முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
55. ஆன்றோள் கணவ சான்றோர் புரவல
நின்னயந்து வந்தனெ னடுபோர்க் கொற்றவ
இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து நன்
கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க்
  5 கமழுந் தாழைக் கானலம் பெருந்துறைத்
தண்கடற் படப்பை நன்னாட்டுப் பொருந
செவ்வூன் றோன்றா வெண்டுவை முதிரை
வாலூன் வல்சி மழவர் மெய்ம்மறை
குடவர் கோவே கொடித்தே ரண்ணல்
  10 வாரா ராயினு மிரவலர் வேண்டித்
தேரிற் றந்தவர்க் கார்பத னல்கும்
நகைசால் வாய்மொழி யிசைசா றோன்றல்
வேண்டுவ வளவையுள் யாண்டுபல கழியப்
பெய்துபுறந் தந்து பொங்க லாடி
  15 விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச்
சென்றா லியரோ பெரும வல்கலும்
நனந்தலை வேந்தர் தாரழிந் தலற
நீடுவரை யடுக்கத்த நாடுகைக் கொண்டு
பொருதுசினந் தணித்த செருப்புக லாண்மைத்
  20 தாங்குநர்த் தகைத்த வொள்வாள்
ஓங்க லுள்ளத்துக் குருசினின் னாளே.

          துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - துஞ்சும் பந்தர் (4)

     (ப - ரை) பௌவத்து (3) நன்கல வெறுக்கை (4)
என்றது பௌவத்திலே வந்த நன்கலமாகிய செல்வமென்றவாறு.

     4. பந்தர் - பண்டகசாலைகள்.

     நன்கல வெறுக்கை துஞ்சுமென்ற சிறப்பானே இதற்கு, 'துஞ்சும்
பந்தர்'
என்று பெயராயிற்று.

     7. செவ்வூன்றோன்றா வெண்டுவையென்றது அரைத்துக்
கரைத்த மையால் தன்னிற் புக்க செவ்வூன் தோன்றாத வெள்ளிய
துவையென்றவாறு.

     முதிரையென்றது அவரை துவரை முதலாயினவற்றை.

     8. வாலூனென்றது வெண்ணிண ஊனென்றவாறு.

     வல்சி மழவரென்றது தம் செல்வச்செருக்கானே சோறுண்பது
பெரிதன்றி முன்பு எண்ணப்பட்டவற்றையே உணவாகவுடைய
வீரரென்றவாறு. 10. இரவலரையென்னும் இரண்டாவது விகாரத்தால்
தொக்கது; இரவலரை வேண்டியென்றது தன்னாட்டு இரவலரின்மையின்
அவரைப் பெற விரும்பியென்றவாறு.

     11. தேரிற்றந்தென்றது அவ்விரவலருக்கு அவர் உள்வழித்
தேரைப் போகவிட்டு அதிலே அவர்களை வரப்பண்ணியென்றவாறு.
தேரானென உருபு விரிக்க; தேரெனக் தேர்ச்சியாக்கி. அவ்விரவலரை
1அவருள்ள விடத்தில் தேடி அழைத்தென்றுமாம்.

     14. பொங்கலாடியென்றது 2எஃகின பஞ்சுபோல வெளுத்துப்
பொங்கி யெழுதலைச் செய்தென்றவாறு. வெண்மழைபோலச் (15)
சென்றாலியர் (16) என்றது அம்மழை பெய்து புறந்தருங்
கூற்றையொத்து அது பெய்து வெண்மழையாகக் கழியுங் கூற்றை
ஒவ்வாது ஒழிகவென்றவாறு.

     18. நீடுவரையடுக்கமென விரிக்க; அடுக்கம் - ஈண்டு
அடுக்குதல். அல்கலும் (16) நாடு கைக்கொண்டு (18) வேந்தர்
தாரழிந்து அலறப் (17) பொருது சினந்தணிந்த செருப்புகலாண்மை
(19) என மாறிக் கூட்டுக.

