முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
65.



எறிபிண மிடறிய செம்மறுக் குளம்பிற்
பரியுடை நன்மா விரியுளை சூட்டி
மலைத்த தெவ்வர் மறந்தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும
 5




வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ
பூணணிந் தெழிலிய வனைந்துவர லிளமுலை
மாண்வரி யல்குன் மலர்ந்த நோக்கின்
வேய்ப்புரை பெழிலிய விளங்கிறைப் பணைத்தோட்
காமர் கடவுளு மாளுங் கற்பிற்
 10




சேணாறு நறுநுதற் சேயிழை கணவ
பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை
பூணணிந்து விளங்கிய புகழ்சான் மார்பநின்
நாண்மகி ழிருக்கை யினிதுகண் டிகுமே
தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன்
 15


பையு ளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்குச்
சேறுசெய் மாரியி னளிக்குநின்
சாறுபடு திருவி னனைமகி ழானே.

     துறை - பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - நாண்மகி ழிருக்கை
(13)

     (ப - ரை) விரியுளை சூட்டி (2) என்றதனாற் பயன்
மாவிற்குப்போர் வேட்கை பிறத்தல்.

     சூட்டிக் (2) கடந்த (3) என முடிக்க.

     4. காஞ்சி சான்ற வயவரென்றது நிலையாமை எப்பொழுதும்
உள்ளத்திற் கொண்டிருத்தலமைந்த வீரரென்றவாறு.

     6. வனைந்து வரலென்பது ஒரு வாய்பாட்டு விகற்பம்.

     13. அவன் ஓலக்க இருக்கையின் செல்வத்தை
நாண்மகிழிருக்கை யெனக் கூறிய சொற்சிறப்பானே இதற்கு
'நாண்மகி ழிருக்கை' என்று பெயராயிற்று.

     14. தீந்தொடை - 1பாலைக் கோவைகளாகிய வீக்குநிலை.

     பையுளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்கு (15) அளிக்கும் (6)
நனை (17) எனக் கூட்டி எல்லாப் பண்களிலும் வருத்தத்தைச் செய்யும்
உறுப்பினையுடைய பாலைப்பண்கள் பலவற்றையும் ஒரோவொன்றாகப்
பெயர்த்து வாசிக்குமாறுபோலே ஒன்றையொன்று ஒவ்வாத இன்பத்தை
உண்டவர்க்குக் கொடுக்கும் பலதிறத்து மதுவென வுரைக்க.

     17. நனையென்றது ஈண்டு மதுவிற்கெல்லாம் பொதுப் பெயராய்
நின்றது.

     16. மாரியினென்னும் உவமம் மதுக்களில் ஓரோவொன்றைக்
மிகுதிக்கு உவமம்.

     17. சாறுபடு திருவினென்ற உவமம் அம்மதுக்களைப் பானம்பண்
ணுங்காலத்து அலங்காரமாகக் கூட்டும் 2பூவும் விரையுமுதலாய
பொருள்களுக்கு உவமம். சாறென்றது விழாவின் தன்மையை.
மகிழென்றது மகிழ்ச்சியையுடைய ஓலக்கவிருப்பினை.

     வயவர் பெரும (14) வில்லோர் மெய்ம்மறை, சேர்ந்தோர்
செல்வ (5), சேயிழை கணவ (10), பாணர் புரவல, பரிசிலர் வெறுக்கை
(11), புகழ் சான்மார்ப, நின் (12) நாண்மகிழிருக்கையின் சிறப்பெல்லாம்
(13) நின் நனைமகிழின்கண்ணே (17) இனிது கண்டேம் (12) எனக்
கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் ஓலக்க வினோதத்தொடு படுத்து
அவன் செல்வச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1 - 4. சேரன் பகைவரை வென்றமை
கூறப்படும்.

     1-2. வெட்டப்பட்ட பிணங்களை இடறுதலால் உண்டான
இரத்தத்தாற் சிவந்த கறையையுடைய குளம்பினையும், விரைந்த
செலவையும் உடைய நல்ல குதிரைக்கு விரிந்த தலையாட்டத்தைச்
சூட்டி.

