| முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செற்று, |
| மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக் |
| குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன் |
| நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை, |
5 | மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண், |
| கல் உயர் நனஞ் சாரல், கலந்து இயலும் நாட! கேள்: |
| தாமரைக் கண்ணியை, தண் நறுஞ் சாந்தினை, |
| நேர் இதழ்க் கோதையாள் செய்குறி நீ வரின், |
| ‘மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம் |
10 | அணங்கு’ என அஞ்சுவர், சிறுகுடியோரே |
| ஈர்ந் தண் ஆடையை, எல்லி மாலையை, |
| சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய்குறி நீ வரின், |
| ஒளி திகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர், |
| 'களிறு' என ஆர்ப்பவர், ஏனல் காவலரே |
15 | ஆர மார்பினை, அண்ணலை, அளியை, |
| ஐது அகல் அல்குலாள் செய்குறி நீ வரின், |
| 'கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனாப் |
| புலி' என்று ஓர்க்கும், இக் கலி கேழ் ஊரே |
| என ஆங்கு |
20 | விலங்கு ஓரார், மெய் ஓர்ப்பின், இவள் வாழாள்; இவள் அன்றி, |
| புலம் புகழ் ஒருவ! யானும் வாழேன்; |
| அதனால், பொதி அவிழ் வைகறை வந்து, நீ குறை கூறி, |
| வதுவை அயர்தல் வேண்டுவல், ஆங்கு, |
| புதுவை போலும் நின் வரவும், இவள் |
25 | வதுவை நாண் ஒடுக்கமும், காண்குவல், யானே |