முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
58.



ஆடுக விறலியர் பாடுக பரிசிலர்
வெண்டோட் டசைத்த வொண்பூங் குவளையர்
வாண்முகம்பொறித்த மாண்வரி யாக்கையர்
செல்லுறழ் மறவர்தங் கொல்படைத் தரீஇயர்
 5




இன்றினிது நுகர்ந்தன மாயி னாளை
மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்ல
துண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக்
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
பொய்படு பறியா வயங்குசெந் நாவின்
 10




எயிலெறி வல்வி லேவிளங்கு தடக்கை
ஏந்தெழி லாகத்துச் சான்றோர் மெய்ம்மறை
வான வரம்ப னென்ப கானத்துக்
கறங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும்
 15




புன்புலம் வித்தும வன்கை வினைஞர்
சீருடைப் பல்பக டொலிப்பப பூட்டி
நாஞ்சி லாடிய கொழுவழி மருங்கின்
அலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பி னாடுகிழ வோனே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும்
அது. பெயர் - ஏவிளங்கு தடக்கை
(10)

     (ப - ரை) 2. வெண்டோடு - பனந்தோடு; தோட்டின்
கண்ணென விரிக்க. அசைத்தல் - தங்குவித்தல். 3. வாண்முகம் -
வாள்வாய்.

     குவளையர் (2) என்பது வினையெச்ச வினைக்குறிப்பு முற்று;
அதனைக் கூறி (7) என்பதனொடு முடிக்க.

     யாக்கையராகிய (3) மறவர் (4) என இருபெயரொட்டு.

     8. கண்ணி கண்ணுதல் - தாங்கள் சூடிய போர்க்கண்ணிக்கு
ஏற்ப வினைசெயக் கருதுதல்.

     10. 1எயிலெறி வல்விலென்றது விற்படையினை. ஏ விளங்கு
தடக்கை யென்றது ஏத்தொழிலுக்குள்ள கூறுபாடெல்லாம் விளங்கிய
தடக்கை யென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'ஏ விளங்கு தடக்கை' என்று
பெயராயிற்று.

     14. பெரிய தோன்றுமென்றது பெருகத் தோன்றுமென்றவாறு.

     16. பல்பகட்டையென விரித்துப் பகட்டை அவை ஒலிப்பப்
பூட்டியெனக் கொள்க.

     பூட்டித் (16) திருமணி பெறூஉம் (18) என முடிக்க.

     வயவர் பெருமகன் (8) சான்றோர் மெய்ம்மறையாகிய (11)
வான வரம்பனைப் (12) புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் தம்
(15) கொழுவழி மருங்கின் (17) திருமணி பெறும் (18) நாடுகிழவோன்
(19) என்று சொல்லுவார்கள் (12); அவன் அவ்வாறு
செல்வக்குறையிலனாதலான் அத்தரத்திற்கு ஏற்ப நமக்கு வேண்டுவன
தருதலிற் குறையுடையனல்லன்; வந்தமைக் கேற்ப விறலியராயுள்ளீர்,
ஆடலைக் குறையறச் செலுத்துமின்; பரிசிலராயுள்ளீர், நீயிரும் நும்
கவிகளைப் பாடிக் கைவரப் பண்ணுமின் (1) என்று மாறிக் கூட்டி
வினைமுடிவு செய்க.

     வானவரம்பன் (12) நாடுகிழவோன் (19) எனக்
கூட்டவேண்டுதலின் மாறாயிற்று.

     இதனாற் சொல்லியது அவனாட்டுச் செல்வமும் அதற்கேற்ற
அவன் கொடையும் கூறியவாறாயிற்று.

     ஆடுக பாடுகவென்றதற்கு அவன்பாற்சென்று ஆடுக
பாடுகவெனக் கூறாது இவ்வாறு கூறியதன் கருத்து,
2ஆற்றுப்படையென்னாது 3செந்துறைப் பாடாணென்று
கிடந்தமையானெனக் கொள்க.

     (கு - ரை) 1. விறலியரே ஆடுக; பரிசிலரே பாடுக.

     2-4. பகைவரது இயல்பு.

