பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்128

வினவுவது யார் விடை கூறுவதும் யாம் இருதலைப்புள்ளின் ஓர் உயிர்
போல்வேம் ஆகலின் பிரிவும் வரவும் வினாவும் செப்பும் நம்மிடை
எவ்வாறு நிகழ்தல் கூடும், உரைசெய் சூள் நீர்மையில் சூள் என்றி - ஏடி
நீ அது கருதாமல் நீர் கூறும் சூண்மொழி நன்னீர்மையில்லாத
பொய்ச்சூள் என்று கூறி என்னை இகழா நின்றனை; கயவாய் நெய்தல்
அலர்குளத்தின்கண் உளவாகிய நெய்தற்பூக்களையும், முகை மணம் கமழ்
நகை நயவரும் நறவு இதழ் - மொட்டு மணங்கமழ்தற்குக் காரணமான
மலர்ச்சியினாலே கண்டோர் விரும்புதற்குரிய நறவம் பூவின் இதழையும்
ஒத்த, மதர் உண்கண் - மதர்த்த மையுண்ட விழிகளையும், வாள் நுதல்
- ஒளிபொருந்திய நெற்றியினையும், முல்லை முகை வென்று எழில் முத்து
ஏய்க்கும் - முல்லையின் அரும்புகளை அழகான் வென்று அழகிய
முத்துக்களை ஒத்த, வெண்பல் - வெள்ளிய பற்களையும் உடைய தலைவி,
நவின்றது - என்மீது ஏற்றிக் கூறிய குற்றம், நனவு அன்று - வாய்மையின்
நிகழ்ந்ததொரு நிகழ்ச்சியும் அன்று, நகைசான்ற கனவு அன்று -
நகைத்தற்கு இடமானதொரு கனா நிகழ்ச்சியும் அன்று, பொய்யே காண்;

      (வி -ம்.) தலைவியும் யானும் இருதலைகளையுடைய
ஒருபறவையையே ஒத்துள்ளேம்; அங்ஙனமாக யாங்கள் பிரிவதும்
வருவதும் வினவுவதும் விடைகூறுவதும் எங்ஙனம் கூடும் என்பது கருத்து
செப்பு விடை நீர் உரை செய்சூள் நீர்மையில் சூள் எனச் சூள்
என்பதனை முன்னுங் கூட்டுக.

      நீர்மையில் சூள் பொய்ச்சூள். என்றி - என்கின்றாய். கயம் -
குளம். முகை மணம் கமழ்நகை என மாறுக. நயவருதல் - விரும்புதல்.
நறவு - நறவம்பூ. வெண்பல்: அன்மொழித்தொகை.

      கண்ணையும் நுதலையும் உடைய வெண்பல் என்க. கனவு
கண்டெழுந்தார் அதனை நினைந்து நகுதல் இயல்பாகலின் 'நகைசான்ற
கனவு' என்றாள். கனவும் எனற்பால உம்மைகள் செய்யுள் விகாரத்தால்
தொக்கன. கனவு. மன்று நனவு மன்று எனவே பொய்யே என்பது
அருத்தாபத்தியாற் பெற்றாம். நவின்றதை - என்புழி ஐகாரம் பகுதிப்
பொருளது. நவின்றது - என்மேற் கூறிய குற்றம் என்க.

      (பரிமே.) நேரிழாய்! யார் பிரிய யார்வர யார் வினவ, யாரது
செப்பு உண்டாகின்றது.

      என்றது, இருதலைப்புள்ளின் ஓருயிரேம் ஆதலாற் பிரிவும் வரவும்
வினாவும் செப்பு நம்மிடை உளவாகா என்றவாறு.

      71 - 5. அலர்ச்சியான் நயக்கப்படும் நறவம்பூவினது.

      76. முகைமுல்லை - முல்லையது முகை.

      77. பொய்யாதலால் நகைமிக்க கனவு.