முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
71.



அறாஅ யாண ரகன்கட் செறுவின்
அருவி யாம்ப னெய்தலொ பரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பக டுதிர்த்த மென்செந் நெல்லின்
 5




அம்பண வளவை யுறைகுவித் தாங்குக்
கடுந்தே றுறு கிளை மொசிந்தன துஞ்சும்
செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகாரின்
அலந்தனர் பெருமநின் னுடற்றி யோரே
ஊரெரி கவா வுருத்தெழுந் துரைஇப்
 10




போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப
மதில்வாய்த், தோன்ற லீயாது தம்பழி யூக்குநர்
குண்டுக ணகழிய குறுந்தாண் ஞாயில்
ஆரெயிற் றோட்டி வௌவினை யேறொடு
கன்றுடை யாயந் தரீஇப் புகல்சிறந்து
 15




புலவுவில் லிளைய ரங்கை விடுப்ப
மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ
ஆன்பயம் வாழ்நர் கழுவு டலைமடங்கப்
பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றென
 20




அருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதற்
பெருங்களிற் றியானையொ டருங்கலந் தராஅர்
மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி
 25


உரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி
அறிந்தனை யருளா யாயின்
யாரிவ ணெடுந்தகை வாழு மோரே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - நெந்தூக்கு.
பெயர் - குறுந்தாண் ஞாயில்.
(12)

     (ப - ரை) 2. 1அருவியாம்பல் - நீரின் ஆம்பல்; என்றதனாற்
பயன் நீர்க்குறைவற்ற ஆம்பலென்பதாம்; எண்ணின் ஆம்பலை
நீக்குதற்கென்பதுமொன்று.

     ஆம்பலொடு நெய்தலோடு (2) நெல்லை (4) அரிந்து (2) என்று
கொள்க.

     அரிந்து (2) பகடு உதிர்த்த (4) எனக் கூட்டிப் பகட்டானென
உருபு விதிக்க.

     3. செறுவினை மகளிர் மலிந்த வெக்கையென்றது உழவர் பெண்
மக்கள் விளையாடுதற்கு வயலிற் பயிர் கொள்ளாததோரிடம்
இன்மையின். ஆண்டு அவர்கள் மிக்க களமென்றவாறு. வெக்கை -
கடாவிடுங்களம்.

     4. நெல்லிற்கு மென்மை - சோற்றது மென்மை. செந்நெலென்றது
2செந்நெல்லென்னும் சாதியை. 5. அளவைக்கென நான்காவது விரிக்க.

     6. கடுந்தேறு உறு கிளை - கடிதாகத் தெறுதலையுடைய மிக்க
குளவியினம். மொசிந்தனவென்றது மொய்த்தனவாயென்னும்
வினையெச்சமுற்று. 9, உருத்து எழுந்து உரைஇ ஊர் எரி கவரவெனக்
கூட்டுக.

     ஊரெரி கவரப் (9) போர்சுடு கமழ்புகை மாதிரமறைப்பத் (10)
தோட்டி வௌவி (13) என முடிக்க.

     11. 3தோன்றலீயாதென்றது தோன்றாதென்னும் வினையெச்சத்திரி
சொல்; தோன்றலீயாமலெனத் திரிக்க.

     12. குறுந்தாண் ஞாயிலென்றது இடையிடையே மதிலின்
அடியிடங்களைப் பார்க்க அவற்றிற் குறுகிக்குறுகி யிருக்கும்
படியையுடைய ஞாயிலென்றவாறு.

     இவ்வாறு கூறின சாதிப்பண்பானும் படியைத் தாளென்று கூறின
படியானும் இதற்கு, 'குறுந்தாண் ஞாயில்' என்று பெயராயிற்று.

     13. வௌவினையென்றது வினையெச்சமுற்று.

     14. ஆயம் தழீஇயென்றது ஆயங்களை நீ
4புலவுவில்லிளையர்க்குக் கொடுப்ப (15) என்றவாறு.
தரீஇயென்பதனைத் தரவெனத் திரிக்க.

     15. இளையர் அங்கை விடுப்பவென்றது இளையர்
அவ்வாயத்தைத் தங்கள் அங்கையினின்றும் பிறர்க்கு
விடுப்பவென்றவாறு.

     16. கயிறாடாவென்னும் பெயரெச்சமறையை வைகலென்னும்
தொழிற்பெயரோடு முடிக்க. வைகல் - கழிதல். வைகற்பொழுது:
இருபெயரொட்டு.

     17. வாழ்நர் - வாழ்பவர்; இடையர். பயத்தானென விரிக்க.
கழுவுளாவான் அவ்விடையர்க்குத் தலைவனாய் அக்காலத்துக் குறும்பு
செய்திருந்தான் ஒருவன். முன்னர் எயில் (13) என்றது அவன் தனக்கு
அரணாகக் கொண்டிருந்த மதிலினை.

     18. வேறுபுலம் பதி பாழாகப் படர்ந்தென்றது அக்கழுவுள் தலை
மடங்குகையாலே அவனை விட்டு வேறு திறையிடாக் குறும்பர்
நாட்டிலே அந்நாட்டுப்பதி பாழாகச் சென்றவாறு.

     படர்ந்து (18) திறைகொண்டு பெயர்தி (24) எனக் கூட்டுக.

     19. 5விருந்தின் வாழ்க்கை - நாடோறும் புதிதாகக தாங்கள்
தேடுகின்ற பொருள். பெருந்திரு - முன்னே தேடிக் கிடந்த பொருள்.
அற்றெனவென்றது அற்றதெனக் கருதியென்றவாறு. அற்றதென்பது
கடைக்குறைந்தது.

     23. 6பாசம் - பேய். 25. உரவரையும் மடவரையும் என்னும்
7இரண்டாவது விகாரத்தால் தொக்கது. அறிவு - அவர்களறிவு.

     27. வாழுமோரென்புழி, உம்மை அசைநிலை.

     ஆரெயிற்றோட்டி வௌவி அதனையுடைய (13) கழுவுள்
தலைமடங்கு கையாலே (17) வேறுபுலம் படர்ந்து அவ்வேறுபுலத்து
நினக்கு (18) யானையோடு அருங்கலம் திறையிடார்தம் (21) விருந்தின்
வாழ்க்கையொடு பெருந்திருவற்றதெனக் கருதித் தங்கள் (19)
மெய்ந்நடுக்கமிக்கு நின்னை அணங்கெனக் கருதிப் பலபடப்
பரவுதலான் (22) பேய்தான் பற்றினாருயிரை வௌவாது தனக்கு அவர்
பலியிட்டுழி அப்பலிகொண்டு பெயருமாறுபோல நீயும் அவருயிரை
வௌவாது (23) திறைகொண்டு பெயராநின்றாய் (24); இஃதன்றே
இதுபொழுது நீ செய்கின்றது; நின்னை உடற்றியோர்(8) கடுந்தேறு
உறுகிளை துஞ்சும் (6) கூடு கிளைத்த இளந்துணைமகாரைப்போலப்
(7) பெருமானே, அலந்தார்கள் (8); இனிமேல் உள்ளத்து உரவரையும்
மடவரையும் அவரவர் அறிவினைத் தெரிந்து எண்ணி (25)
அவர்களிடத்துச் செய்யும் அருளறிந்து அருளாயாயின் (26),
நெடுந்தகாய், இவண் வாழ்பவர் யார் (27)? நின் ஊழி வாழ்க. (24)
எனக் கூட்டி வினை முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக்கூறி அவற்குப்
பகைவர்மேல் அருள்பிறப்பித்த வாறாயிற்று.