     2. வெள்ளிய பனந்தோட்டிலே தொடுத்துக் கட்டிய
ஒள்ளிய பொலிவு பெற்ற குவளைப்பூவைச் சூடியவராய். பூக்களைப்
பனந்தோட்டிலே தொடுத்தல்: "வேங்கை யொள்ளிணர் நறுவீப்,
போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்து" (புறநா. 265 : 2 - 3)

     3. வாளினது வாய் தன் அடையாளத்தை எழுதிய மாட்சிமைப்
பட்ட தழும்புகளையுடைய உடம்பினராகிய. மு. பதிற். 67 : 14.

     4. இடியை ஒத்த மறவரது கொல்லுகின்ற படையைக்
கொணரும் பொருட்டு. 5 - 7. வயவரது வஞ்சினம்.

     5. இன்றைக்கு இனிதாக நுகர்ந்தோமானால் நாளைக்கு.

     6. அரைத்த மண்ணால் கட்டப்பட்ட இஞ்சியையுடைய
மதிலைக் கடந்தல்லாமல்; 'அரைம ணிஞ்சி நாட்கொடி நுடங்கும்'
(புறநா. 341 : 5)

     7. புகா உண்குவம் அல்லேம் எனக்கூறி - உணவை
உண்ணமாட்டேம் என்று வஞ்சினம் கூறி; இது
தொல்லெயிற்கிவர்தலென்றும் முற்றுமுதிர்வென்றும் கூறப்படும்;
"இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப், பொற்றாரான் போனகங்கைக்
கொள்ளானால்" (தொல், புறத். 12, ந. மேற்.)' "காலை முரச
மதிலியம்பக் கண்கனன்று, வேலை விறல்வெய்யோ
னோக்குதலும்-மாலை, அடுக மடிசிலென் றம்மதிலு ளிட்டார்,
தொடுகழலார் மூழை துடுப்பு" (பு. வெ. 117)

     8. தாம் சூடிய போர்க்கண்ணிக்கு ஏற்ற வினைசெய்யக்
கருதிய வீரர்களையுடைய பெருமையையுடையான்.

     9. தாம் கூறிய வஞ்சினங்கள் பொய்படுதலை அறியாதனவாய்
விளங்குகின்ற செவ்விய நாவினையும்.

     10. மதில்களை எறிகின்ற வல்வில்லின்கண்ணே அம்புகளைத்
தொடுத்தற்குரிய கூறுபாடுகளெல்லாம் முற்றக் கற்று விளங்கிய பெரிய
கையினையும்; எயிலெறி வல்வில் என்றது, விற்படையொன்றனையே
துணையாகக் கொண்டு பகைவர் மதிலைப் கொள்ளுவரென்றபடி.

     11. சான்றோர் மெய்ம்மறை: பதிற். 14 : 12.

     11-2. அழகை எய்திய மார்பினையும் உடைய வீரருக்குக்
கவசம் போன்றவனாகிய வானவரம்பனென்று அறிந்தோர் சொல்லுவர்.

     12-5. புன்புலத்தின் இயல்பு.

          12-4. காட்டினிடத்தே ஒலிக்கின்ற ஓசையையுடைய
சிள்வீடு பொரிந்த அடிமரத்தின்கண்ணே பொருந்திய சிறிய
இலைகளையுடைய வேலமரம் பெருகத் தோன்றும்; சிறிய இலை
சிறியிலையென்றாயிற்று; தொகுத்தல்; "சிறியிலை வெதிரின்" (புறநா.
109 : 4). சிதடி: பதிற். 23:2.

     15. புன்புலத்தில் வித்துக்களை விதைக்கின்ற வலிய
கையையுடைய தொழில்செய்வோர். 16. சிறப்பையுடைய பல
கடாக்களை அவை ஒலிக்கும்படி நுகத்தின் கண்ணே பூட்டி
உழுதலால். பூட்டி: எச்சத்திரிபு.

     17. கலப்பைகள் உழுத கொழுவினது படைச்சாவின் பக்கத்தே.

     18-9. அசைகின்ற ஒளியையுடைய அழகிய மணியைப்
பெறுவதற்கு இடமான, அகன்ற இடத்தையுடைய ஊர்களையுடைய
நாட்டுக்கு உரிமையுடையோனை.

     காட்டில் மணிபெறுதல்:பதிற். 21 : 20 - 22, 66 : 19 - 20,
76 : 14 - 5.

     நாடுகிழவோனை (19) மெய்ம்மறையாகிய (11)
வானவரம்பனென்ப (12) என முடிவு செய்க.

