முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
64.



வலம்படு முரசின் வாய்வாட் கொற்றத்துப்
பொலம்பூண் வேந்தர் பலர்தில் லம்ம
அறங்கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய
உரைசால வேள்வி முடித்த கேள்வி
 5




அந்தண ரருங்கல மேற்ப நீர்பட்
டிருஞ்சே றாடிய மணன்மலி முற்றத்துக்
களிறுநிலை முணைஇய தாரருந் தகைப்பிற்
புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே
எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி
 10




அலங்கும் பாண்டி லிழையணிந் தீமென
ஆனாக் கொள்கையை யாதலி னவ்வயின்
மாயிரு விசும்பிற் பன்மீ னொளிகெட
ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்
உறுமுரண் சிதைத்தநின் னோன்றாள் வாழ்த்திக்
 15




காண்கு வந்திசிற் கழறொடி யண்ணல்
மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்
இதழ்வனப் புற்ற தோற்றமொ டுயர்ந்த
மழையினும் பெரும்பயம் பொழிதி யதனாற்
பசியுடை யொக்கலை யொரீஇய
 20 இசைமேந் தோன்றனின் பாசறை யானே.

     துறை - 1காட்சிவாழ்த்து. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - உரைசால் வேள்வி.
(4)

     (ப - ரை) 2. பலர்தில்லென்புழி, தில் ஒழியிசை.

     4. உரைசால் வேள்வியென்றது யாகங்கள் எல்லாவற்றிலும்
பெரியவும் அரியவுமாக உரையமைந்த வேள்வியென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'உரைசால் வேள்வி' என்று
பெயராயிற்று.

     7. களிறு நிலைமுணவுதற்குக் காரணம் இருஞ்சேறாடுதல் (6)

     தாரருந்தகைப்பென்றது ஒழுங்குபாட்டையுடைய ஆண்டு
வாழ்வார்க் கல்லது பிறர் புகுதற்கரிய மாளிகைக் கட்டணமென்றவாறு.

     தார் - ஒழுங்கு. தகைப்பு - 2கட்டணம்.

     8. புறஞ்சிறை - அதன் சிறைப்புறம். 9. எஃகுபடை - கூரிய
படை. 10. பாண்டில் - தேர் பூணும் எருதுகள்.

     8-10. புறஞ்சிறை வயிரியர்க் காணின் ஈமென்றது நம்மை
அவர்கள் காணவேண்டுவதில்லை, நம் மாளிகை மதிற்புறத்து நீயிர்
காணினும் கொடுமினென்றவாறு.

     ஈமென்றது அவ்வீகைத் துறைக்குக் கடவாரை.

     11. அவ்வயினென்றது நின்னூரிடத்தென்றவாறு.

     ஈமென (10) அவ்வயின் ஆனாக் கொள்கையையாதலின் (11)
என மாறிக் கூட்டுக.

     ஆதலின் (11) என்பதனை மழையினும் பெரும்பயம்
பொழிதி (18) என்பதனோடு கூட்டி நின்னூரிடத்து அவ்வயின்
ஆனாக்கொள்கையையாய்ப் போந்தபடியாலே ஈண்டு நின்
பாசறையிடத்து மழையினும் பெரும்பயம் பொழியா
நின்றயெனவுரைக்க.

     ஞாயிறு தோன்றியாங்கு மாற்றார் (13) உறுமுரண் சிதைத்த
(14) என முடிக்க.

     நெய்தல் (16) இதழ்வனப்புற்ற தோற்றமொடு (17)
பயம்பொழிதி (18) எனக்கூட்டி, இவன்றன் நிறம் கருமையாக்கி
அந்நிறத்தோற்றத்தானும் மழையோடு உவமமாக்கியுரைக்க.

     பசியுடை யொக்கலை (19) அப்பசியை ஒருவியவெனப் பசி
வருவிக்க.

