பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்381

திறத்தல். அது வாய்திறத்தல் என்னும் பொருள்பட்டு அதன் காரியமாகிய
பிளிற்றொலியை ஈண்டுக் குறித்து நின்றது என்க. தண்டா அருவி -
இடையறாத அருவி. இருமுழவு - பெரிய முழவு. அரியுண்ட கண்ணார்
என்றது ஆடன் மகளிராகிய விறலியரை. விறலியர்க்குரிய ஆடலும்
பாடலும் அழகுமாகிய மூன்றனுள் அழகுடைமையை அரியுண்ட கண்ணார்
என்றதனால் உணர்த்தினார். அரி - வரி. செவ்வரி கருவரிபடர்ந்த
கண்ணார் மையுண்ட கண்ணார் எனத் தனித்தனி கூட்டுக. ஆடவர்
என்றது கூத்தரை. தோன்ற - தோன்றுவிக்க. சூடு நறவு. சூடா நறவு
என்பன வெளிப்படை. முன்னது நறவமொட்டு. பின்னது கள்.
அம் மைந்தரும் மகளிரும் சூடிய நறவ மொட்டலரும் போதே அவர்
தம் உளத்தே காமம் முகிழ்த்து மலர என்க. "காலை அரும்பிப்
பகலெல்லாம் போதாகி, மாலை மலரும்இந் நோய்" என்றார்
வள்ளுவனாரும். கள் காமவின்பத்தை மிகுவித்தலின் கள்ளொடு காமம்
விரும்ப என்றார். இனைய என்றது உவமம் கருதாமல் கட்டுப் பெயர்
மாத்திரையாய் நின்றது. அனையவை என்பது மது. புனையிழை
முடிநாகர் பூமுடி நாகர் எனத் தனித்தனி கூட்டுக. பூ - பூமகள். நாகர்
-ஆதிசேடனார். நகர் - அவர் தந் திருக்கோயில். இங்ஙனமன்றி நாகர்
நகர் என்றது, உவமையாகக் கருதிப் "போகத்திற் சிறந்ததாகலின்
நாகருடைய நகரை ஒக்கும் என்றார்" என உரை கூறினாருமுளர்.

60 - 63: மணி . . . . . . . . நகர்

      (இ - ள்.) மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி
அவிர் நிமிர் புகழ் கூந்தல் - நீலமணிபோன்ற நிறத்தினையும்
அழகினையும் கூறுகூறாக அறல்பட்டுச் செறிந்து தழைத்துப் பொலிவுற்று
விளங்காநின்ற எழுச்சியினையும், கண்டோராற் புகழப்படுதலையும்
உடைய கூந்தலினையும், நெகிழ் பிணி துணை இணை தெளி ஒளிதிகழ்
ஞெகிழ் - நெகிழ இடப்பட்ட இரண்டும் தம்முள் ஒத்த தெளிந்த
ஒளியாலே விளங்கா நின்ற சிலம்பினையும், தெரி அரி மது மகிழ்பு
மகிழ் அரிமலர் உண்கண் வாள் நுதலோர் - ஆராய்ந்து
அரித்துச்செய்யப்பட்ட கள்ளை யுண்டமையானே களிப்புடைய
கருவரி செவ்வரி படர்ந்த தாமரைமலர் போன்ற மையுண்ட
கண்களையும் ஒளி பொருந்திய நெற்றியினையும் உடைய மகளிர்
மணி மயில் தொழில் எழில் இகலி மலி திகழ் அவிழ - நீலமணி
போன்ற நிறமுடைய மயிலைத் தொழிலானும் அழகானும் மாறுபட்டு
மிக்க ஒளிவிட்டு விளங்கும்படி, திகழ் கடுங் கடாக் களிற்று அண்ணல்
அவரோடு - விளங்குகின்ற கடிய மதத்தினையுடைய ஆண்யானை
போன்ற தலைமைத் தன்மையுடைய தத்தம் கணவன்மாரோடு கூடி,
அணி மிக வந்து - அழகுமிகும்படி வந்து, தொல் சீர் வரை வாய்
தழுவிய கல்சேர் கிடக்கைக் குளவாய் அமர்ந்தான் நகர் இறைஞ்ச
- பழைதாகிய புகழையுடைய மலையிடத்தைச் சார்ந்த கன்னிலத்திலே பொருந்திக்