முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை

          ஐந்தாம் பத்து பதிகம்

வடவ ருட்கும் வான்றோய் வெல்கொடிக்
குடவர் கோமா னெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக்கிள்ளி யீன்ற மகன்
கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
  5 கானவில் கானங் கணையிற் போகி
ஆரிய வண்ணலை வீட்டிப் பேரிசை
இன்ப லருவிக் கங்கை மண்ணி
இனந்தெரி பல்லான் கன்றொடு கொண்டு
மாறா வல்வி விடும்பிற் புறத்திறுத்
  10 துறுபுலி யன்ன வயவர் வீழச்
சிறுகுர னெய்தல் வியலூர் நூறி
அக்கரை நண்ணிக் கொடுகூ ரெறிந்து
பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின்
முழாரை முழுமுத றுமியப் பண்ணி
  15 வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர்
பல்லிருங் கூந்தன் முரற்சியாற்
குஞ்சர வொழுகை பூட்டி வெந்திறல்
ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோர்
ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து
  20 நிலைச்செருவி னாற்றலை யறுத்துக்
கெடலருந் தானையொடு

     கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணமைந்த
காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு.

     அவைதாம்: சுடர்வீவேங்கை, தசும்புதுளங்கிருக்கை,
ஏறாவேணி, நோய்தபுநோன்றொடை, ஊன்றுவையடிசில், கரை
வாய்ப்பருதி, நன்னுதல் விறலியர், பேரெழில்வாழ்க்கை, செங்கை
மறவர், வெருவருபுனற்றார்.

     இவை பாட்டின் பதிகம்.

     பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு 1வாரியையும் தன் மகன்
குட்டுவன் சேரலையுங் கொடுத்தான் அக்கோ.

     கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு
வீற்றிருந்தான்

     (கு - ரை) 1, வடவர் உட்கும் - வடநாட்டிலுள்ள அரசர்
அஞ்சுதற்குக் காரணமான. வான் தோய் வெல்கொடி - மிகவுயர்ந்த
வெல்லும் கொடியையுடைய; வான்றோய் என்பது இலக்கணை வழக்கு.

     2. குடவர் கோமான் - குடநாட்டிலுள்ளார்க்கு அரசனாகிய.

     4. கடவுட் பத்தினிக் கல்கோள் வேண்டி - தெய்வமாகிய
கண்ணகியின்படிவம் அமைத்தற்பொருட்டுக் கல் கொள்ளுதலை
விரும்பி; "விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக், கற்கால்
கொள்ளினும் கடவு ளாகும்" "பொற்கோட் டிமயத்துப் பொருவறு
பத்தினிக் கற்கால் கொண்டனன்" "வடபே ரிமயத்து வான்றரு
சிறப்பிற், கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின்" (சிலப்.
25 : 118 - 9, 26 : 253 - 4, 27 : 1- 2)

     5. கான் நவில் கானம் - காட்டின் தன்மை மிக்க காட்டில். கணையின் போகி - அம்பைப் போல விரைந்து சென்று.

     6. ஆரிய அண்ணலென்றது முன்னொருகால் இவனுக்குத்
தோற்ற ஆரியமன்னருள் தலைவனை. வீட்டில் தோற்கசசெய்து;
"உடன்று மேல் வந்த வாரிய மன்னரைக், கடும்புனற் கங்கைப்
பேர்யாற்று வென்றோய்" (சிலப். 28 : 120 - 21)


     7. இனிய பல அருவிகளையுடைய கங்கையில் அக்கல்லை
நீர்ப் படுத்து; "கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து, பாற்படு
மரபிற் பத்தினிக் கடவுளை, நூற்றிறன் மாக்களி னீர்ப்படை செய்து"
(சிலப். 27 : 14 - 6)

     8. நல்ல இனமென்று ஆராயப்பட்ட பல பசுக்களை அவற்றின்
குன்றுகளோடு கைக்கொண்டு.

     9. நீங்காத வல்விலையுடைய இடும்பாதவனத்தினிடத்தே தங்கி;
இங்கே வல்வில்லென்றது பல இலக்குக்களை ஒரே காலத்தில்
ஊடுருவிச் செல்லும்படி எய்யும் திறமையுடைய விற்படையை; வல்வில்
:புறநா. 152 : 1 - 6.

     10. வலி மிக்க புலியைப்போன்ற வீரர் விழும்படி: வீரர்க்குப்
புலி; "உறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்" (சிறுபாண். 122)

     11. சிறியகொத்தாகிய நெய்தற் பூக்களையுடைய வியலூரை
அழித்து: "சிறுகுர னெய்தல் வியலூரெறிந்த பின்" (சிலப். 28 : 115);
வியலூர் நன்னன் வேண்மானுடையதென்று, "நறவுமகிழிருக்கை
நன்னன் வேண்மான், வயலை வேலி வியலூர்" அகநா. 97 : 12 - 3)
என்பதனால்தெரிய வருகின்றது. சிறுகுரனெய்தல்: அகநா, 120 : 16.

     12. கொடுகூர் : ஓரூர்.

