முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
70.



ளிறுகடைஇய தாள்
மாவுடற்றிய வடிம்பு
சமந்ததைந்த வேல்
கல்லலைத்த தோள்
 5




வில்லலைத்த நல்வலத்து
வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தைக்
குவிமுகி ழூசி வெண்டோடு கொண்டு
தீஞ்சுனை நீர்மலர் மலைந்து மதஞ்செருக்கி
உடைநிலை நீல்லமர் கடந்து மறங்கெடுத்துக்
 10




கடுங்சின வேந்தர் செம்ம றொலைத்த
வலம்படு வான்கழல் வயவர் பெரும
நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்
புறஞ்சொற் கேளாப் புரை தீ ரொண்மைப்
பெண்மை சான்று பெருமட நிலைஇக்
 15




கற்பிறை கொண்ட கமழுஞ் சுடர்நுதற்
புரையோள் கணவ பூண்கிளர் மார்ப
தொலையாக் கொள்கை சுற்றஞ் சுற்ற
வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி
உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை
 20 வணங்கிய சாயல் வணங்கா வாண்மை
இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல்கட னிறுத்த வெல்போ ரண்ணல்
மாடோ ருறையு முலகமுங் கேட்ப
இழுமென விழிதரும் பறைக்குல லருவி
 25


முழுமுதன் மிசைய கோடுதொறுந் துவன்றும்
அயிரை நெடுவரை போலத்
தொலையா தாகநீ வாழு நாளே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு, வண்ணம் - ஒழுகுவண்ணம், தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்,
பெயர் - பறைக்குர லருவி (24)

     (ப - ரை) 3. சமம் ததைந்த வேலென்றது மாற்றார் செய்யும்
சமங்கள் சிதைதற்குக் காரணமாகிய வேலென்றவாறு.

     வேலென்றது வேல்வென்றியினை.

     4, கல்லலைத்த தோளென்றது வலியுடைமையாற்
கல்லையலைத்த தோளென்றவாறு.
     ..................................................................................................
.......................தாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றி கூறிய திறத்தானே
அவற்குள்ள சிறப்புக்களைக் கூறிப் பின்னை வாழ்த்தியவாறாயிற்று.

     (கு - ரை) 1. போர்க் களத்தே ஆண் யானையைச் செலுத்திய
தாளையும். மு. புறநா. 7 : 1.

     2. குதிரைகளோடு பொருத காலின் விளம்பையும்;
"கடுமாகடைஇய விடுபரி வடிம்பின்" (புறநா. 378 : 4)

     3. பகைவர் செய்யும் போர் கெடுதற்குக் காரணமான
வேல்வெற்றியையும். 4. உலகக்கல்லை வருத்திய தோளையும்;
"ஆயிரர், தொட்டெடுக்க லாவுலம்மொர் தோளி னேந்தி யாடினான்"
(சீவக. 690). 5. வில்லை வருத்திய நல்ல வெற்றியையும்.

     6-7. வண்டு பாட்டைப் பாடுதலில்லாத குளிர்ந்த பனையினது
குவிந்த அரும்பு போன்ற கூர்மையையுடைய வெள்ளிய குருத்தை
அணிந்து கொண்டு; "வட்கர் போகிய வளரிளம் போந்தை, உச்சிக்
கொண்ட வூசி வெண் டோடு" (புறநா. 100 : 3 - 4)

     8. கண்ணுக்கு இனிதாகிய சுனையிலுள்ள குவளையாகிய
நீர்ப்பூவைச் சூடி மதம் மிக்கு; "வெண்டோட் டசைத்த வொண்பூங்
குவளையர்" (பதிற். 58 : 2)

     9. பகையரசருடைய நிலையாகிய நல்ல போரை வென்று
அவரது மாறுபாட்டைக் கெடுத்து. நிலை நல்லமர் - நாடோறும்
செய்து வரும் நல்ல போர் (பதிற். 4-ஆம் பதிகவுரை)

     10-11. மிக்க சினத்தையுடைய பகையரசரது தலைமையை
அழித்த வென்றி உண்டாதற்குக் காரணமான சிறந்த கழலை அணிந்த
வீரர்களுடைய தலைவனே. கழலணிதல் வெற்றிக்குக் காரணமாதல்:
"கடுங்கண் மறவன் கழல்புனைந்தான் காலை, நெடுங்கடைய நேரார்
நிரை" (பு. வெ. 2)

     தோடுகொண்டு (7) செருக்கிக் (8) கடந்து கெடுத்துத் (9)
தொலைத்த (10) வயவர் பெரும என முடிக்க. வயவர் பெரும:
அனைத்தும் ஒரு பெயர்.

     1-11. தாளையும், வடிம்பையும், வேலையும், தோளையும்
வலத்தையும் உடைய பெரும என இயையும்.

