பக்கம் எண் :

பரிபாடல்- வையை83

ஒலித்தன்று - பறையொலி எழுந்ததாக அவ்வொலியோடே கிளர்ந்து
எழும் ஊரவர் ஆரவாரமும் எழுந்தது;

      (வி - ம்.) தொடி - வளையல். செறித்தல் - அழுத்துதல்.
தோள்வளை - தோளில் அணியும் வளையம். கொடி - எழுதின
தொய்யிற் கொடி. சேரா - ஒன்றனோடு ஒன்று சேர்ந்து: செய்யா என்னும்
வாய்பாட்டு எச்சம். அழிய என ஒரு சொல் வருவித்து முடிக்க திரு
- அழகுடைய. கோவை - மேகலையணி. காழ் - நூல் முத்துத்தொடை
- முத்துமாலை. கலிழ்பு - கலிழ்ந்து: கலங்கி என்க. மழுகுதல்
- மழுங்குதல். உகிர் - நகம். கொடிறு - கபோலம் (கன்னம்). உண்ட
- ஊட்டப்பட்ட செம்பஞ்சி - அலத்தகக் குழம்பு: ஈண்டும் அழிய
என்னும் ஒரு சொல் வருவித்து முடிக்க. நகில் - முலை. அளறு
- (குங்குமக்) குழம்பு. வண்ட லிடுதலாவது வரிவரியாய்ச் சேர்தல்.
இலை - தளிரானாய மாலை: ஆகுபெயர். இதனைப் படலைமாலை
என்றும் கூறுப. ஈர்ஞ்சாந்து - குளிர்ந்த சந்தனம். நிழத்த - அழிப்ப.
"சேம மடிந்த பொழுதின் வாய்மடுத்து இரும்புனம் நிழத்தலின்"
(குறிஞ்சிப்பாட்டு, 155 -9) என்புழியும் அஃதப்பொருட்டாதலுணர்க.

      வரைச்சிறை - மலையை ஒத்த அணைக்கட்டு. உடைத்ததை
என்புழி ஐகாரம் பகுதிப்பொருளது. திரைச்சிறை - அலையாகிய சிறகு.
கரைச் சிறை - கரையாகிய காவல். உரைச்சிறை - சொல்லாகிய காவல்.
ஊர்: ஆகுபெயர்; ஊரிலுள்ள மாந்தர்.

      (பரிமே.) 15. தொய்யிற் கொடிகள்.

      16. ஆணிதிரண்ட முத்தினாகிய வடம்.

      24. அஃது அடைக்க ஆளேறுதற்குப் பறையறைக என்னும் கரை
காப்பார் உரையாகிய காவலோடே.

      16 - 17. அழிய என்னும் வினைச்சொல் வருவிக்கப்பட்டது.

25 - 37: அன்று . . . . . . . . . . இடந்திரீஇ

      (இ-ள்.) அன்று - அவ்வாறு ஊரவர் கிளர்ந்து ஆரவாரஞ் செய்த
அந்த நாளிலே, போர் அணி அணியில் புகர்முகஞ் சிறந்தென - போர்
செய்தற்கு அணிவகுக்கப்பட்ட அணியிடத்தே புள்ளிகளையுடைய
முகத்தையுடைய களிற்றியானைகள் நிரைநிரையாகச் சிறப்பாகச்
செல்லுமாறு போல, நீர் அணி அணியில் - இந்த நீராட்டுவிழவின்
பொருட்டு வகுக்கப் பட்ட அணியின் கண்ணே, நிரை நிரை
பிடிசெல-வரிசை வரிசையாகப் பிடியானைகள் சிறந்து செல்லாநிற்றலானும்,
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும் - அழகாக அணியப்பட்ட
அணிகலன்களையும் இளமையுடைய ஆடவரும் அவருக்கு இனியராகிய
மகளிரும், (32) அடுபுனலது செல அவற்றை இழிவர் - கரை
முதலியவற்றை இடிக்கும் அவ் வையையாற்றின் வெள்ளத்தினூடே புகுதற்
பொருட்டு அவ் வணிகலன்களை நீக்கி, ஈரணி அணியின் - நீராடத்