முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
62.



இழையணிந் தெழுதரும் பல்களிற்றுத் தொழுதியோடு
மழையென மருளு மாயிரும் பஃறோல்
எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவியொடு
மைந்துடை யாரெயில் புடைபட வளைஇ
 5




வந்துபுறத் திறுக்கும் பசும்பிசி ரொள்ளழல்
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ்
பொல்லா மயலொடு பாடிமிழ் புழிதரும்
மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறற்
றுப்புத்துறை போகிய கொற்ற வேந்தே
 10




புனல்பொரு கிடங்கின் வரைபோ லிஞ்சி
அணங்குடைத் தடக்கையர் தோட்டி செப்பிப்
பணிந்துதிறை தருபநின் பகைவ ராயிற்
புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பி
வளனுடைச் செறுவின் விளைந்தவை யுதிர்ந்த
 15




களனறு குப்பை காஞ்சிச் சேர்த்தி
அரிய லார்கை வன்கை வினைநர்
அருவி யாம்பன் மலைந்த சென்னியர்
ஆடுசிறை வரிவண் டோப்பும்
பாடல் சான்றவவ ரகன்றலை நாடே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமு தூக்கும்
அது. பெயர் - வரைபோ லிஞ்சி
(10)

     (ப - ரை) 2. பஃறோலொடுவென்னும் ஒடு விகாரத்தால்
தொக்கதாக்கி விரிக்க.

     5. புறத்திறுக்குமென்றதற்கு நின் தானை புறத்திறுக்குமென
வருவிக்க.

     ஞாயிறு பல்கிய மாயமொடு (6) உழிதரு (7) மடங்கல் (8) எனக்
கூட்டி உலகம் கடல்கொண்டு கிடந்த காலத்து அக்கடல் நீரெல்லாம்
வற்ற எறித்தற்குத் தோன்றும் ஆதித்தர் பலவான மாயத்தோடே கூடி
அந்நீர் வற்றும்படி திரிதரு வடவைத் தீயென்றுரைக்க.

     மாயம் போறலான் மாயமெனப்பட்டது.

     சுடர்திகழ்பு (6) ஒல்லா மயலொடு பாடிமிழ்பு உழிதரு (7)
மடங்கல் (8) என்றது சுடர் திகழ்ந்து உயிர்கட்குப் பொறுக்க முடியாத
மயக்கத்தைச் செய்தலோடே ஒலித்துத் திரிதரும் மடங்கலென்றவாறு.

     ஒள்ளழல் (5) மடங்கல் வண்ணம் கொண்ட (8) எனக்கூட்டி,
ஒள்ளழலானது மடங்கலாகிய அழலின் வண்ணத்தைக் கொள்கைக்கு
காரணமாய் நின்றவெனவுரைக்க.

     இனி ஞாயிறுபலவாதலை (6) அவன் பகைவர் நாட்டில்
1உற்பாதமாகத் தோன்றும் ஆதித்தர் பலராக்கி, மடங்கல் (8)
என்றதனைக் கூற்ற மாக்கி, சுடர்திகழ்பு என்றதனைத் திகழவெனத்
திரித்து, ஒள்ளழலானது ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ
மடங்கல்வண்ணங் கொண்ட வேந்தேயென உரைப்பாரும் உளர்.

     தடக்கையராகிய (11) நின் பகைவர் (12) என மாறிக் கூட்டுக.

     வரைபோல் இஞ்சியை அரணாகவுடையராயிருந்தே (10)
திறைதருப (12) எனச் சொன்ன சிறப்பானே இதற்கு, 'வரைபோ
லிஞ்சி'
என்று பெயராயிற்று.

     திறைதருபவாயின் (12) நாடு பாடல் சான்ற (19) எனக் கூட்டுக.
சான்ற (19) என்றது முற்று.

     14. விளைந்தென்றதனை விளையவெனத் திரிக்க. 15. களனறு
குப்பையென்றது களத்திற் கடாவிடுதற்றொழிலற்ற 2தூற்றுப்பொலியை.

     பரப்பி: (13) என்னும் வினையெச்சத்தினைச் சேர்த்தி (15)
என்னும் வினையொடு முடித்து, அதனை வரிவண்டோப்பும் (18)
என்னும் வினையொடு முடிக்க.

