2
தோழி கூற்று

தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,
மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்
5 உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்,
சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்
ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை
மறப்பு அருங் காதல் இவள் ஈண்டு ஒழிய,
10 இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்று ஐஇய!
‘தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு’ என,
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள்,
முலை ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை?
15 ‘இல் என, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு’ என,
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள்
புல் ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை?
‘இடன் இன்றி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு’ என,
20 கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்
தட மென் தோள் பிரியாமை பொருளாயின் அல்லதை?
என, இவள்
புன் கண் கொண்டு இனையவும், பொருள்வயின் அகறல்
25 அன்பு அன்று, என்று யான் கூற, அன்புற்று,
காழ் வரை நில்லாக் கடுங் களிற்று ஒருத்தல்
யாழ் வரைத் தங்கியாங்கு, தாழ்பு, நின்
தொல் கவின் தொலைதல் அஞ்சி, என்
சொல் வரைத் தங்கினர், காதலோரே

‘ஒன்றாத் தமரினும்’ என்னும் சூத்திரத்து, ‘நாளது சின்மையும், இளமையது அருமையும், தாளாண் பக்கமும், தகுதியது அமைதியும், இன்மையது இழிவும், உடைமையது உயர்ச்சியும், அன்பினது அகலமும், அகற்சியது அருமையும், ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்’ என்பதனான், இன்மையது இழிவு கூறி,‘இல்வாழ்க்கை நெறி ஆற்றுதற்குப் பொருள்வயிற் பிரிவேன்’ என்ற தலைமகற்குத் தலைமகளது இயல்பு கூறி, ‘இப் பெற்றியாளைப் பிரியாமையே பொருளாவது’ எனச் சொல்லி, செலவு அழுங்குவித்தமை தோழி தலைமகட்கு உவந்து சொல்லியது. (1)

   
3
தோழி கூற்று

அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்,
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும்
இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்க,
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்
5 விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள், இனி:
‘உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்’ என, பல
இடைகொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய்ஆயினை;
கடைஇய ஆற்றிடை, நீர் நீத்த வறுஞ் சுனை,
அடையொடு வாடிய அணி மலர் தகைப்பன
10 ‘வல்லை நீ துறப்பாயேல், வகை வாடும் இவள்’ என,
ஒல் ஆங்கு யாம் இரப்பவும், உணர்ந்தீயாய் ஆயினை;
செல்லு நீள் ஆற்றிடை, சேர்ந்து எழுந்த மரம் வாட,
புல்லு விட்டு இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன
‘பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள்’ என,
15 பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய்ஆயினை;
துணிபு நீ செலக் கண்ட ஆற்றிடை, அம் மரத்து
அணி செல, வாடிய அம் தளிர் தகைப்பன
என ஆங்கு
யாம் நிற் கூறவும் எம கொள்ளாய்ஆயினை;
20 ஆனாது இவள்போல் அருள் வந்தவை காட்டி,
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும்
கானம் தகைப்ப, செலவு

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகட்கு அஃது உரைத்து,அவளது ஆற்றாமையின் வகை தலைமகற்கு உணர்த்தவும், பின்னும் பிரிவின்மேல் சென்ற உள்ளத்தன் ஆயினானை, ‘நீர் செல்லும் கானமே நும்மை இடிக்கும் கேளிர்போல விலக்கும்’ என, அவன் செலவழுங்கும் வகை அவள் கூறியது (2)

   
4
தோழி கூற்று

வலி முன்பின், வல்லென்ற யாக்கை, புலி நோக்கின்
சுற்றமை வில்லர், சுரி வளர் பித்தையர்,
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் தாம்
கொள்ளும் பொருள் இலர்ஆயினும், வம்பலர்
5 துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வௌவலின்,
புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை,
வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின்,
உள்ளினிர் என்பது அறிந்தனள், என் தோழி
‘காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை
10 போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார், என்
தாழ் கதுப்பு அணிகுவர், காதலர்; மற்று, அவர்
சூழ்வதை எவன்கொல்? அறியேன்!’ என்னும்
‘முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக்
கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார், என்
15 ஒள் இழை திருத்துவர், காதலர்; மற்று, அவர்
உள்ளுவது எவன்கொல்? அறியேன்!’ என்னும்
‘நுண் எழில் மாமைச் சுணங்கு அணி ஆகம் தம்
கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையார், என்
ஒள் நுதல் நீவுவர், காதலர்; மற்று, அவர்
20 எண்ணுவது எவன்கொல்? அறியேன்!’ என்னும்
என ஆங்கு,
‘கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து’ என, என் தோழி
அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒரு நாள், நீர்,
பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ?
25 ஒழிக இனி, பெரும! நின் பொருட் பிணிச் செலவே

