கடி - காவல். ஆங்க - இசை. அனையவை - அத்தகைய தெருக்கள் என்க.
இதுகாறும் ஸ்ரீ இருந்தவளமுடையாராகிய திருமால் திருப்பதியின்
சிறப்புக் கூறி இனி, அத் திருப்பதியின்கண் எழுந்தருளியிருக்கும்
ஆதிசேடனின் திருக்கோயிற் சிறப்பும், அதனை மக்கள் வழிபடுதற்
சிறப்பும் ஓதுகின்றார்.
30-35: வண்டு . . . . . . . . .செம்மலோரும்
(இ - ள்.) கடிப்புஇகு காதின் - கடிப்பு என்னும் அணியிட்டுத்
தாழ வளர்த்திய தஞ் செவியின்கண், கனங்குழை தொடர - கனவிய
குழையென்னும் அணியை இடும்பொருட்டு, வண்டு பொரேர் என எழ
- மகளிர் வளையலையுடைய தம் கையினை மேலே உயர்த்துங்கால்
அக் கையிலிடப்பட்ட வளையல் கலீர் என்ற ஒலியுடன் எழுதலானே,
வண்டு பொரேர் என எழும் - அவர்தம் மலர் மாலைகளிலே
மொய்த்துள்ள வண்டினங்கள் பொரேர் என்னும் ஒலியோடே
எழாநிற்கும், இங்ஙனம் அணியப்பட்ட குழையினது, மிளிர்மின் வாய்ந்த
- மிளிருகின்ற ஒளிச் சுடர் பாய்தலானே, விளங்கு ஒளி நுதலார் -
விளங்காநின்ற ஒளியினையுடைய நுதலையுடைய மகளிரும் அவர்தம்
கணவரும் ஆகிய, ஊர் களிற்று அன்ன செம்மலோரும் - தாம் ஊர்ந்து
செல்லும் களிற்றுயானையை ஒத்த தலைமைத்தன்மை யுடையோரும்;
(வி - ம்.) வண்டு இரண்டனுள் முன்னையது வளையல்,
பின்னது
வண்டு. பொரேர்: ஒலிக்குறிப்பு. கடிப்பு - மகளிர் காதினை வளர்த்தற்கு
இடப்படுவதோர் அணி: கடிப்பிட்டு இகுத்த காதின் என்க. இகுத்தல் -
தாழச்செய்தல். கனங்குழை - ஒருவகைக் காதணி. இது பொன்னாற்
செய்யப்படுவதாம். இதன் ஒளிபாய்ந்து விளங்கும் ஒளியினையுடைய
நுதலாரும் அவர்தம் கணவராகிய செம்மலோரும் என்க.
செம்மலோர் - தலைமைத்தன்மையுடையோர்.
30. வண்டு பொரேர் என என்பது தொடங்கி 34 நுதலார்
என்னுமளவும் கிடந்த அடிகட்குப் பொருள் நன்கு விளங்கவில்லை.
இவற்றிற்குப் பொருள் வேறு தோன்றுமாயிற் கொள்க. இவற்றுள், 33.
கடிப்புகு வேரிக் கதவமிற்றோட்டி என்னும் தொடர் வாளாவிடப்பட்டது.
36-49: வாயிருள் . . . . . . . .நாணணிந்தோரும்
(இ - ள்.) வாய் இருள் பனிச்சை வரிசிலைப் புருவத்து
-
தன்னிடம் இருண்ட கூந்தலையும் விரிந்த வில்லினை ஒத்த
புருவத்தினையும், ஒளியிழை ஒதுங்கிய ஒண் நுதலோரும் -
ஒளியுடைய தலைக்கோல அணிகள் தங்கிய ஒளிபொருந்திய
|
|
|
|