     (பி - ம்) 7. புகவென. 9. படுவறியா, 11.மேமறை.
17.மருங்கில். (8)


     1'படைவெள்ளத்தை ஆரெயிலென்றது அரசன்றனக்கு ஆரெயில்
போல அரணாய் நிற்றலினெனக் கொள்க' (
பதிற். 33: 6 - 11, உரை)
     2தொல். புறத். 36.
     3பதிற். 11. துறை.




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

8. ஏவிளங்கு தடக்கை
 
58.ஆடுக விறலியர் பாடுக பரிசிலர்
வெண்டோட் டசைத்த ஒண்பூங் குவளையர்
வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்
செல்லுறழ் மறவர்தங் கொல்படைத் தரீஇயர்
   
5இன்றினிது நுகர்ந்தன மாயி னாளை
மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்லது
உண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக்
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
பொய்படு பறியா வயங்குசெந் நாவின்
   
10எயிலெறி வல்வி லேவிளங்கு தடக்கை
ஏந்தெழி லாகத்துச் சான்றோர் மெய்ம்மறை
வான வரம்ப னென்ப கானத்துக்
கறங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும்
   
15புன்புலம் வித்தும் வன்கை வினைஞர்
சீருடைப் பல்பக டொலிப்பப் பூட்டி
நாஞ்சி லாடிய கொழுவழி மருங்கின்
அலங்குகதிர்த் திருமணி பெறூஉம்  
அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே.
 

துறை   : செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்   : ஏவிளங்கு தடக்கை.

12 - 19. கானத்து .................. கிழவோனே.

உரை : கானத்துக் கறங்கு இசைச் சிதடி- காட்டிடத்தே ஒலிக்கின்ற
ஓசையையுடைய  சிதடிகள்  ;  பொரி  அரைப்  பொருந்திய - தமது
பொரித்த  அடிப்பகுதியிடத்தே  கொண்ட  ;  சிறி  இலை  வேலம்-
சிறுசிறு  இலைகளையுடைய  வேல  மரங்கள்  ; பெரிய தோன்றும் -
மிகுதியாய்த்  தோன்றும்  ; புன் புலம் வித்தும் புன்செய்களை யுழுது
பயிர்செய்யும் ; வன்கை வினைஞர் - வலிய கையினையுடைய உழவர்
; சீருடைப் பல் பகடு ஒலிப்பப் பூட்டி - சிறப்பினையுடைய பலவாகிய
கடாக்களை அவற்றின் கழுத்திற் கட்டிய மணிகள் ஒலிக்கும்படி பூட்டி
யுழுது  ;  நாஞ்சில்  ஆடிய  கொழுவழி மருங்கின்  - கலப்பையின்
கொழுச்  சென்ற  படைச் சாலின் பக்கத்தே; அலங்கு கதிர் திருமணி
பெறூஉம்   -   அசைகின்ற   ஒளிக்   கதிர்களையுடைய   அழகிய
மணிகளைப்  பெறும்  ; அகன்கண் வைப்பின் நாடு - அகன்ற இடம்
அமைந்த ஊர்களையுடைய நாட்டுக்கு ; கிழவோன் - உரியவன் எ-று.

சிதடி,   சிள்வீடு என்னும் வண்டு. வேலங்காட்டிடத்தே மரங்களின்
பொரித்த   அரையிடத்தே   தங்கிப்   பேரிரைச்சல்   செய்தல்பற்றி,
“கானத்துக்  கறங்கிசைச்  சிதடி  பொரியரைப்  பொருந்திய  வேலம்”
என்றார்.  சிறிய  இலை, சிறியிலை யென நின்றது ; “புன்புலத்த மன்ற
சிறியிலை  நெருஞ்சி”  (குறுந்.  202)  என்று  வருதல் காண்க. வேல்,
வேலம் என அம்முப்பெற்றது. பெரிய தோன்றும் என்புழிப் பெருமை,
மிகுதிமேற்று ; “பெரியகட் பெறினே, யாம் பாடத் தானுண்ணு மன்னே”
(புறம்.  235)  என்புழிப்போல. புன்புலம், புன்செய். புன்புலம் வித்தும்
உழவராதலின்,  “வன்கை   வினைஞர்”   என்றார்.   உழுதொழிலிற்
பயிற்சியுடைமைபற்றி,   “சீருடைப்   பல்பகடு”   என்றார்.  நாஞ்சில்,
கலப்பை.  கொழு  வழி, கொழுச்சென்ற வழி ; அஃதாவது படைச்சால்
என   வறிக.  பெரிய  தோன்று  மென்றற்கு,  “பெருகத்  தோன்றும்”
என்றும்,   “பல்பகட்டையென  விரித்து,  அவை  யொலிப்பப்  பூட்டி
யெனக்  கொள்க”  என்றும்  பழையவுரைகாரர்  கூறுவர். உழுது என
ஒருசொல்  வருவிக்க,  உழுவார்  உழவுப்  பயனை யுடனே பெறுவார்
போல   உயர்   மணிகளைக்  கொழு  வழி  மருங்கே  பெறுகின்றன
ரென்பார்,  “அலங்கு  கதிர்த்  திருமணி பெறூஉம்” என்றார். வைப்பு,
ஊர்கள்.