‘பொருள்வயிற் பிரிவேன்’ என்ற தலைமகற்கு, தோழி, தலைவி செலவுக் குறிப்பு அறிந்தவாறும், அவளது ஆற்றாமையும், உணர்த்தி, ‘செலவு ஒழிவாயாக’ எனக் கூறியது

   
5
தோழி கூற்று

பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கித்
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ் சுரம்
இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் நுமக்குச்
5 சிறந்தனம் ஆதல் அறிந்தனிர்ஆயின்,
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை,
கேள் பெருந் தகையோடு எவன் பல மொழிகுவம்?
நாளும் கோள் மீன் தகைத்தலும் தகைமே
10 கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின்,
புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு, அமைவாளோ?
ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு போல்,
பாழ்பட்ட முகத்தோடு, பைதல் கொண்டு, அமைவாளோ?
ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள்
15 நீர் நீத்த மலர் போல, நீ நீப்பின், வாழ்வாளோ?
என ஆங்கு
பொய்ந் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு,
எந் நாளோ, நெடுந் தகாய்! நீ செல்வது,
அந் நாள் கொண்டு இறக்கும், இவள் அரும் பெறல் உயிரே

தலைமகன் ‘பொருள்வயிற் பிரிவல்’ என, கேட்ட தோழி, தான் ஆற்றாளாய்,'நீர் செய்யும் பொருளினும் யாம் உமக்குச் சிறந்தேம் என்பது நும் உள்ளத்து உளது எனின், நும்மை நாளும் புள்ளும் விலக்கும்' எனவும், ‘இவள் பிரிந்திருப்பார் இருக்குமாறு இருப்பாள் அல்லள்; பிரிந்த அன்றே இறந்துபடுவள்’ எனவும், சொல்லிச் செலவு அழுங்குவித்தது. (4)

   
6
தலைவி கூற்று

மரையா மரல் கவர, மாரி வறப்ப
வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர்,
சுரை அம்பு, மூழ்கச் சுருங்கி, புரையோர் தம்,
உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்கு
5 தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந் துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய, காடு என்றால்,
என், நீர் அறியாதீர் போல இவை கூறல்?
நின் நீர அல்ல, நெடுந் தகாய்! எம்மையும்,
அன்பு அறச் சூழாதே, ஆற்றிடை நும்மொடு
10 துன்பம் துணையாக நாடின், அது அல்லது
இன்பமும் உண்டோ, எமக்கு?

தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து, ‘நீர் செல்லும் கடுஞ் சுரத்துத் துன்பத்திற்குத் துணையாக எம்மையும் உடன்கொண்டு சென்மின்’ எனத் தலைவி கூறியது

   
7
தோழி கூற்று

‘வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு
வான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம்
கானம் கடத்திர், எனக் கேட்பின், யான் ஒன்று
உசாவுகோ ஐய! சிறிது?
5 நீயே, செய் வினை மருங்கில் செலவு, அயர்ந்து, யாழ நின்
கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே;
இவட்கே, செய்வு உறு மண்டிலம் மையாப்பது போல்,
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே
நீயே, வினை மாண் காழகம் வீங்கக் கட்டி,
10 புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே;
இவட்கே, சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல்,
இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே
நீயே, புலம்பு இல் உள்ளமொடு பொருள்வயிற் செலீஇய,
வலம் படு திகிரி வாய் நீவுதியே;
15 இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல்,
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே
என நின்,
செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின்,
தன் நலம் கடைகொளப்படுதலின், மற்று இவள்
20 இன் உயிர் தருதலும் ஆற்றுமோ
முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே?

