22 - 29: ஆங்கொருசார் . . . . . . . நண்ணியவை
(இ - ள்.) ஆங்கு ஒருசார் - அந்நகரத்தே ஒருபக்கத்தே,
உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை மண்ணுவ மணி பொன் மலைய
கடல் பண்ணியம் மாசு அறு பயம் தரு காருகப் புண்ணிய வணிகர்
புனை மறுகு - உண்பதற்குரிய பொருள்களும் பூசுவதற்குரிய
பொருள்களும் பூண்டு கொள்ளுதற்குரிய பொருள்களும் உடுத்தற்குரிய
பொருள்களும் மஞ்சனமாடுதற்குரிய பொருள்களும் மணி பொன் முதலிய
மலைபடு பொருள்களும் கடல்படு பொருள்களும் ஆகிய குற்றமற்ற
பயன்படு பொருள்களை அக நாட்டினின்றும் பிற நாட்டினின்றும்
கொணர்ந்து தருகின்ற தொழிலையும் அறச்செயலையும் உடைய
வணிகர்கள் இருந்து வாழாநின்ற ஒப்பனை செய்யப்பட்ட தெருக்கள்
உள்ளன; ஒருசார் விளைவதை வினையெவன்(?) . . . . . . . . மென்புல
வன்புலக் களமர் உழவர் கடி மறுகு - மற்றொரு பக்கத்திலே மருதமும்
நெய்தலுமாகிய மென்புலத்தினும் குறிஞ்சியும் முல்லையுமாகிய
வன்புலத்தினும் தொழில் செய்வோராகிய களமர் தெருக்களும்
உழுவித்துண்போ ராகிய வேளாளர்கள் இருந்து வாழும் காவலையுடைய
தெருக்களும் உள்ளன; அனையவை நனி கூடும் நல்ல இன்பம் இயல்
கொள நண்ணியவை - தத்தம் அறத்திற்றிரியா அந்தணர் வணிகர்
வேளாளர் முதலிய மாந்தர் இருந்து வாழுதலானே அத் தெருக்கள்
நன்கு பொருந்தாநின்ற நல்லனவாகிய இன்பம் பலவும் இயல்பாகவே
கூடப்பட்டனவாகும்;
(வி-ம்.) ஆங்கு - அந்தணர் ஈண்டுதலானே அறத்திற்
றிரியாபதி
என்று முற்கூறப்பட்ட அந்த நகரத்தின்கண் என்க.
உண்ணுவ - நெல், முதிரை நெய், பால், தயிர், காய்,
கனி, இலை
தீஞ்சோறு பல்வேறுருவிற் பண்ணிகாரம் நறவு இன்னோரன்ன உணவுப்
பொருள்கள். இதனை,
"சேறு நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி
மென்பிணி அவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறுங்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயி னுகர"
(527-535)
எனவரும் மதுரைக்காஞ்சியானும் உணர்க. |
|
|
|