     உளையைச் சூட்டியது குதிரைக்குப் போரில் வேட்கை பிறத்தற்
பொருட்டு. மறுக்குளம்பு: புறநா. 97 : 11 - 3, 98 : 5 - 7.

     4. மு. பதிற். 90 : 39.

     3-4. நின்னோடு மாறுபட்ட பகைவரது வீரம் கெடும்படி
வஞ்சியாது எதிர்நின்று வென்ற, நிலையாமை எப்போதும் தம்
நெஞ்சில் நிலைபெற்ற வீரருக்குத் தலைவ.

     5. விற்படையாளருக்குக் கவசம்போல்வாய், நின்னை
அடைந்தோருடைய செல்வமாக இருப்பாய். இல்லோரெனப் பிரித்துப்
பொருளில்லாதவரெனக் கொள்ளலுமாம்.

     6-10. சேரன் பெருந்தேவியின் சிறப்பு.

     முத்தாரம் முதலியவற்றை அணிந்து அழகுப்பெற்ற,
எழுதப்பட்டாற் போன்று வருதலையுடைய இளைய நகிலையும்,
மாட்சிமைப்பட்ட வரிகளையுடைய அல்குலையும், மலர்ந்த
கண்களையும், மூங்கிலை ஒத்து அழகுபெற்ற விளங்கிய
மூட்டுக்களையுடைய பெருத்த தோள்களையும், விரும்பத்தக்க
அருந்ததியையும் வென்ற கற்பினையும், நெடுந்தூரத்தே மணம்
கமழ்கின்ற நல்ல நெற்றியையும் உடைய சிவந்த ஆபரணங்களை
அணிந்தோளுக்குக் கணவ. சேயிழை கணவ என்றது அவள்
கற்பின் சிறப்பு நோக்கி; 'ஐயைதந்தை: ஐயை: ஒரு கற்புடைய
மகள்; இவள் தந்தையென்றது இவள் கற்புடைமை நோக்கி'
(அகநா. 6 : 3, உரை)

     சேயிழை கணவ: பதிற். 14 : 15, உரை.

     11. பாணரது குடும்பத்தைப் புரந்தலைவல்லாய்; "யாணர்க்
கோளூரென்ப, பாணர்ப் பாரந் தாங்கியோன் பதியோ"(யா -
வி
.16,மேற்); பரிசிலரது செல்வமாயிருப்பாய் (பதிற். 15 : 21. 38 : 9)

     12. அணிந்தென்னும் முதல்வினை சினைவினை கொண்டது
(தொல். வினை. 34, ந.)

     12-3. ஏழு முடியாற் செய்த ஆரம் முதலிய ஆபரணங்களை
அணிந்து விளக்கமுற்ற புகழ்மிக்க மார்பையுடையாய், நின்னுடைய
நாளோலக்கத்தின் செல்வச் சிறப்பை இனிமையாகக் கண்டோம்.

      14-7. இனிய நரம்புக்கட்டையுடைய பாலையாழை வாசித்தலில்
வல்லோன் பண்கள் எல்லாவற்றுள்ளும் துன்பத்தைச் செய்யும்
உறுப்பையுடைய பாலைப் பண்களை மாறிமாறி வாசித்தாற்போல,
சேற்றைச் செய்கின்ற மழையைப் போல அளிக்கும் விழாவின் தன்மை
யுண்டான செல்வத்தைப் போன்ற மதுவால் மகிழ்ச்சியையுடைய ஓலக்க
விருப்பின் கண்ணே.

     பாலைப்பண் வெவ்வேறான சுவையையுடைய மதுவிற்கு
உவமை; "நல்லியாழ்ப், பண்ணுப் பெயர்த்தன்ன காவும், பள்ளியும்"
(மலைபடு. 450 - 51) என்பதும், 'பண் ஒன்றையொன்று ஒவ்வாது
இனிதாயிருக்குமாறுபோல நுகரும் பொருள்களும் ஒன்றையொன்று
ஒவ்வா இனிமையுடைய என்றார்" (ந.) என்னும் அதனுரையும்
இங்கே அறிதற்பாலன.

     மகிழுக்கு மாரி; "பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்,
வாக்கவுக்க தேக்கட் டேறல், கல்லலைத் தொழுகு மன்னே"
(புறநா. 115 : 2 - 4)                              (5)


     1பாலைக் கோவைகளென்றது செம்பாலை முதலிய
எழுவகைப்பாலைப் பண்களை.