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகற்கு, ‘நீர் பிரிகின்றீர் என்று யான் கூறத் தலைவி கேட்பின், அவட்கு அக் காலத்து நிகழ்வனவற்றை நும்மொடு ஆராய்வதுடையேன்;நீர் செய்யும் பொருள் இவள் உயிரையும் தருகிற்குமோ?’ எனச் செலவு அழுங்கக் கூறியது. ‘உடன் சேறல் செய்கையொடு அன்னவை பிறவும், மடம் பட வந்த தோழி கண்ணும்’ என்பதனுள் செய்கை கூறுகின்றது (6)

   
8
தோழி கூற்று

நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க,
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல, ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டிக் காய் சினம் தெறுதலின்,
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்,
5வறன் உழு நாஞ்சில் போல், மருப்பு ஊன்றி நிலம் சேர,
விறல் மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம்
சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு ஒரு பொருள்
சொல்லுவது உடையேன்; கேண்மின், மற்று ஐஇய!
வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல்
10ஏழும் தம் பயன் கெட, இடை நின்ற நரம்பு அறூஉம்
யாழினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?
மரீஇத் தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது,
பிரியுங்கால் பிறர் எள்ள, பீடு இன்றிப் புறம் மாறும்
திருவினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?
15புரை தவப் பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை
வரைவு இன்றிச் செறும் பொழுதில், கண் ஓடாது உயிர் வௌவும்
அரைசினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?
என ஆங்கு
நச்சல் கூடாது பெரும! இச் செலவு
20ஒழிதல் வேண்டுவல், சூழின், பழி இன்று;
மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி,
தன் நகர் விழையக் கூடின்,
இன் உறல் வியன் மார்ப! அது மனும் பொருளே

சொல்லாது பிரியலுற்ற தலைவன் குறிப்பு அறிந்து, தோழி பொருளது நிலையாமை கூறி, ‘அவளோடு கூடிச் செல்கின்ற இல்வாழ்க்கைச் செலவே பொருள்’ என, அவன்்செலவு அழுங்கக் கூறியது

   
9
செவிலி கூற்றும், முக்கோல் பகவர் மாற்றமும்

‘எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,
உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!
5வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை,
என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!’
‘காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;
10ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்
பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
15சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
20சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
என ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே

உடன் போய தலைவி பின் சென்ற செவிலி, இடைச் சுரத்து, முக்கோல் பகவரைக்கண்டு, ‘இவ் வகைப் பட்டாரை ஆண்டுக் காணீரோ?’ என வினவியாட்கு, ‘அவரைக்கண்டு, அஃது அறம் எனவே கருதிப் போந்தேம்; நீரும் அவர் திறத்து எவ்வம்பட வேண்டா’ என எடுத்துக் காட்டி, அவர் தெருட்டியது (8)

   
10
தோழி கூற்று

வறியவன் இளமை போல், வாடிய சினையவாய்,
சிறியவன் செல்வம் போல், சேர்ந்தார்க்கு நிழல் இன்றி,
யார்கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்,
வேரொடு மரம் வெம்ப, விரி கதிர் தெறுதலின்,
5அலவுற்றுக் குடி கூவ, ஆறு இன்றிப் பொருள் வெஃகி,
கொலை அஞ்சா வினைவரால், கோல் கோடியவன் நிழல்
உலகு போல், உலறிய உயர் மர வெஞ் சுரம்
இடை கொண்டு பொருள்வயின் இறத்தி நீ எனக் கேட்பின்,
உடைபு நெஞ்சு உக, ஆங்கே ஒளியோடற்பாள்மன்னோ
10படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ
புடைபெயர்வாய்ஆயினும், புலம்பு கொண்டு இனைபவள்?
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ எனக் கேட்பின்,
பனிய கண் படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்மன்னோ
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகையாகத்
15துனி செய்து நீடினும், துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்?
பொருள் நோக்கிப் பிரிந்து நீ போகுதி எனக் கேட்பின்,
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்மன்னோ
இருள் நோக்கம் இடையின்றி, ஈரத்தின் இயன்ற நின்
அருள் நோக்கம் அழியினும், அவலம் கொண்டு அழிபவள்?
20என ஆங்கு
‘வினை வெஃகி நீ செலின், விடும் இவள் உயிர்’ என,
புனையிழாய்! நின் நிலை யான் கூற, பையென,
நிலவு வேல் நெடுந் தகை நீள் இடைச்
செலவு ஒழிந்தனனால்; செறிக, நின் வளையே!

