பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்314

அந் நிறத்திற்கேற்பவே நினது வேற்படையும் பகைவர் தம் குருதி
தோயப்பெற்றுப் பவளக்கொடியினது நிறம்போன்ற செந்நிறத்தை
உடைத்தாகும், உருவும் உருவம் தீ ஒத்தி - திருமேனியானும்
எரியாநின்ற அழகிய செந்தீயை ஒப்பை, முகனும் - திருமுக
மண்டிலத்தானும், விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி - விடியற் காலத்தே
விரியாநின்ற கதிர்கள் முதிராத இளைய ஞாயிற்று மண்டிலத்தை ஒப்பை,
எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து - உலகிற்குத் துன்பஞ்செய்தலானே
அறத்திற்குப் பொருந்தாத சூர்மாவினை வேரோடு வெட்டியொழித்து,
தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி - பகைமை பொருந்திய
கிரௌஞ்ச மலையினூடே திருந்திய வேற்படையினைச் செலுத்தி,
அவ் வரை உடைத்தோய் - அந்த மலையினை உடைத்தொழித்த
கடவுளே! நீ இவ் வரை மருங்கின் கடம்பு அமர் அணி நிலை
பகர்ந்தேம் - நீ "அருமுனி மரபின் ஆன்றோர் நுகர்ச்சி மன்
இருநிலத்தோரும் இயைகென"த் திருவுளத் தடைத்து
இத் திருப்பரங்குன்றத்தின்கண் புலவரையறியாத புகழ்பூத்த
இக் கடப்பமரத்தின்கண் எழுந்தருளிய அழகிய அருள் நிலைமையை
வாழ்த்தாநின்றேம் எம் வாழ்த்து இது; உடங்கு அமர் ஆயமொடு
தொழுது ஏத்தினம் - எம்மொடு அமர்ந்த எம் சுற்றத்தாரோடு
நாள்தோறும் நின் திருவடியைக் கைகூப்பிக் கும்பிட்டு ஏத்தாநின்றேம்,
எளியேங்களுக்கு அருள் தருக.

      (வி - ம்.) மானிடராகிய எம்மை உய்யக் கொள்ளத்
திருவுளங்கொண்டு தேவர்மகள் தேவசேனையை மணந்தமைக்கு மாறாக
எம்மானிட மகளாகிய வள்ளியையும் மணந்தருளினை அன்றே!
அத்தகைய அருட்கடலாகிய நினக்குச் சிற்றறிவினேமாகிய யாங் கூறும்
ஒவ்வா வாழ்த்தும் நின் செவிக்கு இன்பந் தருதல் இயல்பே ஆதலாற்
கேட்டருள்க என்பார், 'குறப்பிணாக் கொடியைக் கூடியோய்! வாழ்த்துச்
சிறப்புணா செவி கேட்டி' என்றார்.

      பிணா - பெண். "பெண்ணும் பிணாவும் மக்கட் குரிய "
(மரபி- 62.) என்பது தொல்காப்பியம். உணா உணவு. சிறப்புணா -
விருந்துணவு; இன்பந் தருவது என்றவாறு, உடையானும் ஒலியலானும்
செந்நிறமுடையை என்க. ஒலியல் - மாலை. ஈண்டுக் கடப்பமாலை.
படை - வேற்படை. அது குருதி தோய்ந்த வழியே செந்நிறமுடைத்தாதலின்
'பவழக்கொடி நிறம் கொள்ளும்' என்றார்.
உரு-திருமேனி. மேனியான் தீ ஒத்தி என்க. ஒத்தி - ஒக்கின்றாய்.
விரிசுடர்: அன்மொழித்தொகை; ஞாயிறு என்னும் பெயர் குறித்துநின்றது.
எவ்வத்து - உலகிற்குத் துன்பஞ் செய்தலுடைமையானே 'அறத்திற்
கொவ்வா மாமுதல் தடிந்து' என்க. எனவே நீ அற நெறியியற்றப்பியவரை
மறத்திருவருளாலே ஒறுத்துத் திருத்துமியல்புடையை என்று
ஏத்தியவாறாயிற்று. அறத்திற்றப்பியோரை இறைவன் ஒறுத்துத்திருத்தும்
இயல்புடையன் என்பதனை,