பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்53

      (பரிமே.) 34 - 5: என்றது உலகுயிர்களின் தோற்றமும்
நிலைபேறும் ஒடுக்கமும் நின்கண்ண என்றவாறாம்.

இவை என்றது நணியவற்றை; உவை என்றது அவற்றிற்
சேயவற்றை; அவை என்றது அவற்றினும் சேயவற்றை; பிற என்றது
காணப்படாதவற்றை.

36 - 48: சேவலோங்கு . . . .. . பாம்பு

     (இ - ள்.) சேவல் ஓங்கு உயர் கொடியோயே - கருடச் சேவல்
எழுதப்பட்ட ஓங்கி உயர்ந்த கொடியினையுடையோனே!, சேவல் ஓங்கு
உயர் கொடி நின் - சேவற் கொடியை உடைய நினது, உயர்கொடி ஒன்று
பனை - உயர்ந்த கொடியினுள் ஒன்று பனைக் கொடியாகும். நின் உயர்
கொடி ஒன்று நாஞ்சில் - நினது உயர்கொடியினுள் ஒன்று கலப்பைக்
கொடி, நின் உயர் கொடி ஒன்று யானை - நின் உயர்கொடியினுள் ஒன்று
யானைக் கொடி, நின் ஒன்றா உயர்கொடி ஒன்றின்று - இவ்வாறு
நினக்குப் பல கொடிகள் உளவேனும் நினக்கே சிறப்பாக உயர்ந்த
கொடியை ஏனைக் கொடி ஒத்தல் இல்லை, எதனால் எனின் அச்சிறப்புக்
கொடி, விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் -
நஞ்சுடைய பாம்பின் உடலையும் உயிரையும் உண்ணும் கருடனாதலான்,
அவன் மடிமேல் வலந்தது பாம்பு - அக் கருடனுடைய வயிற்றின்மேற்
கட்டப்பட்ட பட்டிகையும் பாம்பே, தொடி பாம்பு - அவன் கையிலணிந்த
தொடியும் பாம்புதான், முடிமேலன பாம்பு - அவன் திருமுடிமேற்
சுற்றப்பட்ட கண்ணிகளும் பாம்புகளேயாம், பூண் பாம்பு - மேலும்
அவனுடைய அணிகலனெல்லாம் பாம்புகளே, தலைமேலது பாம்பு
- அவன் தலையின் மேலே அணியப்படும் சூட்டும் பாம்புதான், சிறை
தலையன பாம்பு - அவன் சிறகிடத்து அணியப்படுவனவும்
பாம்புகளேயாம், படி மதம் சாய்த்தோய் - பகை வலி கெடுத்தோனே!,
பசும்பூணவை- பொன்னிறமுடையோயின், கொடிமேல் இருந்தவன் தாக்கு
இரையது பாம்பு - கொடிமேலிருந்த அக்கருடன் எறிந்தெடுக்கும் இரையும்
பாம்பே ஆகும்;

     (வி - ம்.) சேவல் - கருடச்சேவல். நின் உயர்கொடிகளுள் ஒன்று
பனை; ஒன்று நாஞ்சில்; ஒன்று யானை. இங்ஙனம் பல கொடிகள்
உளவேனும் அவை நின் சிறப்புக்கொடியாகிய கருடக்கொடியை ஒவ்வா;
எற்றாலெனின் அக் கருடன் பாம்பின் உடலுயிர் உருங்கும் ஆதலால்
என்க. ஒன்றாக உயர்கொடி எனற்பாலது ஈறு கெட்டு ஒன்றா என
நின்றது. ஒன்றின்று - ஒன்றுதலில்லை என்க; ஒருமைப் பன்மை
மயக்கம். இனி நினக்கு ஒன்றாத கொடி ஒன்றில்லை எனக் கூறி
அதற்கியைய உரைப்பினுமாம். உவணம் - கருடன் உருங்குதல் -
உண்ணுதல். மடி - வயிறு. தொடி - வீரவலயம். வலந்தது -
கட்டப்பட்டது. பசும்பூணவை - பொன்னிற முடையோயாகிய நினது என்க.
கொடிமேலிருந்தவன் - கருடன்.