     12. விளையாட்டிடத்தும் பொய் கூறுதலை யறியாமைக்குக்
காரணமான வாய்மையையும்; நகை - விளையாட்டு; "நகையுள்ளு
மின்னா திகழ்ச்சி" (குறள். 995)

     12-3. பகைவரது புறங்கூறுஞ் சொல்லைக்கேளாத, குற்றம்
நீங்கிய சிறந்த அறிவையும் உடைய; "நல்ல போலவும் நயவ
போலவும், தொல்லோர் சென்ற நெறிய போலவும், காத னெஞ்சினும்
மிடைபுகற் கலமரும், ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளாது"
(புறநா.58 : 24 - 7)

      14. கட்புலனுக்கு தோன்றும் அமைதித் தன்மை மிக்குப்
பெரிய மடமென்னும் குணம் நிலைபெற்று; 'பெண்மையாவது
கட்புலனாயதோர் அமைதித்தன்மை' (தொல். கிளவி. 57, ந.). மடன்
- செவிலியர் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை' (தொல்.
களவு. 8, ந.)

     15-6. கற்பு என்னும் குணம் தங்குதல்கொண்ட, மணம்
பரக்கின்ற ஒளி விடுகின்ற நெற்றியையுடைய உயர்ந்தோளுடைய
கணவ, ஏழரசர் முடியாற் செய்த ஆரமாகிய ஆபரணம் விளங்குகின்ற
மார்பையுடையோய்.

     வாய்மையையும் (12) ஒண்மையையும் உடைய (13) புரையோன்
கணவ என முடிக்க; புரையோள் கணவ: அனைத்தும் ஒரு பெயராய்
நின்றது; "செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை, மறுவில் கற்பின்
வாணுதல் கணவன்" (முருகு. 5 - 6, ந.)

     18. 'கேள்வியின்' என்றிப்பின் நன்று.

     17-8. அழியாத கோட்பாட்டையுடைய மந்திரி முதலிய
சுற்றத்தார் சூழவிருப்ப, வேள்விகளைச் செய்ததனால் தேவர்களை
உண்பித்தாய். சுற்றஞ் சுற்றல்: "சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல்
செல்வந்தான், பெற்றத்தாற் பெற்ற பயன்" (குறள், 524)

     18-9. வேதத்தை ஓதினமையால் உயர்ந்த நிலையையுடைய
தேவருலகத்திலுள்ள முனிவரை இன்புறச் செய்தாய். 20.மு. பதிற்
48 : 9.

     20-22. பெரியோரிடத்தே வணங்கிய மென்மையையும்
பகைவர்க்கு வணங்காத ஆண்மையையும் உடைய இளந்துணையாகிய
புதல்வர்களைப் பெற்றமையால் நின் குலத்து முன்னோர்களான
பிதிரர்களைக் காப்பாற்றி, இல்லறத்தார்க்கு உரிய பழைய கடன்களைச்
செய்து முடித்த, வெல்லும் போரைச் செய்யும் தலைவனே. பேணி
இறுத்தவென்க.

     ஒருவன் பிறக்கும் பொழுதே உண்டாகும் கடன்களாதலால்,
'தொல்கடன்' என்றார்.

     17-22. இவ்வடிகளில் இல்லறத்தாரால் இயல்பாக இறுக்கப்படும்
தேவர் கடன், முனிவர் கடன், தென்புலத்தார் கடன் என்னும்
மூவகைக் கடன்களும் கூறப்பட்டன (குறள். 7-ஆம் அதி.
அவதாரிகை, பரிமேல்.)

     24. பறைக்குரலருவி (புறநா. 126 : 8, 229 : 14; சிலப். .25 : 28)

     23-4. கற்பக முதலிய செல்வத்தையுடைய தேவர் வாழும்
உலகமும் கேட்கும்படி, இழுமென்னும் அனுகரண ஓசை
உண்டாகும்படி கீழே இறங்குகின்ற பறையோசையைப் போன்ற
ஓசையையுடைய அருவிகள்.

     இழுமென இழிதரும் அருவி: முருகு. 316; "இழுமென்றது
வந்தீங்கிழியு மருவி" (சிலப். குன்றக்.)

     25-7. பெரியனவாகிய உச்சியையுடைய சிகரங்கள் தோறும்
நிறைந்து விளங்கும் அயிரையென்னும் உயர்ந்த மலையைப்போல, நீ
வாழும் நாள் அழிவில்லாததாகுக.

     மலைபோல வாழ்கவென்றல்: "நடுக்கின்றி நிலியரோ வத்தை
யடுக்கத்து................................பொற்கோட் டிமயமும் பொதியமும்
போன்றே" (புறநா. 2 : 20 - 24); "விளங்கொளி யிமய மென்னும்,
பொன்னெடுங் குன்றம் போலப் பூமிமே னிலவி" (சீவக. 2417)

     (பி - ம்) 6. கவண்டிசை. 26. நேருயர் நெடுவரை.      (10)

     இதன் பதிகத்து ஒரு தந்தை (2) என்றது பொறையன்
பெருந்தேவியின் பிதாவுடையது ஒரு பெயர்.

     6-7. வேள்வி ஆக்கிய பொழுதின் அறத்துறை போகியென்றது
யாகம் பண்ணின காலத்திலே மற்றுள்ள அறத்துறைகளையும் செய்து
முடித்தென்றவாறு.

