பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்222

பதின்மூன்றாம் பாடல்
-----

திருமால்

பொருட் சுருக்கம்

      1-13: பொன்னாடையையும், திருமுடியையும், காத்தற்றொழிலையும்
உடைய திருமாலே! ஆழிப்படையையும் சங்கையும் ஏந்திய நின்
திருக்கைகளுடனே மார்பினையும் தொழுபவர்க்கு நினது வைகுண்டமும்
உரியதாம்.

      14-23: அண்ணலே! ஐம்புலன்களும், அவற்றை அறிகின்ற
பொறிகளும், ஐம்பெரும்பூதங்களும் நீயே! மூலப் பகுதியும், அறமும்,
காலமும், ஐம்பெரும் பூதங்களும் கூடிய மூவேழுலகத்தும் வாழும்
உயிர்கள் எல்லாம் நின்னிடத்தனவேயாம்.

      24-37: திருப்பாற்கடலிலே அறிதுயில் கொண்டவனும், பகைவர்
மார்பை உழும் கலப்பைப் படையேந்தியவனும், நிலத்தை நீரினின்று
எடுத்த ஆதிவராகமும், பிரமனும், உருத்திரனும், திருமாலுமாகிய மூன்று
கடவுளராகப் பிரிந்தவனும் ஆகிய ஒருவன் நீ.

      38-45: நினது திருமேனி, முகில் காயாம்பூ கடல் இருள் நீலமணி
என்னும் இவ்வைந்தனையும் ஒக்கும்; நினது அருண்மொழி, வலம்புரி
முழக்கத்தை ஒக்கும்; நினது செறல் மொழி முகில் முழக்கத்தையும் இடி
முழக்கத்தையும் ஒக்கும்.

      46-49: நீ தோன்றியதும் தோற்றுகின்றதும் தோன்றுவதுமாகிய
முக்காலக் கூறுபாட்டையுங் கடந்து, அக் காலங்கள் தாமே பொருந்திய
திருவடி நீழலினையுடையை; நின்னை வழிபடுவோர் இருவினையும்
இலராவர்; நீ காத்தற்றொழில் ஒன்றிலேயே விருப்பமுடைய
திருவுளமுடையை.

      50-57: நின் திருவடியும் கைகளும் கண்களும் திருவாயும் தாமரை
மலரை ஒக்கும்; நினது தோள்வளையும் திருவுந்தியும் வாகுவலயமும்
திருவடிகளும் தோளும் பிடரியும் பெரியன; நின் கேள்வியும் அறிவும்
அறமும் நுண்ணியன; நீ வேள்வியிடத்து விருப்பமும் மறமும் உடையை.