     (கு - ரை) நீங்காத புது வருவாயையுடைய அகன்ற
இடத்தையுடைய வாயில்.

     2. நீரிலே நின்ற ஆம்பலொடும் நெய்தற்பூவோடும் நெல்லை
அறுத்து.

     3. வயலில் தொழில் செய்யும் மகளிர், அவ்விடத்தே
இடமில்லாமையால் மிக நெருங்கிய கடாவிடும் களத்தில்;
வெக்கை - கடாவிடும் களம்.

     4. பருமையையுடைய எருமைகளால் உதிர்க்கப்பட்ட மெல்லிய
செல்நெல்லினது; "ஈடுசால் போர்பழித் தெருமைப் போத்தினால்,
மாடுறத் தெழித்துவை களைந்து காலுறீஇச், சேடுறக் கூப்பிய செந்நெற்
குப்பைகள்" (சீவக. 59). நெல்லுக்கு மென்மையாவது சோற்றினது
மென்மை.

     5. மரக்காலால் அளத்தற்பொருட்டு உறையாகக் குவித்தாற்
போல; "நெல்லின் அம்பண வளவை விரிந்துறை போகிய, ஆர்பதம்"
(பதிற். 66 : 7 - 9)

     4-6. செந்நெல்லுக்குக் குளவி: "கடுப்புடைப் பறவைச் சாதியன்ன
பைதற விளைந்த பெருஞ்செந் நெல்லின்" (பெரும்பாண். 229 - 30)

     6-7. கடுமையாகக் கொட்டுதலையுடைய குளவியினது மிக்க
கிளை தம்மிற் கூடினவாய்த் தூங்கும், செழுமையான கூட்டைக்
கலைத்த இளந்துணை ஆகிய பிள்ளைகளைப்போல.

     8. பெருமானே, நின்னோடு மாறுபட்ட பகைவர் பின் மிக்க
துன்பமுற்றனர்.

     1-8. சேரனுக்குக் குளவிக்கூடும் அவன் பகைவர்க்கு
இளந்துணை மகாரும் உவமை.

     9. சினங்கொண்டு புறப்பட்டுப் புடைபெயர்ந்து உலாவி
ஊர்களை நெருப்பு விரும்பி உண்ணச் செய்தலால்: உரைஇ - உலாவி;
"போர்க் குரைஇப்புகன்று கழித்தவாள்" (புறநா. 97 : 1)

     10. போரின்கண்ணே பகைவர் ஊர்களைச் சுடுகின்ற
கமழ்கின்ற புகை திசைகளை மறைப்ப; எரிபரந்தெடுத்தலென்றும்,
உழபுலவஞ்சியென்றும் இது கூறப்படும்.

     11. மதிலினிடத்தே வெளியே தோன்றாமல் தமது பழியைச்
செய்ய முயல்பவரது; மதில் பின்வரும் கழுவுள் (17) என்னும்
தலைவனுடையது.

     12. ஆழ்ந்த இடத்தையுடைய அகழியையுடைய, குறிய
படிகளையுடைய முடக்கறைகளைப்பெற்ற; ஞாயில் - இஃது அம்புகள்
வைக்கப் பெற்றிருக்கும் முடக்கறை; "ஏப்புழை ஞாயில்", "அம்புடை
ஞாயில்" (பு. வெ. 86, 118) என்று கூறப்படும்.

     13. அருமையான மதிலினது காவலைக் கைப்பற்றிக்
கொண்டாய்; தோட்டி - காவல்; 'நீ, உடன்றோர் மன்னெயி றோட்டி
வையா" (பதிற். 25 : 5)

     12-3. அகழிய எயில், ஞாயில் எனத் தனித்தனி இயைக்க.

     13-4. காளைகளொடு கன்றுகளையுடைய பசுவின் மந்தையை நீ
கைப்பற்றித் தருதலால் விருப்பம் மிக்கு; தரீஇ - தர; எச்சத்திரிபு. இது
மன்னுறு தொழிலாகிய வெட்சியில் பாதீடென்னும் துறையாகும்.

     ஏறும் ஆநீரையும்: "விடையாயம்" (பு. வெ. 1)

     15. எய்த அம்பினையே மீட்டும் எய்தலால் புலால் நாறும்
வில்லையுடைய வீரர் தம் அழகிய கையினின்றும் அவ்வாயுதத்தை
விடுப்ப. புலவுவில் (பதிற். 15 : 12, உரை). இளையர் - வீரர்;
"இளையோர்க்கு மலர்ந்த மார்பினை" (சிறுபாண். 232)

     16. மத்தினிடத்தே கயிறு ஆடாத, கழிதலையுடைய
பொழுதுகளை நினைத்து; "மத்துரறியமனை யின்னிய மிமிழா"
(பதிற். 26 : 3)

     17. ஆனினது பயத்தால் வாழ்கின்ற இடையர் தலைவனான
கழுவு ளென்பவன் தலைவணங்குதலால்; ஆன்பயம் வாழ்நர்:
"ஆய்மகள், அளவிலை யுணவிற் கிளையுட னருத்தி" (பெரும்பாண்.
162-3); "அளைவிலை யுணவி னாய்ச்சியர் தம்மொடும்" (சிலப்.
16 : 3). மடங்க: காரணப் பொருளில் வந்தது. கழுவுளது ஊர்
காமூரென்றும், அது பதினான்குகுடி வேளிரால்
அழிக்கப்பட்டதென்றும் தெரிகின்றது (அகநா. 135 : 11 - 3,
365 : 11 - 2). "பொருமுர ணெய்திய கழுவுள் புறம்பெற்று" (பதிற்.
88 : 7)

     18 ஊர்கள் பாழாகும்படி வேறு நாடுகளிலே சென்று.

     19. புதிதாகத் தாம் தேடும்செல்வத்தோடு தம் முன்னோர் தேடி
வைத்த பெரிய செல்வம் அற்றதெனக் கருதி. 20. தாங்குதற்கு அரிய
போரில் அரியநிலையைத் தடுத்த, புள்ளிகள் பொருந்திய
நெற்றியையுடைய.