     ஆண்மையினையும் (19) வாளினையும் (20) உள்ளத்தினையும்
(21) உடைய குருசிலென்க.

     15. மழையை அவன்றன்னோடு உவமியாது அவன் நாளோடு
(21) உவமித்தது, அவனோடு 3அவன் நாளுக்குள்ள ஒற்றுமை
பற்றியென்க.

     ஆன்றோள் கணவ, சான்றோர் புரவல (1), நின்னயந்து
வந்தனென்; கொற்றவ (2) பொருந (6), மழவர் மெய்ம்மறை (8),
கோவே, அண்ணல் (9), தோன்றல் (12), பெரும (16) குருசில்,
நின்னாள் (21) வெண்மழை போலச் (15) சென்றாலியரோ (16) என
மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.

     பெரும, குருசிலென்னும் விளிகள் முன்னின்ற விளிகளோடு
கூட்ட வேண்டுதலின் மாறாயிற்று.

     இதனாற் சொல்லியது அவன் உலகுபுரத்தாலும் தன் குறையும்
கூறி வாழ்த்தியவாறாயிற்று.

     (கு - ரை) 1. கற்பினாற் சிறந்தோளுடைய தலைவ,
நற்குணங்களால் நிரம்பியவர்களைப் புரத்தலில் வல்லோய்.
ஆன்றோன் கணவ: பதிற். 14 : 15, உரை. சான்றோர் -
வீரரெனலுமாம். 2. கொல்லுகின்ற போரைச் செய்யும் அரசே,
நின்னைக் காண விரும்பி வந்தேன்.

     3-6. சேரநாட்டின் செல்வச் சிறப்பு.

     இனிய ஓசையையுடைய அலைகள் ஒலிக்கும் கடலிலே வந்த
நல்ல ஆபரணங்களாகிய செல்வம் தங்கும் பண்டசாலைகளையும்,
மணம் வீசுகின்ற தாழைகளையுடைய கடற்கரைச் சோலைகள்
பொருந்திய அழகிய பெரிய துறைகளையும் உடைய குளிர்ந்த
கடற்பக்கத்தையுடைய நல்ல நாட்டுக்கு உரிய ஒப்பற்றோய். பொருநன்
- தான் பிறர்க்கு உவமிக்கப்படுவான் (மதுரைக். 42, ந. ; பதிற்.
73 : 2 - 3; புறநா. 377 : 10 - 11)

     7-8. சிவந்த இறைச்சி தனியே வேறுபட்டுத் தோன்றாத
வெள்ளிய துவையலையும் அவரை துவரை முதலியவற்றைக் கலந்த
வெள்ளிய நிணத்தையுடைய இறைச்சியாகிய உணவையுமுடைய
மழவர்க்குக் கவசம் போன்றாய்; "சான்றோர் மெய்ம்மறை" (பதிற்.
14 : 12)

     9. குடநாட்டிலுள்ளார்க்கு அரசே, கொடிகளையணிந்த
தேரையுடைய தலைவனே. குடவர்கோ: சிலப். 24 : பாட்டுமடை.

     10-12. நின்நாட்டில் வறுமையில்லாமையால் இரவலர்
வாராரானாலும், அவர்களைப் பெறவிரும்பித் தேரை அவர்கள்
உள்ள பிறநாடுகளிலே அனுப்பி அதில் அவர்களைக் கொணர்ந்து
அவர்களுக்கு உணவைத்தரும், பகைவரும் கேட்டற்கு விருப்பம்
மிகுதற்குக் காரணமான உண்மையான மொழியையுடைய புகழ்மிக்க
தலைவனே. ஆர்பதம்: பதிற். 66 : 9.

