பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்371

   செவ்விடைப் பாகன் திரிபுரஞ் செற்றுழிக்
   கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்
   தொல்புகழ் தந்தாருந் தாம்;
(இவையும் கொச்சகம்)
   அணங்குடை யருந்தலை ஆயிரம் விரித்த
80 கணங்கொள் சுற்றத் தண்ணலை வணங்கி
   நல்லடி யேத்திநிற் பரவுதும்
   எல்லேம் பிரியற்கெஞ் சுற்றமொ டொருங்கே.
(என்பது ஆசிரியச்சுரிதகம்)


கடவுள் வாழ்த்து

குறிப்பு:- இப் பாடல் தொல்காப்பியச் செய்யுளியல் 121 ஆம்
நூற்பாவிற்குப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் மேற்கோளாக
எடுத்தாண்டது.

உரை

1 - 6: வான் . . . . . . தொழுதே

(இ-ள்.) வான் ஆர் எழிலி தேன் ஆர் சிமைய மலையின் மழைவளம்
நந்த - விசும்பின்கண் நிறைந்த முகில்கள் தேன் இறால்கள் பொருந்திய
குவடுகளையுடைய சைய மலையினிடத்தே மழையை மிகுதியாகப்
பெய்தலானே உலகின்கண் செல்வம் பெருகும்படி, ஆனா மருந்து ஆகும்
தீநீர் - இன்றியமையாத ஆருயிர் மருந்தாகிய இனிய அம்மழை நீர், இழி
தந்து நான்மாடக் கூடல் எதிர்கொள்ள - அச் சைய மலையினின்றும்
இறங்கி மதுரையில் வாழும் மக்கள் விருப்பத்தோடே எதிர்கொள்ளாநிற்ப;
மலி துறை மேய இருந்தையூர் அமர்ந்த செல்வ - வந்து பெருகுதற்கு
இடமான வையைத்துறையிடத்தே பொருந்திய திருவிந்தையூர் என்னும்
திருப்பதியிலே எழுந்தருளியிருக்கின்ற உயிர்களுக்குச் செல்வமாக
விளங்கும் திருமாலே! நின் திருந்தடி தலையுறத் தொழுது பரவுதும் -
அடியேங்கள் நினது திருந்திய இலக்கணமுடைய திருவடிகள் எமது
தலையிலே பொருந்தும்படி வீழ்ந்து வணங்கி வாழ்த்தாநின்றேம்.

(வி-ம்.) வானிடத்தே ஆரவாரிக்கும் எழிலி எனினுமாம். எழிலி - முகில்;
மழைவளமாகிய நீர் பெருக எனினுமாம். தேன் - தேனடை. சிமையம் -
மலைக்குவடு. அம் மலையினின்று அருவியாக வீழ்ந்து என்க. இழிதந்து
- இழிந்து. நான்மாடக் கூடல் - மதுரை. இஃது ஆகுபெயராய் ஆண்டு
வாழும் மக்களை உணர்த்தி நின்றது. ஆனா - இன்றியமையாத. மருந்து
- ஆருயிர் மருந்து. மருந்து - அமிழ்தமுமாம்.