     21. பெரிய ஆண்யானைகளோடு அருமையான
ஆபரணங்களைத் திறையாகத் தருதலில்லாதவருடைய (பதிற்.
90 : 6 - 7)

     தரார் (21) விருந்தின் வாழ்க்கையோடு பெருந்திரு அற்றென
(19) என இயைக்க.

     22. உடம்பு நடுங்குதல் மிக்கு, வருத்தும் தெய்வமென்று
நின்னைப் பரவுதலால்.

     23-4. தன்னாற் பற்றப்பட்டாரது உயிரைக் கொள்ளாமல்
தனக்கு இட்ட பலியை மட்டும் ஏற்றுக்கொண்டு நீங்கும் பேய்போலத்
திறைக் கொண்டு நீ மீண்டு செல்கின்றாய்; பால்வரை தெய்வத்தால்
நினக்கு அறுதியிடப்பட்ட நின் நாள்கள் வாழ்க. பேய் பலியைக்
கொள்ளுதல்: மணி. 7 : 84 - 5. நின்னூழி வாழ்க: மதுரைக்.
781 - 2.

     பேய் பலியைப் பெற்றே போதலிற் சுரமஞ்சரியின் இன்பத்தைப்
பெற்றே போகின்ற சீவகனுக்கு உவமையாயிற்றென்பதற்கு மேற்கொள்
(சீவக. 2010, .)

     25-6. அறிவுடையோரையும், அறிவில்லாதோரையும்
அவர்களுடைய அறிவை ஆராய்ந்து நினைத்து அறிந்தனையாய்
அருள் செய்யா தொழிவாயாயின். உரவர், மடவர்: பதிற். 73 : 1.

     27. நெடுந்தகாய், இவ்வுலகத்தில் வாழ்வோர் யார்?

     மு. 'பிண்டம் மேய இருபெரு வேந்தருள் ஒருவர் ஒருவர்
மிகை கண்டு அஞ்சிக் கருமச் சூழ்ச்சியால் திறைகொடுப்ப அதனை
வாங்கினார்க்கு உளதாகிய விளக்கம்' (தொல்: புறத். 8, ந.)

     (பி - ம்) 3. செறிவளை. 17. தலைமயங்க. 18. வேற்றுப்புலம்
22. பராலின்.
                         
          (1)


     1பதிற் .63 : 19 ல் வரும் 'அருவியாம்பல்' என்பதற்கு வேறு
உரை கூறினார்.

     2வெண்ணெல்லும் உண்டாதலின் செந்நெல்லென்னும் சாதி
என்றார்.

     
3பதிற். 12 : 7, உரை.
     
4'ஒள்வான் மலைந்தார், ஒற்றாய்ந்துரைத்தார், புள்வாய்ப்பச்
சொன்னார்' (
பு. வெ. 14) முதலியோர.்
     5விருந்து-புதுமை (தொல். செய்.239)
     6சீவக.653.
     7தொல். தொகைமரபு, 15.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

1. குறுந்தாண் ஞாயில்
 
71.அறாஅ யாண ரகன்கட் செறுவின்
அருவி யாம்ப னெய்தலொ டரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பக டுதிர்த்த மென்செந் நெல்லின்
 
5அம்பண வளவை யுறைகுவித் தாங்குக்
கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும்
செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகாஅரின்
அலந்தனர் பெருமநின் னுடற்றி யோரே
ஊரெரி கவர வுருத்தெழுந் துரைஇப்
 
10போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப
மதில்வாய்த், தோன்ற லீயாது தம்பழி யூக்குநர்
குண்டுக ணகழிய குறுந்தாண் ஞாயில்
ஆரெயிற் றோட்டி வௌவினை யேறொடு
கன்றுடை யாயந் தரீஇப் புகல்சிறந்து
 
15புலவுவில் லிளைய ரங்கை விடுப்ப
மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ
ஆன்பயம் வாழ்நர் கழுவு டலைமடங்கப்
பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றென
 
20அருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதல்
பெருங்களிற் றியானையொ டருங்கலந் தராஆர்
மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி
 
25உரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி
அறிந்தனை யருளா யாயின்
யாரிவ ணெடுந்தகை வாழு மோரே
 

துறை : செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம் : ஒழுகு வண்ணம் சொற்சீர் வண்ணமும்.
தூக்கு : செந்தூக்கு.
பெயர் : குறுந்தாண் ஞாயில்.
 

1 - 8. அறா அ..............................உடற்றியோரே.

உரை : அறாஅ   யாணர்   அகன்கண்   செறுவின்  -  நீங்காத
புதுவருவாயினையுடைய  அகன்ற  இடம்  பொருந்திய  வயலிடத்தே ;
அருவி   ஆம்பல்  நெய்தலொடு  அரிந்து  -  நிறைந்த  பூக்களாகிய
ஆம்பலையும்  நெய்தலையும்  நெல்லுடனே  அறுத்து ;  செறு வினை
மகளிர்   -  தொகுப்பதாகிய  அறுவடைத்தொழில்  செய்யும்  உழவர்
மகளிர்  ;  மெலிந்த வெக்கை - நெருங்கியுள்ள நெற்களத்தின்  கண் ;
பரூஉப்  பகடு  உதிர்த்த  - பருத்த எருமைகள் கடா  விடப்படுதலால்
மிதித்துதிர்த்த  ; மென் செந்நெல்லின் - மெல்லிய செந்நெல்லின் கண்
; அம்பண வளவை உறை குவித்தாங்கு - மரக்கால்களை அளத்தற்காக
நெற்குவையில்  செருகி  வைத்ததுபோல  ;  கடுந்  தேறு உறுகிளை -
கடிதாகக்  கொட்டி  வருத்தும்  மிகுதியான  குளவிகள்  ; மொசிந்தன
துஞ்சும்  செழுங்கூடு  -  தம்மில்  நெருங்கிக்  கூடியிருந்து உறங்கும்
செழுமையான  கூட்டினை  ;  கிளைத்த  -  கலைத்த  ; இளந்துணை
மகாஅரின்  -  இளஞ்சிறார்கள் போல ; பெரும - பெருமானே ; நின்
உடற்றியோர்  - நின்னொடு பொரக் கருதி மாறுபட்டோர் ; அலந்தனர்
- அலமந்து வருந்தலுற்றனர் எ - று.

குளவியினம் தம்மிற் கூடித் தொக்கியிருக்கும் கூடு, நெற்குவைக்கும்,
குளவி,  உறை குவித்துக்கிடந்த அம்பணவளவைக்கும், அக் கூட்டைக்
கலைத்துவிட   இளந்துணைச்  சிறார்கள்,  அவை  கொட்டு  மென்று,
அஞ்சி    மூலைக்கொருவராய்ச்   சிதறி   யோடுதல்,   சேரமானைப்
பகைத்துப் பொருதவர் கெட்டு அலமருதற்கும் உவமமாயின.

