பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்232

      (வி-ம்.) கருடப்புள்ளின்பால் சிவப்பும் வெண்மையும்
காணப்படுதலால் பன்னிறப் படர்சிறை என்றார். சிறை - சிறகு. பாப்புப்
பகை: அன்மொழித் தொகை; கருடனுக்குப் பெயராய் நின்றது. பாம்பு
என்பது வேற்றுமைப் புணர்ச்சிக்கண் மென்றொடர் வன்றொடராயிற்று.
கோடாச் செல்வன் என்றது. நடுநிலைமையுடைய திருவருட் செல்வத்தை
உடையன் என்றவாறு 'மனக்கோட்ட மில்லது செப்பம்' ஆகலின்
அங்ஙனம் கூறினார். செல்வனை - என்புழி ஐகாரம் பகுதிப் பொருளது.
ஏவல் - ஓதுதல். முதுமொழி - வேதம். கார் - மேகம். மலர்ப்பூவை:
முன்பின் மாறித்தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. நின்
அருண்மொழி வலம்புரிமுழக்கத்தையும், வேத முழக்கத்தையும்,
செறல்மொழி முகில் முழக்கத்தையும் இடி முழக்கத்தையும் ஒக்கும் என்க.
செல் - இடி. அருள்வயின் மொழி செறல்வயின் மொழி என இயைக்க.
அருளிடமாகப் பிறக்கும் மொழி; செறல் இடமாகப் பிறக்கும் மொழி
என்க.

      (பரிமே.) 38. பகை - கருடன். 36. கோடாமை - சலியாமை.

46 - 56: முடிந்தது . . . . . . . . .வெய்யை

      (இ-ள்.) முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்
கடந்து - பெருமானே நீ தோன்றியதும் இனித் தோன்றுவதும்
இப்பொழுது தோன்றாநின்றதுமாகிய அம் மூன்றுகாலக் கூறுபாடுகளையும்
கடந்து, அவை அமைந்த கழல் நிழலவை - அக்காலக் கூறுகள் தாம்
பொருந்தப்பெற்ற திருவடி நீழலையுடையை, ஏத்துமவை - நின்னை
வழிபடும் உயிர்கள், இருமைவினையும் இல - பிறப்பிற்குக் காரணமான
இருவகை வினைகளும் இல்லன வாகும். ஒருமை வினைமேவும்
உள்ளத்தினை - நீ முத்தொழிலுடையை எனினும் எவ்வாற்றானும்
உயிர்களைக் காத்தற் றொழிலாகிய ஒரு தொழிலிடத்தேயே பொருந்திய
திருவுள்ளத்தினையுடையை, அடியும் கையும் கண்ணும் வாயும் அடை
இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை - நின் திருவடியும்
திருக்கைகளும் திருக்கண்களும் திருவாயும் இலைப்பரப்பினின்றும்
உயர்ந்து மலர்ந்த பெரிய இதழ்களையுடைய தாமரைப் பூவை
ஒப்பனவாம், எருத்தொடு தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும்
தாளும் தோளும் பெரியவை - பெருமானே நின் பிடரியுடனே தொடியும்
திருவுந்தியும் தோளின்கண் அணியும் வாகுவலயமும் திருவடியும்
திருத்தோளும் பரியன, மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை- நின்
திருமார்பும் பின்புறமும் திருவுள்ளமும் பருமையுடையன, கேள்வியும்
அறிவும் அறத்தொடு நுண்ணியை - நின் கேட்டற்பண்பும்
அறிவுடைமையும் அறமுடைமையும் மிக நுண்ணியனவாகும், வேள்வியும்
மறனும் விருப்பொடு வெய்யை - நீ வேள்வியிடத்தேயும்
தீவினையிடத்தேயும் நிரலே விருப்பமுடையவனும் கொடுமையுடையவனும்
ஆவாய்;