     நசைசால் வாய்மொழி: "கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க்
கேளாரும், வேட்ப மொழிவதாஞ் சொல்" (குறள். 643) என்பதும்
அதன் உரையும் இங்கே அறிதற்பாலன.

     13. நீ வேண்டிய கால அளவில் ஆண்டுகள் பல கழியும்படி.

     14. நெடுநல். 19; அகநா. 217 : 1.

     14-6. பெருமையையுடையாய், மழையைப் பெய்து, உலகத்தைக்
காப்பாற்றிப் பின்பு பன்னின பஞ்சைப்போலப் பொங்கியெழுதலைச்
செய்து மலையைச் சேர்ந்த வெளுத்த மேகத்தைபோல நீ செல்லா
தொழிவாயாக.

     16-9. நாள்தோறும் அகன்ற இடத்திலுள்ள பகையரசர், தம்
தூசிப்படை அழிந்து அலறும்படி போர்செய்து, உயர்ந்த மலைகளின்
அடுக்குகளையுடைய நாடுகளைக் கைப்பற்றிக்கொண்டு, அதனால்
சினம் குறைந்த போரை விரும்புகின்ற வீரத்தையும்.

     20. தன்னைத் தடுப்பாரை அது செய்யவொட்டாமல் தடுத்த
வாளினையும்.

     21. ஓங்குதலையுடைய ஊக்கத்தையும் உடைய தலைவ, நினது
நாள். உள்ளம் - ஊக்கம். நின் நாள் (21) சென்றாலியர் (16) என
இயைக்க.

     (பி - ம்) 15. மழைபோலச். 18. நெடுவரை. 19. பொருது முரண்
செருக்கிய. (5)


     1"துறைதுறை தோறு மிறைகொண் டோருள், அணியா
தோரையாராய்ந் துழிதரும். பணியா வேந்தன் பணிநரைக் காண்மின்"

(பெருங். 1. 40: 242 - 4)

     2"எழிலி, எஃகுறு பஞ்சிற்றாகி............. நெடுவரையாடும்"
(
நற். 247 : 3 - 5); "பொங்கல் வெண்மழை, எஃகுறு பஞ்சித்
துய்ப்பட்டன்ன, துவலை" (
அகநா. 217 : 1 - 3)

     3இக்காலத்தும் திருவாங்கூரரசர் நாளின்பெயரால்
வழங்கப்படுதல் அறியத்தக்கது; "நின்று நிலைஇயர் நின்னாண்மீன்"

(புறநா. 24 : 2)
4





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

5 துஞ்சும் பந்தர்
 
55.ஆன்றோள் கணவ சான்றோர் புரவல
நின்னயந்து வந்தனெ னடுபோர்க் கொற்றவ
இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க்
 
5கமழுந் தாழைக் கானலம் பெருந்துறைத்
தண்கடற் படப்பை நன்னாட்டுப் பொருந
செவ்வூன் றோன்றா வெண்டுவை முதிரை
வாலூன் வல்சி மழவர் மெய்ம்மறை
குடவர் கோவே கொடித்தே ரண்ணல்
 
10வாரா ராயினு மிரவலர் வேண்டித்
தேரிற் றந்தவர்க் கார்பத னல்கும்
நசைசால் வாய்மொழி யிசைசா றோன்றல்
வேண்டுவ வளவையுள் யாண்டுபல கழியப்
பெய்துபுறந் தந்து பொங்க லாடி
 
15விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச்
சென்றறா லியரோ பெரும வல்கலும்
நனந்தலை வேந்தர் தாரழிந் தலற
நீடுவரை யடுக்கத்த நாடுகைக் கொண்டு
பொருதுசினந் தணிந்த செருப்புக லாண்மைத்
 
20தாங்குநர்த் தகைந்த வொள்வாள்
ஓங்க லுள்ளத்துக் குருசினின் னாளே.

 

துறை  : செந்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : துஞ்சும்பந்தர்

1 - 2. ஆன்றோள் ............................ கொற்றவ .