யாணர்,     புதுமை  ;  ஈண்டுப்  புதுவருவாய்மேற்று.  ஆர்  வீ
எனற்பாலது   அரு   வி   யென   நின்றது  ;  ஆர்தல்,  நிறைதல்.
ஆர்ந்தென்பது அருந்தென நிற்பது (கலி. 22) போல, ஆர் வீ அரு வீ
யெனத்  திரிந்து  பின்  அருவி  யெனக்  குறுகிற்று. அருவி யாம்பல்
என்பதற்குப்  பழையவுரைகாரர்  நீரின் ஆம்பல் என்று  பொருள்கூறி,
“என்றதனாற்  பயன்  நீர்க்குறைவற்ற  ஆம்பல் என்பதாம்”  என்றும்,
“எண்ணின்  ஆம்பலை நீக்குதற் கென்பதுமொன்று” என்றும்  கூறுவர்.
ஒடு,  எண்ணொடு  அரிந்தெனவே,  நெல்லுடனே  அரிதல் பெற்றாம்.
அரிந்த   நெற்சூட்டைக்   களத்தே   சேர்த்துக்  கடாவிட்டுத் தூற்றி
நெற்பயன்  பெறுபவாதலின்,  “பரூஉப்பக  டுதிர்த்த  மென்செந்நெல்”
என்றார்.   வெக்கை,  நெற்களம்.  அரிந்து  மலிந்த  வெக்கை  யென
முடிக்க.  செறுவினை  மகளிர்  என்புழி  நெல்லரிந்து தொகுத்தலாகிய
வினை   ஈண்டுச்   செறுவினை   யெனப்பட்டது.  மகளிர்   அறிந்து
மலிந்திருக்குமிடம்  வெக்கையாதல் பற்றி, மலிந்த வெக்கை  யென்றார்.
பழையவுரைகாரர்,  “அரிந்து  பகடுதிர்த்த எனக்கூட்டிப் பகட்டானென
உருபு  விரிக்க”  என்பர்.  செறிவளை  மகளிர் என்று பாடங்கொண்டு,
“உழவர்  பெண்மக்கள் விளையாடுதற்கு வயலிற் பயிர் கொள்ளாததோ
ரிடமின்மையின்  ஆண்டு  அவர்கள் மிக்க களம், செறிவளை  மகளிர்
மலிந்த வெக்கையாயிற்”  றென்பர்.   செறுவினை   மகளி   ரென்றே
கொண்டு,   மகளிரை     விளையாட்டு    மகளிராகக்   கொள்ளின்,
வினையினை ஆகுபெயரால் வினைபுரியும் உழவர்க்கேற்றுக.
 

பகடு     கொண்டு  கடாவிட்டுத்   தெழித்தும்  பண்டியிலேற்றிப்
பகட்டினால்   கொணர்வித்தும்   நெற்பயன்  கொள்ளப்  பெறுதலின்,
“பகடுதிர்த்த மென்செந்நெல்” எனப் பகட்டால் விசேடித்தார் ; பிறரும்
“பகடுதரு   செந்நெல்”   (புறம்.  390)  என்றல்  காண்க.  செந்நெல்,
வெண்ணெல்  போலும்  நெல்வகை.  மென்மை, “சோற்றது மென்மை”
யென்பது பழையவுரை.

தூய்மை     செய்த செந்நெல்லைப்  பொன்மலைபோற்  குவித்து,
அதனை    அளத்தற்கென்று    அம்பண   வளவையைச்   செருகி
வைத்திருப்பது,   கூட்டிடத்தே  குளவியினம்  இருப்பது   போறலின்,
“அளவை  நிறைகுவித்தாங்கு”  என்றார்.  அளவையை நெற்குவையில்
உறைவித்தலாவது,  அதன்  உட்புறத்தே  ஒரு  பகுதி  நெல்லிருப்பப்
புதைத்தல்.  உறைவித்தல்,  ‘குச்’ சாரியை பெற்று உறைகுவித்தல் என
வந்தது.   அளவை   :  தொழிற்பெயர்  ;  நான்காவது  விகாரத்தால்
தொக்கது. இதனை இற்றைப் போதும் நெற்களங்களிலும் நெல் விற்கும்
களரிகளிலும் காணலாம். பண்டை நாளைய அம்பணம், மூங்கிலாலாயது
;  இற்றைநாளைய  அம்பணம், இரும்பினாலாயது ; இதுவே வேறுபாடு.
தேறு,  கொட்டும்  குளவி  ; தான் குறித்த பொருளைக் கொடுக்கினால்
தெறுவதுபற்றித்   தேறு   எனப்   பெயர்   பெற்றது.  கொட்டியவழி
யுண்டாகும்  துன்ப  மிகுதி  பற்றி,  கடுந்தேறு என்றார். அது வாழும்
கூட்டை யழிக்கின், அழிப்பாரைச் சூழ்ந்துதெறும்  இயல்பிற்றாதல்பற்றி,
முதியோர்  அது  செய்யாராதலின்,  கூட்டை யழிப்பவர் இளஞ் கிறார்
என்பது  கொண்டு,  “செழுங்கூடு  கிளைத்த  இளந்துணை  மகாஅர்”
என்றார்.  மொசிதல்,  நிறைதல்.  மகாஅர், இளையோர் மேற்று ; “சிறு
தொழில்  மகா  அர்”  (அகம்.  206)  என்புழிப்  போல  செழுங்கூடு
கிளைத்த     மகார்,     குளவியின்     கடுந்தெறற்    கஞ்சியலந்து
மூலைக்கொருவராய்   ஓடி   யுலமருவதுபோல,   “நின்  உடற்றியோர்
அலந்தனர்” என்றார்.

கடுந்தேற்     றுறுகிளை,  மகாஅர்பால்  பகை  நினையாது  தன்
செழுங்கூட்டின்கண் உறுகிளையுடன் துஞ்சும் என்றதனால்,  நீயும் நின்
செழுமனைக்கண் கிளையுடன் இனிதிருக்கின்றனையேயன்றிப்  பிறரைப்
பகைக்கின்றா யில்லையாயினும், மகார்தம் இளமையால் கூடு கிளைத்து
வருந்துவதுபோல,  நின்  உடற்றியோர்  தம்  அறியாமையால்  போர்
விளைத்துக்    கெடுவாராயினர்    என்றலின்,    “அலந்தனர்  நின்
உடற்றியோர்”   என்றும்,   “பெரும”   என்றும்   கூறினார்.  இனிப்
பழையவுரைகாரர்,  “அளவைக்கென  நான்காவது  விரிக்க”  என்றும்,
“கடுந்தேறுறுகிளை,   கடிதாகத்தெறுலையுடைய  மிக்க   குளவியினம்”
என்றும்,    “மொசிந்தன   வென்றது,   மொய்த்தனவாய்   என்னும்
வினையெச்சமுற்” றென்றும் கூறுவர்.