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, ‘இவ் வகைப்பட்ட சுரத்தைப் பொருள் காரணமாகப் பிரிகின்றீர் எனக் கேட்பின், இவ் வகை ஆகற்பாலள்’எனச் சொல்லி, செலவு அழுங்குவித்தமை தலைமகட்குச் சொல்லியது

   
11
தலைவி கூற்று

‘அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,
பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்’ என,
பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்
5வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி:
‘அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,
கடியவே’ கனங் குழாஅய்! ‘காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,
துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு’ எனவும் உரைத்தனரே
10‘இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால்,
துன்புறூஉம் தகையவே காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,
அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை
மென் சிறகரால் ஆற்றும், புறவு’ எனவும் உரைத்தனரே
‘கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,
15துன்னரூஉம் தகையவே காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,
இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத்
தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை’ எனவும் உரைத்தனரே
என ஆங்கு
இனை நலம் உடைய கானம் சென்றோர்
20புனை நலம் வாட்டுநர்அல்லர்; மனைவயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;
நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே

தலைவி, மூன்றன் பகுதி தலைவன் கூறிப் பொருள்வயிற் பிரிகின்ற காலத்து,‘காடு கடியவாயினும், இவ் வகைப் பட்டனவும் உள’ என்று கூறினார்; அவை காண்டலின் வருவர்’ எனத் தோழிக்குக் கூறி, அதற்கு நிமித்தமும் கூறி, ஆற்றுவித்தது. மூன்றன் பகுதி கூறுதலாவது: ‘அறத்தினால் பொருள் ஆக்கி, அப் பொருளால் காமம் நுகர்வேன்’ என்றலாம். ‘உடைமையது உயர்ச்சி கூறிப் பிரிந்தான்’ எனக்கிளவி கூறின், பொருள் வயிற் பிரிதல் இன்றாம், அது பொருள்வயிற் பிரிவை விலக்கும் என்றலின் (10)

   
12
தோழி கூற்று

இடு முள் நெடு வேலி போல, கொலைவர்
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடு நவை ஆர் ஆற்று, அறுசுனை முற்றி,
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை
5கடுந் தாம் பதிபு, ஆங்குக் கை தெறப்பட்டு,
வெறி நிரை வேறாகச் சார்ச்சாரல் ஓடி,
நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம்
சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும்
நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய்!
10உரனுடை உள்ளத்தை; செய் பொருள் முற்றிய
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்!
இளமையும் காமமும் நின் பாணி நில்லா
இடை முலைக் கோதை குழைய முயங்கும்
முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை
15கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை
போற்றாய் பெரும! நீ, காமம் புகர்பட
வேற்றுமைக் கொண்டு, பொருள்வயிற் போகுவாய்!
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமைக் கொண்ட வழி

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, காட்டது கடுமையும், தலைவியது மென்மையும், ‘நாளது சின்மையும், இளமையது அருமையும், தாளாண் பக்கமும்,தகுதியது அமைதியும், அன்பினது அகலமும், அகற்சியது அருமையும்’ கூறி, செலவு அழுங்குவித்தது.

   
13
தோழி கூற்று

செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல,
எரி மேய்ந்த கரி வறல்வாய், புகவு காணாவாய்,
பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான்,
திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட,
5மரல் சாய மலை வெம்ப, மந்தி உயங்க,
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை,
ஊறு நீர் அடங்கலின், உண் கயம் காணாது,
சேறு சுவைத்து, தம் செல் உயிர் தாங்கும்
புயல் துளி மாறிய, போக்கு அரு, வெஞ் சுரம்
10எல்வளை! எம்மொடு நீ வரின், யாழ நின்
மெல் இயல் மே வந்த சீறடி, தாமரை
அல்லி சேர் ஆய் இதழ் அரக்குத் தோய்ந்தவை போல,
கல் உறின், அவ் அடி கறுக்குந அல்லவோ?
நலம் பெறும் சுடர்நுதால்! எம்மொடு நீ வரின்,
15இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள்
துலங்கு மான் மேல் ஊர்தித் துயில் ஏற்பாய், மற்று ஆண்டை
விலங்கு மான் குரல் கேட்பின், வெருவுவை அல்லையோ?
கிளி புரை கிளவியாய்! எம்மொடு நீ வரின்,
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட,
20முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த
வளி உறின், அவ் எழில் வாடுவை அல்லையோ?
என ஆங்கு,
அனையவை காதலர் கூறலின், ‘வினைவயிற்
பிரிகுவர்’ எனப் பெரிது அழியாதி, திரிபு உறீஇ;
25கடுங் குரை அருமைய காடு எனின், அல்லது,
கொடுங்குழாய்! துறக்குநர்அல்லர்
நடுங்குதல் காண்மார், நகை குறித்தனரே