உரை :  ஆன்றோள்  கணவ  - கற்புக்குரிய மாண்புகளாலமைந்த
நங்கைக்குக்   கணவனே  ;  சான்றோர்  புரவல  -  நற்குணங்களால்
நிறைந்த  சான்றோரை யாதரிக்கும் தலைவனே ; அடுபோர்க் கொற்றவ
-   கொல்லுகின்ற   போரைச்   செய்யும்  வேந்தே  ;  நின்  நயந்து
வந்தனென் - நின்னை விரும்பிக் காண்பான் வந்தேன் எ - று.

கற்புடைய     மகளிர்பால்   காணப்படும் மாண்குண மனைத்தும்
நிரம்பியிருத்தல்  பற்றி,  அரசமா  தேவியை  “ஆன்றோள்” என்றார்.
“கற்புங்   காமமும்   நற்பா லொழுக்கமும்,  மெல்லியற்  பொறையும்
நிறையும்  வல்லிதின், விருந்துபுறந் தருதலும் சுற்ற மோம்பலும், பிறவு
மன்ன  கிழவோள்  மாண்புகள்”  (தொல்.  கற்.11)  என்று  ஆசிரியர்
கூறுதல் காண்க. சான்றோர் - நற்குணங்களால் நிறைந்த பெருமக்களும்
வீரர்களுமாவர்    ;    இவ்   விருதிறத்   தோராலும்   அரசர்க்குச்
செங்கோன்மையும் வெற்றியுமுண்டாதலால், “சான்றோர் புரவல” எனச்
சிறப்பித்தார்   .   இவ்வாறு  நற்குண  நற்செய்கைகளால்  மேம்படும்
அரசரைக்   காண்டலில்  கற்றோரெவர்க்கும்   விருப்ப  முண்டாதல்
இயல்பாதலால்,   “நின்  நயந்து   வந்தனென்”   என்றார்.  காரியம்
காரணமாக    வுரைக்கப்பட்டது.    சிறப்புடைய   தலைமக்களையும்
அரசரையும்   பாடு    மிடத்து  அவர்தம்   சிறப்புக்கு ஆக்கமாகும்
கற்புடைய அவர்  மனைவியையும்  ார்த்திப்  பாடுதல் பண்டையோர்
மரபு ; “மடமகளிர்  தாம்   பிழையார் கேள்வர்த்   தொழுதெழலாற்
றம்மையரும்,    தாம்   பிழையார்  தாந் தொடுத்த கோல்” (கலி.39)
என்பதனால்,  மகளிர்   கற்பு  கணவர்க்கும் தமர்க்கும் ஆக்கமாதல்
காண்க.
 

3 - 6. இன்னிசை................................பொருந .

உரை : இன்னிசைப் புணரி இரங்கும் -   இனிய ஓசையையுடைய
அலைகள் ஒலிக்கின்ற ; பௌவத்து - கடல் வழியாக வந்த ; நன் கல
வெறுக்கை   -  நல்ல  கலன்களாகிய  செல்வம்  ;  துஞ்சும்  பந்தர்
தொகுக்கப்  பட்டிருக்கும்  பண்ட  சாலைகள் உள்ள ; தாழை கமழும்
கானல்  அம்  பெருந்  துறை  -  தாழையின்  மணம் கமழும் கானற்
சோலை  நிற்கும் பெருந்  துறையையுடைய  ;  தண்  கடற் படப்பை
தண்ணிய கடற்கரைப்  பகுதியாகிய  ;  நன்னாட்டுப் பொருந - நல்ல
நாட்டுக்குத் தலைவனே எ - று.

