பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்225

பன்மா ணடுக்க விறைஞ்சினேம் வாழ்த்தினேம்
முன்னு முன்னும்யாஞ் செய்தவப் பயத்தால்
இன்னு மின்னுமெங் காம மிதுவே.
கடவுள் வாழ்த்து
நல்லெழுதியார் பாட்டு; பண்ணோதிறம்

உரை

1 - 6: மணிவரை . . . . . . . நேமிமால்

      (இ-ள்.) மணிவரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று அணி வனப்பு
அமைந்த பூந்துகில் புனைமுடி - நீலமணிமலையின் மிசைப் படர்ந்த
இருளைக்கெடுக்கும் ஞாயிற்று மண்டிலத்தின் ஒளியினது அழகுபோலும்
அழகமைந்த பொன்னாடையினையும் புனைந்த திருமுடியினையும்,
இறுவரை இழிதரும் பொன் மணி அருவியின் நிறனொடு மாறும் தார் -
அப்பெரிய நீலமலையினின்றும் வீழும் பொன்னையும் மணியையும்
உடைய அருவியினது நிறத்தொடு மாறுபடாநின்ற மலர்மாலையினையும்,
புள்ளுப்பொறி புனைகொடி - கருடப் பறவை எழுதப்பட்ட ஒப்பனை
செய்த கொடியினையும் உடையையாய், விண் அளிகொண்டவியல் மதி
- வானத்தின்கண்ணிருந்து உலகினைக் காத்தற்றொழிலை மேற்கொண்ட
நிறை வெண்டிங்களினது, அணிகொள் அத் தண் அளி கொண்ட -
அழகிய அக் குளிர்ந்த காத்தற்றொழிலை மேற்கொண்ட, அணங்குடை
நேமி மால் - அசுரரை வருத்துதலையுடைய ஆழிப்படையை ஏந்திய
திருமாலே;

      (வி-ம்.) மணிவரை - நீலமணியாகிய மலை. இது திருமாலுக்கு
உருவுவமை. மங்குல் ஞாயிறு - இருளைக் கெடுக்கும் ஞாயிறு என்க.
இதனை நோய் மருந்து என்றாற்போலக் கொள்க. ஞாயிறு அதன் ஒளிக்கு
ஆகுபெயர். ஞாயிற்றொளி பொன்னாடைக்கும் பொன்முடிக்கும் உவமை.
ஞாயிற்றின் அணிபோன்ற வனப்பமைந்த என்க. அணி - அழகு. வனப்பு
- அழகு. இறுவரை - பெரிய மலை. பெரிய அந் நீலமலை என்க.
பொன்னையும் மணியையும் வரன்றிவரும் அருவி என்க. அருவி:
மலர்மாலைக்கு உவமை. புள் - கருடப்பறவை. பொறி - புனை கொடி:
வினைத்தொகையடுக்கு. அளி - காத்தற்றொழில். திங்கள் மண்டிலத்தின்
நிலவொளியாலே உலகத்துயிர்கள் செழித்து வளர்கின்றன என்பவாதலின்,
திங்கள் காத்தற்றொழிலை மேற்கொண்டமை உணர்க.

      திங்கள் பூதவெளியினின்று உயிர்களைத் தன் ஒளியாலே காத்தல்
போன்று இறைவன் அறிவுவெளியினின்று உயிர்களைத் தன் அருளாலே

ப.--15