60 - 63: குளவாய் என்னுமிடத்தே எழுந்தருளிய
அவ்வாதிசேடனார் திருக்கோயிலில் மகளிரும் மைந்தரும் வந்து
வழிபடுவர்; அவர்க்குத் தீயன கழிந்து நல்லனவெல்லாம் வந்து
பொருந்தும்.
64 - 78: அவ் வாதிசேடனார், திருமால் மந்தரமலையை எடுத்துத்
திருப்பாற்கடலில் இட்டுக் கடைந்தபொழுது, அம் மலைமத்திற்குக்
கடைகயிறாக இருந்தனர்; வலிமைக்கெல்லாம் இருப்பிடமானவரும்
அவரே; உலகத்தைச் சுமந்தவரும் அவரே! சிவபெருமான்
திரிபுரமெரித்தபொழுது அவர் ஏந்திய மலை வில்லிற்கு நாணாக
இருந்து அச் சிவபெருமானுக்கு வெற்றிப் புகழ் அளித்தவரும்
அவ் வாதிசேடனாரே.
79 - 82: அத்தகைய பெருமையுடையவரும், ஆயிரந் தலையை
யுடையவருமாகிய அவ் வாதிசேடனாரை வணங்கித் திருமாலே! யாம்
எப்பொழுதும் நினது திருவடியைப் பிரியேமாகுக என்று நின்
திருவடிகளை ஏத்திப் புகழாநின்றேம்.
வானார் எழிலி மழைவள நந்தத்
தேனார் சிமைய மலையின் இழிதந்து
நான்மாடக் கூடல் எதிர்கொள்ள ஆனா
மருந்தாகுந் தீநீர் மலிதுறை மேய
5 இருந்தையூர் அமர்ந்த செல்வநின்
திருந்தடி தலையுறப் பரவுதுந் தொழுது
(இது தரவு)
ஒருசார், அணிமலர் வேங்கை மராஅ மகிழம்
பிணிநெகிழ் பிண்டி நிவந்துசேர் போங்கி
மணிநிறங் கொண்ட மலை;
10 ஒருசார் தண்ணறுந் தாமரைப்பூவி னிடையிடை
வண்ண வரியிதழ்ப் போதின்வாய் வண்டார்ப்ப
விண்வீற் றிருக்குங் கயமீன் விரி தகையிற்
கண்வீற் றிருக்குங் கயம்;
ஒருசார், சாறுகொள் ஓதத் திரையொடு மாறுற்
15 றுழவி னோதை பயின்றறி விழந்து
திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டித்
திருநயத் தக்க வயல்;
ஒருசார், அறத்தொடு வேதம் புணர்தவ முற்றி
விறற்புகழ் நிற்ப விளங்கிய கேள்வித்
|
|
|
|