     8. மாயவண்ணனை மனனுறப்பெற்று என்றது திருமாலை
வழிபட்டு அவனுடைய மனம் தன்பாலே ஆம்படி பெற்றென்றவாறு.

     9. ஒகந்தூரீத்து என்றது அம்மாயவண்ணனுக்கு ஒகந்தூரென்ற
ஓர் ஊரைக் கொடுத்தென்றவாறு.

     10. புரோசு மயக்கி யென்றது தன் புரோகிதனிலும் தான்
அறநெறி யறிந்தென்றவாறு. சிறுபுறமென்றது சிறுகொடை.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

10. பறைக்குர லருவி
 
70.களிறுகடைஇய தாள்
மாவுடற்றிய வடிம்பு
சமந்ததைந்த வேல்
கல்லலைத்த தோள்
 
5வில்லலைத்த நல்வலத்து
வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தைக்
குவிமுகிழூசி வெண்டோடு கொண்டு
தீஞ்சுனை நீர்மலர் மிலைந்துமதஞ் செருக்கி
உடைநிலை நல்லமர் கடந்து மறங்கெடுத்துக்
 
10கடுஞ்சின வேந்தர் செம்ம றொலைத்த
வலம்படு வான்கழல் வயவர் பெரும
நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்
புறஞ்சொற் கேளாப் புரைதீ ரொண்மைப்
பெண்மை சான்று பெருமட நிலைஇக்
 
15கற்பிறை கொண்ட கமழுஞ் சுடர்நுதற்
புரையோள் கணவ பூண்கிளர் மார்ப
தொலையாக் கொள்கைச் சுற்றஞ் சுற்ற
வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி
உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை
 
20வணங்கிய சாயல் வணங்கா வாண்மை
இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல்கட னிறுத்த வெல்போ ரண்ணல்
மாடோ ருறையு முலகமுங் கேட்ப
இழுமென விழிதரும் பறைக்குர லருவி
 
25முழுமுதன் மிசைய கோடுதொறுந் துவன்றும்
அயிரை நெடுவரை போலத்
தொலையா தாகநீ வாழு நாளே.
 

துறை  : செந்துறைப்பாடாண் பாட்டு.
வண்ணம்  : ஒழுகு வண்ணம்.
தூக்கு  : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர்   : பறைக்குர லருவி.

 1 - 5. களிறு ................ நல்வலத்து.

உரை : களிறு கடைஇய தாள் -களிறுகளை நெறியறி்ந்து செலுத்திப்
பயின்ற  தாளினையும்  ;  மா  வுடற்றிய  வடிம்பு  -  குதிரைகளைப்
பொருதற்குச்  செலுத்திப்  பயின்ற  தாள்  விளிம்பினையும்  ;   சமம்
ததைந்த   வேல்  -  பகைவர்  செய்யும்  போரைக்  கெடுத்த  வேற்
படையினையும்  ; கல் அலைத்த தோள் - கல்லொடு பொருது பயின்ற
தோளினையும்  ;  வில் அலைத்த நல்வலத்து - வில்லேந்திப் பொருது
பகைவரை வருத்திய நல்ல வெற்றியினையுமுடைய (வயவர்.11) எ - று.
 

களிற்றின்மேலே     யிருந்து செலுத்தும் வீரர்  அதன் பிடரிக்கண்
இருக்கும்  கயிற்றிடையே  தம்  தாளைச்  செருகி  முன் தாளால் தம்
குறிப்பினையுணர்த்திச்  செலுத்துப  வாதலின்,  அச்  சிறப்புக் குறித்து,
அவர்  தாளை,  “களிறு  கடைஇய தாள்” என்றார். குதிரைமேலிருந்து
பொரும் குதிரை வீரர், தம் தாளின் அகவிளிம்பால், அவற்றிற்குத் தம்
குறிப்பை  யுணர்த்திச்  செலுத்துப வாகலின், அச்சிறப்பு  நோக்கி, “மா
வுடற்றிய  வடிம்பு” என்றார். வடிம்பு, தாளின் விளிம்பு.  “வடிம்பலம்ப
நின்ற  பாண்டியன்” என்னும் வழக்குண்மை காண்க.  வேலும் வாளும்
என்றவற்றுள்,   வேல்   சிறந்தமையின்    அதனை  யெடுத்தோதினா
ராகலின்,   வாள்   வன்மையும்   கூறியவாறாகக்   கொள்க.   இனித்
தோள்வன்மைக்கு,   கற்றூணொடு   பொருது   மற்பயிற்சி   பெற்றுக்
காழ்ப்புற்றிருப்பது கூறுவார், “கல்லலைத்த தோள்” என்றார். இவ்வாறு
படைவீரர்க்கு  வேண்டும்  சிறப்பியல்களுள்  களி றூர்தல், மாவூர்தல்,
வேல்   வாட்போர்,   மற்பயிற்சி  என்பவற்றைக்  கூறி,  வில்வன்மை
இன்றியமையாமை பற்றி, “வில்லலைத்த நல்வலத்து வயவர்” என்றார்.