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகள், ‘யான் நும்மோடு போதுவல்’ என்றாட்கு, தலைவன் அவளது மென்மையும் காட்டின் கடுமையும் கூறி,உடம்படானாக, ஆற்றாளாய தலைவியைத் தோழி, ‘அவர் நம்மோடு நகையாடிச் சொன்னார், பிரிவரல்லர்’ என வற்புறுத்தியது(12)

   
14
தோழி கூற்று

‘அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள்,
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண் கண்,
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல்,
மணம் நாறு நறு நுதல், மாரி வீழ் இருங் கூந்தல்,
5அலர் முலை ஆகத்து, அகன்ற அல்குல்,
சில நிரை வால் வளை, செய்யாயோ!’ என,
பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி,
இனிய சொல்லி, இன்னாங்குப் பெயர்ப்பது,
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே
10‘பொருள் அல்லால் பொருளும் உண்டோ?’ என, யாழ நின்
மருளி கொள் மட நோக்கம், மயக்கப்பட்டு அயர்த்தாயோ?
‘காதலார் எவன் செய்ப, பொருள் இல்லாதார்க்கு? என,
ஏதிலார் கூறும் சொல் பொருளாக மதித்தாயோ?
செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு, அப் பொருள்
15இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ?
அதனால்,
எம்மையும் பொருளாக மதித்தீத்தை; நம்முள் நாம்
கவவுக் கை விடப் பெறும் பொருட் திறத்து
அவவுக் கைவிடுதம்; அது மனும் பொருளே

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகற்கு ‘முன்னையின் சிறப்ப எம்வயின் பாராட்டியதெல்லாம் எம்வயின் பிறந்த வெறுப்பு என்பது இப்பொழுது அறிந்தேன்; இவ் வகைப்பட்ட போக்கு நினக்கு எவ் வகையான் வந்தது?’ என,அவன் செலவு அழுங்கச் சொல்லியது(13)

   
15
தோழி கூற்று

அரி மான் இடித்தன்ன, அம் சிலை வல் வில்
புரி நாண், புடையின், புறம் காண்டல் அல்லால்
இணைப் படைத் தானை அரசோடு உறினும்
கணைத் தொடை நாணும் கடுந் துடி ஆர்ப்பின்,
5எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி,
உருத்த கடுஞ் சினத்து, ஓடா மறவர்,
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, அன்போடு
அருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம்
10புரிபு நீ புறம் மாறி, போக்கு எண்ணி, புதிது ஈண்டிப்
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம்
பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக்கால்?
பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ
15மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ
தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம்,
பாம்பு சேர் மதி போல, பசப்பு ஊர்ந்து தொலைந்தக்கால்?
பின்னிய தொடர் நீவி, பிறர் நாட்டுப் படர்ந்து, நீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ
20புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனா,
திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்குங்கால்?
என ஆங்கு,
அனையவை போற்றி, நினைஇயன நாடிக் காண்;
வளமையோ வைகலும் செயலாகும்; மற்று இவள்
25முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த
இளமையும் தருவதோ, இறந்த பின்னே?

பிரிவு உணர்த்திய தலைமகற்கு, தோழி, தலைமகளது ஆற்றாமையும், இளமையது அருமையும் கூறி, ‘நீர் பிரிந்து செய்யக் கருதியவை எக் காலத்தும் செய்யலாம்;பொருளால் கழிந்த இளமை மீட்கலாமோ?’ எனக் கூறியது.