     2பதிற். 42. 10-11, உரை





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

5. நாண்மகி ழிருக்கை
 
65.எறிபிண மிடறிய செம்மறுக் குளம்பின
பரியுடை நன்மா விரியுளை சூட்டி
மலைத்த தெவ்வர் மறந்தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும
 

வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ
பூணணிந் தெழிலிய வனைந்துவர லிளமுலை
மாண்வரி யல்குன் மலர்ந்த நோக்கின்
வேய்புரை   பெழிலிய   விளங்கிறைப்  பணைத்தோட்
காமர்  கடவுளு மாளுங் கற்பிற்
 

10்

சேணாறு நறுநுதற் சேயிழை கணவ
பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை
பூணணிந்து விளங்கிய புகழ்சான் மார்பநின்
நாண்மகி ழிருக்கை யினிதுகண் டிகுமே
தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன
 
15 பையு ளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்குச்
சேறுசெய் மாரியி னளிக்கும் நின்
சாறுபடு திருவி னனைமகி ழானே.
 

துறை  : பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : நாண்மகிழிருக்கை.

1 - 5. எறி பிணம் .............. செல்வ.

உரை : மலைத்த தெவ்வர் - எதிர்த்துப் பொருத பகைவருடைய ;
மறம்தப    -   வீரம்கெட   ;   பரியுடை   நன்மா   -   விரைந்த
செலவினையுடைய  நல்ல  குதிரைகள் ; எறிபிணம் இடறிய செம்மறுக்
குளம்பின  -  படைகளால்  எறியப்பட்டு  வீழ்ந்த  வீரர் பிணங்களை
இடறிக்கொண்டு   செல்லுதலால்   சிவந்த   குருதிக்   கறை  படிந்த
குளம்பினை  யுடையவாக ; விரியுளை சூட்டி - அவற்றின் தலையிலே
விரிந்த  தலையாட்டத்தை  யணிந்து  செலுத்தி ; கடந்து - பகைவரை
வஞ்சியாது  எதிர்பொருது  வென்ற ; காஞ்சி சான்ற வயவர் பெரும -
காஞ்சித்திணைக்   கமைந்த   வீரர்க்குத்   தலைவனே  ;  வில்லோர்
மெய்ம்மறை   -   வில்  வீரராகிய  சான்றோர்க்கு  மெய்புகு  கருவி
போன்றவனே    ;   சேர்ந்தோர்   செல்வ   -   அடைந்தோர்க்குச்
செல்வமாய்ப் பன்படுபவனே எ - று.