புணரி, அலை . ஒரே வகையாக இடையறாத முழக்கத்தைச் செய்து
கொண்டே  யிருத்தல் பற்றி, “இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவம்”
எனப்பட்டது.  இக்  கடல் வழியாக வேறு நாடுகளிலிருந்து கலங்களில்
சீரிய   பொன்னும்   மணியும்  முதலிய  கலன்கள்  கொணரப்படுதல்
தோன்ற,  “பௌவத்து  நன்கல  வெறுக்கை”  யென்றார்.  வெறுக்கை,
செல்வம்  . நன்கலத்தின்  மிகுதி  தோன்ற  “வெறுக்கை”  யென்பது
நிற்றல்  காண்க  .  வெறுத்தல்  மிகுதிப்பொருட்டாதலை,  “வெறுத்த
கேள்வி”   (புறம்.   53)  என்பதனா  லறிக  .  இனிப்  பழையவுரை,
“பௌவத்து   நன்கல   வெறுக்கை  யென்றது  பௌவத்திலே  வந்த
நன்கலமாகிய  வெறுக்கை  யென்றவா” றென்றும், “நன்கல வெறுக்கை
துஞ்சு   மென்ற  சிறப்பானே   இதற்குத்   துஞ்சும்  பந்தர்  என்று
பெயராயிற்”றென்றும்   கூறுவர்.  பந்தர்,  பண்டசாலை  (Godowns).
பெருந்துறை  யிடத்தே  கானற்சோலை  யுண்மை  தோன்ற, “கானலம்
பெருந்துறை”  யென்றார். படப்பை, சார்ந்துள்ள நிலப்பகுதி . மனைப்
படப்பை,   காவிரிப்    படப்பை  என  வரும்  வழக்காறு  காண்க.
பொருவிறந்தானைப்   “பொருந”   என்றார்.   முருக    வேளையும்
“போர்மிகு பொருந” (முருகு. 276) என்று நக்கீரர் கூறுவர்.

7 - 9. செவ்வூன் ........................ அண்ணல் .

உரை :  செவ்வூன் தோன்றா - தன்னிற் கலந்த சிவந்த ஊன்கறி
தோன்றாதவாறு   செய்த;   முதிரை  வெண்  துவை  - துவரையால்
அரைக்கப்பட்ட  வெள்ளிய  துவையலையும்;  வால்  ஊன்  வல்சி -
வெண்மையான  வூன்கலந்  தமைத்த சோற்றையு முண்ணும் ; மழவர்
மெய்ம்மறை  -  மழவருக்கு மெய்புகு கவசம் போன்றவனே ; குடவர்
கோவே  -  குடநாட்டவர்க்குத் தலைவனே; கொடித்தேர் அண்ணல் -
கொடிகட்டிய தேரையுடைய அண்ணலே எ - று.
 

செவ்வூனும்  மிக்க துவரையும் கலந்து அரைத்த   துவையாதலால்
“வெண்டுவை”   யென்றும்,  சிவந்த வூனாயி்னும் அத் துவையில் தன்
செம்மை  தோன்றா  தாயினமையின் “செவ்வூன் தோன்றா” வென்றும்
கூறினார்.  பழைய  வுரைகாரரும்,  “செவ்வூன் தோன்றா வெண்டுவை
யென்றது  அரைத்துக்  கரைத்தமையால்  தன்னிற்   புக்க  செவ்வூன்
தோன்றாத  வெள்ளிய  துவை யென்றவா” றென்றே கூறுவர் . முதிரை
துவரை  அவரை  முதலாயின.  வாலூன் என்றது வெள்ளிய நிணமிக்க
வூனாயிற்று.   துவையிலும் வல்சியிலும் ஊனே மிகுந்து நிற்றலால், இம்
மழவர்  சோற்றினும் ஊனே பெரி துண்ப ரென்பது பெறப்படும் வல்சி
மழவ  ரென்றது  “தம் செல்வச் செருக்கானே சோறுண்பது பெரிதன்றி
முன்பு   எண்ணப்பட்டவற்றையே   யுணவாகவுடைய  வீர  ரென்றவா
றெனப்”   பழையவுரை  கூறும்.  மெய்ம்மறை,  இதற்குச்  “சான்றோர்
மெய்ம்மறை”   யென்புழிக்  (பதிற்.  14)  கூறினாம். மழவர், ஒருவகை
வீரர்  ;   “உருவக் குதிரை மழவர் ஓட்டிய” (அகம். 1) என்று வருதல்
காண்க.  இவர்  வாழும்  நாடு, மழநாடு எனப்படும். திருச்சிராப்பள்ளி
மாநாட்டுக்  காவிரியின்  வடகரைப்பகுதி மழநாடாகும். வடநாட்டவரை
வடவர் என்பதுபோலக் குடநாட்டவர், குடவரெனப் பட்டனர்.

