முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
69.



மலையுறழ் யானை வான்றோய் வெல்கொடி
வரைமிசை யருவியில் வயின்வயி னுடங்கக்
கடல்போற் றானைக் கடுங்குரன் முரசம்
காலுறு கடலிற் கடிய வுரற
 5




எறிந்துசிதைந்த வாள்
இலைதெரிந்த வேல்
பாய்ந்தாய்ந்த மா
ஆய்ந்துதெரிந்த புகன்மறவரொடு
படுபிணம் பிறங்க நூறிப் பகைவர்
 10




கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே
நின்போல். அசைவில் கொள்கைய ராகலி னசையா
தாண்டோர் மன்றவிம் மண்கெழு ஞாலம்
நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப்
பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப
 15


விசும்புமெய் யகலப் பெயல்புர வெதிர
நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த
இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே.

     துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கும்
வஞ்சித் தூக்கும். பெயர் - மண்கெழு ஞாலம்.
(12)

     (ப - ரை) நுடங்க (2) எனவும் உரற (4) எனவும் நின்ற
வினையெச்சங்களை நூறி (9) என்னும் வினையொடு முடிக்க.

     புகன்மறவரொடு என்னும் ஒடுவை (8) வாளொடு (5) வேலொடு
(6) மாவொடு (7) என எங்கும் கூட்டுக.

     வாள். வேல். மாவென நின்ற மூன்றும் ஆகுபெயர்.

     9. நூறியென்பது ஈண்டுக் கொன்றென்னும் பொருண்மைத்து.

     9-10. பகைவர் கெடுகுடி பயிற்றியவென்றது படுபிணம் பிறங்கப்
பகைவரை நூறியப்பின் அப்பகைவருடைய கெட்டுப்போன
குடிமக்களை அவர் நாட்டிலே பயின்று வாழ்வாராகப் பண்ணிய
வென்றவாறு.

     இனிப் பகைவருடைய கெட்ட குடிகளை வேற்றுநாட்டிலே
பயிலப் பண்ணின வென்றுமாம். மன்ற என்பதனை (12) அசைவில்
கொள்கை யராகலின் (11) என்பதனொடு கூட்டுக.

     12. 1பொன்ஞாலமன்றி இம் மண்ஞாலமுழுதும் ஆண்டாரென்பது
தோன்ற மண்கெழு ஞாலமென்ற இச்சிறப்பலானே இதற்கு. “மண
கெழு ஞாலம்
” என்று பெயராயிற்று.

     13. நிலம் பயம் பொழியவென்றது சிலர் அரசு
செய்யுங்காலங்களில் மழையும் நீரும் குறைவின்றியிருந்தும்
எவ்விளைவும் சுருங்கவிளையும் காலமும் உளவாம்; அவ்வாறன்றி
நிலம் பயனைப் பொழிந்தாற்போல மிக விளையவென்றவாறு.

     சுடர் சினம் தணியவென்றது 2திங்கள் மும்மாரியும் பெய்து
மழை இடையறாது வருகின்றமையின் சுடர் சினந் தணிந்தாற்போன்று
தோற்றவென்றவாறு.

     14. வெள்ளியென்றது வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி (பதிற்.. 24 : 24) என்றவாறு.

     பயம்கெழு ஆநியம் நிற்கவென்றது அவ்வெள்ளி மழைக்கு
3உடலான மற்றைநாள் கோள்களுக்குச் செல்கின்ற நல்ல நாட்களிலே
நிற்க வென்றவாறு. 15. விசும்புமெய் அகலவென்றது
அம்மழையில்லாமைக்கு உற்பாதமாகிய 4தூமத்தோற்றமின்மையான்.
ஆகாயவெளி தன்வடிவு பண்டையில் அகன்றாற்
போலத்தோன்றவென்றவாறு.

     பெயல் புரவு எதிரவென்றது மழை இவ்வுலகினை யானே
புரப்பேனென்று 5ஏறட்டுக்கொண்டாற்போல நிற்பவென்றவாறு.

     16. நால்வேறு நனந்தலை ஓராங்கு தந்தவென்றது நாலுதிசையும்
ஒன்று போலே பகையின்றி விளங்கவென்றவாறு.