2 - 8. வெண்தோட்டு .............பெருமகன்.

உரை :   வெண்  தோட்டு  அசைத்த  ஒண்பூங்   குவளையர் -
வெள்ளிய       பனந்தோட்டிலே       கட்டிய          ஒள்ளிய
குவளைப்பூவையுடையராய்  ;  வாள்  முகம்  பொறித்த மாண்   வரி
யாக்கையர்  -  வாளினது வாயால் வடுப்பட்ட மாட்சிமை பொருந்திய
தழும்புகளையுடைய உடம்பினராய் ; செல்உறழ் மறவர் -  இடிபோலத் 
தாக்கும்   வீரர் ; தம்கொல் படைத்தரீஇயர்  - தத்தம்  கொல்லுகின்ற
படையை  யேந்தி   வருவார் ; இன்று  இனிது  நுகர்ந்தனமாயின்  -
இன்று   நாம்  நுகரக்கடவவற்றை    இனிது   நுகர்ந்தேமாயினும்  ; 
நாளை   -    நாளைக்கு;     மண்    புனை     இஞ்சி    மதில்
கடந்தல்லது  -  மண்ணாற் கட்டப்பட்ட பகைவர் மதில்களைக் கடந்த
பின்  னன்றி ; புகா உண்குவ மல்லேம் - உணவு கொள்ளேம் ; எனக்
கூறி  - என வஞ்சினம் கூறி ; கண்ணி கண்ணிய வயவர் பெரு மகன்
-  தாம்  சூ  டிய  போர்க்கண்ணிக்கு  ஒப்பப் போர் வினை செய்யக்
கருதிய வீரர்களையுடைய பெருமகன் என்றும்;
 

வெள்ளிய  பனந்தோட்டிலே நல்ல நிறமான பூக்களை விரவி நிறம்
விளங்கத்  தொடுத்தணியும் இயல்பினராதலின், “வெண்தோட் டசைத்த
ஒண்பூங்  குவளையர்”  என்றார்  .  ஈண்டுக்  குவளை கூறியதுபோல,
வேங்கை  வாகை முதலியவற்றையும் பனந்தோட்டுடன் கட்டுவர் என்ப
;  இதனை,  “வேங்கை யொள்ளிணர் நறுவீப், போந்தையந் தோட்டிற்
புனைந்தனர்  தொடுத்து”  (புறம். 265) என்றும், “மள்ளர் போந்தொடு
தொடுத்த  கடவுள் வாகைத் துய்வீ” (பதிற். 66) என்றும் வருதலாலறிக.
குவளையர்   ;   குறிப்பு   முற்றெச்சம்.   இனிப்  பழையவுரைகாரர்,
வெண்தோடு  பனந்தோ டென்றும்,  தோட்டின்  கண்ணென  விரிக்க
வென்றும்,  அசைத்தல்  தங்குவித்தல்  என்றும், “குவளைய ரென்பது
வினையெச்ச  வினைக்  குறிப்புமுற்று ; அதனைக் கூறியென்பதனோடு
முடிக்க”  என்றும்  கூறுவர்.  வாள்  வாயினை  வாண்முக மென்றார்.
வாளால்   வெட்டுண்டு  தைப்புண்டு   வடுப்பட்டுத்  தோன்றுதலால்
“வாண்முகம்   பொறித்த”  என்றும்,  முகத்தினும்  மார்பினும்  படும்
புண்ணை  விழுப்புண்  ணெனப்  பேணி மகிழ்பவாதலால், “மாண்வரி
யாக்கைய”  ரென்றும்  கூறினார்.  வெண்போழ்க் கண்ணியர் என்னும்
பாட்டிலும்  (பதிற். 67) வீரர் சிறப்பு, “வாண்முகம் பொறித்த மாண்வரி
யாக்கைய” ரென்று பாராட்டப்படுமாறு காண்க.

