பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்379

நெற்றியையும் உடைய மகளிரும், புலத்தோடு அளவிய புகழ்
அணிந்தோரும் - அறிவோடு கூடிய புகழினை அணிகலனாக
உடையோரும், நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும் -
கற்புடைமையோடு பொருந்திய நாணத்தினை அணிகலனாகவுடைய
மகளிரும், விடையோடு இகலிய விறல் நடையோரும் - ஆனேற்றின்
நடையோடு மாறுபட்ட வெற்றியையுடைய பீடு நடையினை உடையவரும்,
மடம்நடை மேவிய நாண் இழந்தோரும் - மடப்பமுடைய
ஒழுக்கத்தினையுடைய நாணத்தினை இழந்த பரத்தையரும், கடல்
நிரைதிரையின் கருநரையோரும் - கடலின்கண் நிரலாக வரும் வெள்ளிய
அலைகளைப்போன்று இடையிடையே கருமை விரவிய நரையினை
யுடையோரும், சுடர் மதிக் கதிரெனத் தூநரையோரும் - ஒளிருகின்ற
திங்களினது நிலாக்கற்றைபோன்று முழுதும் நரைத்த
பருவத்தினையுடையோரும், மடையர் குடையர் புகையர் பூ ஏந்தி -
அவிப்பொருளை உடையராய்க் குடையை ஏந்தினராய் நறுமணப்புகையை
உடையராய்ப் பூ முதலியவற்றை ஏந்தினராய், இடை ஒழிவு இன்றி -
இடையறாமல், அடியுறையார் ஈண்டி - திருவடியின்கண் வந்து பொருந்திக்
குழுமித் தொழுது இன்புறுதற்கு இடமாதலானே, இருகேழ் உத்தி அணிந்த
எருத்தின் வரைகெழு செல்வன்நகர் - இரண்டாகிய கருநிறம் பொருந்திய
படப்பொறிகள் அழகுசெய்த எருத்தினையுடைய மலைபோன்ற
ஆதிசேடனுடைய திருக்கோயில், விளைந்து ஆர் வினையின் விழுப்பயன்
துய்க்கும் - விளைந்து முதிர்ந்த நல்வினையினது சிறந்த பயனை
நுகர்தற்கு இடமான, துளங்கா விழுச்சீர் துறக்கம் புரையும் -
நடுக்கமில்லாத சிறந்த புகழினையுடைய மேனிலை உலகத்தினையே
ஒப்பதாம்;

      (வி - ம்.) செல்வன்நகர் நுதலோர் முதலியோர் இடையறாது வந்து
ஈண்டித் திருவடிதொழுது இன்புறுதலானே, நல்வினையின் விழுப்பயனை
நுகர்தற்கு இடமான துறக்கத்தை ஒப்பதாகும் என்க.

      இருள்வாய் பனிச்சை என மாறி இருளை ஒத்த கூந்தல்
எனினுமாம். ஒதுங்கிய - தங்கிய. கலம் - அறிவு. புலத்தோடளவிய
புகழணிந்தோர் என்றது, நல்லிசைப்புலவர் துறவியர் முதலிய சான்றோரை.
நலத்தோடளவிய நாணணிந்தோர் என்றது கற்புடைய குலமகளிரை.
விடையோடு இகலிய விறனடையோர் என்றது மறவர்களை நடைமடம்
மேவிய நாணிழந்தோரும் என்றது வரைவின் மகளிரை. கடலின்கண்
எழும் அலை வெண்மையும் கருமையும் விரவித்தோன்றுமாறு
வெண்மயிரும் கருமயிரும் விரவித் தோன்றும் பருவத்தினர் என்க.

      மடை - அவிப்பொருள். குடை- மங்கலப்பொருள். புகை - அகில்,
குங்குலிய முதலிய இட்டெழுப்பிய நறுமணப்புகை என்க. அடியுறையார் -
அடியுறைதலுடையராய எனினுமாம். உவமைக்கோதிய