   
16
தோழி கூற்று

பாடு இன்றிப் பசந்த கண் பைதல பனி மல்க,
வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர,
ஆடு எழில் அழிவு அஞ்சாது, அகன்றவர்திறத்து, இனி
நாடுங்கால், நினைப்பது ஒன்று உடையேன்மன்? அதுவும்தான்
5தொல் நலம் தொலைபு, ஈங்கு, யாம் துயர் உழப்பத் துறந்து, உள்ளார்,
துன்னி, நம் காதலர், துறந்து ஏகும் ஆர் இடை,
'கல்மிசை உருப்பு அறக் கனை துளி சிதறு!' என,
இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ?
புனையிழாய்! ஈங்கு நாம் புலம்புற, பொருள் வெஃகி,
10முனை என்னார் காதலர் முன்னிய ஆர் இடை,
‘சினை வாடச் சிறக்கும் நின் சினம் தணிந்தீக!’ என,
கனை கதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ?
ஒளியிழாய்! ஈங்கு நாம் துயர் கூர, பொருள்வயின்,
அளி ஒரீஇக் காதலர் அகன்று ஏகும் ஆர் இடை,
15‘முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக!’ என,
வளி தரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ?
என ஆங்கு,
செய் பொருட் சிறப்பு எண்ணிச் செல்வார்மாட்டு, இனையன
தெய்வத்துத் திறன் நோக்கி, தெருமரல் தேமொழி!
20‘வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள்
நிறன் ஓடிப் பசப்பு ஊர்தல் உண்டு’ என,
அறன் ஓடி விலங்கின்று, அவர் ஆள்வினைத் திறத்தே

தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து, அவன் போகிய காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைமகள், ‘அவர் பொருட்டாக நாம் இவ் வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?’ என, கேட்ட தோழி, ‘அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா’ எனக் கூறியது(15)

   
17
தோழி கூற்று

படை பண்ணிப் புனையவும், பா மாண்ட பல அணை
புடை பெயர்ந்து ஒடுங்கவும், புறம் சேர உயிர்ப்பவும்,
‘உடையதை எவன் கொல்?’ என்று ஊறு அளந்தவர்வயின்
நடை செல்லாய், நனி ஏங்கி நடுங்கற்காண் நறுநுதால்!
5‘தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப, துறந்து நீ,
வல் வினை வயக்குதல் வலித்திமன்; வலிப்பளவை,
நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது,
நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ?
ஆற்றல் நோய் அட, இவள் அணி வாட, அகன்று நீ,
10தோற்றம் சால் தொகு பொருள் முயறிமன்; முயல்வளவை,
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்குக்
கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ?
வகை எழில் வனப்பு எஞ்ச, வரை போக வலித்து நீ,
பகை அறு பய வினை முயறிமன்; முயல்வளவை,
15தகை வண்டு புதிது உண்ணத் தாது அவிழ் தண் போதின்
முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ?’
என ஆங்கு,
பொருந்தி யான் தான் வேட்ட பொருள்வயின் நினைந்த சொல்,
திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
20மருந்து போல், மருந்து ஆகி, மனன் உவப்ப
பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே

பகைவர் திறை தந்த நாடு காத்தற்கு (தலைவன்) பிரிகின்றமை உணர்ந்து, தலைவி வேறுபட்டமை கண்டு, தோழி அவனை எதிர்ப்பட்டு, அவளது ஆற்றாமையும் இளமையது அருமையும் கூறிச் செலவு அழுங்குவித்தமை தலைமகட்குக் கூறியது

   
18
தோழி கூற்று

அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப,
பிரிந்து உறை சூழாதி ஐய! விரும்பி நீ,
என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்
மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண்:
5சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது;
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்;
இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்
வளமை விழைதக்கது உண்டோ? உள நாள்,
ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை
10ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரேஆயினும்,
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிதுஅரோ,
சென்ற இளமை தரற்கு!