     உலகத்து வேந்தர் பலருளர் (2); அவராற் பெரும்பயன்
என்? தகைப்பிற் (7) புறஞ்சிறை வயிரியர்க்காணின் (8) ஈமென
(10) அவ்வயின் ஆனாக் கொள்கையையாதலின் (11) மழையினும்
பெரும்பயம் பொழிதி (18); அதனால் அண்ணல் (15), தோன்றல்
(20), பசியுடையொக்க லொரீஇய (19) பாசறையானே (20) நின்
நோன்றாள் வாழ்த்திக் (14) காண்கு வந்திசின் (15) என மாறிக்
கூட்டி வினைமுடிவு செய்க.

     அதனால் (18) என்பதன் பின் 'அண்ணல்' (15), 'தோன்றல்' (20)
என்னும் விளிகள் நிற்கவேண்டுதலின் மாறாயிற்று.

     இதனாற் சொல்லியது அவன் கொடைச்சிறப்பினை
வென்றிச்சிறப்பொடு படுத்துக் கூறியவாறாயிற்று.

     4-5. ஈயவென்றது பாடமாயின், உரைசாலென்றது கூனாம்.
'உரைசால் வேள்வி முடித்த கேள்வி யந்தணர், அருங்கல மேற்ப
வீயநீர் பட்டு' என்று பாடமாகவேண்டும்.

     (கு - ரை) 1-2. வெற்றியுண்டாதற்குக் காரணமான
முரசினையும், பகைவரைக் கொல்லுதலில் தப்பாத வாளையும்,
அரசுரிமையையும் உடைய பொன்னாற் செய்த ஆபரணங்களை
அணிந்த அரசர் பலர் உலகத்துள்ளார்; அவரால் யாது பயன்?
தில்: ஒழியிசைப் பொருளில் வந்தது.

     4. கேள்வி, வேள்வி: பதிற். 74 : 1 - 2.

     4-5. "கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த, வேள்வித் தூணத்து"
(பெரும்பாண். 315 - 6)

     3-5. அறத்தையே கூறி விளங்கிய செவ்விய நாவினையுடைய
விளங்கிய புகழச்சியமைந்த செய்தற்கரிய யாகங்களைச் செய்துமுடித்த,
வேதத்தை ஓதிய அந்தணர் அரிய கலங்களைப் பெற்றுக்கொள்ள
அவற்றை நீர் வார்த்துக் கொடுத்தலால், அந்நீர் பட.

     நாவின் அந்தணரென இயைக்க; "அறங்கரை நாவினான்மறை
முற்றிய" (தொல். சிறப்புப்.). கேள்வியென்றது கருதியென்னும் பெயர்ப்
பொருளது (பதிற். 21 : 1, உரை.)

     7. தகைப்பு: பட்டினப். 143; பெருங். 1. 47 : 44, 3. 24 : 200.

     6-7. கரிய சேறு உண்டான மணல் மிக்க முற்றத்தினிடத்தே,
களிறு தான் - நிற்றலை வெறுத்த ஒழுங்கையுடைய, புலவர் பொருநர்
அந்தணர் என்போருக்கு அன்றிப் பிறர் புகுதற்கு அரிய
கட்டணத்தில்.

     8. அதனது எல்லையினிடத்தே கூத்தரைக் கண்டால், விரைய.

     9. மு. பதிற். 62 : 3

     10. பாண்டில் -நாரை எதுரு (சிறுபாண். 260. ந,கலித்.
109 : 4, ந.)

     9-11. கூரிய அம்பு முதலிய ஆயுதங்கள் பக்கரை
முதலியவற்றை அறுத்த, கத்திரிகையால் மட்டம் செய்யப்பெற்ற
பிடரிமயிரையுடைய குதிரைகளையும், விளங்கும் தேர் பூணும்
எதுருகளையும் அவற்றிற்கு உரிய இழைகளை யணிந்து கொடுங்கள்
என்று அவ்வீதலுக்கு உரியாரை ஏவி, அவ்வீதலினிடத்தே அமையாத
விரதத்தையுடையாயாதலால்.