     கொற்றவேந்தே (10) இலங்குகதிர்த் திகிரியினையுடைய நின்
முன்னோர் (17) நிச்சயமாக (12) நின்னைப்போல் அசைவில்லாத
மேற்கோளை யுடையராகையாலே (11) இம்மண்ஞாலத்தினை (12) நிலம்
பயம் பொழிதல் முதலாக (13) நால்வேறு நனந்தலை ஓராங்கு நந்தல்
(16) என்பது ஈறாக எண்ணப்பட்ட நின் புகழெல்லாம் உளவாக
அசைவின்றி (11) ஆண்டோராவர் (12); அவரல்லார்
இம்மண்ஞாலத்தின் ஒரோவிடங்களை ஆளுவ தல்லது 6முழுதும்
ஆளுதல் கூடாதென்றேயெனக் கூட்டிவினை முடிவு செய்க.

     11. 'ஆண்டோரசையாது' என்பது பாடமாக்கி அதற்கேற்ப
உரைப்பாரும் உளர்.

     இதனாற் சொல்லியது அவன் ஆள்வினைச்சிறப்பினை அவன்
குடிவரலாற்றோடு படுத்துச் சொல்லியவாறாயிற்று.

     'எறிந்துசிதைந்த' (5) என்பது முதலாக, 'மறவரொடு' (8) என்பது
ஈறாக நான்கடி வஞ்சியடியாய் வந்தமையான் வங்சித்தூக்குமாயிற்று.
அவற்றுள் முன்னின்ற 7மூன்றடிகளின் ஈற்றுச்சீர்கள் அசைச்
சீர்களாகவும் 8மற்றையடியின் ஈற்றுக்சீர் பொதுச்சீரகாவும் இட்டுக்
கொள்க.

     'நின்போல்' (1) என்றது கூன்.

     (கு - ரை) 1-2. மலையை ஒத்த யானையின் மேல் எடுத்த
வானத்தை அளாவிய வெற்றிக்கொடி, மலையின் மேலுள்ள
அருவியைப் போல இடந்தோறும் அசைய.

     யானைக்கு மலையும் அதன்மேலுள்ள கொடிக்கு அருவியும்
உவமை; "களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர, ஒளிறுவன
விழிதரு முயர்ந்து தோன் றருவி", "பெருவரை யிழிதரு நெடுவள்
ளருவி, ஓடை யானை யுயர்மிசை யெடுத்த, ஆடுகொடி கடுப்பத்
தோன்றும்' (அகநா. 162 : 22 - 3, 358 : 12 - 4)

     3-4. கடல்போலப் பரந்த சேனையினிடத்தே கடிய
குரலையுடைய முரசங்கள் காற்றுப் பொருந்திய கடலைப்போலக்
கடுமையுடையனவாய் முழங்க (பதிற். 68 : 1 - 3)

     யானைக்குக் கடல்: "உரவுக்கடலன்ன தாங்கருந் தானையொடு"
(பதிற். 90 : 31)்; "கடன்மரு டானை, மட்டவிழ் தெரியன் மறப்போர்க்
குட்டுன்" (அகநா, 212 : 15 : 6)

     5-8. பகைவரை வெட்டிச் சிதைந்த வாளையுடைய வீரரோடு,
இலை வடிவம் ஆராய்ந்து அமைக்கப்பட்ட வேலையுடைய வீரரோடு,
பகைவர்மீது பாய்ந்து வன்மை குறைந்த குதிரை வீரரோடு ஆராய்ந்து
தெரியப்பட்ட போரை விரும்புதலையுடைய மற்ற வீரரோடு.

     மறவரொடு என்னும் ஒடுவை வாள், வேல்,
மாவென்பவற்றோடும் கூட்டுக. வாள் முதலிய மூன்றும்
அவற்றையுடைய வீரரைக் குறித்தலின் ஆகுபெயர்.

     9-10. இறந்த பிணம் உயரும்படி கொன்று பகைவருடைய
கெட்ட குடிகளை மீண்டும் அவர் நாட்டிலே வாழப்பண்ணிய
வேந்தே.

     நுடங்க (2) உரறப் (4) பிறங்க நூறிப் (9) பயிற்றிய (10) என
முடிக்க.

     11-2, நின்னைப்போலத் தெளிவாக மாறுதல் இல்லாத
கொள்கை யுடையராதலால், நடுக்கமில்லாமல் இந்த அணுச்செறிந்த
மண்ணுலகத்தை ஆண்டனர்.