தெவ்வர்     மறத்தைத் தபுக்கவேண்டிக்  குதிரைகட்கு  விரியுளை
சூட்டிச்    செலுத்துபவாதலின்,    தெவ்வர்    மறந்தப,   செம்மறுக்
குளம்பினவாக  விரியுளை  சூட்டிக்  கடந்த  என  இயைக்கப்பட்டது.
முன்னே   செல்லும்  தூசிப்படைக்கு  ஆற்றாது  எறியுண்டு  வீழ்ந்த
பகைவீரர்  பிணத்தை,  “எறிபிண”  மென்றும், அப் பிணக்குவையைக்
கடந்துசென்று  மேல்  வரும்  பகைவரை  யடர்க்கின்றமை  தோன்ற,
“இடறிய   செம்மறுக்குளம்பின”  என்றும்  கூறினார்.  ஆக வென்பது
வருவிக்கப்பட்டது.  ஐந்து  கதியும்  பதினெட்டுச் சாரியும் நன்கு கற்ற
குதிரை யென்றற்கு “பரியுடைமா” என்னாது. “பரியுடை நன்மா” என்று
சிறப்பித்தார்  பிணக்குவை கண்டு மருளாது அதனை யிடறிச்  சேறற்கு
வேண்டும்   போர்வேட்கை   மிகுவிப்பதாகலின்,   உளை   சூட்டின
ரென்பார்,   “விரியுளை   சூட்டி”  யென்றார்.  குதிரைக்கு  விரியுளை
சூட்டியது   போரில்   வேட்கை   பிறத்தற்பொருட்டெனப்   பழைய
வுரைகாரரும்  கூறுவது காண்க. “பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்,
நில்லா   வுலகம்  புல்லிய  நெறித்தே”  (தொல்.  பொரு.  புறத்.  23)
யென்பவாகலின்,   புகழொன்றே  நிலைபெறுவதன்றிப்  பிறவுடம்புமுத
லனைத்தும்  நிலைபேறுடைய  வல்லவெனும்  கருத்துடைய உயர்வீரர்
என்றற்கு,    “காஞ்சி    சான்ற   வயவர்”   என்றும்,   அவர்க்குத்
தலைவனாதலின், “பெரும” வென்றும் கூறினார் வீரரென்னாது, வயவர்
என்றமையின், முன்னே பல போர்களைத் திறம்படச் செய்து  சிறப்பும்
வெற்றியும்   சிறக்கப்   பெற்றவ   ரென்று   கொள்க  ;  இவரையே
பிற்காலத்துப்    புராணங்கள்   கூறும்   மூலபல   வீரர்   எனவறிக.
“காஞ்சிசான்ற வயவரென்றது, நிலையாமை யெப்பொழுதும் உள்ளத்திற்
கொண்டிருத்தலமைந்த    வீரரென்றவா”    றென்பது   பழையவுரை.
செல்வமுடையார்க்கு   அதனாற்   பயன்,  சேர்ந்தோர்க்  குண்டாகும்
துன்பந்  துடைத்த லென்ப வாகலின், “சேர்ந்தோர் செல்வ” என்றார் ;
“செல்வ  மென்பது  சேர்ந்தோர்,  புன்கணஞ்சும்  பண்பின் மென்கட்
செல்வம்” (நற். 210) என்று பிறரும் கூறுதல் காண்க.
 

6 - 10. பூணணிந்து .......................... கணவ.

உரை : பூண் அணிந்து  எழிலிய  வனைந்து  வரல் இளமுலை -
இழை   யணிந்த   உயர்ந்த   ஒப்பனை  செய்தாற்போல்  வருகின்ற
இளமுலையினையும்   ;  மாண்  வரி  அல்குல்  -  மாட்சிமைப்பட்ட
வரிகளையுடைய  அல்குலினையும்  ;  மலர்ந்த  நோக்கின் - அகன்ற
கண்ணினையும்  ;  வேய்  புரைபு  எழிலிய  வீங்கு  இறைப் பணைத்
தோள்  - மூங்கிலை யொப்ப அழகிய பெரிய மூட்டுக்கள் பொருந்திய
(தொடியணிந்த)  பருத்த  தோளினையும்  ; காமர் கடவுளும்  ஆளும்
கற்பின்  -  அழகிய  கடவுளரையும்  ஏவல்கொள்ளும் கற்பினையும் ;
சேண்  நாறு  நறுநுதல் - சேய்மைக்கண்ணும் சென்று மணம் கமழும்
நறிய  நெற்றியினையும்  ;  சேயிழை கணவ - செவ்விய அணிகளையு
முடையாட்குக் கணவனே எ - று.

எழில், உயர்ச்சி, “நுண்மா  ணுழைபுல மில்லா னெழில்நலம்” (குறள்.
407)  என்புழிப்போல. பூண் முத்துமாலை முதலியன சாந்து முதலியன
அணிந்து   தொய்யி  லெழுதி  ஒப்பனை  செய்யப்படுமியல்பு  பற்றி,
“வனைந்துவர   லிளமுலை”  யென்றார்.  இனி,  பழைய  வுரைகாரர்,
“வனைந்துவர  லென்பது  ஒரு  வாய்பாட்டு  விகற்பம்” என்பர். கண்
அகன்றிருத்தல்   பெண்கட்கு   அழகாதலின்  “மலர்ந்த  நோக்கின்”
என்றார். “அகலல்குல் தோள் கண்ணென மூவழிப் பெருகி” (கலி. 108)
என்று   சான்றோர்   கூறுதல்   காண்க   .   கற்புடை   மகளிரைத்
தெய்வமென்றும்,   அவர்க்குத்  தெய்வமும்  ஏவல்  செய்யுமென்றும்
கூறுபவாதலின்,   “கடவுளுமாளுங்  கற்பின்”  என்றார்.  “இன்றுணை
மகளிர்க்   கின்றி  யமையாக்,  கற்புக்     கடம்பூண்ட  வித்தெய்வ 
மல்லது,  பொற்புடைத் தெய்வம்  யாம்  கண்டிலமால்”  (சிலப்.  15  :
142  -  4)  என்று உயர்ந்தோர் ஏத்துமாறு காண்க . நெடுந்தொலைவு
பரந்து  மணம்  கமழும் இயல்புபற்றிச்  “சேணாறு நறுநுதல்” என்றார் ;
“தேங்கமழ் திருநுதல்”  என்று   சான்றோர்   சிறப்பித்துக்  கூறுப  .
கற்புச்  சிறப்புப்பற்றிச் “சேயிழை கணவ” என்றார்.
 