நெற்குவையும்        அம்பணவளவையும்       குளவியினத்தின்
செழுங்கூட்டையும்  குளவியையும்  சிறப்பிக்கும்  உவமமாயின ; இவை
உருவுவமம்.   குளவியும்,   அதன்    கூடும்,   அக்கூடு  கிளைக்கும்
இளந்துணை மகாஅர் என்ற மூன்றுவமைகளும்  சேரமானையும் அவன்
நகரையும்  பகைவரையும் சுட்டித் தொழிலுவமமாயின.  ஆகவே இவை
அடுத்துவர  லுவமமாகாமையறிக.  இனி,  உறை குவித்தல் என்பதனை
இருசொற்படப்    பிரித்து,   உறையாகக் குவித்தல்    என்றுகொண்டு  
அளவையின்     உறையிட்ட    வாயிடத்தே   குவிக்கப்படுவதுபோல
நிலத்தே     குவித்துவைத்தல்     என்று உரைத்தலுமொன்று.   அது
பொருளாயின்,   உறையாகக்   குவித்த நெல்லினைச் செழுங் கூட்டிற்கு
உவமமாகக் கொள்க.
 

இதனாற்     கூறியது : மகளிர் மலிந்த  வெக்கைக்கண்  தொகுத்த
நெல்லினிடத்தே     அம்பண    வளவை    உறைகுவித்    தாங்கு,
கடுந்தேற்றுறுகிளை   துஞ்சும்   கூடு   கிளைத்த  மகாஅரின்,  நின்
உடற்றியோர் அலந்தனர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

9 - 13. ஊரெரி ........... வௌவினை.

உரை : போர் சுடு எரி ஊர் கவர - போரின் கண்ணே சுடுதற்காக
எடுத்த தீயானது பகைவர் ஊர்களைக் கவர்ந்துண்டலால் ; கமழ்  புகை
- சுடுநாற்றம் நாறுகின்ற புகை ; உருத்தெழுந்து உரைஇ - மிக்கெழுந்து
பரந்து  ; மாதிரம் மறைப்ப - திசைகளை மறைக்க ; தோன்றல் ஈயாது
-  வெளித் தோன்றாமல் ; மதில்வாய் மதிற்குள்ளேயிருந்து ; தம் பழி
ஊக்குநர்  -  தம் குற்றத்தால் பழி செய்துகொள்ளும் பகைவருடைய ;
குண்டுகண்  அகழிய  -  ஆழ்ந்த இடத்தையுடைய அகழியினையும் ;
குறுந்தாள்  ஞாயில்  -  குறுகிய படிகளையுடைய ஞாயிலையுமுடைய ;
ஆர்  எயில்  தோட்டி  வௌவினை  -  கடத்தற்கரிய  மதிற்காவலை
யழித்துக் கவர்ந்து கொண்டனை, யாதலால் எ - று.

போருடற்றுவோர்     பகைப்புலத்தே தீ வைத்தல்  முறையாகலின்,
போர்சுடு  எரி  என்றார்.  இதனை எரிபரந்தெடுத்த லென்றும். உழபுல
வஞ்சியென்றும்  ஆசிரியன்மார் கூறுப. ஊர் முழுதும் எரி பரவுவதால்
புகை   மிக்கெழுந்து   எம்மருங்கும்   சூழ்ந்துகொள்ளும்  திறத்தை,
“உருந்தெழுந்துரைஇப்   போர்சுடு   கமழ்புகை   மாதிரம்  மறைப்ப”
என்றார்.   இனி,   “எரி   உருத்தெழுந்துரைஇ  ஊர்  கவர”  என்று
இயைப்பினுமமையும். பழையவுரைகாரரும், “உருத்தெழுந் துரைஇ ஊர்
எரி  கவர  எனக்  கூட்டுக”  என்றல் காண்க. பகைவர் ஊரிடத்தே நீ
எடுத்த  தீயானது  அவ்வூர்களைக்  கவர்ந்துண்ண, அதனால் எழுந்த
பெரும்புகை   மாதிரம்   மறைக்க,  நீ  அப்பகைவருடைய  எயிலை
வௌவினை யென்றார், “ஆரெயில் தோட்டி வௌவினை” யென்றார் ;
“நீயுடன்றோர்  மன்னெயில்  தோட்டி  வையா”  (பதிற்.  25)  என்று
பிறரும் கூறுதல் காண்க.

பகைவர்,      புறமதிலைச்    சூழ்ந்துகொண்டவழி,    அஞ்சாது
வெளிப்போந்து     அவரைப்      பொருதழித்து        வேறலோ,
அப்போரிடைப்பட்டு   வீழ்தலோ   இரண்டி  லொன்றைச்  செய்யாது
அகமதிற்கண்     அடைபட்டு    மடிந்திருத்தலால்    பெரும்பழியே
விளையுமாதலின்,  “மதில்வாய்த்  தோன்ற  லீயாது தம்பழி  யூக்குநர்”
என்றார்.  தோன்றா  லீயா  தென்பது தோன்றாமலென்னும் பொருட்டு
பழையவுரைகாரரும்  “தோன்ற  லீயா  தென்றது,  தோன்றா தென்றும்
வினையெச்சத்  திரிசொல்” என்றும், “தோன்றா லீயாமலெனத் திரிக்க”
என்றும் கூறுவர்.
 

ஞாயில், மதிலின் அகத்தே புறத்தோர் அறியாவகை யிருந்து அம்பு
தொடுக்கும்   முக்கோண  வறை.  இதனை  ஏப்புழை  ஞாயிலென்பர்.
மதிற்றலையில் மேலிடத்தே சிறுசிறு படிகளையுடைத்தா யிருத்தல்பற்று,
இதனைக்   “குறுந்தாள்   ஞாயில்”   என்றார்.   விற்பொறி  யிருந்து
எந்திரத்தால்   அம்பு   சொரிய   அதற்கு   இடனாகிய  ஞாயிலைத்
தாளுடையது  போலக்  கூறும் சிறப்புப்பற்றி, குறுந்தாள்ஞாயி லென்று
இப்    பாட்டிற்குப்    பெயராயிற்று.   “குறுந்தாள்   ஞாயிலென்றது,
இடையிடையே   மதிலின்   அடியிடங்களைப்   பார்க்க    அவற்றிற்
குறுகிக்குறுகி  யிருக்கும்  படியையுடைய  ஞாயிலென்றவாறு” என்றும்,
“இவ்வாறு   கூறிய   சாதிப்   பண்பானும்,   படியைத்   தாளென்று
கூறினபடியானும்     இதற்குக்     குறுந்தாண்    ஞாயில்    என்று
பெயராயிற்றென்றும்,    “வௌவினை   யென்றது   விளையெச்சமுற்”
றென்றும் பழையவுரைகாரர் கூறுவர்.

13 - 24. ஏறொடு.................ஊழி.