     ஆண்டோர் (12) முந்திசினோர் (17) என்பதனோடு முடியும்.

     13-6. முன்னோர் ஆட்சியின் சிறப்பு.

     13. நிலம் பயனைப் பொழிந்தாற்போல மிக விளைய, காலத்தே
தவறாமல் மழை பெய்தலால் சூரியன் வெப்பந் தணிந்தாற்போன்று
விளங்க.

     14, உலகத்திற்குப் பயன்பொருந்திய சுக்கிரனென்னும் கோள்
மழைக்குக்காரணமான மற்ற நாள் கோள்களுக்குச் செல்கின்ற நல்ல
நாட்களிலே நிற்க (பதிற், 13 : 25)

     15. தூமகேது முதலியன இல்லாமையால் ஆகாயம் தன் வடிவம்
அகன்றாற்போல விளங்க. மழை உலகத்தைத்தானே காத்தலை மேற்
கொண்டாற்போல விளங்க; "நிலனு மரனும் பயனெதிர்பு நந்த"
(மதுரைக், 12)

     16. நான்காகிய வேறுபட்ட அகன்ற திசைகளும் ஒன்றுபோலப்
பகையின்றி விளங்க. 17. விளங்குகின்ற கிரணத்தையுடைய
ஆஞ்ஞாசக்கரத்தையுடைய நின் முன்னோர்.

     முந்திசினோர் (17) பொழியத் தணிய (13) நிற்ப (14) அகல
எதிர (15) நந்த (16) ஆண்டோர் (12) என முடிவு செய்க.

     மு. இது முன்னுள்ளோர்க்கும் இயல்பென்பது படக்கூறிய
இயன் மொழி வாழ்த்து (தொல். புறத். 35. ந.)

     (பி - ம்) 3. கடல்போறானைக்                (9)


     1பொன்ஞாலம் - தேவருலகம்.

     2"முடிபுனைந்தசீர் மன்னவர் நெறியினான் முன்னவர் தவத்தாற்
பைந். தொடிம டந்தையர் கற்பினான் மதிதொறுஞ் சொரிதரு மும்மாரி
(
குற்றாலப். திருநாட்டுச். 39); "திங்கண் மும்மாரி பெய்க" (சீவக.
நூலிறுதிச் செய்யுள்)

     3உடல் - ஆதாரம்.

     4"மைம்மீன் புகையினுந் தூமந்தோன்றினும்" (புறநா. 117 : 1);
"கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்`` (
சிலப். 10 : 102)

     5"மரங்களும் பல்லுயிர்க்கும் தன் பயன் கொடுத்தலை
ஏறட்டுக் கொண்டு தழைப்ப’ (மதுரைக். 12. ந.)

     6இது. "வையங் காவலர் வழிமொழிந் தொழுகப். போகம்
வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ திடஞ்சிறி தென்னு மூக்கந்
துரப்ப. ஒடுங்காவுள்ளத் தோம்பா வீகைக். கடந்தடு தானைச்
சேர லாதனை" (
புறநா. 8 : 1 - 5) என்பது நினைப்பிக்கின்றது.

     7மூன்றடிகளென்றது 5 - 7-ஆம் அடிகளை.

     88-ஆம் அடி.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

9. மண்கெழு ஞாலம்
 
69.மலையுறழ் யானை வான்றோய் வெல்கொடி
வரைமிசை யருவியின் வயின்வயி னுடங்கக்
கடல்போ றானைக் கடுங்குரன் முரசம்
காலுறு கடலிற் கடிய வுரற
 
5எறிந்துசிதைந்த வாள்
இலைதெரிந்த வேல்
பாய்ந்தாய்ந்த மா
ஆய்ந்துதெரிந்த புகன்மறவரொடு
படுபிணம் பிறங்க நூறிப் பகைவர்
 
10கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே
நின்போல், அசைவில் கொள்கைய ராகலி னசையாது
ஆண்டோர் மன்றவிம் மண்கெழு ஞாலம்
நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப்  
பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப
 
15விசும்புமெய் யகலப் பெயல்புர வெதிர
நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த
இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே.
 

துறை  : வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம் : ஒழுகுவண்ணமும்சொற்சீர்வண்ணமும்
தூக்கு   : செந்தூக்கும்வஞ்சித்தூக்கும்.
பெயர்   : மண்கெழு ஞாலம்.