10 - 12. வாராராயினும்..........................தோன்றல்.

உரை : இரவலர் வாராராயினும்- நாட்டில் இரவலர் இல்லாமையால்
இரப்பவர்  வாரா  தொழியினும்  ; வேண்டி - அவர்க்கு ஈத்துவக்கும்
இன்பம் விரும்பி ; தேரின் தந்து - பிற நாடுகளிலிருக்கும் இரவலரைத்
தேரேற்றிக் கொணர்ந்து; ஆர் பதன் நல்கும் - உண்ணும் உணவு மிகக்
கொடுக்கும்  ;  நசை  சால்  வாய்  மொழி  -  கேட்டார்ப்பிணிக்கும்
வாய்மைமொழியினையுடைய  ;   இசை சால் தோன்றல் - புகழமைந்த
தோன்றலே எ - று .

“வாராராயினும்”     என்றும், “தேரிற்றந்து” என்றும் கூறியதனால்,
நாட்டில்  இரவலர்  இன்மை  பெற்றாம். அவ் விரவலர்க் கீத்துவக்கும்
இன்பம்   பெறல்   வேண்டி  அவரைத்  தானே  வலிய  வருவித்தா
னென்பார்,  “இரவலர்  வேண்டித்  தேரிற்  றந்து”  என்றார்.  இனிப்
பழையவுரைகாரர்,  “இரவலரை  யென்னும்  இரண்டாவது விகாரத்தால்
தொக்கது” என்றும், “இரவலரை வேண்டி யென்றது தன்னாட்டு இரவல
ரில்லாமையான்   அவரைப்   பெற  விரும்பி  யென்றவா”  றென்றும்
கூறுவர்  .  எனவே,  தன்னாட்டில்  வறுமை  யின்மையால்  இரவலர்
வாராராயினும்  பிறர் நாட்டில் வறுமை யுண்மையால்  இரவல ருண்மை
தெரிந்து   அவரைப்  பெற  விரும்பினானென்பதே    கருத்தாயிற்று .
தேரிற்றந் தென்றதனால், இவனால் விரும்பிக் கொணரப்பட்ட இரவலர்
புலவரும்  பாணரும்  கூத்தரும்  பொருநருமாதல் பெறப்படும் ; இவர்
கட்கு  அரசர்  தேர்  முதலிய  ஈதல்  இயல்பாதலின், “பாணர் வருக
பாட்டியர் வருக, யாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென, இருங்கிளை
புரக்கும் இரவலர்க் கெல்லாம், கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடு வீசி”
(மதுரை : 749 - 52) என்று பிறரும் கூறுதல் காண்க.  இனித் தேரிற்றந்
தென்றதற்குப் பழையவுரைகாரரும், “அவ் விரவலருக்கு  அவருள்வழித்
தேரைப்  போகவிட்டு  அதிலே  அவர்களை வரப்பண்ணி” யென்றும்.
“தேரா னென   வுருபு   விரிக்க”   வென்றும்   கூறி,   “தேர்எனத்
தேர்ச்சியாக்கி     அவ்விரவலரை    அவருள்ள   விடத்தில்  தேடி
அழைத்தென்றவா” றென்றும் கூறுவர்.   ஆர்பதனல்கும்   தோன்றல்,
வாய்மொழித்    தோன்றல்,   இசைசால்  தோன்றல்  என  இயைக்க.
வாய்மை,   கேட்டார்க்கினிமையும்    நற்பயப்பாடும்   உடைமையின்,
அதனை     “நசைசால்     வாய்மொழி”    யென்றார்.    நசையை
மொழிக்கேற்றினு  மமையும்.  இசை,  ஈதல்மே னிற்பதாகலின், அதனை
மிகவுடைய னாதலின், “இசைசால் தோன்றல்” என்பாராயினர்.
 