குவளையரும்     யாக்கையருமாகிய  மறவர்,  தத்தம் படைகளை
யெடுக்கலுற்றபோதே, படை தொடும் தம் கையால் பகைவர் மதில்கடந்
தல்லது,  உணவு தொட்டுண்ணேம் என வஞ்சினம் கூறுமாறு தோன்ற,
“இன்றினிது    நுகர்ந்தன   மாயின்   நாளை,   மண்புனை   யிஞ்சி
மதில்கடந்தல்லது,  உண்குவ  மல்லேம்  புகா”  எனக்  கூறுகின்றனர்.
படையினைத்    தொடும்போது   வஞ்சினங்   கூறுதலுண்மையினை,
“சுணங்கணி  வனமுலை  யவளொடு  நாளை, மணம்புகு வைக லாகுத
லொன்றோ  .......... நீளிலை யெஃக மறுத்த வுடம்பொடு, வாரா வுலகம்
புகுதலொன்றெனப்,  படைதொட்ட  டனனே  குருசில்”  (புறம்.  341)
என்பதனா லறிக.

இம்     மறவரது  மறப்  பண்பை,  “செல்லுறழ்  மறவர்” என்று
சிறப்பிக்கின்றார்.    இடியினும்   மிக்க   வன்மையுடைமை  தோன்ற,
“செல்லுறழ்  மறவர்”  என்பாராயின ரென வறிக. அரைத்த மண்ணாற்
செய்யப்படுவது பற்றி  இஞ்சி, “மண்புனை இஞ்சி” யெனப்படுகின்றது ;
“அரைமண்  இஞ்சி”  (புறம்.  341) என்று சான்றோர் கூறுதல் காண்க.
“இற்றைப்  பகலு ளெயிலகம் புக்கன்றிப், பொற்றாரான் போனகங்கைக்
கொள்ளானால்”   (தொல். புறத். 12 நச். மேற்)   என்று   சான்றோர்
இவ்வாறு         வஞ்சினம்         கூறுமாறு           காண்க.
இனிக்   குவளையரும்   யாக்கை  யருமாய்,  செல்லுறழ்  மறவராகிய
பகைவரைக்  கொல்லும்  படை  தருவாராய்க் கூறிக் கண்ணிய வயவர்
என்றுரைப்பினுமாம்.  பழையவுரைகாரர்,  யாக்கையராகிய மறவர் என
இருபெயரொட்டு  என்பர்.  அன்றியும், குவளையராய், யாக்கையராகிய
மறவரைக்    கொல்படை  தருவாராய்  என  இயைத்தலு   மொன்று.
வெண்தோட்டசைத்த      வொண்பூங்      குவளை      யென்றது
அடையாளமாலை.   கண்ணி,   போர்க்கண்ணி,  கண்ணி  கண்ணுதல்,
தாங்கள் சூடிய போர்க்கண்ணிக் கேற்ப வினைசெயக் கருதுத லென்பது
பழையவுரை .
 

9 - 12. பொய்படுபு .......................... என்ப .

உரை : பொய் படுபு அறியா வயங்கு செந் நாவின் - தாம் கூறும்
சொற்கள்  பொய்யாதலை  யென்றும் அறியாமையால் விளக்கமமைந்த
செவ்விய  நாவினையும் ; எயில் எறி வல் வில் ஏ விளங்கு தடக்கை -
பகைவர்   மதில்களை   யெறியும்  வலிய  வில்லும்  அம்பும்  ஏந்தி
விளங்கும்  பெரிய  கையினையும்  ; ஏந்தெழில் ஆகத்துச் சான்றோர்
மெய்ம்மறை   -  உயர்ந்த  அழகிய  மார்பினையுமுடைய  வீரராகிய
சான்றோர்க்கு மெய்புகு கருவி போன்றவன் என்றும் ; வான வரம்பன்
என்ப - வான வரம்பனாகிய சேரலாத னென்றும் அறிந்தோர் கூறுவர்
எ - று.