இனி,  சமம் ததைந்த வேல் என்றற்கு, “மாற்றார் செய்யும் சமங்கள்
சிதைதற்குக்  காரணமாகிய  வேலென்றவா”  றென்றும்,  “வேலென்றது
வேல்   வென்றியினை”   யென்றும்,   “கல்லலைத்த   தோளென்றது
வலியுடைமையால்  கல்லை  யலைத்த  தோள்  என்றவா”  றென்றும்
பழையவுரைகாரர் கூறுவர்.

இதனால்,  தாளினையும்,   வடிம்பினையும்,   வேற்படையினையும்,
தோளினையும், வில்லினையு முடைய வயவர் எனக் கூட்டி முடிக்க.

6 - 11. வண்டிசை................பெரும.

உரை : வண்டிசை  கடாவா - வண்டினம்   மொய்த்துப்  பாடுதல்
இல்லாத  ;  தண்  பனம்  போந்தை - தண்ணிய பனையினது ; குவி
முகிழ்  ஊசி  வெண்  தோடு  கொண்டு  - குவிந்த அரும்பு போன்ற
கூர்மையையுடைய  வெள்ளிய பனங்குருத்தோடு ; தீஞ்சுனை  நீர்மலர்
மிலைந்து  -  இனிய  சுனையிடத்து  மலர்ந்த  குவளைப்பூ  விரவிய
கண்ணியைச்  சூடி  ;  மதம்  செருக்கி  - போர்க்கு வேண்டும் மதம்
மிகுந்து  ; கடுஞ்சின வேந்தர் - மிக்க சினத்தையுடைய பகை மன்னர்
;  உடைநிலை  நல் அமர் கடந்து - என்றும் தமக்கே யுடைமையாகப்
பெற்ற    நிலைமையினையுடைய   நல்ல   போர்களை   வஞ்சியாது
பொருதழித்து  ;  மறம்  கெடுத்து  - அவருடைய போர்வன்மையைச்
சிதைத்து    ;    செம்மல்   தொலைத்த   -   இறுதியாக   அவரது
தலைமையினையு மறக் கெடுத்த ; வலம்படு வான்கழல் வயவர் பெரும
- வெற்றி பொருந்திய பெரிய கழலணிந்த வீரர்க்குத் தலைவனே எ- று.

வெண்     தோடு கொண்டு நீர்மலர் மிலைந்து, செருக்கி,  கடந்து,
கெடுத்து தொலைத்த வயவர் என்று கூட்டி, அவர்கட்குப்  பெரும என
இயைக்க. வயவர் பெரும என்பதனை ஒரு பெயராக்கிச்  சேரமானுக்கே
ஏற்றி முடிப்பினுமாம்.
 

பனந்தோட்டோடு      குவளைப்பூவை     விரவித்    தொடுத்த
கண்ணியையணிவது   சேரநாட்டு   வீரர்க்  கியல்பாதலால்,  ஈண்டும்
அதனையெடுத்தோதினார். பனங்குருத்தில்

தேனின்மையின் வண்டினம் மொய்த்துப் பாடுதல் இல்லையாதலால்,
“வண்டிசை  கடாவாத்  தண்பனம்  போந்தை”  யென்றும்,  அதனை
அழகிதாகத்  தொடுத்தணிந்தவழி, பூ வென்று கருதி மூசும் வண்டினம்
வறிது மீளாமைப்பொருட்டு, வேறு குவளை, வேங்கை, வாகை முதலிய
பூக்களை   விரவித்   தொடுத்தணியும்   இயல்பினால், “வெண்தோடு
கொண்டு  தீஞ்சுனை  நீர்மலர்  மிலைந்து”  என்றும் கூறினார். பனங்
குருத்தால்  குவிந்த  அரும்புபோல  முடைந்தது ஊசி போலக் கூரிதா
யிருத்தல்பற்றி,  “குவி  முகிழ்  ஊசி  வெண்தோடு”  என்பாராயினர் .
“வட்கர்   போகிய   வளரிளம்  போந்தை,  உச்சிக்  கொண்ட  வூசி
வெண்டோடு” (புறம். 100) என்று பிறரும் கூறுதல் காண்க . தீஞ்சுனை
நீர்மலர்  என்றற்கு  நீலமலர் சிறப்புடைத் தாயினும், குவளைப்  பூவே
போந்தையிற்  றொடுக்கும் பொற்புடைமையால், அது கொள்ளப்பட்டது
.  “வெண்தோட்  டசைத்த வொண்பூங் குவளையர்” (பதிற். 58) என்று
பிறரும்   கூறுப.  போருடற்றுதலும்  அதன்கண்  வெற்றி  பெறுதலும்
தமக்கு   நிலையாகக்   கொண்டு   சிறக்கும்  வேந்தரென்பார், பகை
வேந்தரை,   கடுஞ்சின   வேந்த  ரென்றும்,  “உடைநிலை நல்லமர்”
என்றும்   சிறப்பித்தார்.உடைநிலை   யென்பது,   “உடைப்  பெருஞ்
செல்வம்”  (பழ.  200)  என்பதுபோல  நின்றது  . இவ்வியல்பினரான
வேந்தரையும்   வென்று   அடிப்  படுத்திக்  கொண்டமை  தோன்ற,
“செம்மல்  தொலைத்த” என்றார் . காலிற் கழல் யாப்பு வெற்றி பெரும்
வீரர்க்கே   பெருமை   தருதலின்,  “வலம்படு  வான்கழல்  வயவர்”
என்றாரென   வறிக   .   வென்றி  பெறுதற்குக்  காரணமான சிறந்த
கழலென்பாரு முளர்.