13 - 21. வேண்டுவ...............நாளே.

உரை :  பெரும - பெருமானே ;  நனந்தலை வேந்தர் - அகன்ற
இடத்தையுடையவேந்தர் ; அல்கலும்தார் அழிந்து அலற - நாடோறும்
தமது   தூசிப்படை   கெடுதலால் ஆற்றாது  புலம்ப  ;  நீடு  வரை
அடுக்கத்த நாடு - நெடிய மலைப்பக்கத்தைச் சார்ந்த அவர் நாடுகளை
;  கைக் கொண்டு - கைப்பற்றி ; பொருது சினம் தணிந்த - அவரைப்
பொருது  தொலைத்து அவர்பாலெழுந்த சினம் தணியப்பெற்ற; செருப்
புகல்   ஆண்மை   -   போரை  விரும்பும்  ஆண்மையினையும்  ;
தாங்குநர்த்  தகைத்த  ஒள்வாள்  -  எதி்ரூன்றித் தடுக்கும் பகைவரை
யழித்த    ஒள்ளிய    வாளையும்    ;    ஓங்கல்    உள்ளத்து  -
உயர்ந்தவூக்கத்தையு  முடைய  ;  குருசில் - குருசிலே ; நின் நாள் -
நின்னுடைய  வாணாள்  ;  வேண்டுவ அளவையுள் - வேண்டிய கால
வளவினுள் ; யாண்டு பல கழிய - யாண்டுகள் பல செல்ல ; பெய்து -
மழையைப்  பெய்து  ;  புறந்  தந்து  -  உயிர்களைக்  காப்பாற்றி  ;
பொங்கல் ஆடி - மேலோங்கிப் பறக்கும் பிசிராய்க் கழிந்து ; விண்டுச்
சேர்ந்த  வெண்  மழை  போல  - மலையுச்சியையடைந்த வெள்ளிய
முகிலைப்போல ; சென்றறாலியர் - சென்று கெடா தொழிவதாக எ-று.

பெரும,     குருசில், நின் நாள் யாண்டு பல கழிய, வெண் மழை
போலச்   சென்றறாலியர்   என   முடிக்க.  ஆண்மையும்,  வாளும்,
உள்ளமும்    உடைய    குருசில்   என   இயையும்.   பேரிடத்தை
யுடையராதலின், பொர வாற்றாது வலியழிந்தன ரெனத் தாம் கூறுவதை
வலியுறுத்தற்கு,   “நனந்தலை   வேந்தர்”என்றும்,   அவர்   விடுத்த
தூசிப்படை   நாடோறுந்   தோற்றழிவது   கண்டு   வாய்விட்டலறின
ரென்றற்கு,  “அல்கலும்  தாரழிந்  தலற” என்றும் கூறினார். ஒருநாள்
தாரழிந்ததற்கு  வழி  நாள்  பலவும்  அலற  என்றற்கேற்ப, தாரழிந்து
அல்கலும் அலற என இயைப்பினுமாம். பழையவுரைகாரர்,  “அல்கலும்
நாடு   கைக்கொண்டு”   எனக்   கூட்டி   முடிப்பர். பகைவர்  நாடு
மலைப்பக்கத்து  நாடென்பார்,  “நீடுவரை  யடுக்கத்த  நாடு” என்றார்.
பொருது  வேறலால்  சினம்  தணியினும்  போர்வேட்கை யொழியாது
நிலைபெறுதலின்,  “பொருது சினந் தணிந்த” என்றவர் இடையீடின்றிச்
“செருப்புகலாண்மை”     யினை    எடுத்தோதினார்.   ஓங்குதற்குக்
காரணமாகிய   உள்ளத்தை   ஓங்கலுள்ளமென்றார்   ;  “மாந்தர்தம்
உள்ளத்தனைய  துயர்வு”  (குறள்.  595)  என்று  சான்றோர் கூறுதல்
காண்க.   படைப்புக்காலத்தே   அவரவர்க்கு   வரையப்பட்ட  கால
வெல்லையை “வேண்டுவ வளவை” யென்றார்.
 