     18-9. வண்டோப்பு நாடென மாறிக் கூட்டுக.

     கொற்றவேந்தே (9) நின்பகைவர் (12) தோட்டி செப்பிப் (11)
பணிந்து திறை தருபவாயின் (12) அவர் அகன்றலைநாடு பாடல்
சான்ற (19) என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-9. சேரன் பகைவரை வெல்லுதல்.

     1. ஓடை முதலிய ஆபரணங்களை அணிந்து எழுகின்ற
பலவாகிய ஆண்யானைகளின் தொகுதியோடும்.

     2. மேகமென்று மயங்குதற்குக் காரணமான கரிய பெரிய
பலவாகிய கிடுகுபடையோடும்; தொழுதியோடு என்பதிலுள்ள
ஒடுவைத்தோலொடு என்றும் கூட்டுக. (பதிற். 52 : 5, உரை);
"மழையுருவின தோல்பரப்பி" (புறநா. 16 : 2) "புரைதவ வுயரிய
மழைமருள் பஃறோல்" (மலைபடு. 377); "எயிலூர் பஃறோல்
போலச், சென்மழை தவழுமவர் நன்மலை நாட்டே" (நற். 197 :
11 - 2)

     3. அம்பு முதலியன பக்கரை முதலிய கலனையை அறுத்த
கத்திரிகையிட்டு நறுக்கின பிடரிமயிரையுடைய குதிரைப்படையோடும்;
"தோறுமிபு, வைந்நுனைப் பகழிமூழ்கலிற் செவிசாய்த், துண்ணா
துயங்கு மாசிந் தித்தும்" (முல்லைப். 72 - 4). மு. பதிற். 64 : 9.

     4. வன்மையையுடைய அரிய மதில்களைப் பக்கத்தே
நெருங்கும்படி வளைத்து. 5. வந்து அவ்விடத்தே நினது சேனை
தங்கும்; தங்கும்: முற்று. பசிய பிசிரையுடைய ஒளியையுடைய
நெருப்பு.

     6. ஊழியினிறுதிக் காலத்தில் சூரியர்கள் பலவாகத் தோன்றி
மாயத்தோடு ஒளி திகழப்பெற்று. 7. உயிர்களுக்குப் பொறுத்தற்கு
இயலாத மயக்கத்தைச் செய்தலோடு ஒலியைச் செய்து திரிகின்ற.

     8. ஊழித்தீயின் வண்ணத்தைக் கொள்ளுதற்குக் காரணமான
கடிய திறலால்.

     5-8. ஒள்ளழல் மாயமொடு சுடர்திகழ்பு, மயலொடு, பாடிமிழ்பு,
உழிதரு மடங்கல் என முடிக்க. கொண்ட; காரணப் பொருளில் வந்த
பெயரெச்சம்.

     9. பகைமையின் துறைகளெல்லாம் முற்ற முடித்த
வெற்றியையுடைய அரசே; "துப்புத்துறை போகிய துணிவுடை
யாண்மை" (பதிற். 14 : 6). 8 - 9. சேரனுக்கு வடவைத்தீ உவமை.

     10-11. தன்னிடத்துள்ள நீர் மதிலைப் பொருகின்ற
அகழியினையும் மலையைப் போன்ற மதிலையும் உடைய, தம்
பகைவரை வருத்து தலையுடைய பெரிய கையையுடையராய்
வணக்கத்தைச் சொல்லி; "தோட்டியின் வணக்கம் வேட்டவன்
விரும்பி" (பெருங். 1. 45 : 64). தோட்டி வளைந்திருத்தலின்
வணக்கத்திற்குப் பெயராயிற்று. வரை போலிஞ்சி: பதிற். 16 :
1, உரை.

     12. நின்னுடைய பகைவர் வணங்கித் திறை கொடுப்பாராயின்.

     13. புல்லையுடைய அகன்ற முல்லைநிலத்தில் பல பசுக்களைப்
பரவச் செய்து. மு. பதிற். 21 : 21.

     14-5. வளப்பத்தையுடைய வயல்களில் விளைந்த
பயிர்களினின்றும் உதிர்ந்த, களத்தில் கடாவிடுதலில்லாத தூற்றாப்
பொலியைக் காஞ்சிமரத்தின் நிழலில் தொகுத்து.