1 - 10. மலையுறழ் ............. வேந்தே.

உரை : மலை யுறழ்  யானை  வான்  தோய் வெல்கொடி - மலை
போலும்  யானையின்மேல்  வானளாவ எடுத்த வெற்றிக்கொடியானது ;
வரைமிசை  யருவியின்  -  மலைமேலிருந்து  விழும் அருவி போல ;
வயின்  வயின்  நுடங்க  -  இடந்தோறும் அசைந்து விளங்க ; கடல்
போல்  தானைக்  கடுங்  குரல்  முரசம் - கடல் போன்ற தானையின்
நடுவே  கடிய  முழக்கத்தையுடைய  முரசு  ; கால் உறு கடலின் கடிய
உரற - காற்றால் மோதப்பட்ட கடல்போலக் கடிதாய் முழங்க ; எறிந்து
சிதைந்த  வாள்  -  பகைவரை எறிதலால் சிதைவுற்ற வாள் வீரரும் ;
இலை   தெரிந்த  வேல்  -  இலைபோன்ற  தலையையுடைய  வலிய
வேலேந்திய வீரரும் ; பாய்ந்து ஆய்ந்தமா - பகைவர்மேற் பாய்தலால்
ஓய்வுற்ற  குதிரைகளும்  ;  ஆய்ந்து  தெரிந்த  புகல்  மறவரொடு  -
ஆராய்ந்து  தெரிந்து  கொள்ளப்பட்ட  போர்  வேட்கையினையுடைய
வீரர்களும்  கொண்ட  தானையுடன்  சென்று  ; படு பிணம் பிறங்கப்
பகைவர்  நூறி  -  போரிலே பட்டு வீழும் பிணங்கள் குவிந்து உயரப்
பகைவரைக்  கொன்றழித்து  ;  கெடு குடி பயிற்றிய - அவர் நாட்டில்
கெட்டோருடைய  குடிகளை வாழச்செய்த ; கொற்ற வேந்தே - வெற்றி
வேந்தனே எ - று.

யானைக்கு     மலையும்   கொடிக்கு  அருவியும்  உவமமாயின.
“பெருவரையிழிதரும்  நெடுவெள்  ளருவி,  ஓடை யானை யுயர்மிசை
யெடுத்த,  ஆடு  கொடி  கடுப்பத்  தோன்றும்”  (அகம். 358) என்று
பிறரும்  கூறுதல்  காண்க. “உரவுக்கடலன்ன தாங்கருந் தானையொடு”
(பதிற்.   90)   என்று  பிறரும்  கூறுதல்போல,  ஈண்டும்  ஆசிரியர்,
“கடல்போல்   தானை”   யென்றார்.   கேட்ட  பகைவர் உள்ளத்தே
அச்சத்தைப்  பயத்தல்பற்றிக்  “கடுங்குரல் முரசம்” என்றார். “எறிந்து
சிதைந்து  வா  ளென்றும்,  “பாய்ந்தாய்ந்த  மா”  என்றும்  கூறியது,
முறையே   வாட்படை,   குதிரைப்படைகளின்   போர்ப்  பயிற்சியின்
சிறப்புக்   குறித்து   நின்றன.   வாள்,   வேல்  குதிரை  யென்பன.
அவ்வவற்றையாளும்  தானைவீரரைச் சுட்டி நின்றன. ஒடுவினை வாள்
முதலியவற்றோடும்  கூட்டுக.  ஆய்தல்,  ஓய்தல்.  பல  போர்களிலும்
அறம்  பிழையாது  வென்றி  மேம்பட்டாரையே  வீரராக  ஆராய்ந்து
தேர்ந்து கோடலின், “ஆய்ந்து தெரிந்த மறவ” ரென்றும், அவர்தாமும்
அப் போரிடைப் பெறும் புகழே விரும்பி நிற்றல் பற்றிப் “புகல் மறவ”
ரென்றும் கூறினார்.

இனிப்    பழையவுரைகாரர், “நுடங்க எனவும் உரற எனவும் நின்ற
வினையெச்சங்களை  நூறி  யென்னும் வினையொடு  முடிக்க” என்றும்,
“புகன்  மறவரொடு என்னும் ஒடுவை, வாளொடு, வேலொடு, மாவொடு
என    எங்கும் கூட்டுக”   என்றும்,  “வாள்,   வேல்   மா   என
நின்ற  மூன்றும் ஆகுபெய”ரென்றும் கூறுவர்.
 

