செல்லாது  - துறக்க வுலகுக்குச் செல்லாமல்;
இவண் - இவ்வரச வாழ்க்கையிலே ; நின்று நிலைபெற்று நின்று ; இரு
நில  மருங்கின்  -  பெரிய நிலவுலகத்தின்கண் ; நெடிது மன்னியர் -
நெடுங்காலம் வாழ்வாயாக எ - று.

துறக்க     வுலகு  செல்பவர்  சிறிது   போதில்   மீளாராதலால்,
“எனையதூஉம்” என்றார். எனையதூஉம் என்றற்கு எத்துணை யின்பச்
சிறப்புடையதாயினு   மென்றுமாம்.   “எனையதூஉ  மென்றது  சிறிது
காலமும் என்றவாறு” என்றும், “உம்மை நெடுங்காலமே யன்றிச் சிறிது
காலமுமென    எச்சவும்மை”    யென்றும்  பழையவுரையும்  கூறும்.
“இருநில  மருங்கின்”  என்றதனால், இவ  ணென்றது அரசவாழ்க்கை
யாயிற்று.

இதுகாறும்    கூறியது, ஒல்லார் யானை காணின், நில்லாத் தானை
இறை கிழவோய், வள்ளியை என்றலின் காண்கு வந்திசின் ; உள்ளியது
முடித்தி  ;  நின் கண்ணி வாழ்க ; விறலியர் மறம் பாட, இரவலர் புன்
கண் தீர, நாடோறும் நன்கலம் வரைவில வீசி அனையை யாகன்மாறே
;  எனையதூஉம், உயர்நிலை யுலகத்துச் செல்லாது இவண் நின்று, நில
மருங்கின் நெடிது மன்னியரோ எனக்கூட்டி வினை முடிவு செய்க.

இனிப்     பழையவுரைகாரர், “இறை கிழவோய், நின்னை வள்ளிய
னென்று  யாவரும்  கூறுதலானே  நிற்  காண்பேன் வந்தேன் ; யான்
உள்ளியதனை நீ முடிப்பாயாக வேண்டும் ; நின் கண்ணி வாழ்வதாக ;
விறலியர் நின் மறம் பாட, இரவலர் புன்கண் தீரும்படி நன்கலங்களை
வரைவில  வீசி, அத்தன்மையை யாகையாலே, என்போலும் இரவலரது
ஆக்கத்தின்  பொருட்டுச் சிறிது காலமும், இவ்வுலகத்தினின்றும் உயர்
நிலை  யுலகத்திற்  செல்லாதே, இவ் விருநில மருங்கிலே நெடுங்காலம்
நிலை  பெறுவாயாக  எனக்  கூட்டி  வினைமுடிவு  செய்க”  என்றும்,
“இதனாற்  சொல்லியது அவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி
வாழ்த்திய வாறாயிற்று” என்றும் கூறுவர்.


 மேல்மூலம்