     16. "கள்ளா ருவகைக் கலிமகி ழுழவர்" (அகநா. 346 : 5)

     16-8. கள்ளை யுண்ணுதலையுடைய வலிய கையையுடைய
தொழில் செய்யும் உழவர், நீரினிடத்தே வளர்ந்த
ஆம்பற்பூவைத் தலையின் கண்ணே சூடியவராய், அதனிடத்தே
மொய்த்தற்கு வரும் ஆடுகின்ற சிறகையும் கோடுகளையுமுடைய
வண்டுகளை ஓட்டுதற்கு இடமான.

     அருவியாம்பல்: பதிற். 71 : 2.

     19. அப்பகைவருடைய அகன்ற இடத்தையுடைய நாடுகள்,
பாடல் மிக்கன ஆகும்.

     (பி - ம்.) 6. மல்கிய. 7. எழுதரு. 11. கொட்டி செப்பி. 12.
பகைஞர்.
                                   (2)


     1வெங்கதிர்க்கனலி துற்றவும் - வெய்ய சுடரையுடைய ஞாயிறு
பலவிடத்தும் செறிந்து தோன்றவும்' (
புறநா. 41 : 6, உரை)
     2பொலி - நெற்குவியல்; "பகடூர் பிழிந்த பின்றைத் துகடப,
வையுந் துரும்பு நீக்கிப் பைதறக், குடகாற் றெறிந்த குப்பை"
(பெரும்பாண். 238 - 40)




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

2. வரைபோ லிஞ்சி
 
62.இழையணிந் தெழுதரும் பல்களிற்றுத் தொழுதி யொடு
மழையென மருளு மாயிரும் பஃறோல்
எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவியொடு
மைந்துடை யாரெயில் புடைபட வளைஇ
 
5வந்துபுறத் திறுக்கும் பசும்பிசி ரொள்ளழல்
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ்
பொல்லா மயலொடு பாடிமிழ் புழிதரும்
மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறல்
துப்புத் துறைபோகிய கொற்ற வேந்தே
 
10புனல்பொரு கிடங்கின் வரைபோ லிஞ்சி
அணங்குடைத் தடக்கையர் தோட்டி செப்பிப்
பணி்ந்துதிறை தருபநின் பகைவ ராயிற்  
புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பி
வளனுடைச் செறுவின் வளைந்தவை யுதிர்ந்த
 
15களனறு குப்பை காஞ்சிச் சேர்த்தி
அரிய லார்கை வன்கை வினைஞர்
அருவி யாம்பன் மலைந்த சென்னியர்
ஆடுசிறை வரிவண் டோப்பும்
பாயல் சான்றவவ ரகன்றலை நாடே. 
 

துறை  : செந்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : வரைபோ லிஞ்சி.

5 - 9. பசும் பிசிர் ............ வேந்தே.

உரை:  பசும்பிசிர் ஒள்ளழல் - பசிய பொறிகளையுடைய ஒள்ளிய
நெருப்பானது  ;  ஞாயிறு  பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு - ஞாயிறு
பலவாய்த்  தோன்றும் மாயத் தோற்றங்கொண்டு சுடர்விட்டு எங்கணும்
விளங்க   ;  ஒல்லா  மயலொடு  பாடு  இமிழ்பு  உழிதரும்  மடங்கல்
வண்ணம்  கொண்ட  - உயிர்கட்குப் பொறுக்க முடியாத மயக்கத்தைச்
செய்வதுடன்   முழக்கத்தைச்  செய்து திரியும் கூற்றினது இயல்பினைக்
கொண்ட  ;  கடுந்  திறல்  - மிக்க திறலோடு ; துப்புத் துறை போகிய
கொற்ற   வேந்தே   -   போர்த்துறை   பலவற்றினும்  சிறப்பமைந்த
வெற்றியையுடைய அரசே எ - று.
 