12 - 16. நகையினும்...........................மார்ப.

உரை : நகையினும் பொய்யா வாய்மை - விளையாட்டானும் பொய்
கூறுதலை யில்லாத வாய்மையினையும் ; பகைவர் புறஞ்  சொல் கேளா
-     பகைவர்தம்    புறத்தே    இகழ்ந்து    கூறும்    சொற்களை
ஏறட்டுக்கொள்ளாத   ;   புரைதீர்   ஒண்மை   -   குற்றம்  நீங்கிய
அறிவினையும்  ; பூண் கிளர் மார்ப - பூணார மணிந்த  மார்பினையும்
உடையோய்;  பெண்மை  சான்று  -  நாணம் நிறைந்து ; பெரு மடம்
நிலைஇ  -  பெரிய  மடமென்னும்  குணம் நிலைபெற்று ; கற்பு இறை
கொண்ட - கற்பு நெறிக்கண்ணே தங்கின ; கமழும் சுடர் நுதல் மணம்
கமழும்  ஒளி  பொருந்திய நெற்றியினையுடைய; புரையோள் கணவ -
உயர்ந்தவட்குக் கணவனே எ - று.

பொய்யாமை, அறம் பலவற்றுள்ளும் சிறந்தமை யுணர்ந்து அதனை
விளையாட்டினும்    நெகிழாது   ஓம்பும்   நற்பண்பினை   வியந்து,
“நகையினும்  பொய்யா  வாய்மை”  என்றார். விளையாட்டாகக் கூறும்
பொய்யார்க்கும்   என்றும்   எத்துணையும்   தீமை  பயவாதாயி்னும்
கொள்ளற்பால தன்றெனத் தள்ளி யொழுகுவது வாய்மையாம் என்றற்கு
நகையினும்  பொய்யாமை என்னாது “பொய்யா வாய்மை” என்றாரென
வறிக  .  நகை,  விளையாட்டு  ; “நகையேயும் வேண்டற்பாற் றன்று”
(குறள்.  871.)  பொய்யா  வாய்மை,  பொய்யாமையாகிய  வாய்மை  ;
“பொச்சாவாக்     கருவி”    (குறள்.    53)       என்புழிப்போல .
பகைவர்          எஞ்ஞான்றும்       புறத்தே        குற்றங்கூறி
இகழ்வது    இயல்பாதலின்,    அதனைக்    கேட்டு    மனவமைதி
குலைவதினும், கேளாது அவரை வேரொடு தொலைத்தற்குரிய காலமும்
கருவியும்   இடமும்   நோக்கி   யிருத்தல்   அறிவுடை   வேந்தற்கு
ஆண்மையும்  புகழும்  பயத்தலின்,  “பகைவர்  புறஞ்சொற்  கேளாப்
புரைதீர்  ஒண்மை”  யென்றார்  .  புரைதீர்  ஒண்மை யென்றதனால்,
பகைவர் புறத்தே இனிமை தோன்றக் கூறுவனவற்றையும் கொள்ளாமை
கூறியவாறாயிற்று  .  “நல்ல போலவும்  நயவ போலவும், தொல்லோர்
சென்ற  நெறிய  போலவும்,  காதனெஞ்சினும்  மிடைபுகற்  கலமரும்,
ஏதின்   மாக்கள்   பொதுமொழி  கொள்ளாது”,  (புறம்.  58)  என்று
சான்றோர் கூறுதல் காண்க . வாய்மையும் ஒண்மையும் முறையே உரை
யுணர்வு  கட்கு அணியாயினமையின், உடற்கு அணியாகும் பூணினை,
“பூண்கிளர் மார்ப” என்றொழிந்தார்.
 