வள்ளன்மையும்     உயிர்    புரத்தலும்  சிறப்ப  வுடைமைபற்றி,
சேரலாதற்கு  மழை  முகிலை  யுவமை கூறலுற்று, அது மழையினைப்
பெய்து பின்னர் வெள்ளிய பிசிராய்ப் பறந்து கழிதல் போல, உவமைப்
பொருளாகிய  சேரலாதன் கழிதலாகாது  என  பரிகரித்தற்கு, “பெய்து
புறந்  தந்து  பொங்கலாடி,  விண்டிச்  சேர்ந்த  வெண்மழை போலச்,
சென்றறாலியரோ  பெரும”  என்றார். பெய்தோய்ந்த முகில் வெள்ளிய
பிசிராய்க்   கழியு  மென்பதனை,  “பொங்கல்  வெண்மழை  எஃகுறு
பஞ்சித்  துய்ப்பட்டன,  துவலை”  (அகம். 217) என்றும், “எவ்வாயும்,
தன்   தொழில்   வாய்ந்த   இன்குரலெழிலி,   தென்புல   மருங்கிற்
சென்றற்றாங்கு”   (நற்.  153)  என்றும்  சான்றோர்  கூறுமாற்றானறிக.
சென்றாலியரோ  என்பதே பாடமாயின்,  சென்றறாலியர்  எனற்பாலது
சென்றாலியர் எனத் திரிந்ததெனக் கூறிக் கொள்க.

இனிப்   பழையவுரைகாரர் “பொங்கலாடி யென்றது எஃகின பஞ்சு
போல வெளுத்துப் பொங்கி யெழுதலைச் செய்து என்றவா” றென்றும்,
“வெண்மழை போலச்  சென்றறாலிய  ரென்றது  அம்  மழை பெய்து
புறந்தரும்  கூற்றை  யொத்து அது பெய்து வெண்மழையாகக் கழியுங்
கூற்றை  யொவ்வாது   கழிகவென்றவாறென்றும்  கூறுவர்.  நீடுவரை
யடுக்கம்  என்புழி “அடுக்கம் ஈண்டு அடுக்குத” லென்றும், “மழையை
அவன் றன்னோடுவமியாது அவன் நாளோடு உவமித்தது, அவனோடு
அவன் நாளுக்குள்ள ஒற்றுமை பற்றி யென்க” வென்றும் கூறுவர்.

இதுகாறும்    கூறியது, ஆன்றோள் கணவ, சான்றோர்   புரவல,
கொற்றவ,  பொருந,   மழவர்   மெய்ம்மறை,  கோவே,  அண்ணல்,
தோன்றல், பெரும,  குருசில்,  நின்  நயந்து  வந்தனென், நின் நாள்
வெண்மழை போலச் சென்றறாலியரோ எனக் கூட்டி முடிக்க.

“இதனாற் சொல்லியது, அவன் உலகுபுரத்தலும் தன் குறையும் கூறி
வாழ்த்தியவாறாயிற்று.”


 மேல்மூலம்