இக்     கூறிய தானையொடு சென்று எதிர்ந்த பகைவரைத் தாக்கி
வென்றி   மிகும்   திறத்தை,   “படுபிணம்  பிறங்க  நூறி”  என்றார்.
பொடிபடுத்த  லென்னும் பொருட்டாய நூறி யென்னும் சொல் ஈண்டுக்
கோறற்   பொருட்டு.   பழையவுரையும்,   “நூறி  யென்பது  ஈண்டுக்
கொன்றென்னும் பொருண்மைத்து” என்றல் காண்க.

போரில்    பட்டு வீழும் பிணங்கள் பெருகி மலைபோலக் குவியப்
பொருதலால்,  பகைவர்  நாடு  குடிவளம்  குன்றிக்  கெடுதலால், தீது
கடிந்து  நன்று  புரக்கும்  வேந்தற்கு, கெட்ட குடியை நலமுறுவித்துப்
பேணுதல்  கடனாதலின், அது செய்த வேந்தனை, “கெடுகுடி பயிற்றிய
கொற்ற  வேந்தே”  யென்றார். “படுபிணம் பிறங்கப் பகைவரை நூறிய
பின்   அப்   பகைவருடைய  கெட்டுப்போன,  குடிமக்களை  அவர்
நாட்டிலே   பயின்று  வாழ்வாராகப்  பண்ணிய”  வென்றும்,  “இனிப்
பகைவருடைய  கெட்ட குடிகளை வேற்று நாட்டிலே பயிலப்பண்ணின
வென்றுமா” மென்றும் பழையவுரைகாரர் கூறுவர்.

13 - 17. நிலம் ........... முந்திசினோரே.

உரை : நிலம்  பயம்  பொழிய  -   நிலம்  தன்பால்  விளையும்
விளைபொருள்களை  மிக விளைவிக்க ; சுடர் தினம் தணிய வெயிலது
வெம்மை வரம்பிகவாது தணிந்து நிலவ ; பயம் கெழு வெள்ளி ஆநிய
நிற்ப - உலகிற்கு நல்ல பயனைச் செய்யும் வெள்ளி யென்னும்  கோள்
மழைக்குக்  காரணமாகிய ஏனை நாள் கோள்களுடனே சென்று நிற்ப ;
விசும்பு  மெய்யகலப்  பெயர்  புரவு எதிர - வானம் மழை முகில்கள்
நிரம்பப்  பரவி நல்ல மழையைப் பெய்வது காரணமாக இடம் அகன்று
விளங்கவே  மழை  தன்  பெயலால் உலகுபுரக்கும் செயலுற்று நிற்ப ;
நால்வேறு    நனந்தலை    -    நான்காய்    வேறுபட்ட   அகன்ற
திசையிடமெல்லாம்  ;  ஓராங்கு  நந்த - ஒன்றுபோல ஆக்க மெய்த ;
இலங்கு    கதிர்த்    திகிரி    முந்திசினோர்    -    விளங்குகின்ற
அரசவாணையாகிய திகிரியைச் செலுத்திய நின் முன்னோர் எ - று.

தன்பால் விளைபொருளை மிக விளைத்து வழங்குமாறுபற்றி, “நிலம்
பயம்  பொழிய”  என்றும்,  வெயிலது  வெம்மையும்  மழை  முதலிய
காலந்தோறும்  பெய்தலால்  வரம்பிகவாது நிலவுதலாலும், வரம் பிகந்த
வெம்மையே  உயிர்களால்  மிகுதியாகக் கருதப்படு மாதலாலும், “சுடர்
சினம்  தணிய”  என்றும்  கூறினார்.  வெள்ளிக்கோள் உலகுயிர்கட்கு
நலம்  செய்யுமாகலின்,  “பயங்கெழு  வெள்ளி”  யென்றும், அந்நலம்
உண்டாதற்குத்  துணையாகும் ஏனைநாளும் கோளும் இயங்குமிடத்தே
இவ்வெள்ளி நிற்க வேண்டுதலின், “ஆநியம் நிற்ப” என்றும் கூறினார்.
“அழல்  சென்ற  மருங்கின்  வெள்ளியோடாது, மழைவேண்டு புலத்து
மாரி  நிற்ப”  (பதிற்.  13)  என்றும்,  “வறிது வடக்கிறைஞ்சிய சீர்சால்
வெள்ளி,  பயங்கெழு  பொழுதோ  டாநிய நிற்ப” (பதிற். 24) என்றும்
சான்றோர் கூறுதல் காண்க.
 