உரை : ஆன்பயம்   வாழ்நர்  -  ஆன்பயன்  கொண்டு  வாழும்
இடையர்கள்  ;  ஏறொடு  கன்றுடை  ஆயம்  தரீஇ  -  ஏறுகளுடன்
கன்றுகளையுடைய ஆனிரைகளைக் கொணர்ந்து தருதலால் ; புலவுவில்
இளையர்  -  புலால் நாறும் வில்லேந்திய வெட்சியாராகிய நின்வீரர் ;
புகல்  சிறந்து  -  அவர்  பால் விருப்பம் மிக்கு ; அங்கை விடுப்ப -
தாம்  கைப்பற்றிய  ஆனிரைகளையும்  விட்டொழிய  ; மத்துக் கயிறு
ஆடா  வைகற்பொழுது  -  தயிர் கடையும் மத்தினிடத்தே கயிறாடாத
விடியற்போதின்கண்  ;  நினையூஉ  நின்னைப்  புகலடைய நினைந்து
போந்து  ; கழுவுள் தலை மடங்க கழுவுளென்னும் இடையர் தலைவன்
தலைவணங்கி  நின்றதனால்  ;  பதி  பாழாக  வேறு புலம் படர்ந்து -
ஊர்கள் பலவும் பாழ்படும்படியாகப் பகைவர் நாடு நோக்கிச்  சென்று ;
விருந்தின்    வாழ்க்கையொடு    -   புதுவருவாய்கொண்டு   இனிது
வாழ்தற்கேதுவாகிய  செல்வத்தோடு  ;  பெருந்  திரு அற்றென - தம்
முன்னோர்         ஈட்டி       வைத்த        பெருஞ்செல்வமும்
இனிக்கெட்டதென்றெண்ணி  ;  அருஞ்சமத்து  அருநிலை  தாங்கிய -
கடத்தற்கரிய  போரின்கண்  தடுத்தற்கரிய  போர்நிலையைத் தடுத்துச்
சிறந்த   ;  புகர்  நுதல்  பெருங்  களிற்று  யானையொடு  -  புள்ளி
பொருந்திய  நெற்றியினையுடைய  பெரிய  களிற்றியானைகளையும்  ;
அருங்கலம்   தரா   அர்  பெரிய  அணிகலன்களையும்  திறையாகச்
செலுத்தாத பகைவேந்தர் ; மெய் பனி கூரா - உடல்நடுக்கம் மிகுந்து ;
அணங்கெனப்  பராவலின்  -  வருத்தக்கூடிய  தெய்வமென நின்னை
நினைந்து   பரவுவதால்   ;  பலிகொண்டு  பெயரும்  பாசம்போல -
தன்னால்   தாக்குண்டார்   உயிரைக்   கொள்ளாது   அவர்  இட்ட
பலியினைக் கொண்டு நீங்கும் பேய் போல ; திறைகொண்டு பெயர்தி -
அவர்  இடும்திறைகளைக்  கொண்டு  அவர்  உயிரை யளித்துவிட்டுத்
திரும்பி ஏகுகின்றாய் ; நின்  ஊழி வாழ்க - நினக்குத்   தெய்வத்தால்
வரையறுக்கப்பட்ட   வாழ்நாள்  முழுதும் இனிது வாழ்வாயாக எ - று.
 

கழுவுள்     என்பவன், ஆயர் தலைவனாய்  ஏனை வேந்தருடன்
பெரும்பகை   கொண்டிருந்தான்  ;  அதனால்   அவனைப்  பிறரும்,
“பொரு   முரணெய்திய   கழுவுள்”   (பதிற்.  88)  என்றல்  காண்க.
அவனிருந்த  நகரை  முற்றி,  அவனுடைய  ஆரெயில் தோட்டியை நீ
வௌவிக்கொண்டமையின், அவன் அடைமதிற்பட்டுக் கிடப்ப, அவன்
கீழ்   வாழ்ந்த   இடையர்கள்   வேறு   புகல்காணாது   தம்முடைய
ஆனிரைகளைத்  தாமே கொணர்ந்து தந்து அருள் வேண்டி நின்றமை
தோன்ற,  “ஆன்பயம்  வாழ்நர்  ஏறொடு  கன்றுடை  ஆயம்  தரீஇ”
என்றார்.   ஆனிரையான்   வரும்  பாற்பயன்கொண்டு  உயிர்வாழும்
இயல்பினராயினும்,  அவற்றைத்  தந்தேனும் நின் அருணிழல் வாழ்வு
பெறுதல்  வேண்டுமென  நினைந்தன ரென்பார், “ஆன்பயம் வாழ்நர்”
என்றும்  கூறினார்.  தம் உயிர்கொடுத்து அருள் வேண்டினர் என்பது
கருத்து  .  அதுகண்ட  நின்  வீரர்  தாம்  முன்பே போந்து வெட்சி
நெறியிற்   கைப்பற்றிய   அவர்   தம்   ஆனிரைகளை   அருளால்
வழங்கினமையின், “புகல் சிறந்து அங்கை விடுப்ப” என்றார்.  பகைவர்
தாம் உயிர்வாழ்தற் கேதுவாயவற்றைத் தாமே தந்து புறங்காட்டுதலினும்
சீரிய  வெற்றியின்மையின்,  “புகல்  சிறந்”  தென்றார்  .  இவ் வாயர்
முதற்கண்   தாம்   ஆளும்   ஆண்மையும்  உள்ளளவும்  பொருது
நின்றமை தோன்ற, வில்லேந்திய வீரர் சிறப்பை, “புலவு வில்லிளையர்”
என்றார்  .  பெருந்திரளான  மக்களைக்  கொன்றதனால்  வில்லேந்தி
அம்பு  தொடுக்கும் கைகள், குருதி தோய்ந்து புலவு நாறுதல் ஒருதலை
.  அம்பு தொடுத்து ஆயர்களைக் கொல்லாது அருள் செய்யும் சிறப்பு
நோக்கி,   “அங்கை”   யென்றார்   .  பகைத்துப்  பொருதார்  மேல்
கண்ணோடாது   அம்பு   செலுத்தும்  நெறிக்கு  இளமை  மேம்பட்டு
நிற்பினும்,  அஃது  அருளுடைமையால்  சால்புற்றிருந்தமை  விளங்க,
“இளையர்” என்றார்.