     11-5. கழலும்படி இடப்பட்ட தொடியையணிந்த தலைவ, அழகிய
நின்னூரினிடத்தே, கரிய பெரிய ஆகாயத்தில் பல நட்சத்திரங்கள்
ஒளி கெடும்படி சூரியன் தோன்றினாற்போல, பகைவரது மிக்க
மாறுபாட்டைக் கெடுத்த நினது வலிய முயற்சியை வாழ்த்திக்
காண்பேனாகி வந்தேன்.

     அவ்வயின் சிதைத்த என இயையும்.

     16-8. கரிய நிறம் உண்டாகின்ற மலர்களையுடைய கழியில்
மலர்ந்த நெய்தற் பூவினது இதழின் அழகை ஒத்த தோற்றத்தோடு,
உயர்ந்த மேகத்தைக் காட்டிலும் பெரிய பயனை இரவலர்க்குப்
பொழிதலை உடையாய். நெய்தல் மலரின் கருமை சேரன் நிறத்திற்கு
உவமை; நிறத்தாலும் மேகம் இவனுக்கு உவமையாயிற்று.

     18-20. ஆதலால், பசியைத் தொன்றுதொட்டே உடைய
சுற்றத்தாரை அப்பசி நீங்கும்படி செய்ய அதனாற் புகழ் மேவிய
தோன்றல், நின் பாசறையினிடத்தே.

     நின் பாசறையான் (20) காண்கு வந்திசின் (15) என முடிக்க.

     (பி - ம்.) 13. தோன்றியன்ன. 17. நோக்கமொடு. (4)



     1பதிற். 41, துறை.

     2தக்க. 137, உரை.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

4. உரைசால் வேள்வி
 
64.வலம்படு முரசின் வாய்வாட் கொற்றத்துப்
பொலம்பூண் வேந்தர் பலர்தில் லம்ம
அறங்கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய
உரைசால் வேள்வி முடித்த கேள்வி
 
5அந்தண ரருங்கல மேற்ப நீர்பட்
டிருஞ்சே றாடிய மணன்மலி முற்றத்துக்
களிறுநிலை முணைஇய தாரருந் தகைப்பிற்
புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே
எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி
 
10அலங்கும் பாண்டி லிழையணிந் தீமென
ஆனாக் கொள்கையை யாதலி னவ்வயின்
மாயிரு விசும்பிற் பன்மீ னொளிகெட
ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்
உறுமுரண் சிதைத்தநின் னோன்றாள் வாழ்த்திக்
 
15காண்கு வந்திசிற் கழறொடி யண்ணல்
மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்
இதழ்வனப் புற்ற தோற்றமொ டுயர்ந்த
மழையினும் பெரும்பயம் பொழிதி யதனால்
பசியுடை யொக்கலை யொரீஇய
 
20இசைமேந் தோன்றனின் பாசறை யானே.
 

துறை  : காட்சிவாழ்த்து.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்   : உரைசால் வேள்வி.

1 - 2. வலம்படு ..................... அம்ம.

உரை : வலம்பட    முரசின்  -  வெற்றி   யுண்டாக  முழங்கும்
முரசினையும்  ;  வாய்  வாள்  கொற்றத்து  - தப்பாத வாட்படையாற்
பெறும்  வெற்றியினையும்  ;  பொலம்  பூண்  வேந்தர் - பொன்னாற்
செய்த  பூண்களையுமுடைய  வேந்தர்கள்  ;  பலர் தில் - பலர் தாம்
உளர் ; அம்ம - இன்னமும் கேட்பாயாக எ - று.