‘ஒன்றாத் தமரினும்’ என்னும் சூத்திரத்தில் ‘நாளது சின்மையும், இளமையதுஅருமையும், தாளாண் பக்கமும், தகுதியது அமைதியும், இன்மையது இழிவும், உடைமையது உயர்ச்சியும், அன்பினது அகலமும், அகற்சியது அருமையும்’ எனக் கூறிய எட்டினையும் தலைவன் கூறக் கேட்ட தோழி, அவற்றை ‘நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே’ என்னும் விதியால் தலைவற்குக் கூறிச் செலவு அழுங்குவித்தது.(17)

   
19
தோழி கூற்று

செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம்
பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய!
அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,
5பகல் முனி வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன்;
மகன் அல்லை மன்ற, இனி
செல்; இனிச் சென்று நீ செய்யும் வினை முற்றி,
அன்பு அற மாறி, 'யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ?' என்று, வருவாரை
10என் திறம் யாதும் வினவல்; வினவின்,
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய,
தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி செலவு விலக்கவும், பிரிவின்மேல் சென்ற உள்ளத்தன் ஆயினானை, 'நீ பிரியின், இவள் இறந்துபடும்' எனச் சொல்லிய வாய்பாட்டான் மறுத்தது.

   
20
தலைவி கூற்று

பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற,
செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின்,
தணிவு இல் வெங் கோடைக்குத் தண் நயந்து அணி கொள்ளும்
பிணி தெறல் உயக்கத்த பெருங் களிற்றினம் தாங்கும்
5மணி திகழ் விறல் மலை வெம்ப, மண் பக,
துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெஞ் சுரம்
‘கிளி புரை கிளவியாய்! நின் அடிக்கு எளியவோ,
தளி உறுபு அறியாவே, காடு?’ எனக் கூறுவீர்!
வளியினும் வரை நில்லா வாழு நாள், நும் ஆகத்து
10அளி என, உடையேன் யான்; அவலம் கொண்டு அழிவலோ?
‘ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய்! நீ உணல் வேட்பின்,
ஆறு நீர் இல’ என, அறன் நோக்கிக் கூறுவீர்!
யாறு நீர் கழிந்தன்ன இளமை, நும் நெஞ்சு என்னும்
தேறு நீர், உடையேன் யான்; தெருமந்து ஈங்கு ஒழிவலோ?
15‘மாண் எழில் வேய் வென்ற தோளாய்! நீ வரின், தாங்கும்
மாண் நிழல் இல, ஆண்டை மரம்’ எனக் கூறுவீர்!
நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன்; நும்
தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலைச் சூழ்வலோ?
என ஆங்கு,
20‘அணை அரும் வெம்மைய காடு’ எனக் கூறுவீர்!
கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆர் இடை,
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்ப்
பிணையும் காணிரோ? பிரியுமோ, அவையே?

பிரிவு உணர்த்திய தலைவற்குத் தலைவி ‘எம்மையும் உடன்கொண்டு சென்மின்’ என்றாட்கு, அவன் கானின் கடுமையும், தலைவி மென்மையும் கூறுவது கேட்ட தலைவி, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி, ‘எம்மையும் உடன்கொண்டு சென்மின்’ என்றது

   
21
தோழி கூற்று

‘பால் மருள் மருப்பின், உரல் புரை பாவு அடி,
ஈர் நறுங் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல்
ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து,
பொருள்வயிற் பிரிதல் வேண்டும்’ என்னும்
5அருள் இல் சொல்லும், நீ சொல்லினையே;
நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி,
நின்னின் பிரியலன், அஞ்சல் ஓம்பு’ என்னும்
நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே:
அவற்றுள் யாவோ வாயின? மாஅல் மகனே!
10‘கிழவர் இன்னோர்’ என்னாது, பொருள்தான்,
பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்;
அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின் இன்று
இமைப்புவரை வாழாள் மடவோள்
அமைக் கவின் கொண்ட தோள் இணை மறந்தே

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, அவனை நெருங்கி, களவுக் காலத்து ஒழுக்கம் எடுத்துக் காட்டலால் தெளிவுபட மொழிந்ததூஉம், பொருளது நிலையின்மையும்,அவளது ஆற்றாமையும், கூறிச் செலவு மறுத்தது