இனி,     அரசமாதேவி்யின் நலம் கூறுவார், நாணமே உருவாய்க்
கொண்டு   விளங்கும்   ஒட்பத்தை,  “பெண்மை  சான்று”  என்றார்.
பெண்மை,   பெண்கட்குரிய   அமைதித்தன்மையாயினும்,    ஈண்டுச்
சிறப்புடைய நாண்மேல்  நின்றது . பெண்டிரின் உருவு நாணத்தாலாய
தென்பதனை,  “நாண்மெய்க்  கொண்  டீட்டப்பட்டார்”  (சீவக.  1119)
என்று  பின்வந்த சான்றோரும், “பெண்மை தட்ப நுண்ணிதிற் றாங்கி”
(நற்.  94) எனப் பண்டைநாளை இளந்திரையனாரும் கூறுதல் காண்க .
இனிப்   பெண்மை   சான்றென்றற்கு,  பெண்பாற்குரிய  வெனப்பட்ட
(தொல்.  பொ.  பொ.  15) “செறிவும், நிறையும், செம்மையும், செப்பும்,
அறிவும், அருமையும்” நிறையப்பெற்று என்றுமாம் . மடமாவது,  தான்
தன்    அறிகருவிகளால்   ஆராய்ந்து   கொண்டதனை   எத்துணை
இடையூறும்   இடையீடும்   எய்தினும்  விடாமை.  இஃது  அறிவின்
திட்பத்தால் விளையும் பயனாதலின் “பெருமடம்” என்றார். தான் தன்
வாழ்க்கைக்குத் துணையாகக் கொண்ட காதலற்கு நலந்தருவன வன்றிப்
பிறவற்றின்பால்  மடம்பட  நிற்றல்பற்றி,  மடம்   எனப்படுவதாயிற்று.
ஈத்துவக்கும்  இன்பமும்  புகழும் கருதுவோர் பிறவற்றின் பால் மடம்
படுதல்பற்றி,  கொடைமடம்  படுதல்  போல்வது  ; இதற்கு வேறு பிற
கூறுதலுமுண்டு   .   கற்பாவது,   தன்   மென்மைத்   தன்மையைப்
பெற்றோராலும்  சான்றோராலும் நூன்முகத்தாலும் இயற்கை யறிவாலும்
அறிந்து,  எக்காலத்தும் தன்னைப் பாதுகாத்தொழுகும் அறிவுடைமை .
நினைவு,  சொல்,  செயல்  என்ற  மூன்றும்  கற்புநெறியே  நிற்றலின்,
“கற்பிறை  கொண்ட  புரையோள்” என்றார் . இனி, இதற்குக் கற்பால்
இறைமைத்   தன்மைபெற்ற  புரையோள்  என்றுரைப்பினு  மமையும்.
ஈண்டுக்  கூறப்படாது  எஞ்சிநிற்கும்  நற்குண நற்செய்கைகளெல்லாம்
அகப்பட,   “புரையோள்”   என்றார்   .  சொல்லுக்கு  வாய்மையும்,
நினைவுக்கு  ஒண்மையும்போல  உயிர்வாழ்க்கைக்குத் துணைமையாம்
இயைபுபற்றி, “புரையோள் கணவ” என்பதை இடையே கூறினார்.

17 - 19. தொலையா.......................இன்புறுத்தினை.

உரை : தொலையாக்   கொள்கைச்   சுற்றம்  சுற்ற  -  குன்றாத
கோட்பாட்டினையுடைய   சான்றோராகிய  சுற்றத்தார்  நீங்காது  சூழ
வேள்வியின்  கடவுள்  அருத்தினை  -  போர்க்களத்தே  பகைவரை
வென்று   செய்யும்   களவேள்வியால்  வெற்றிக்கடவுட்குப் பலியூட்டி
அதனை மகிழ்வித்தாய்  ; உயர்நிலை  யுலகத்து  ஐயர் - வீரருலகத்து
வாழும் சான்றோரை ; கேள்வி  இன்புறுத்தினை  -  அவர்    செய்த
வீரச்செயல்களைப்    புலவர்    பாட    இருந்து    கேட்குமாற்றால்
மகிழ்வித்தாய் எ - று.
 

உயிர்க்கிறுதி      வந்தவிடத்தும்       அறத்திற்      றிரியாக்
கோட்பாட்டையுடையராய்  வேந்தற்கு மெய்ந்நிழல்போலப் பின்சென்று
உறுதியாவன    ஆற்றும்    உள்ளமுடையராதலின்,   “தொலையாக்
கொள்கைச்   சுற்றம்”  என்றார்  .  தம்மாற்  சுற்றப்பட்ட  தலைவன்
செல்வம்   வலி  முதலியன  தொலைந்தவழியும்,  அவனை  நீங்காது
பழைமை  பாராட்டும் பண்பினராதல் பற்றித் தொலையாக் கொள்கைச்
சுற்றத்தார்   எனச்   சிறப்பித்தாரென  வறிக  .  “பற்றற்ற  கண்ணும்
பழைமை  பாராட்டுதல்  சுற்றத்தார்  கண்ணே  யுள  . “ (குறள். 521)
என்று  ஆசிரியர்  கூறுதல்  காண்க  .  வெல்போர ண்ண லாதலின்,
வெற்றி யெய்துந்தோறும் களவேள்வி செய்து கடவுளரை அருத்தினை”
என்றார். “அரசுபட வமருழக்கி, முரசுகொண்டு களம் வேட்ட, அடுதிற
லுயர்புகழ்  வேந்தே”  (மதுரைக்.  128-30) என்று சான்றோர்  கூறுதல்
காண்க. இனி, வேள்வியெனப் பொதுப்படக் கூறினமையின்,  பார்ப்பார்
வேட்கும்   வேள்விக்கும்  துணைபுரிந்து  வேட்பிக்கு  முதல்வனாய்க்
கடவுளரை இன்புறுத்தினை யென்பாரு முளர்.