வெற்றியும்     விழவும்  கொடையும்  குறித்து முழங்கும் மூவகை
முரசுகளுள்   வேந்தர்க்கு   வெற்றிமுரசு  சிறந்தமையின்,  “வலம்படு
முரசினை”   எடுத்தோதியும்,  கொற்றத்துக்கு  வாயிலாதலால்,  “வாய்
வாளை”   விதந்தும்   கூறினார்.   பொலம்   -   பொன்.  வேந்தர்
பலருளராயினும் அவராற் பயனில்லை    யென்பதுபட     நிற்றலின்,
தில்,   ஒழியிசைப்   பொருட்டு.  பழையவுரைகாரரும் தில் ஒழியிசை
யென்றே கூறுவர்.
 

3 - 11. அறங் கரைந்து ............... அவ்வயின்.

உரை : அறம் கரைந்து வயங்கிய  நாவின் - அறநூல்களை ஓதிப்
பயின்று  விளங்கிய  நாவினையும்  ;  பிறங்கிய  உரைசால்  வேள்வி
முடித்த  கேள்வி  -  உயர்ந்த  புகழமைந்த  வேள்விகள் பல செய்து
முடித்தற்கேதுவாகிய  கேள்வியினையுமுடைய ; அந்தணர் அருங்கலம்
ஏற்ப  -  அந்தணர்கள்  அரிய  கலன்களை நீர்வார்த்துக் கொடுக்கப்
பெறுவதால்  ;  நீர்  பட்டு  இருஞ்சேறாடிய  - அந் நீரொழுகி மிக்க
சேறாகியதால்   ;  களிறுநிலை  முணைஇய  - களிறுகள்  நிற்பதற்கு
வெறுத்த ; மணல் மலிமுற்றத்து - மண் நிறைந்த முற்றத்தையும் ; தார்
அரும் தகைப் பின் - ஒழுங்காக அமைந்த பரிசிலரன்றிப்

பிறர் செல்லுதற்கரிய காப்பையுமுடைய ; அவ்வயின் - அவ்விடத்து
நின்  பெருமனைக்கண்ணேயிருந்து  ; வயிரியர் புறஞ்சிறை காணின் -
கூத்தர்கள் புறஞ்சிறையிடத்தே வரக் காணினும் ; வல்லே - தாழ்க்காது
;  எஃகு  படை  யறுத்த  கொய்  சுவற்  புரவி  வேல்வாள்  முதலிய
படைவீரரை  வென்று  கொணர்ந்த கொய்யப்பட்ட பிடரியினையுடைய
குதிரைகளையும் ; அலங்கும் பாண்டில் - அசைகின்ற தேர்களையும் ;
இழையணிந்து  ஈம் என அவ்வவற்றுக்குரிய அணியணிந்து கொடுமின்
என்று ஏவி ; ஆனாக் கொள்கையை யாதலின் - ஈகையில் அமையாத
கொள்கையையுடையை யாதலினாலே எ - று.

பாசறைக்கண்ணே    சென்று வேந்தனைக் காண்கின்றா ராதலால்,
அவன் தன் அரண்மனையிடத்தே யிருந்து செய்யும் ஈகை வினையை
இப்பகுதியால்  விளக்குகின்றார்.  பாசறையை  நோக்க,  அரண்மனை
அவ்விடமெனச்    சுட்டப்படுமாகலின்,    “அவ்வயின்”    என்றார்.
அரண்மனைக்கு  முன்னே மணல் மலி முற்றமும் அதன்பின் தாரருந்
தகைப்பும்  உண்மையின் அம்முறையே கூறுகின்றார். உவளகத்துக்கும்
மணன்  மலி  முற்றத்துக்கும்  இடையது  தாரருந் தகைப்பென்பதாம்.
தன்பாற்    போந்து    ஏற்ற    பார்ப்பார்க்கு   அவர்  வேண்டும்
அருங்கலங்களை  நீர்  பெய்து கொடுப்பதால், அந் நீரொழுகி மணல்
மலி  முற்றத்தைச்  சேறாக்கி  விட்டதென்பார், “அந்தணர் அருங்கல
மேற்ப  நீர்பட்டு  இருஞ்சே  றாடிய  மணல்மலி  முற்றத்து” என்றார்.
களிறு  நிலை  முணை  இய  மணல் மலி  முற்றம், இருஞ்சே றாடிய
முற்றம்  என  இயைக்க.  இருஞ்சே  றாடியதனால் களிறுகள் நிற்றற்கு
விரும்பா  வாயின  வென்பார்,  “களிறு  நிலை முணைஇய” என்றார்.
பழையவுரைகாரரும்,  “களிறு நிலை முணவுதற்குக் காரணம் இருஞ்சே
றாடுதல்” என்பது காண்க.

