பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்350

நின்ற, இத்தன்மைய - இத்தன்மையவாகிய நிகழ்ச்சிகளைக் கண்ட
யாங்கள், நினைப்பின் - மீண்டும் அக் காட்சிகளைத் தனித்தனியே
எங்கள் நினைவின்கட் கொணர்ந்து காணுங்கால், வல்லான் எழுது
ஓவத்து எழில்போலும் - அக் காட்சிகள் கைவல்லான் எழுதிய
ஓவியத்தின் அழகுக் காட்சியை ஒக்கின்றன;

      (வி - ம்.) சுடுபொன்: வினைத்தொகை. தீயிற் பெய்து தூய்மை
செய்யப்பட்ட பொன் என்றவாறு. 'சுடச் சுடரும் பொன்' என்றார்
வள்ளுவனாரும். ஞெகிழம் - சிலம்பு. முத்தரி - முத்தாகிய பரல்.
சிலம்பினுள் ஒலித்தற் பொருட்டு முத்து மாணிக்கம் முதலியவற்றை
இடும் வழக்கத்தை,
"என்காற் சிலம்பு மணியுடை அரியே, எனத்
தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே"
(வழக். 67-69)
எனவரும் சிலப்பதிகாரத்தானும் உணர்க.

      துடி - ஒருவகைத் தோற்கருவி. நறா - கள். மகிழ் - களிப்பு.
தட்ப - தடைசெய்ய. தகைமையின் - அழகு காரணமாக. எஃகு - வேல்
சிவந்த - சினந்த எனினுமாம். துணையணை - துணையாகப்
பக்கலிலிருக்கின்ற. கேள்வன் - கணவன். துனி - பெரிதும் ஊடுதல்.
நிழல்காண் மண்டிலம் - கண்ணாடிமண்டிலம். அழல் புனை - அழல்
போன்று. இழை - அணிகலன். பொதிர்த்த - பருத்து விம்மிய என்னும்
பொருட்டு. ஊழ் - முறை. இவை இவை - இத்தன்மையவாகிய பற்பல
காட்சிகளையும். நினைப்பின் - எம் நினைவிற் கொணருங்கால். வல்லான்
- ஓவியம் எழுதுதல் வல்லான். ஓவம் - சித்திரம்.

      மாதடிந்தோய் நின்குன்றின்மிசை ஆடுவாள் அழகுகாரணமாக
ஒருத்தி துனித்தமையும், ஒருத்தி திருத்தினமையும், ஒருத்தி
ஊட்டினமையும் இன்னோரன்ன பற்பல நிகழ்ச்சிகளையும் கண்ட யாம்
மீண்டும் அவற்றை நினைக்கும்போது ஓவியம் போலத் தோன்றாநின்றன
என்பதாம்.

      (பரிமே.) 20. அடுநறாவுண்ட மகிழ்ச்சி தடுப்ப ஆடுவாள் அழகு
காரணமாக.

      22. துனித்தலாவது: இவளழகு எமக்குங்கூட வியப்பாயிற்று. இனி
இவற்குச் சொல்ல வேண்டுமோ என உட்கொண்டு கேள்வன் துணையாய்
அமராநிற்கவும் அவனை வெகுளி மிக்க நோக்கமொடு துனித்தல்.

      23. இவளினும் எனக்கு அழகுண்டாய வழி இவளை
நோக்கானென்று கருதிக் கண்ணாடியை நோக்கி.

      24. அழல் போல் அவிராநின்ற இழை.