     13-4. பழையன் என்னும் குறுநிலமன்னன் தன் காவல்மரமாகக்
காத்துவந்த, கரிய கிளைகளையுடைய வேம்பினது முழவைப் போன்ற
அடிமரத்தை வெட்டச்செய்து (சிலப். 27 : 124 - 5)

     முழாரை: மரூஉ. "முழவுத்தா ளெரிவேங்கை" (கலித். 44 : 4);
"முழாவரைப் போந்தை" (புறநா. 85 : 7)

     15. கணவனை இழந்த மகளிர் இழை கழித்தல்: 'மெல்லியன்
மகளிரு மிழைகழித் தனரே" (புறநா. 224 : 17). வாலிழை யென்றது
முத்தாரத்தை. நறும்பல் பெண்டிரென்றது அவருடைய
இயற்கைமணத்தைக் கூறியபடி. 16. ஐம்பாலாதலின் பல்லிருங்
கூந்தலென்றார்; குறுந். 19 : 5 உரை, ஒப்பு.

     17. பழையனது யானைகளைக் சகடவொழுங்கிற் கடாக்களாகப்
பூட்டி.

     18-9. செய்து செய்து அமையாத போரையுடைய சோழரது
குடியில் அரசிற்கு உரியோராகிய ஒன்பதுபேர் போரில் விழும்படி
நேரிவாயிலின் புறத்தே தங்கி; "பெருவளக் கரிகான் முன்னிலைச்
செல்லார், சூடாவாகைப் பறந்தலை யாடுபெற, ஒன்பது குடையு நன்பக
லொழித்த, பீடின் மன்னர்" (அகநா. 125 : 18 - 21); "மைத்துன
வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பின ரொன்பது மன்னர்,
இளவரசு பொறாஅ ரேவல் கேளார் வளநா டழிக்கு மாண்பின
ராதலின் ஒன்பது குடையு மொருபக லொழித்தவன், பொன்படு திகிரி
யொருவழிப் படுத்தோய்", "ஆர்புனை தெரிய லொன்பது மன்னரை,
நேரி வாயி னிலைச்செரு வென்று, நெடுந் தேர்த்தானையோ டிடும்பிற்
புறத்திறுத்துக், கொடும்போர் கடந்து" (சிலப். 27 : 118 - 23,
28 : 116 - 9). நேரிவாயிலை வாயிலென்றது முதற்குறை; 'நேரிவாயில்:
உறையூர்த் தெற்கில் வாயிலதோரூர்' (சிலப். 28 : 117. அரும்பத.-)

     20. நிலைச்செருவின் ஆற்றலை அறுத்து - நாடோறும்
செய்யும் போரின் வலியைக் குறைத்து.

     மு. 'இக்கதையைப் பதிற்றுப்பத்தினுள் அஞ்சாம் பத்தின்
முடிவின்கண், "வடவ ருட்கும்" என்னும் கவியுள்ளும்.................. காண்க'
(சிலப். பதி. 1 - 2, அடியார்.)


     1வாரி - வருவாய்.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

ஆசிரியர் பரணர் பாடிய

ஐந்தாம் பத்து

பதிகம்
 

வடவ ருட்கும் வான்றோய் வெல்கொடிக்
குடவர் கோமா னெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக் கிள்ளி யீன்றமகன்
கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
 
5கானவில் கானங் கணையிற் போகி
ஆரிய வண்ணலை வீட்டிப் பேரிசை
இன்ப லருவிக் கங்கை மண்ணி
இனந்தெரி பல்லான் கன்றொடு கொண்டு
மாறா வல்வி லிடும்பிற் புறத்திறுத்
 
10துறுபுலி யன்ன வயவர் வீழச்
சிறுகுர னெய்தல் வியலூர் நூறி
அக்கரை நண்ணிக் கொடுகூ ரெறிந்து
பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின்
முழாரை
1முழுமுத றுமியப் பண்ணி
 
15வாலிழை கழிந்த நறும்பல் பெண்டிர்
பல்லிருங் கூந்தன் முரற்சியாற்
குஞ்சர வொழுகை பூட்டி வெந்திறல்
ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோர்
ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து
நிலைச் செருவி னாற்றலை யறுத்துக்
கெடலருந் தானையொடு
  

கடல்   பிறக்    கோட்டிய   செங்குட்டுவனைக்   கரணமமைந்த 
காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப் பாட்டு. 

அவைதாம், சுடர்வீ வேங்கை, தசும்பு துளங்கிருக்கை,  ஏறாவேணி,
நோய்தபு  நோன்றொடை,  ஊன்றுவை  யடிசில்,  கரைவாய்ப்  பருதி,
நன்னுதல்   விறலியர்,   பேரெழில்   வாழ்க்கை,   செங்கை  மறவர்,
வெருவருபுனற்றார். இவை பாட்டின் பதிகம்.

பாடிப்  பெற்ற  பரிசில் :  உம்பற்காட்டு வாரியையும்  தன்  மகன் 
குட்டுவன் சேரலையும் கொடுத்தான் அக் கோ.

கடல்பிறக்     கோட்டிய     செங்குட்வன்    ஐம்பத்தையாண்டு
வீற்றிருந்தான்.
 


1.‘முரரை   முழுமுதல்’  என்ற  பாடம்   அச்சுப் பிரதியிற்
காணப்படுகிறது


 மேல்மூலம்