பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்374

கள்ளுண்டு களிப்போரும் குரவை பாடுவோரும் ஆகிய உழவர்
உழத்தியர் நிறைந்து திருமகளும் விரும்பத்தக்க வயல்கள் திகழா நிற்கும்
என்பதாம்.

      ஆலையின்கண் கரும்பினையிட்டு அதன் சாற்றினைப் பிழிந்து
கோடலாலே உண்டாகும் இசை என்க. சாறு - விழாவுமாம். இங்ஙனம்
பொருள்கோடல் சிறப்பின்று.

      உழவன் ஓதை, உழுநர் எடுத்த ஏர்மங்கலப்பாட்டின் ஆரவாரம்.
கள்ளுண்டலாலே அறிவிழந்து மனம்போனவாறு ஆரவாரம் செய்து
திரிவோரும், நாற்றினை நடுவோரும் ஆகிய உழவரும் உழத்தியரும்
தம்பாற் கூடாநிற்ப என்க. திரு - திருமகள்.

இப் பகுதியோடு,
"கருங்கை வினைஞரும் களமரும் கூடி
ஒருங்குநின் றார்க்கும் ஒலியே யன்றியும்
கடிமலர் களைந்து முடிநா றழுத்தித்
தொடிவளைத் தோளு மாகமுந் தோய்ந்து
சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச்
செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர்
வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணியும்
கொழுங்கொடி யறுகையும் குவளையும் கலந்து
விளங்குகதிர் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்
(நாடுகாண். 125-135)

எனவரும் சிலப்பதிகாரப் பகுதியையும் நினைக.

"ஆறுபாய் அரவம் மள்ளர் ஆலைபாய் அமலை ஆலைச்
சாறுபாய் ஓசை வேலைச் சங்குவாய் பொங்கு மோதை
ஏறுபாய் தமரம் நீரில் எருமைபாய் துழனி யின்ன
மாறுமா றாகித் தம்மின் மயங்குமா மருதவேலி"
(நாட்டுப் - 3)

என்றார் கம்பநாடரும்.

18 - 21: ஒருசார். . . . . . .பதி


      (இ-ள்.) ஒருசார் - பெருமானே! நினது திருப்பதியின் மற்றொரு
பக்கத்தே, அறத்தொடு வேதம் புணர்தவம் முற்றி - தத்தமக்குரிய
அறநெறிக்கட் பிறழாது நின்று வேதங்களைக் கடைபோக நன்கு பயின்று
இவற்றாலே பொருந்துவதாகிய தவவொழுக்கத்திலே முதிர்ந்தமையாலே
எய்தாநின்ற, விறல் புகழ நிற்ப விளங்கிய - வெற்றிப் புகழ் யாண்டும்
பரந்து நிலைத்து நிற்பத் திகழாநின்ற, கேள்வித்திறத்தில் திரிவு