தன்    வீரராகிய ஆயர்களைப் பொருவது விட்டு ஆனிரைகளைத்
தந்து   நின்   அருள்   வாழ்வு   வேண்டியதறிந்த  கழுவுள்,  தான்
அவர்கட்குத்   தலைவனாகியும்   தலைமைப்   பணியினை  யாற்றும்
வலியின்மையால்   நாணிப்   பகற்போதிற்   போந்து   புகலடையாது
வைகறைக்கண்  வருதலை  நினைந்தா  னென்பார், “மத்துக் கயிறாடா
வைகற்  பொழுது நினையூஉ” என்றார் . வைகறைப்போதில் ஆய்மகள்
எழுந்து  தயிர்  கடைந்துகொண்டு, ஞாயிற்றின் வெயில் மிகுமுன் மாறி
வரவேண்டி   யிருத்தலின்,   வைகறை  யாமத்தின்  இறுதிக்காலத்தை
“மத்துக்கயி   றாடா   வைகற்  பொழுது”  என்றார்.  அக்  காலத்தே
இயங்குவோர்  உருவம்  ஓரளவு  இனிது தெரியும். பகற்போது வரற்கு
நாணமும்,  இருட்  போது வரின் காவலர் கொல்வரென்னும் அச்சமும்
வருத்துதலால்,    வைகறைப்பொழுது    கொள்ளப்பட்டது.   நினைவு
பிறந்தவழி,  செய்கை  பயனாதல்பற்றி, “நினையூஉ” என்றார். கழுவுள்
என்பான்  தன்  பெருமுரணழிந்து மானத்தால் தலை வணங்கி நிற்பது
வீரமாகாமையின்,   “தலை  மடங்க”  என்றார்.  வணங்கியது  கண்ட
துணையே,  அவன்பாற்  கொண்ட  பகைமை  நின்னுள்ளத்தினின்றும்
நீங்குதலின்,  வேறு  புலம்  நினைந்து  செல்குவையாயினை என்பார்,
“வேறு  புலம்  படர்ந்து”  என்றும், அச் செலவால் பகைவர் ஊர்கள்
அழிவது   ஒருதலை  யாதலின்,  “பதி  பாழாக”  என்றும்  கூறினார்.
படர்ந்து திறைகொண்டு பெயர்தி என வினைமுடிவு செய்க.
 

“வௌவினை யென்றது, வினையெச்சமுற்று. ஆயம் தரீஇ யென்றது
ஆயங்களை  நீ  புலவுவில்  இளையர்க்குக்  கொடுப்ப எ - று. தரீஇ
யென்பதனைத்   தர  வெனத்  திரிக்க.  இளையர்  அங்கை  விடுப்ப
என்றது,  இளையர்  அவ்  வாயத்தைத்  தங்கள்   அங்கையினின்றும்
பிறர்க்கு  விடுப்ப எ - று . கயிறாடா வென்னும் பெயரெச்ச மறையை
வைகலென்னும்  தொழிற்  பெயரொடு  முடிக்க.   வைகல்  - கழிதல்.
வைகற்பொழுது  ;  இருபெயரொட்டு.  வாழ்நர்  வாழ்பவர்,  இடையர்
பயத்தானென விரிக்க. கழுவுளாவான், அவ்விடையர்க்குத் தலைவனாய்
அக்   காலத்துக்   குறும்பு   செய்திருந்  தானொருவன்  .  முன்னர்
எயிலென்றது,  அவன்  தனக்கு அரணாகக் கொண்டிருந்த மதிலினை,
வேறு    புலம்    பதி    பாழாகப்   படர்ந்தென்றது,   அக்கழுவுள்
தலைமடங்குகையாலே  அவனை  விட்டு, வேறு திறையிடாக் குறும்பர்
நாட்டிலே  அந்நாட்டுப்  பதி  பாழாகச்  சென்று  எ  -  று. படர்ந்து
திறைகொண்டு  பெயர்தி  யெனக்  கூட்டுக”  என்று பழையவுரைகாரர்
கூறுவர்.

இனி,    பகைவர் களிறும் கலனும் திறையாகத் தாரா தொழிந்ததற்
கேதுவாகிய   அவருடைய   பெருஞ்செல்வ   நிலையை,  “விருந்தின்
வாழ்க்கை  யொடு  பெருந்திரு”  என்றார் . விருந்து, ஈண்டுப் புதிதாக
ஈட்டப் பெறும் செல்வத்தின் மேற்று ; அச் செல்வத்தின் பயன்  இன்ப
வாழ்க்கை  யென்ப  . பெருந் திரு, முன்னோர் ஈட்டிவைத்துச்  சென்ற
பெருஞ்  செல்வம்  ;  “பெருஞ் செல்வம்” (குறள். 1000) என்பதற்குப்
பரிமேலழகரும்  இவ்வாறு  கூறுதல் காண்க. இனிப் பழையவுரைகாரர்,
விருந்தின்   வாழ்க்கை   யாவது   “நாடோறும்  புதிதாகத்  தாங்கள்
தேடுகின்ற  பொருள்”  என்றும், “பெருந்திரு, முன்னே தேடிக் கிடந்த
பொருள்” என்றும் கூறுவர்.

பதி  பாழாக வேறு புலமாகிய தம் நாடு நோக்கி நீ வருவது கண்ட
நின்  பகைவர்தம்  வாழ்க்கையும்  திருவும் அழிந்தன வென்று கருதி
உளமும்   உடலும்   ஒருங்கு   நடுங்கின   ரென்பார்,   “விருந்தின்
வாழ்க்கையொடு  பெருந்திரு  அற்றென  மெய்பனி  கூரா”  என்றார்,
பழையவுரைகாரர்,    “அற்றென   வென்றது,   அற்றதெனக்   கருதி
யென்றவாறு”  என்றும், “அற்ற தென்பது கடைக் குறைந்த” தென்றும்
கூறுவர்.

அருஞ்     சமத்து அருநிலை யென்றது, கடும்போர் நிகழுமிடத்து
வெல்லுதல்  அரிதென்னுமாறு  இருதிறத்து  வீரரும் மண்டிப் பொரும்
நிலைமையாகும்.  அந்  நிலைமைக்கண்  அஞ்சாது  நின்ற  பகைவர்
முன்னேறாவாறு   தகைந்து  வெல்லும்  போர்த்தகுதி  பெற்ற  களிறு
என்றற்கு இவ்வாறு சிறப்பித்தார் என அறிக. திறைசெலுத்தும் வேந்தர்
இத்தகைய     களிறுகளையும்     உயரிய     அணிகலன்களையும்
தருவரென்பதனை,  “ஒளிறுவாள்  வயவேந்தர்,  களிறொடு கலந்தந்து,
தொன்று  மொழிந்து  தொழில்  கேட்ப”  (பதிற்.  90) என்று பிறரும்
கூறுமாற்றானறிக  .  அருங்கலந் தாராத பகைவ ரென்னாது “தராஅர்”
எனத்  தொழில்மேல் வைத்தோதியது . தாராமைக் கேதுவாய பகைமை
நீங்கித்  தருதற்  கேதுவாகிய அச்சமுண்மை புலப்படுத்தற்கு, பகைவர்
தம்முடைய    ஆண்மை,    அறிவு,    பொருள்,   படை  முதலிய
வலிவகையைக்  கடந்து  மேம்பட்டு  நிற்றல்பற்றி  நின்னைத்  தாக்கி
வருத்தும்  அணங்கெனக்  கருதினா ரென்றும், அணங்கொடு பொருது
வேறல்    மக்கட்   கரிதாதலின்,   அவர்   செயற்பாலது  வழிபாடு
ஒன்றேயன்றிப் பிறிதில்லை யாதலின் “பராவலின்” என்றும் கூறினார்.
 