11 - 12. பாணர் ............................... மார்ப.

உரை : பாணர் புரவல - பாண்  குடும்பங்களைப்  புரப்பவனே ;
பரிசிலர்  வெறுக்கை  -  பரிசிலர்க்குச் செல்வமாயிருப்பவனே ; பூண்
அணிந்து  விளங்கும்  புகழ் சால் மார்ப - பூணாரமணிந்து விளங்கும்
அகன்ற புகழ் நிறைந்த மார்பினையுடையோனே எ - று.

பாணரைப்     புரத்தலால் இசைத்தமிழ்  வளர்ச்சியும், பரிசிலரைப்
புரத்தலால்   புகழ்   வளர்ச்சியும்  பயனாதல்பற்றி,  “பாணர்  புரவல
பரிசிலர்   வெறுக்கை”   யொன்றார்  ;  “வயவர்  வேந்தே  பரிசிலர்
வெறுக்கை”   (பதிற்.   15)   என்று   பிறரும்   கூறுவது  காண்க  .
விரிந்துயர்ந்திருத்தல்   மார்புக்குப்  புகழாதலின்,  “புகழ்சால்  மார்ப”
என்றார்   .   அணிந்தென்னும்   முதல்வினை   சினைவினையாகிய
விளங்கிய வென்னும் வினை கொண்டது.

12 - 17. நின் நாண் மகிழிருக்கை ....................... மகிழானே.

உரை : தீந்தொடை நரம்பின் பாலை  வல்லோன் - இனிய  இசை
தொடுத்தலையுடைய     நரம்பினா       லமைந்த      பாலையாழ்
வல்லவனொருவன்  ;  பையுள்  உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்கு -
அழுகைச்    சுவைக்குரிய    உறுப்பினையுடைய    பாலைப்பண்கள்
எல்லாவற்றையும்  ஒவ்வொன்றாக மாறிமாறி யிசைத்தாற் போல ; சேறு
செய்  மாரியின்  -  சேற்றை  யுண்டாக்கும்  மழை  போல  ; நனை
அளிக்கும்  -  கள்ளை  வழங்கும்  ;  சாறுபடு  திருவின்  - விழாக்
களத்தின் செல்வத் தோற்றத்தையுடைய ; மகிழான் திருவோலக்கத்தின்
கண்ணே   ;  நின்  நாண்  மகிழ்  இருக்கை  இனிது  கண்டிகும்  -
நின்னுடைய   நாட்   கால   இன்ப  விருக்கையினை  நன்கு  கண்டு
மகிழ்வுற்றேம் எ - று.