இனிப்   பழையவுரைகாரர், “நிலம் பயம் பொழிய வென்றது, சிலர்
அரசு  செய்யுங்  காலங்களில் மழையும் நீரும் குறைவின்றி யிருந்தும்
எவ்விளைவும்  சுருங்கவிளையும்  காலமும்  உளவாம் ; அவ்வாறன்றி
நிலம்   பயனைப்   பொழிந்தாற்போல   மிக  விளைய  வென்றவா”
றென்றும்,  சுடர்  சினம்  தணிய  வென்றது,  “திங்கள்  மும்மாரியும்
பெய்து  மழை இடையறாது வருகின்றமையின் சுடர் தினம் தணிந்தாற்
போன்ற  தோற்ற  மென்றவா”  றென்றும்,  “வெள்ளி யென்றது வறிது
வடக்கிறைஞ்சிய  சீர்சால் வெள்ளி யென்றவா” றென்றும், “பயங்கெழு
ஆநிய  நிற்க  வென்றது,  அவ்  வெள்ளி மழைக்கு உடலான மற்றை
நாள்  கோள்களுக்குச் செல்கின்ற நல்ல நாட்களிலே நிற்க வென்றவா”
றென்றும் கூறுவர்.

ஆட்சி   நலம் இல்வழி, மழை யின்மைக்குக் காரணமாகிய நாளும்
கோளும்    நிலை    திரிதலின்,    விசும்பும்    இடம்    சுருங்கித்
தருமாறுமென்பது  பற்றி,  “விசும்பு  மெய்யகல”  என்றும்,  அதனால்
மழை   வேண்டுங்   காலத்து   விளைவு  மிகுதிக்  கேற்பப்  பெய்து
உலகுயிர்கட்கு   நலம்   செய்தலால்,  “பெயல்புர  வெதிர”  என்றும்
கூறினார்.  இனிப்  பழையவுரைகாரர்,  “விசும்பு  மெய்யகல வென்றது,
அம்  மழை யில்லாமைக்கு உற்பாதமாகிய தூமத்தோற்ற மின்மையின்,
ஆகாய  வெளி  தன்  வடிவு பண்டையில் அகன்றாற்போலத் தோன்ற
வென்றவா”   றென்றும்,   “பெயல்புர   வெதிர   வென்றது,   மழை
இவ்வுலகினை  யானே  புரப்பேனென்று  ஏறட்டுக்  கொண்டாற்போல
நிற்ப வென்றவா” றென்றும் கூறுவர்.

நாற்றிசையும் தனித்தனி வேறுவே றியல்பினவாதலால், “நால் வேறு
நனந்தலை”  யென்றும்,  இயல்பு  வேறுபடினும்  பயன் விளைதற்கண்
ஏற்றத்  தாழ்வின்றி ஒன்றுபோல ஆக்கம் எய்தின என்றற்கு, “ஓராங்கு
நந்த”  என்றும் கூறினார் ; “நாலு திசையும் ஒன்றுபோலே பகையின்றி
விளங்க” வென்பது பழையவுரை.

பயம்   பொழிய, சினம் தணிய, ஆநியம் நிற்ப, பெயல்புர வெதிர,
ஓராங்கு  நந்த,  திகிரி  செலுத்திய  முந்திசினோர்  என  ஒரு சொல்
வருவித்து  முடிக்க.  பழையவுரைகாரர்,  பொழிய என்பது முதல் நந்த
என்பது  ஈறாக  நின்றவற்றை  “ஆண்டோர்” (வரி. 12) என்பதனோடு
கூட்டி முடிப்பார்.

11 - 12. நின்போல்...............................ஞாலம்.

உரை : நின்போல்  மன்ற   அசைவில்  கொள்கைய  ராதலின் -
நின்னைப்  போல்  தெளிவாக  மாறாத கொள்கையை யுடையவர்களா
யிருந்தமையால்  ;  இம் மண்கெழு ஞாலம் அசையாது ஆண்டோர் -
இவ்வணுச் செறிந்த நிலவுலகத்தை இனிது ஆண்டார்கள் எ - று.