கேள்வி     யென்புழி,  ஏதுப்பொருட்டாய இன்னுருபு விகாரத்தாற்
றொக்கது  . அறப்போர் புரிந்து உயிர்துறந்தோர் வீரருறையும் துறக்கம்
புகுவராதலின்,  அவர்களை  “உயர்நிலை  யுலகத்  தையர்”  என்றார்.
அவருடைய ஒழுகலாற்றையும் போர்த்திறனையும் புலவர் பாட, பாணர்
இசைக்க, கூத்தர் கூத்தியற்றக் கண்டும் கேட்டும் சிறப்பித்தலால் அவர்
இன்புறுவர்  என்ற  கருத்தால், “கேள்வியின் உயர்நிலை யுலகத்தையர்
இன்புறுத்தினை”  யென்றார்.  இக்கொள்கை  பத்தாம் நூற்றாண்டிலும்
இருந்து  வந்தது என்றற்குத் திருத்தக்கதேவர் எழுதிய சீவகசிந்தாமணி
சான்று  பகர்கின்றது  .  இனி,  ஈண்டுக்  கூறிய ஐயரை முனிவராக்கி,
அவருரைத்த மறைகளை யோதுவது அவர்க்கு இன்பம் செய்யுமென்று
கொண்டு, இது கூறினாரென்பாரு முளர்.

20 - 22. வணங்கிய....................................அண்ணல்.

உரை : வணங்கிய    சாயல்  -   நட்பமைந்த   சான்றோர்க்குப்
பணிந்தொழுகும்   மென்மையினையும்   ;   வணங்கா  ஆண்மை -
பகைவர்க்கு  வணங்காத  ஆண்மையினையுமுடைய  ;  இளந்துணைப்
புதல்வரின் - இளந்துணையாகிய மக்களைக்கொண்டு ; முதியர்ப்பேணி
-  முதியராகிய  பெரியோர்க்குரிய தொண்டினைச் செய்வித்து ; தொல்
கடன்  இறுத்த  -  தொன்றுதொட்ட  தம்  கடமையினை  ஆற்றிய ;
வெல்போர்  அண்ணல் - வெல்லுகின்ற  போரையுடைய  அண்ணலே
எ - று.

தாம் பிறந்த குடியின் நலத்தைப் பேணும் நண்பமைந்த சான்றோர்க்கு
அடங்கியொழுகும்    நல்லாற்றினை   “வணங்கிய  சாயல்”  என்றார்.
அடங்கியொழுகுமிடத்து    மென்மைப்   பண்பல்லது  பிறிதொன்றும்
தோன்றாமையின் “சாயல்” என்றும், வணக்கமில்வழி முதியோரால் தம்
தொல்குடிவரவும்   தொல்லோர்  மேற்கொண்டு  சிறந்த  தொன்னெறி
மாண்பும்  உணர்த்தப்படாவாகலின்,  “வணங்கிய”  என்றும் கூறினார்.
இளையார்பால்  தோன்றும்  அடக்கம்  சிறப்பாதல்  பற்றி,  அதனை
முதற்கண்வைத்   தோதினார்.   இளமையிலே   மானத்தின்   நீங்கா
ஆண்மை  நற்குடிப்  பிறந்தோர்க்குக்  கருவிலே  வாய்த்த திருவாதல்
தோன்ற  “வணங்கா ஆண்மை” யென்றார். வணங்காமைக் கேதுவாகிய
ஆண்மை “வணங்கா ஆண்மை” யெனப்பட்டது. ஆடவர் பிறதுறைக்கு
வேண்டப்படுதலின்,   முதியர்ப்பேணும்  நல்லறத்தை  “இளந்துணைப்
புதல்வரின்”  ஆற்றினான்  என்றார். முதியோர், முதுமை யெய்துமுன்
நாடு  காத்தற்கு  “அறிவு  வேண்டிய  வழி  அறிவு  உதவியும் வாள்
வேண்டுவழி  வாளுதவியும்” (புறம் . 179) துணைபுரிந்தோர் . அவரை
முதுமைக்கண்  பேணுதல் நன்றியறிதலாகிய பேரறமாகலின், “முதியர்ப்
பேணித்  தொல்கடன்  இறுத்த அண்ணல்” என்றார் . இனி, முதியோ
ரென்றது  பிதிரர்க  ளென்றும், அவர்க்கு, இல்வாழ்வார் செய்தற்குரிய
கடன்,    மக்களைப்பெறுதல்   என்றும்   கொண்டு,   இளந்துணைப்
புதல்வர்ப்பேற்றால்  முதியராகிய பிதிரர்க்குரிய தொல்கடனை இறுத்தா
யென்றும்   கூறுப  .  வேறு  சிலர்  தாய்மாமன்  முதலாயினார்க்குச்
செய்யுங்  கடன்  தொல்கடனென்றும்  தந்தையர்க்குச் செய்யுங் கடன்
பிதிர்க்கடனென்றும்    கூறுவர்   .   முதுமையுற்ற   சான்றோர்க்கும்
முனிவரர்க்கும்  தாம் பெற்ற இளந்துணை மக்களைத் தொண்டு செய்ய
விடுத்தலாகிய     செயல்     வடநாட்டினும்     நிலவிற்றென்பதற்கு
இராமாயணமும்   பாரதமும்  சான்று  பகர்கின்றன  .  மகப்பேற்றால்
பிதிர்க்கடன்,   கழியுமென்னும்  வடவர்கொள்கை,  தமிழ்நாட்டவர்க்கு
இல்லை  . திருவள்ளுவர், மகப்பேறு பிதிர்க்கடனிறுக்கும் வாயிலெனக்
கூறாமையே இதற்குச் சான்ற கரியாம் தொல்லோர்க்கும் இறுத்தற்குரிய
கடனாதலின்,     தொல்கடன்     எனப்பட்டது.       இக்காலத்தும்
தமிழ்மக்களிடையே  முதியோர், இளையோர் மணம்புணர்ந்து  தம்பால்
வாழ்த்துப்    பெறுவான்   அடிவீழ்ந்து   வணங்குங்கால்,   “விரைய
மக்களைப்   பெற்றுத்   தருக   ;  அம்  மக்கள்  கையால்  தண்ணீ
ரருந்தினால்  எங்கள்  உயிர் சாந்திபெறும்” என்று வாழ்த்தும் வழக்க
முண்மை    இக்கருத்தை    வலியுறுத்தும்    .    இவ்    வழக்குச்
சேரவேந்தர்பாலும்    இருந்ததென்றற்கு,    “கடல்பிறக்    கோட்டிய
செங்குட்டுவனைக்  காசறு  செய்யுட்  பாடிய  பரணர்க்கு,  அவன்தன்
மகன் குட்டுவன் சேரலைக் கொடுத்த செய்தியை இப்  பதிற்றுப்பத்தின்
ஐந்தாம் பதிகம் கூறுவது போதிய சான்றாகும்.
 

