பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்367

பரிபாடல் திரட்டு
முதற் பாடல்
திருமால்
பொருட் சுருக்கம்:

      1 - 6: முகில் மலையின்கண் மழையை மிகுதியாகப் பொழியாநிற்ப
அந்நீர் மதுரையில் உள்ள மாந்தர் விரும்பி எதிர் கொள்ளும்படி
வருகின்ற துறையினிடத்தேயுள்ள இருந்தையூர் என்னும் திருப்பதியிலே
எழுந்தருளி யிருக்கின்ற திருமாலே! நின் திருவடியைத் தொழுது
வாழ்த்துகின்றோம்.

      7 - 21: பெருமானே! நினது திருப்பதியின் ஒருபக்கத்தே
வேங்கையும், வெண்கடம்பும், மகிழும், செயலையும் ஓங்கிவளர்ந்த
மலையுளது. மற்றொருபால் விண்ணென விரிந்த நீர்நிலைகள் உள்ளன;
மற்றொருபால் உழவரும் உழத்தியரும் ஆடிப்பாடித் தொழில்செய்யும்
கழனிகள் உள்ளன; மற்றொருபால் ஒழுக்கந் தவறாத அந்தணர்
சேரியையுடைய அறம்பிறழாத நகரம் உளது.

      22 - 29: அந் நகரத்தில் ஒருசார் பல்வேறு பண்டங்களையும்
விற்கும் வணிகர்தெரு வுள்ளது; அதன்கண் மற்றொரு சார் உழவர்தெரு
வுளது. அந் நகரம் நல்ல இன்பந்தரும் இயல்புடைய பல்வேறு
தெருக்களையும் உடையது.

      30-49: அந் நகரத்தின்கண் துறக்கத்தையொத்த ஆதிசேடனார்
திருப்பதியும் உளது. அத் திருப்பதியின்கண் மகளிரும், மைந்தரும்,
இளைஞரும், முதியரும் அவிப்பொருளையும், மலர், நறுமணப்புகைப்
பொருள் முதலியவற்றையும் ஏந்திவந்து இடையறாது தொழுது
இன்புறாநிற்பர்.

      50 - 59: அச்சேடனார் திருப்பதியின்கண் வண்டும் தும்பியும்
யாழ்போல இசைபாடும்; யானைகள் முகில்போல முழங்கும்; முழவுபோல
அருவியிசை முழங்கும், ஆடலும் பாடலும் நிகழும்.