இனி,  ஏற்கும் பார்ப்பார்களின் தகுதி கூறுவார், அவர் அருமறைப்
பொருளைக்   கற்றும்   கேட்டும்   ஒழுகும்  நல்லொழுக்க  முடைய
ரென்றற்கு,    அவரது   நாவையும்   கேள்வியையும்   சிறப்பித்தார்,
“அறங்கரைந்து  வயங்கிய  நாவின்”  என்றது  கல்விச்  சிறப்பையும்,
“பிறங்கிய  உரைசால்  வேள்வி  முடித்த  கேள்வி”யென்றது கேள்விச்
சிறப்பையும்    சுட்டி    நின்றன.    அறநூல்களையே     ஓதுதலும்
ஓதுவித்தலும்      செய்தலால்     நன்கு    பயின்றவர்   என்றற்கு
“அறங்கரைந்து  வயங்கிய  நாவின்”  என்றார்.  பார்ப்பார்க்குப் புகழ்,
அவர்   செய்துமுடிக்கும்   வேள்வியொன்றே   குறித்து   நிற்றலின்,
“பிறங்கிய  வுரைசால்  வேள்வி”  யென்றும், வேள்வி பலவும் செய்து
முடித்தற்குக்    கேள்வி”   யென்றும்,   வேள்வி  பலவும்   செய்து
முடித்தற்குக்   கேள்வி  எதுவும்  பயனுமாதலின்,  “வேள்வி  முடித்த
கேள்வி” யென்றும் கூறினார்.
 

இனி,   “உரைசால் வேள்வி யென்றது, யாகங்கள் எல்லாவற்றினும்
அரியவும்    பெரியவுமாக    வுரையமைந்த   வேள்வி”   யென்றும்,
வேள்வியை    இவ்வாறு   உரையமைந்த   வேள்வியென  வுரைத்த
சிறப்பினால்  இப்  பாட்டு  “உரைசால்  வேள்வி” யெனப்படுவதாயிற்
றென்றும் பழையவுரைகாரர் கூறுவர்.

