பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்377

பூசுவ - சந்தன முதலியன.
பூண்ப - அணிகலன்கள் (மாலைகள்),
உடுப்பவை - பட்டு, துகில் முதலியன.

      மண்ணுவ - பத்துத் துவரும், ஐந்து விரையும்,
முப்பத்திருவகை ஓமாலிகையும் பிறவுமாம். என்னை?
"பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத் திருவகை யோமாலி கையினும்
ஊறின நன்னீர் உரைத்த நெய்வாசம்
நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டி"
(சிலப். 9: 74-9)
என இளங்கோவடிகளார் கூறுமாற்றானும் உணர்க.

      மணி பொன் முதலிய மலைபடு பொருளும் கடல்படு பொருளும்
என்க. இப் பொருள்கள் தூயனவாகவே விற்கப்படும் என்பார், 'மாசறு
பயம்' என்றார். பயம் - பயன்: ஆகுபெயர்; பயன்றரும் பொருள்கள்.

      காருகம் - காருகத்தொழில். அஃதாவது, பருத்திநூல் பட்டுநூல்
அமைத்து ஆடை நெய்தலும்; தைத்தலும், சுமந்து விற்றலுமாகிய தொழில்
என்க. இத் தொழிலும் வணிகர் தொழிலே யாதலின், 'காருக வணிகர்'
என்றார். இதனை,

"பட்டினு மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்"
(சிலப். 5: 16 - 7)

என்பதனானும் உணர்க.

      புண்ணிய வணிகர் என்றது, அறச்செயலையே
குறிக்கோளாகவுடைய வணிகர் என்றவாறு. இது, வாணிக வாகை;
என்னை?

"உழுது பயன்கொண் டொலிநிரை யோம்பிப்
பழுதிலாப் பண்டம் பகர்ந்து --முழுதுணர
ஓதி அழல்வழிபட் டோம்பாத ஈகையான்
ஆதி வணிகர்க் கரசு"
(புற. வெ - 164)
என்றோதுபவாகலான்.


      சிற்பம், ஓவியம் முதலியவற்றாலும் கொடிகளானும் ஒப்பனை
செய்யப்பட்ட தெரு என்பார், 'புனைமறுகு' என்றார்.

      26 ஆம் அடிக்கண் "விளைவதை வினையெவன்" என்னும்
தொடர் பொருள் காண்டற்கியலாதபடி திரிந்ததுபோலும்; ஆராய்க.

      மென்புலம் - மருதநிலமும் நெய்தனிலமுமாம்.

      வன்புலம் - குறிஞ்சிநிலமும் முல்லைநிலமுமாம்.

      களமர் - உழுதுண்ணும் வேளாளர். உழவர் என்றது உழுவித்
துண்ணும் வேளாளர் என்க. களமர் என்பதற்கு, 'மருதநிலமாக்கள்'
'உழவர்க்கீழ்க் குடிகள்' என்பர் அடியார்க்கு நல்லார்.