இனி,     வணங்கிய  சாயலையும்  வணங்கா  ஆண்மையினையும்
சேரமானுக்கே  ஏற்றி  வெல்போர் அண்ணலென்பதனோடு முடிப்பாரு
முளர்.

23 - 27. மாடோர்....................................நாளே.

உரை : மாடோர் உறையும் உலகமும் கேட்ப - தேவர்கள் வாழும்
பொன்னுலகத்தும்  கேட்கும்படி  ;  இழும்  என இழிதரும்  பறைக்குர
லருவி   -   இழுமென்னு  மனுகரணமுண்டாக  வீழும்  பறைபோன்ற
முழக்கத்தை  யுடைய  அருவிகள் ; முழுமுதல் மிசைய கோடுதொறும்
துவன்றும் - மிகப் பெரியவாகிய உச்சியினையுடைய   முடிகள்தோறும்
நிறைந்து விளங்கும் ; அயிரை நெடுவரை போல - அயிரை யென்னும்
நெடிய மலையைப்  போல  ;  நீ  வாழும் நாள் தொலையாதாக - நீ
வாழும் வாழ்நாள் குறையாது பெருகுமாக எ - று.
 

மாடு,  பொன். அவ்வுலகினையுடைய தேவரை “மாடோர்” என்றார்.
மண்ணுலகத்தேயன்றிப்      பொன்னுலகத்தவரும்       கேட்குமாறு
முழங்குகின்ற  தென்றற்கு,  “உலகமும்  கேட்ப” என்றார். அருவியின்
நீரொழுக்கு  இழுமெனும்  அனுகரண வோசையும், கீழே  வீழ்ந்தவழிப்
பறைபோன்ற முழக்கு முடைமையின், “இழுமென விழிதரும்  பறைக்குர
லருவி”  யென்றார்  ;  “இழுமென  இழிதரும்  அருவி” (முருகு. 316)
என்றும்,  “பறையிசை  யருவி”  (புறம்  .  125)  என்றும்  சான்றோர்
கூறுதல்   காண்க   .   இச்   சிறப்புப்பற்றி,   இதற்குப்   பறைக்குர
லருவியென்று   பெயராயிற்றென   வறிக  .  அயிரை,  மேற்குமலைத்
தொடரிலுள்ளதொரு    மலை   ;   இதிற்   பிறக்கும்   அயிரையாறு
மேலைக்கடலில்  விழுகிறது.  அருவி  துவன்றும்  அயிரை நெடுவரை
தொலையாது  நிலைபெறுவதுபோல  நீ  வாழும் நாள் தொலையாதாக
என வாழ்த்தியவாறு  ;  இவ்வாறே  பிறரும்,  “கடவுள்  அயிரையின்
நிலைஇக்,   கேடிலவாக  பெரும   நின்புகழே”  (பதிற்.  79)  என்று
வாழ்த்துதல் காண்க.

இதுகாறும் கூறியது; “வயவர் பெரும, புரையோள் கணவ, பூண்கிளர்
மார்ப,  வெல்போ  ரண்ணல்,  வேள்வியிற்  கடவுள்  அருத்தினை  ;
கேள்வியின்   உயர்நிலை   யுலகத்து   ஐயர்   இன்புறுத்  தினை  ;
ஆதலின்கோடு தொறும் அருவி துவன்றும் நெடுவரைபோல, நீ வாழும்
நாள் தொலையாதாக’ என வினைமுடிவு செய்க.

“இதனாற் சொல்லியது  :   அவன்  வென்றி  கூறிய  திறத்தானே
அவற்குள்ள சிறப்புக்களைக் கூறிப் பின்னை வாழ்த்தியவாறாயிற்று”.


 மேல்மூலம்