வீரர்    உள்ளும் புறமும் இருந்து ஒழுங்குறக் காப்ப வேந்திருந்து
ஈகை  வினை  புரியுமிட மாதலின், “தாரருந் தகைப்பு” என்றார். தார்,
ஒழுங்கு.  தகைப்  பென்பதே  கடமனை யென்னும் பொருட்டாயினும்,
அருந்தகைப்பென்றது.  ஏற்க  வரும் இரவலரையும், நன்கு ஆராய்ந்து
காக்கும்   காப்பு   மிகுதி   குறித்து.  இரவலரும்  பரிசிலரும்  வாரா
தொழியாமைப் பொருட்டு ஈதற்குரியாரைப் புறஞ்சிறை யிடத்தே நிறுவி,
கூத்தர்   முதலிய   பரிசின்மாக்கட்கு  வேண்டுவ  ஈயுமாறு  ஏற்பாடு
செய்துள்ளமை  தோன்ற,  “புறஞ்சிறை  வயிரியர்க்  காணின் வல்லே,
எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி, அலங்கும் பாண்டி லிழையணிந்
தீமென,  ஆனாக்  கொள்கையை” என்றார். பகைப் புலத்தே கொண்ட
புரவி  யென்றற்கு “எஃகு படை யறுத்த கொய் சுவற் புரவி” யென்றும்,
அவை  ஈர்த்  தேகுதற்கெனத்  தேரும்  சிறப்ப  வழங்குக  என்றற்கு
“அலங்கும்   பாண்டில்,  இழையணி்ந்  தீமென”  என்றும்  கூறினார்.
பாண்டில், தேர். இனிப் பழைய வுரைகாரர், “தாரருந் தகைப் பென்றது,
ஒழுங்குபாட்டையுடைய  ஆண்டு  வாழ்வார்க்கல்லது பிறர் புகுதற்கரிய
மாளிகைக் கட்டண” மென்றும், “தார் - ஒழுங்கு ; தகைப்பு, கட்டணம்
;  புறஞ்சிறை,  அதன்  சிறைப்புறம்  ;  எஃகு படை - கூரிய படை ;
பாண்டில்,  தேர்  பூணும் எருதுகள்” என்றும், “புறஞ்சிறை வயிரியர்க்
காணின்  ஈம்  என்றது, நம்மை யவர்கள் காணவேண்டுவதில்லை, நம்
மாளிகையிற்  புறத்து நீயிர் காணினும் கொடுமின் என்றவா” றென்றும்,
“ஈமென்றது  அவ்வீகைத்  துறைக்குக் கடவாரை”யென்றும், “அவ்வயி
னென்றது  நின்னூரிடத்  தென்றவா”  றென்றும், “ஈமென அவ்வயின்
ஆனாக்  கொள்கையை  யாதலின்  என  மாறிக்  கூட்டுக”  என்றும்
கூறுவர்.

இவ்வாறு     தன்  அரண்மனை  யகத்தும் புறத்தும் தானும் தன்
பரிசனமும்   ஈகைவினைக்கண்   ஊன்றி   நிற்பினும்,   அவ்வளவில்
அமையாது, மேலும் அதனையே விழைந்து நிற்கும்  நிலையை வியந்து,
“ஆனாக்  கொள்கையை”  என்றார். ஆதலின் என்பதை “மழையினும்
பெரும் பயம் பொழிதி” (18) என்பதனோடு இயைக்க.

12 - 20. மாயிரு .................. பாசறையானே.

உரை : மா  யிரு  விசும்பில் - கரிய பெரிய வானத்தே ; ஞாயிறு
தோன்றி - ஞாயிறு எழுந்து தோன்றி ; பன்மீன் ஒளி கெட ஆங்கு -
பலவாகிய   விண்மீன்களின்  ஒளியைக்  கெடுத்தாற்போல  ; மாற்றார்
உறுமுரண்  சிதைத்த  -  சேரர்குடியி்ல்  தோன்றிப்  பகைவரது மிக்க
மாறுபாட்டைக்  கெடுத்த  ;  கழல்  தொடி  அண்ணல்  - கழலுமாறு
அணிந்த  தொடியினையுடைய  அண்ணலே  ;  மை  படு  மலர்க்கழி
மலர்ந்த  நெய்தல்  இதழ்  வனப்புற்ற  தோற்றமொடு  -  கரிய நிறம்
பொருந்திய  விரிந்த  கழியிடத்தே மலர்ந்த நெய்தற்பூவின்  இதழினது
அழகிய  நிறத்தோடு  ; உயர்ந்த மழையினும் - உயர்ந்தெழுந்த மழை
முகிலினும்   ;   பெரும்   பயம்   பொழிதி  -  மிக்க  செல்வத்தை
வழங்குகின்றாய்  ;  அதனால்  - அது காரணமாக, பசியுடை ஒக்கலை
ஒரீஇய  இசைமேந் தோன்றல் - பசியுடைய சுற்றத்தாரை  அப்பசியின்
நீக்கியதனால்  புகழ் மேவிய தோன்றலே ; நின் பாசறையான் - நினது
பாசறைக்கண்ணே  ; நின் நோன் றாள் வாழ்த்தி - நின்னுடைய வலிய
தாளை  வாழ்த்தி  ;  காண்கு  வந்திசின்  - நின்னைக் காணவேண்டி
வந்தேன் எ - று.
 