இனிய   இசைபயத்தல்பற்றி, “தீந்தொடை நரம்பு” என்றார். பாலை
யாழ்   வல்லவனன்றிப்  பிறரால்  அழுகைச்  சுவைக்குரிய  பாலைப்
பண்களை  யெல்லாம் தொகுத்து, ஒவ்வொன்றாக மாறி மாறி யிசைக்கு
மாற்றால்  அழுகைச்  சுவையை  இசைத்துக் காட்டலாகாமை தோன்ற,
“பாலை   வல்லோன்   பையுளுறுப்பின்   பண்ணுப்  பெயர்ந்தாங்கு”
என்றார்.  பண்ணொவ்  வொன்றிலும்  அழுகைச்சுவைக்  குரியதாய்த்
தனித்தனி சிறந்த உறுப்புக் களுண்மைபோல, களிப்பினைத் தருவதாய்
வேறுவேறு  சிறந்த  கள்வகை யுண்மையாலும்,  பையுளுறுப்புக்களைப்
பாலைவல்லோன்     தனித்தனி     யிசைத்துக்    காட்டுமாறுபோல,
தனித்தனியே     அக்கள்வகையினை        நல்குகின்றானென்றும்,
ஒவ்வொருவகைக்       கள்ளும்,       சேறுண்டு       பண்ணும்
மிகுமழை  போல  மிகத்தரப்படுவதுபற்றி, “சேறுபடு மாரியின்” என்றா
ரென்றும்    கொள்க.    அழுகைச்   சுவைக்குரிய   பண்ணுறுப்பை,
“பையுளுறுப்”  பென்றார்  ;  பையுள்  அழுகையால் மெய்ப்படுதலின்,
இனிப்   பழையவுரைகாரர்,  “தீந்தொடை  பாலைக்  கோவைகளாகிய
வீக்குநிலை”  யென்றும்,  “பையுளுறுப்பிற்  பண்ணுப்  பெயர்த்தாங்கு
அளிக்கும்  நனையெனக்கூட்டி  எல்லாப் பண்களிலும்  வருத்தத்தைச்
செய்யும்    உறுப்பினையுடைய    பாலைப்பண்கள்    பலவற்றையும்
ஒரோவொன்றாகப்      பெயர்த்து      வாசிக்குமாறு      போலே
ஒன்றையொன்றொவ்வாத   இன்பத்தை   உண்டவர்க்குக்  கொடுக்கும்
பலதிறத்து  மது  வெனவுரைக்க”  என்றும்,  “நனை யென்றது, ஈண்டு
மதுவிற்கெல்லாம்     பொதுப்பெயராய்      நின்ற”      தென்றும்,
“மாரியினென்னும்  உவமம்  மதுக்களில்  ஒரோவொன்றைக் கொடுக்கு
மிகுதிக்   குவமம்”   என்றும்,   “சாறுபடு   திருவினென்ற  வுவமம்
அம்மதுக்களைப்  பானம் பண்ணுங் காலத்து அலங்காரமாகக் கூட்டும்
பூவும்  விரையும்  முதலாய  பொருள்களுக் குவமம்” என்றும் ; “சாறு
என்றது    விழாவின்   றன்மையை”   யென்றும்,   மகிழ்   என்றது
மகிழ்ச்சியையுடைய ஓலக்க இருப்பினை” யென்றும் கூறுவர் . “இருந்த
வூர்தொறு  நல்யாழ்ப்  பண்ணுப்  பெயர்த்  தன்னகாவும்  பள்ளியும்”
(மலைபடு 450-1) எனப் பிறரும் கூறுவது காணத்தக்கது.
 

“அவன்     ஓலக்க    இருக்கையின்    செல்வத்தை   நாண்மகி
ழிருக்கையெனக்    கூறிய    சொற்சிறப்பானே   இதற்கு   நாண்மகி
ழிருக்கையென்று பெயராயிற்” றென்பர் பழையவுரைகாரர்.

இதுகாறும்     கூறியது, வயவர் பெரும; வில்லோர்  மெய்ம்மறை,
சேர்ந்தோர்  செல்வ,  சேயிழை,  கணவ,  புரவல,  வெறுக்கை மார்ப,
பாலை  வல்லோன்  பண்ணுப்  பெயர்த்தாங்கு,  மாரியின் அளிக்கும்
நனை  மகிழின்கண்,  நின்  நாண்மகி ழிருக்கையை இனிது கண்டிகும்
என  வினை  முடிவு  செய்க. இனிப் பழைய வுரைகாரர், “மார்ப, நின்
நாண்  மகிழிருக்கையின்  சிறப்பெல்லாம் நின் நனை மகிழின்கண்ணே
இனிது கண்டேம் எனக் கூட்டி வினை முடிவு செய்க” என்று கூறுவர்.

“இதனாற் சொல்லியது ; அவன்  ஓலக்க  வினோதத்தோடு படுத்து
அவன் செல்வச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
  


 மேல்மூலம்