“பலிகொண்டு     பெயரும் பாசம்”  எனவே  உயிர் கொள்ளாது
விடுத்தேகுவது   பெற்றாம்   .   பாசம்,   பேய்,   பேயை  உவமங்
கூறியதுபோல,  திருத்தக்க தேவரும் சீவகனை, “பெண்ணலங் காதலிற்
பேயு மாயினான்” (சீவக. 2010) என்று கூறுதல் காண்க.

25 - 27. உரவரும்.....................வாழுமோரே.

உரை : உரவரும்   மடவரும்   அறிவு   தெரிந்   தெண்ணி  -
அறிவுடையோர்  அறிவுநலத்தையும்  மடவோரது அறியாமையினையும்
ஆராய்ந்து   செய்வதும்   தவிர்வதும்   நினைந்து   ;   அறிந்தனை
அருளாயாயின்  - அவரவர் தகுதியறிந்து அருளா தொழிகுவையாயின்
;  நெடுந்தகை - நெடிய தகுதியுடையோனே ; இவண் வாழுமோர் யார்
- இவ்வுலகில் வாழ்வோர் இலராவர் எ - று.

அறிவு       தெரிந்தெனவே,    அறியாமையும்    தெரிந்தவாறு
பெறப்படுதலின்,   அதனையும்   பெய்துகொண்டு   இருதிறத்தார்க்கு
முறையே  கூட்டி  உரை  கூறப்பட்டது.  உரம்,  அறிவின்  திண்மை.
உரவோர் அறிவுநலம் தேர்ந்து அவரைத் தழீஇக்கோடல் வேந்தர்க்குக்
கடனாதலாலும்,  மடவோர் சிற்றினத்தா ராதலின், அவரோடு சேராமை
வேண்டுதலாலும்.   இரு   திறத்தார்க்கும்   செய்வதும்   தவிர்வதும்
அறியவேண்டுவனவாயின.  உரவோர்  புரியும் அறிவுடைச்செயல்கண்டு
அருளலும்,   மடவோர்  செய்யும்  அறிவில்செயல்கண்டு  ஒறுத்தலும்
அரசுமுறை    யாதலால்,    “அறிந்தனை    அருளாய்”    என்றும்,
அருளாதொழியின்,  உரவோர்  தேயச்  சிற்றினம்  பல்கித்  துன்பமே
மிகுவித்து  உயிர்வாழ்க்கையை இன்னற்படுத்தும் என்றற்கு, “யாரிவண்
வாழுமோர்”   என்றும்,   இதனை   யறிந்தாற்றும்  சிறப்புக்  குறித்து
“நெடுந்தகை” யென்றும் கூறினார்.

சேரமானொடு  பொருது உடற்றி அலந்த பகைவரை மடவரென்றும்,
அணங்கெனப்   பராவித்   திறை   செலுத்தியோரை   உரவரென்றும்
குறித்துரைத்தலின்,  இஃது  ஓராற்றால்  விரிந்தது  தொகுத்து  அவன்
வென்றிச்   சிறப்புரைத்தவாறு   மாயிற்று.  இனிப்  பழையவுரைகாரர்,
“உரவரையும்   மடவரையும்   என்னும்   இரண்டாவது  விகாரத்தால்
தொக்கது  ;  அறிவு,  அவர்களறிவு  ;  வாழுமோர்  என்புழி உம்மை
அசைநிலை”    என்பர்.    வாழுமோர்    என்பது   “உணருமோர்”
என்பதுபோலும்     தனிச்சொல்லாதலின்,     உம்மை    எதிர்காலப்
பொருட்டாயதோர் இடைச்சொல் லெனவுமாம்.

இதுகாறும்     கூறியது ; பெரும,  நின்  உடற்றியோர், கடுந்தேறு
உறுகிளை  துஞ்சும்  செழுங்கூடு  கிளைத்த  இளந்துணை மகாஅரின்
அலந்தனர்  ;  உருத்தெழுந்து உரைஇய எரிஊர் கவர, புகை மாதிரம்
மறைப்ப,  ஆரெயில்  தோட்டி  வௌவினை ; அதுகண்ட ஆன்பயம்
வாழ்நர்  அஞ்சி  ஏறொடு கன்றுடை ஆயம் தந்தாராக, நின் இளையர்
புகல்  சிறந்து  அங்கை  விடுப்ப, அவர் தலைவனான கழுவுள் நாணி,
வைகற்  பொழுதிற்  போந்து தலைமடங்கி நின்றானாக, நீ வேறு புலம்
படர்ந்து   சென்று,   தராராய   பகைவர்  பராவலின்,  அவர்  தந்த
திறைகொண்டு  பெயர்தி  ;  நின்னூழி  வாழ்க  ;  இவ்வாறு  உரவரு
மடவரும் அறிவு தெரிந்தெண்ணி அருளாயாயின், நெடுந்தகை, இவண்
வாழுமோர்  யார்  ?  ஒருவரு மிலராவர் எனக் கூட்டி வினை முடிவு
செய்க.
 

இனிப்     பழையவுரைகாரர்,   “ஆரெயில்   தோட்டி  வௌவி,
அதனையுடைய  கழுவுள் தலைமடங்குகையாலே வேறு புலம் படர்ந்து,
அவ்வேறு  புலத்து நினக்கு யானையொடு அருங்கலம் திறையிடார்தம்
விருந்தின்  வாழ்க்கையொடு  பெருந்திரு வற்றதெனக் கருதித் தங்கள்
மெய்ந்நடுக்கமிக்கு    நின்னை   அணங்கெனக்   கருதிப்   பலபடப்
பரவுதலான்,  பேய்  தான்  பற்றினாருயிரை வௌவாது தனக்கு அவர்
பலியிட்டுழி  அப் பலி கொண்டு பெயருமாறுபோல, நீயும் அவருயிரை
வௌவாது   திறை   கொண்டு  பெயரா  நின்றாய்  ;  இஃதன்றே நீ
இதுபொழுது   செய்கின்றது   ;   நின்னை  யுடற்றியோர்  கடுந்தேறு
உறுகிளை   துஞ்சும்  கூடு  கிளைத்த  இளந்துணை  மகாரைப்போல,
பெருமானே  ;  அலந்தார்கள்  ;  இனிமேல்  உள்ளத்து உரவரையும்
மடவரையும் அவரவர் அறிவினைத் தெரிந்ெ்தண்ணி,  அவர்களிடத்துச்
செய்யும் அருளறிந்து அருளாயாயின், நெடுந்தகாய், இவண்  வாழ்பவர்
யார்?  நின்னூழி  வாழ்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க”, என்றும்,
“இதனாற்  சொல்லியது  அவன்  வென்றிச்  சிறப்புக்  கூறி அவற்குப்
பகைவர்மேல் அருள் பிறப்பித்தவாறாயிற்” றென்றும் கூறுவர்.


 மேல்மூலம்