கெடுத் தென்பது கெட வென நின்றது. விசும்பில் ஞாயிறு தோன்றி்ப்
பன்  மீன் ஒளி கெடுத்தாங்கு என இயைக்க. பொருட் கேற்ப, உவமை
மாறியியைக்கப்பட்டது.  ஞாயிற்றின்  தோற்றமும்  அதற்குரிய இடமும்
கூறியதற்கேற்ப,  வாழியாதன்  தோற்றமும்  அதற்  கிடனாகிய  சேரர்
குடியும்  வருவிக்கப்பட்டன. பன்மீ னென்றதனால், மாற்றாரது பன்மை
பெற்றாம்.  பலரும்  ஒருங்குதிரண்டு இகல்செய்தமையின், “உறுமுரண்”
என்றார். மாற்றாரது பன்மையும் உறு முரணும் கண்டு அஞ்சாது பொரு
தழித்தமையின்,  நின் தாள் வாழ்த்துதற் குரித்தாயிற் றென்பார், “நின்
நோன்றாள் வாழ்த்தி” யென்றார்.

மாற்றார்   முரண் சிதைத்த அண்ணல், நீ பெரும் பயம் பொழிதி ;
அதனால்,  தோன்றல்,  நின்  பாசறையானே,  காண்கு வந்திசின் என
இயைத்து முடிக்க.

கரிய     சேறுபடிந் திருத்தல் பற்றிக் கழியை, “மைபடு மலர்க்கழி”
யென்றார்.   மலர்க்கழி,   விரிந்த   கழி.  இனி,  மலர்களை  யுடைய
கழியென்றுமாம் கழியிடத்தே மலர்ந்த நெய்தற்பூவின் இதழ்  வண்ணங்
கொண்டு   எழுந்த   முகிலெனவே,   கருமுகில்  என்பது  பெற்றாம்.
“மழையினும்    பெரும்   பயம்   பொழிதி”   யெனச்   சேரமானது
கொடைநலத்தைச்  சிறப்பித்தது,  “ஆனாக்கொள்கையை”  (11) என்று
முற்கூறியதனை வற்புறுத்துநின்றது. இக் கொடையால்  விளைந்த பயன்
இதுவென்பார்,  பசியுடை  யொக்கல்  இலராயினா ரென்றும், நல்லிசை
மேவுவதாயிற்றென்றும்  கூறினார்.  ஒரீஇய  :  பிறவினைப் பொருட்டு
மேவு  மென்பது  ஈற்றுமிசை  யுகரம்  மெய்யொடும்  கெட்டு நின்றது.
ஞாயிற்  றுவமம்  வினை  பற்றியும், மழை யுவமம் கொடை  பற்றியும்
வந்தன.  நெய்தலின் இதழ் மழைமுகிலின் நிறத்தைச்  சிறப்பிப்ப, அந்
நிறத்தையுடைய முகில் சேரனது கொடையைச் சிறப்பித்தலின், அடுத்து
வரலுவமையென்னும்  குற்றமின்மை  யறிக. இனிப் பழைய வுரைகாரர்,
“நெய்தல்  இதழ்  வனப்புற்ற  தோற்றமொடு  பயம்  பொழிதி யெனக்
கூட்டி,  இவன்றன்  நிறம்  கருமையாக்கி, அந் நிறத் தோற்றத்தானும்
மழையோடு உவமமாக்கி யுரைக்க” என்றும், “ஞாயிறு  தோன்றியாங்கு
மாற்றார் உறு முரண் சிதைத்த என முடிக்க” என்றும் கூறுவர்.
 

