பக்கம் எண் :

பரிபாடல்- வையை198

மாலை நெய்தல் வளாய்த் தொடுத்தாள் - மல்லிகை மாலையின்
இடையிடையே நெய்தல்மலரை விரவித் தொடுத்தாள்;

      (வி-ம்.) மா - கருமை: நீலமலர்க்கு ஆகுபெயர் வெறுத்த - மிக்க;
தோளையுடையாள் என்க. நோக்கி - குறிப்பறிந்து. பிண்டி - அசோகு.
தையினாள் - அணிந்தாள்: தையினாள் இரண்டனுள் முன்னையது
வினையாலணையும் பெயர், பின்னது வினைமுற்று. குழை - தோடு:
இரண்டு காதினும் செருகப்பட்ட நீல மலர்கள் இரண்டு விழிகளாக
அவளியற்கை விழிகளிரண்டனோடும் நான்கு விழிகள் படைத்தாள்
என்றவாறு. இவள் நான்கு விழிபடைத்தாள் என்றது நலம் பாராட்டியது.
அது கண்ட மற்றொரு பெண் கொற்றவை கோலத்தைக் கருத்திற்கொண்டு
நெற்றி விழியாகத் திலகம் இட்டாள் என்க. குழைக்காதினையுடைய இவள்
தன் கோலச்செவியின் குவளை செரீஇ என்க. பவளவளையலினும் சிறந்த
மரகத வளையலாகக் குவளைத் தண்டால் வளையல்செய்து அணிந்தாள்
என்க.

      பச்சை - மரகதமணி. கல்லகாரப்பூ - குளிரிப்பூ. தனது மாலையின்
எழில்கண்டு கல்லகாரப் பூத்தொடுப்பாள் புனையும் மாலையை மேலே
புனையாமல் நிறுத்திவிடும்படி தனது மாலையைத் தொடுப்பாள் என்பார்
'நில்லிகா என்பாள்போல்' என்றார். இக என்னும் முன்னிலையசை இகா
என விகாரப்பட்டு நின்றது. மல்லிகா - மல்லிகை. வளாய் - விரவி.

      (பரிமே.) 63. ஆயிடை - அவராடுதற்கண்.

      99. திலகம் செம்மையால் நெருப்பாகிய நெற்றிவிழியாயிற்று.

      100. கொற்றவை கோலம் கொண்டது அவற்றின் மிக்க விழிகாட்டுதற்கு.

      மேல் அவர் கருத்தும் வேண்டிக்கோடலும் கூறுகின்றாள்.

106-114: தண்டு . . . . . . . . வரவு

      (இ-ள்.) தண்டு தழுவாத் தாவுநீர் வையையுள் கண்ட பொழுதில் -
முன்னர் ஒருவன் வாழைத்தண்டினைத் தழுவிப் பாய்கின்ற நீரையுடைய
வையையாற்றின்கண் ஆடினானாக அப்பொழுது அவன் அங்கு
ஆயத்துள் நின்றாள் ஒருத்தியைக் கண்டான் அங்ஙனம்
கண்டபொழுதிலே, கடும்புனல் கைவாங்க - அவன் நெஞ்சழிதலானே
கடிதாக ஓடும் நீர் அவனது கையை வலித்து வாங்காநிற்ப, நெஞ்சம்
அவள் வாங்க - அவனது நெஞ்சத்தை அம் மகளின் அழகு வலித்து
வாங்காநிற்ப, நீடு புணை வாங்க - இவ்வாற்றானே நீர் அவனது நெடிய
புணையைத் தனது போக்கோடு வலித்திழுத்துச் செல்லாநிற்ப, நேர் இழை
நின்றுழிக் கண் நிற்ப-நேரிய அணிகலன்களையுடைய அம் மகள்
நிற்குநிலையிலே அவன் கண்கள் நிலைபெற்று நிற்பனவாக, நீர் அவன்
தாழ்வுழி உய்யாது - நீரோ அவன் விரும்பின அவளிடத்தே அவனைக்
கொண்டு செல்லாமல், தான் வேண்டும்