போர்     மேற்கொண்டு செல்லும் பகைப் புலத்தே எடுக்கும்  தீ,
ஈண்டுப்  பசும்  பிசிர் ஒள்ளழல் எனப்பட்டது. இது சேரமான் பகைப்
புலத்தே  எடுத்த  தீயாகும்.  இதனை,  “எரிபரந்  தெடுத்தல்” என்று
இலக்கணம்  கூறும்.  பகைவர் நாட்டில் பலவிடங்களிலும் தீ யெழுந்து
பொறி  பறக்கச்  சுடர்விட்  டெரிவது  பற்றி,  “பசும்பிசிர் ஒள்ளழல்”
என்றும்,  பலவிடத்தும்  தோன்றும் தீ, “ஞாயிறு பல்கியது போறலின்,
“ஞாயிறு  பல்கிய  மாயமொடு”  என்றும் கூறினார். மாயம் போறலின்
மாயமெனப்பட்டது.   திகழ   வென்பது  திகழ்பென  நின்றது.  பெரு
முழக்கம்  கேட்டவழி  உயிர்கட்கு மயக்க முண்டாதல் இயல்பாதலால்,
“ஒல்லா   மயலொடு  பாடிமிழ்பு”  என்றும்,  “எல்லா  வுயிர்களையும்
ஒடுக்கும்   திறல்பற்றி   கூற்றினை   “மடங்க”  லென்றும்  கூறினார்.
“மடங்கலுண்மை   மாயமோ   வன்றே”  (புறம்.  363)  என்பதனால்,
மடங்கல் இப்பொருட்டாதலறிக.

இனிப்   பழைய வுரைகாரர், “ஞாயிறு பல்கிய மாயமொடு உழிதரு
மடங்கல் எனக்  கூட்டி,  உலகம்  கடல்  கொண்டு  கிடந்த காலத்து
அக்கடல்  நீரெல்லாம்   வற்ற  எறித்தற்குத்  தோன்றும்,  ஆதித்தர்
பலவான  மாயத்தோடே கூடி அந்நீர் வற்றும்படி திரிதரு வடவைத் தீ
யென்றுரைக்க”  என்றும்,  “சுடர் திகழ்பு ஒல்லா மயலொடு பாடிமிழ்பு
உழிதரு மடங்கல்  என்றது,  சுடர்  திகழ்ந்து  உயிர்கட்குப் பொறுக்க
முடியாத  மயக்கத்தைச்  செய்தலோடே ஒலித்துத் திரிதரும்  மடங்கல்
என்றவா”   றென்றும்,   “ஒள்ளழல்  மடங்கல்  வண்ணம்  கொண்ட
எனக்கூட்டி  ஒள்ளழலானது  மடங்கலாகிய  அழலின் வண்ணத்தைக்
கொள்கைக்குக்  காரணமாய்  நின்ற  வென வுரைக்க” என்றும், “இனி
ஞாயிறு   பலவாதலை   அவன்   பகைவர்  நாட்டின்  உற்பாதமாகத்
தோன்றும் ஆதித்தர்  பலராக்கி,  மடங்கலென்றதனைக்  கூற்றமாக்கி,
“சுடர்  திகழ்பு  என்றதனைத்  திகழ வெனத் திரித்து, ஒள்ளழலானது
ஞாயிறு  பல்கிய மாயமொடு சுடர் திகழ, மடங்கல் வண்ணங் கொண்ட
வேந்தே யெனவுரைப்பாரு முளர்” என்றும் கூறுவர்.

1 - 5. இழையணிந்து ................... இறுக்கும்.

உரை :  இழையணிந்து எழுதரும் பல்களிற்றுத்  தொழுதியொடு -
ஓடையும்   பொன்னரிமாலையு   முதலாகிய   அணிகளைப்   பூண்டு
எழுகின்ற  பலவாகிய யானைத் தொகுதியும் ; மழையென மருளும் மா
இரும்  பல்  தோல்  - மழை மேகமென்று மயங்கத்தக்க கரிய பெரிய
பலவாகிய  கிடுகை  ஏந்திய  படையும்  ; எஃகு படை அறுத்த கொய்
சுவல்   புரவியொடு   -   வேல்   வாள்   முதலிய   படையேந்திய
வீரர்படையினைச்   செயலறப்  பொருதழித்த  கொய்யப்பட்ட  பிடரி
மயிரையுடைய  குதிரைப்  படையுமாகிய  நின்  தானை,   மைந்துடை
ஆரெயில்  புடைபட வளைஇ வந்து - வலியினையுடைய கடத்தற்கரிய
பகைவரது  மதிற்  பக்கத்தே  நெருங்க  வளைத்து  வந்து  ; புறத்து
இறுக்கும் - மதிற்புறத்தே தங்கியிருக்கின்றது எ - று.