“ஆதலின்     என்பதனை  மழையினும்  பெரும்  பயம் பொழிதி
என்பதனோடு   கூட்டி,   நின்னூ   ரிடத்து   அவ்வயின்   ஆனாக்
கொள்கையையாய்ப்  போந்தபடியாலே  ஈண்டு  நின்  பாசறையிடத்து
மழையினும்  பெரும்பயம் பொழியா நின்றாய் என வுரைக்க” என்றும்,
“பசியுடை  யொக்கலை அப் பசியை யொருவிய எனப் பசி வருவிக்க”
என்றும் கூறுவர் பழைய வுரைகாரர்.

இதுகாறும்     கூறியதனால்,   முரசினையும்   கொற்றத்தினையும்
பூணினையுமுடைய வேந்தர் பலர்தாம் உளர் ; அவராற் பெறும் பயன்
இல்லை  ;  அந்தணர்  அருங்கலம்  ஏற்ப,  நீர்பட்டு இருஞ்சே றாடி
களிறுநிலை   முணைஇய   மணல்மலி  முற்றத்தை  யுடைய தாரருந்
தகைப்பி லிருந்து கொண்டு, வயிரியர் புறஞ்சிறை வரக்காணின் வல்லே
புரவியும்  பாண்டிலும்  இழையணிந்தீமென   ஆனாக் கொள்கையை ;
மேலும்,  ஞாயிறு  தோன்றிப்  பன்  மீன்  ஒளி கெடுத்தாங்குச் சேரர்
குடியில்  தோன்றி  மாற்றார் உறு முரண் சிதைத்த அண்ணலே ; அக்
கொள்கையை   யாதலால்,  மழையினும்  பெரும்  பயம்  பொழிதி  ;
அதனால்,  தோன்றலே, நின் பாசறைக்கண்ணே, நின் தாள் வாழ்த்திக்
காண்கு  வந்திசின்  என  வினை  முடிவு  செய்து கொள்க. காண்கு :
தன்மை  வினைமுற்று  ; “செய்கென் கிளவி வினையொடு முடியினும்,
அவ்  வியறிரியா  தென்மனார்  புலவர்”  (வினை.  7)  என்பதனால்,
வந்திசின் என்னும் வினைகொண்டு முடிந்தது.

இனிப் பழைய வுரைகாரர், “உலகத்து வேந்தர் பலருளர் ; அவராற்
பெறும் பயன் என் ; தகைப்பிற் புறஞ்சிறை வயிரியர் காணின் ஈமென
அவ்வயின்  ஆனாக்  கொள்கையை  யாதலின்,  மழையினும் பெரும்
பயம் பொழிதி ; அதனால், அண்ணல், தோன்றல், பசியுடை யொக்கல்
ஒரீஇய  பாசறையானே, நின் நோன்றாள் வாழ்த்திக் காண்கு வந்திசின்
என  மாறிக்  கூட்டி  வினை  முடிவு  செய்க”  என்றும்,  “அதனால்
என்பதன்பின்   அண்ணல்   தோன்றல்   என்னும்  விளிகள்  நிற்க
வேண்டுதலின் மாறாயிற்று” என்றும் கூறுவர்.

“இதனாற்   சொல்லியது ; அவன்  கொடைச்சிறப்பினை வென்றிச்
சிறப்பொடு படுத்துக் கூறியவாறாயிற்று”.

இனி, பழைய வுரைகாரர் காலத்தே ஈய என்றொரு பாடமுண்டாகக்
கண்டு,   “ஈயவென்றது   பாடமாயின்,  உரைசா  லென்றது  கூனாம்”
என்றும்,  “உரைசால்,  வேள்வி முடித்த கேள்வி யந்தணர், அருங்கல
மேற்ப வீய நீர்பட்டென்று பாடமாக வேண்டும்” என்றும் கூறுவர்.


 மேல்மூலம்