காலமும்     இடமும் செய்யும் வினையும் சீர்தூக்கித் தாம் கூறும்
சொற்கள்  தம்  பயனைப்  பயத்தலின் சிறிதும் தவறுவ தின்மையின்,
“பொய்  படுபு  அறியா” என்றும், பொய்யாமையே நாவிற்குச் சிறப்பும்
செம்மையுமாதலால்   “வயங்கு   செந்நாவி”   னென்றும்,  கூறினார்.
எயிலெறிவல்   வில்   என்பதற்கு  விற்படை  யென்றும், “ஏவிளங்கு
தடக்கை  யென்றது, எத் தொழிலுக்குள்ள கூறுபாடெல்லாம் விளங்கிய
தடக்கை  யென்றவா”  றென்றும், “இச் சிறப்பானே இதற்கு ஏவிளங்கு
தடக்கை யென்று பெயராயிற்” றென்றும் பழையவுரை கூறுகிறது. வான
வரம்ப  னென்ப என்றார் . சான்றோர், சேரர்கட்குப் பொதுவாயமைந்த
இப் பெயர் தனக்குச் சிறப்பாக விளங்குமாறு இச் சேரமான் தன் திறல்
விளங்கு செயலைச் செய்தானென்பது தோன்ற, இப் பத்தின் பதிகமும்
“வான வரம்பனெனப் பேரினிது விளக்கி” யென்பது காண்க.

நாடு  கிழவன், வயவர்  பெருமகன்  என்றும்,  சான்றோர் மெய்ம்
மறை யென்றும் வானவரம்பனென்றும் கூறுப என இயைக்க.

1. ஆடுக ......................பரிசிலர்.

உரை : விறலியர்-விறலியர்களே ; ஆடுக - நீவிர் ஆடுவீர்களாக ;
பரிசிலர்  பாடுக - பாணரும் பொருநருமாகிய பரிசில் மாக்களே, நீவிர்
பாடுவீர்களாக எ - று.

சேரலாதனைக்     காணப்  போந்து  அவன்  திருமுன்  நிற்கும்
விறலியரும்     பாணரும்     பொருநருமாகிய     பரிசிலர்களுக்கு
ஆடுகோட்பாட்டுச்  சேரலாதன் இயல்பினை இதுகாறும் கூறியவாற்றாற்
கூறிக்  காட்டினாராதலின்,  கண்ட  அவர்  செய்தற்குரியன   இவை 
யென்பார்,   “ஆடுக  விறலியர்” என்றும், “பாடுக பரிசிலர்” என்றும்
கூறினார்.
 

இதுகாறும்   கூறியது, நாடு கிழவோன் வயவர் பெருமக னென்றும்,
சான்றோர் மெய்ம்மறை யென்றும், வானவரம்ப னென்றும் அறிந்தோர்
கூறுப ; அவனைக் கண்டு வியக்கும் நீவிர் ஆடுக, பாடுக என வினை
முடிவு செய்து கொள்க.

இனி,    “வயவர் பெருமகன், சான்றோர் மெய்ம்மறையாகிய வான
வரம்பனைப்  புன்புலம்  வித்தும்  வன்கை வினைஞர் தம் கொழுவழி
மருங்கின்  திருமணி  பெறும் நாடுகிழவோன் என்று சொல்லுவார்கள்;
அவன்  அவ்வாறு  செல்வக் குறையிலனாதலான், அத் தரத்திற்கேற்ப
நமக்கு  வேண்டுவன தருதலிற் குறையுடையனல்லன்; வந்தமைக்கேற்ப
விறலியராயுள்ளீர்,    ஆடலைக்    குறையறச்    செலுத்துமின்    ;
பரிசிலராயுள்ளீர்   நீயிரும்   நும்   கவிகளைப்   பாடிக்   கைவரப்
பண்ணுமின்  என்று  மாறிக்  கூட்டி  வினைமுடிவு  செய்க” என்றும்,
“வானவரம்பன், நாடு கிழவோன் எனக்கூட்ட வேண்டுதலின் மாறாயிற்”
றென்றும் பழையவுரைகாரர் கூறுவர்.

“இதனாற்     சொல்லியது அவனாட்டுச் செல்வமும்  அதற்கேற்ற
அவன்  கொடையும்  கூறியவாறாயிற்று.  ஆடுக  பாடுக வென்றதற்கு
அவன்பாற் சென்று ஆடுக பாடுக வெனக் கூறாது. இவ்வாறு கூறியதன்
கருத்து,   ஆற்றுப்படை   யென்னாது   செந்துறைப்  பாடாணென்று
கிளந்தமையானெனக் கொள்க,” என்பதும் பழையவுரை.


 மேல்மூலம்