நின்  முன்னோரினும் நீ கொள்கையால் உயர்ந்தாய் என்பார், நின்
போல்   என   உவமைக்கண்  வைத்தோதினார்.  அவர்  வரலாற்றுக்
கொள்கைகளையும்  நின் கொள்கைகளையும் சீர்தூக்கிக் காணுமிடத்தே
அவருடையவற்றினும்     நின்னுடைய    கொள்கை     மேம்பட்டுத்
திகழ்கின்றன   வென்பார்,  “மன்ற”  என்றார்.   அசைவு,   முதலது
திரிபின்மேலும்     பின்னது       வருத்தத்தின்மேலும்    நின்றன. 
மேல்ரும்   பகை    முதலியவற்றுக்கு    எளிமையுற்று   அரசுமுறை
திரிதல் கூடாதென்றற்கு,  “அசைவில்  கொள்கை”  யென்றும், முறை
கோடியவழி,  வறுமை  பிணி   முதலியன  நாட்டிற் பெருகி மக்கட்கு
இடும்பை பயத்தலின், “அசையா தாண்டோர்” என்றும் கூறினார்.
 

மன்ற வென்பதனை ‘அசைவில் கொள்கையராதலின்’ என்பதனோடு
கூட்டியுரைக்க.  இம்  மண்கெழு ஞாலம் என்றற்குப் பழையவுரைகாரர்,
“பொன்ஞால   மன்றி  இம்  மண்ஞால  முழுதும்  ஆண்டாரென்பது
தோன்ற,    மண்கெழு   ஞாலமென்ற   இச்   சிறப்பானே   இதற்கு
மண்கெழுஞால மென்று பெயராயிற்” றென்பர்.

இதுகாறும் கூறியது ; கொடி நுடங்க, முரசம் உரற, வாள்வீரர் முதல்
மறவர்  உள்ளிட்ட தானையொடு சென்ற பகைவர் பிணம் பிறங்க நூறி,
அவர்நாட்டுக்   கெடுகுடி  பயிற்றிய  வேந்தே,  இலங்குகதிர்த்  திகிரி
செலுத்திய  நின்  முந்திசினோர்,  நின்போல்  அசைவில் கொள்கைய
ராதலின்,  இம்  மண்கெழு  ஞாலம்  அசையாது ஆண்டார்கள் எனக்
கூட்டி   வினைமுடிபு   செய்க.  இனிப்  பழையவுரைகாரர்,  “கொற்ற
வேந்தே,   இலங்கு   கதிர்த்  திகிரியினையுடைய  நின்  முன்னோர்,
நிச்சயமாக            நின்னைப்போல்             அசைவில்லாத
மேற்கோளையுடையராகையாலே,  இம்மண்  ஞாலத்தினை நிலம் பயம்
பொழிதல் முதலாக நால்வேறு நனந்தலை ஓராங்கு நந்த என்பது ஈறாக
எண்ணப்பட்ட    நின்    புகழெல்லாம்    உளவாக    அசைவின்றி
ஆண்டோராவார்  ; அவரல்லர் இம்மண்ஞாலத்தின் ஒரோ விடங்களை
ஆளுவதல்லது முழுதும் ஆளுதல் கூடாதன்றே யெனக்  கூட்டி வினை
முடிவு செய்க” என்பர்.

“ஆண்டோ     ரசையாது    என்பது   பாடமாக்கி  அதற்கேற்ப
உரைப்பாரும்     உளர்.     இதனாற்     சொல்லியது     அவன்
ஆள்வினைச்சிறப்பினை    அவன்    குடிவரலாற்றொடு    படுத்துச்
சொல்லியவாறாயிற்று”.

“எறிந்து     சிதைந்த என்பது முதலாக மறவரொடு என்பது ஈறாக
நான்கடி    வஞ்சியடியாய்   வந்தமையான்,    வஞ்சித்தூக்குமாயிற்று.
அவற்றுள்       முன்னின்ற       மூன்றடிகளின்      ஈற்றுச்சீர்கள்
அசைச்சீர்களாகவும்,   மற்றையடியின்    ஈற்றுச்சீர்   பொதுச்சீராகவும்
இட்டுக் கொள்க. நின்போல் என்றது கூன்”.


 மேல்மூலம்