ஒடு,     எண்ணொடு, தோலென்பதனோடும் கூட்டுக. தொழுதியும்
தோலும்  புரவியும்  ஆகிய  நின் தானையென ஒரு சொல் வருவித்து
எயில் புடைபட வளைஇ வந்து  புறத்திறுக்கும்  என இயைக்க. போர்க்
களிற்றின்  முகத்தே  ஓடையும்  எருத்தத்திற்  பொன்னரி  மாலையும்
அணிப  வாதலின்  “இழையணிந்  தெழுதரும் பல்களிற்றுத் தொழுதி”
யென்றார்.  இழையணிந்து  போர்க்குரிய  குறிப்பினைத் தெரிவித்ததும்
களிறு  வீறுகொண்டெழுமாறு  தோன்ற,  “எழுதரும்” என்றார். தோல்,
கிடுகு, கரிய தோலாற் செய்தமையின், கிடுகின் தோற்றம் மழை மேகம்
போறலின்,  “மழையென  மருளும்  பஃறோல்” என்றார் ; “புரை தவ
வுயரிய மழைமருள் பஃறோல்” (மலைபடு. 377) எனப் பிறரும் கூறுதல்
காண்க. பழைய வுரைகாரர், பஃறோலொடு வென்னும் ஒடு, விகாரத்தால்
தொக்க  தாக்கி   விரிக்க”   என்பர்.   வாளும்   வேலும்   ஏந்திய
படையென்றற்கு   “எஃகுபடை”   என்றார்.  படைவரிசையின்  நிரை
சிதைத்துக்  கடந்து  செல்லும்  பேராண்மை  விளங்க,  “எஃகு படை
யறுத்த  கொய்சுவற்  புரவி”  யென்றார்.  குதிரையின்  பிடரி மயிரை
அவ்வப்போது  கத்தரித்து விடுபவாதலின், “கொய்சுவ” லெனப்பட்டது.
உயர்வு,  அகலம்,  திண்மை முதலியவற்றாலும் பல்வகைப் பொறிகளை
யுடைமையாலும்   அருமையுடைத்தாதல்பற்றி, “மைந்துடை ஆரெயில்”
எனப்பட்டது.   களிற்றுத்  தொழுதி  முதலாகவுள்ள  படை  போந்து
பகைவர் மதிலை வளைத்துப் புறத்தே தங்கியிருப்பது விளங்க, “வந்து
புறத்திறுக்கும்”   என்றார்.   இனி,   நின்   தோற்படை   களிற்றுத்
தொழுதியொடும் புரவியொடும்  வந்து புறத்திறுக்கும் என இயைத்தலு
மொன்று.
 

10 - 12. புனல் பொரு ............... பகைவராயின்

உரை :  புனல்பொரு கிடங்கின் - நீர் மிக்குக் கரையையலைக்கும்
அகழியினையும் ;  வரைபோல் இஞ்சி - மலைபோலும்  மதிலினையும்
கொண்டு  ; அணங்குடைத்  தடக்கையர் - தமக்குப் பொருந்தாதாரை
வருத்துதலை யுடைய பெரிய கையினை யுடையராய் ; நின் பகைவர் -
நினக்குப்  பகைவரு  மாயினார்  ;  தோட்டி  செப்பி  -  வணங்கிய
மொழிகளைச்  சொல்லி  ; பணிந்து - நின் தாளில் வீழ்ந்து வணங்கி ;
திறை தருபவாயின் - திறை செலுத்து வாராயின் எ - று.

ஆழ்ந்த     கிடங்கும் மலையென வுயர்ந்த மதிலும,்   தம்மொடு
மாறுபட்டாரை  வருத்தி  யலைக்கும் பல்வகை வலியு முடையராயினும்
நின்னொடு   பொருது   வேறல்  முடியாதென்பது  துணிபு  என்பார்,
கிடங்கினையும்     இஞ்சியினையும்     அவர்தம்     கையினையும்
சிறப்பித்தோதினார்    நின்தானையின்   பெருமையும்    வன்மையும்
நோக்கின்,   அதனால்   வளைக்கப்பட்ட   இவ்வகழியும்  இஞ்சியும்
வலியில்லனவா  மென்பதுணராது,  “புனல்பொரு  கிடங்கின் வரைபோ
லிஞ்சி”   யெனத்  தம்மரண்  சிறப்பைத்  தாமே  வியந்திருப்பதைப்
புலப்படுத்தா   ரென்றும்,  அச்  சிறப்பால்  இப்பாட்டிற்கு  வரைபோ
லிஞ்சியெனப்  பெயராயிற்  றென்றும்  கொள்க.” “வரைபோலிஞ்சியை
அரணாகவுடையரா  யிருந்தே திறை தருப எனச் சொன்ன சிறப்பானே
இதற்கு   வரைபோலிஞ்சியென்று  பெயராயிற்”றென்பது  பழையவுரை.
அணங் குறுத்தற் கேதுவாகிய வலியினை “அணங்” கென்றார். தோட்டி
போலத்  தலை  வணங்கி  மொழிதலின், “தோட்டி செப்பி” யென்றார்;
உடல்   நன்கு வணங்கிப்  பணிதலைக் “குடந்தம்பட்டு” (முருகு. 229)
என்பது  போல.  பிறரும்  “பணிந்து  திறைதருப நின் பகைவராயின்”
(பதிற். 59) என்பது காண்க.
 

13 - 19. புல்லுடை ...................... நாடே.

உரை :  புல்லுடை  வியன் புலம் - புல்  நிறையவுடைய அகன்ற
புலத்தின்கண்  ; பல் ஆ பரப்பி - பலவாகிய ஆனிரைகளைப் பரந்து
மேயவிட்டு  ;  வளன்  உடைச்  செறுவின்  விளைந்தவை உதிர்ந்த -
வளப்பத்தையுடைய  வயலின்கண் விளைந்த கதிரினின்றும் உதிர்ந்த ;
களன்  அறுகுப்பை  - களத்திற் சேர்த்துத் தூற்றப்படுவதில்லாத நெல்
மணியின்  குவியலை,  காஞ்சிச் சேர்த்தி - காஞ்சிமரத்தின் அடியிலே
சேரத்  தொகுத்து  வைத்து ; அரியல் ஆர்கை வன் கை வினைஞர் -
கள்ளுண்டலையும்  வலிய  கையினையுமுடைய  உழவர்  ;  அரு வி
ஆம்பல்  மலைந்த  சென்னியர் - அரிய பூவாகிய ஆம்பலைச் சூடிய
தலையினையுடையராய்  ;  ஆடுசிறைவரிவண்டு ஓப்பும் - அசைகின்ற
சிறகையும்     வரிகளையுமுடைய     வண்டினம்    அவ்வாம்பலை
மொய்க்காவாறு    ஓச்சும்    ;    அவர்    அகன்றலை   நாடு   -
அப்பகைவருடைய  விரிந்த இடத்தையுடைய நாடுகள் ; பாடல் சான்ற
- புலவர் பாடும் புகழ் பெற்றனவாகும் எ - று.

ஆனிரை     மேய்ப்போர் அவற்றைப் புல்லுள்ள விடத்தே மேய
விட்டுத்  தாம்  ஒரு  புடையில்  இருப்ப வாதலின், “புல்லுடை வியன்
புலம்   பல்லா   பரப்பி”  யென்றார்.   மிக்க  மணிகளோடு  கூடிய
கதிர்களையுடைமை    தோன்ற,    “வளனுடைச்   செறு”   என்றும்,
அக்கதிரினின்றும்       உதிர்ந்தவற்றை,       நெல்லரியுந்தொழுவர்
கொள்வதி்ல்லை யாகலின், அறுவடை முடிந்தபின், உழவரும் ஆனிரை
மேய்ப்பாரும்  உதிர்ந்து கிடக்கும் அவற்றைத் துடைப்பத்தாற் கூட்டித்
தொகுப்பது   இயல்பாதலால்,   “விளைந்தவை   யுதிர்ந்த   குப்பை”
யென்றும்,  இக்குப்பை  களத்தில்  தொகுத்துக்  கடாவிட்டுத் தூற்றும்
அத்துணை   மிகுதியும்   தகுதியுமுடையவல்ல  வாதலின்,  “களனறு
குப்பை”   என்றும்  கூறினார்.  இனி,  விளைந்தவை  யுதிர்ந்தனவும்,
களத்திடத்தே  ஒதுக்கப்பட்டனவுமாகிய  நென்மணியின் குப்பையென
வுரைப்பினுமமையும்.     இவற்றைக்    காஞ்சிமரத்தின்    நிழலிலே
தொகுத்தது,  அம்மரங்கள்  மிகுதியாக  இருப்பதனால்  என  அறிக.
இவ்வாறு  தொகுத்த நென்மணிகளை அரியல் விற்பார்க்குக் கொடுத்து
அரியலைப்  பெற்று  உண்பர்  என்றற்கு,  “அரியலார்கை வினைஞர்”
என்றார்.    உழவர்க்குப்    பகடு   வேண்டியிருத்தலால்,   ஆனிரை
மேய்த்தலும்    ஒரோவழித்    தொழிலாதலுணர்க.   அரியல்,   கள்.
இவ்வண்ணம் தமக்கு வேண்டிய அரியலுக்காக, நெல்மணிகளை அரிது
முயன்று  தொகுத்தமைக்கும்  வன்மை தோன்ற, “வன்கை வினைஞர்”
என்றார். அரு வீ ஆம்பல், என்பது அரு வி யாம்பலெனக் குறுகிற்று.
நெல்லரியுமிடத்து  வயலிடத்து  நீரை  வடித்து  விடுதலின்,  ஆம்பல்
முதலிய    நீர்ப்பூக்கள்   அரியவாதலின்,   “அருவியாம்பல்”   என
ஓதுவாராயினர்.  இதற்குப் பிறரெல்லாம் வேறுபடக் கூறுவர் வினைஞர்
சென்னியராய்       வண்டோப்பும்     நாடு      என   இயையும். 
பாடல்      சான்ற     என     இறந்த    காலத்தாற்     கூறியது
துணிவுபற்றி.  திறை  தருதலால்  நாட்டிற்  போரின்மையும்,  அதுவே
வாயிலாக   வளம்  பெருகுதலும்  பயனாதலின்  சான்றோர்  பாட்டும்
உரையும்  பெருகிப்  புகழ் விளைக்கும் என்பது பற்றி, “பாடல் சான்ற
வவரகன்றலை  நாடே”  என்றார்.  வினைஞர் தாம் சென்னியிற் சூடிய
ஆம்பலிடத்தே    தேன்    கவரவரும்   வண்டினத்தை   யோப்புவ
ரென்றதனால், நாட்டில் வாழ்வோர் நற்குடிகளாய் அரசர்க்குப் பொருள்
விளைவித்துத்தந்து   வளம்  கவரும்  பகை  முதலியன  இல்லாவாறு
காத்தொழுகுவ  ரென்றாராயிற்று  ;  “சீறூர்க்  குடியு  மன்னுந் தானே
கொடியெடுத்து,  நிறையழிந்  தெழுதரு  தானைக்குச், சிதையுந் தானே
தன்  னிறைவிழு  முறினே”  (புறம்.  314)  எனச் சான்றோர் கூறுதல்
காண்க.
 

பழையவுரைகாரர்,  “விளைந்தென்றதனை  விளையவெனத் திரிக்க”
வென்றும்,   “களனறு   ப்பை   யென்றது,   களத்திற்  கடாவிடுதற்
றொழிலற்ற   தூற்றாப்  பொலியை”  யென்றும்,  “பரப்பி  யென்னும்
வினையெச்சத்தினைச்   சேர்த்தி  யென்னும்  வினையொடு  முடித்து
அதனை  வரிவண்டோப்பும் என்னும் வினையொடு முடிக்க”  என்றும்,
“வண்டோப்பும் நாடென மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர்.

இதுகாறும்     கூறியவாற்றால்,  வேந்தே,  நின்  தானை  வந்து
புறத்தி்றுக்கும்  ;  இனி,  நின் பகைவர் பணிந்து திறை தருப வாயின்,
அவர்  அகன்றலை  நாடுகள்  பாடல்  சான்றவாம் என வினைமுடிவு
செய்க.

இனிப் பழையவுரைகாரர், “கொற்ற வேந்தே, நின் பகைவர், தோட்டி
செப்பிப்  பணிந்து திறை  தருபவாயின்,  அவரகன்றலை நாடு பாடல்
சான்றவென மாறிக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர்.

“இதனாற்     சொல்லியது     ;   அவன்     வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.”


 மேல்மூலம்