   
22
தோழி கூற்று

உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்
கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல்
பண்டும் இவ் உலகத்து இயற்கை; அஃது இன்றும்
புதுவது அன்றே புலனுடை மாந்திர்!
5தாய் உயிர் பெய்த பாவை போல,
நலன் உடையார் மொழிக்கண் தாவார்; தாம் தம் நலம்
தாது தேர் பறவையின் அருந்து, இறல் கொடுக்குங்கால்,
ஏதிலார் கூறுவது எவனோ, நின் பொருள் வேட்கை?
நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த
10செறி முறை பாராட்டினாய்; மற்று, எம் பல்லின்
பறி முறை பாராட்டினையோ? ஐய!
நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்ன
ஐவகை பாராட்டினாய்; மற்று, எம் கூந்தல்
செய்வினை பாராட்டினையோ? ஐய!
15குளன் அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும்
இள முலை பாராட்டினாய்; மற்று, எம் மார்பில்
தளர் முலை பாராட்டினையோ? ஐய!
என ஆங்கு,
அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ் வரி வாட,
20சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எங்கண்
படர் கூற நின்றதும் உண்டோ? தொடர் கூர,
துவ்வாமை வந்தக்கடை?

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, அதற்கு உடம்படாது, தலைமகனை நெருங்கி, களவுக் காலத்து ஒழுக்கம் எடுத்துக் காட்டி ஆற்றுவித்து, உடம்பட்ட வாய்பாட்டான் மறுத்தது

   
23
தலைவி கூற்று

இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்,
புலம் கடி கவணையின், பூஞ் சினை உதிர்க்கும்
விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம்
தனியே இறப்ப, யான் ஒழிந்திருத்தல்
5நகுதக்கன்று, இவ் அழுங்கல் ஊர்க்கே:
இனி யான்,
உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன்
தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்
வேள் நீர் உண்ட குடை ஓரன்னர்
10நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர்
அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்
கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்
சூடினர் இட்ட பூ ஓரன்னர்
என ஆங்கு,
15யானும் நின்னகத்து அனையேன்; ஆனாது,
கொலை வெங் கொள்கையொடு நாய் அகப்படுப்ப,
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல,
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே

பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைவி, ‘எம்மையும் உடன்கொண்டு சென்மின்’என்றாட்கு, உடன்படாது அவன் பிரியலுற, தனது இறந்துபாடு தோன்றக் கூறியது

   
24
தலைவி கூற்று

‘நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம்
அஞ்சியது ஆங்கே அணங்காகும்’ என்னும் சொல்
இன் தீம் கிளவியாய்! வாய் மன்ற: நின் கேள்
புதுவது பல் நாளும் பாராட்ட, யானும்,
5‘இது ஒன்று உடைத்து’ என எண்ணி, அது தேர,
மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்,
பாயல் கொண்டு என் தோள் கனவுவார், ‘ஆய் கோல்
தொடி நிரை முன் கையாள் கையாறு கொள்ளாள்,
கடி மனை காத்து, ஓம்ப வல்லுவள்கொல்லோ
10இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும்
நெடு மலை வெஞ் சுரம் போகி, நடு நின்று,
செய் பொருள் முற்றும் அளவு?’ என்றார்; ஆயிழாய்!
தாம் இடை கொண்டது அதுவாயின், தம் இன்றி
யாம் உயிர் வாழும் மதுகை இலேமாயின்,
15‘தொய்யில் துறந்தார் அவர்’ என, தம்வயின்,
நொய்யார் நுவலும் பழி நிற்ப, தம்மொடு
போயின்று, சொல், என் உயிர்

தலைமகன் குறிப்புக் கண்டு, ‘பிரிவன்’ என ஐயுற்றுச் செல்கின்ற தலைவி,அக்காலத்துத் தலைவன் கனவின் அரற்றினமை கேட்டு, ‘பொருள்வயிற் பிரிகின்றான்’எனத் துணிந்து, ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது. ‘மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே’ என்பதனால், அந்தணன் அறம் கருதித் தூதின் பிரிந்து, அவ் அரசர் செய்த பூசனை வாங்கிக் கொண்டு வருதற்குப் பிரிகின்றது என்று கொள்க. ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமம்’ கூறுகின்றது.(23)

   
25
தோழி கூற்று

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
‘ஐவர்’ என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு,
5களி திகழ் கடாஅத்த கடுங் களிறு அகத்தவா,
முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல்,
ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல,
எழு உறழ் தடக் கையின் இனம் காக்கும் எழில் வேழம்,
10அழுவம் சூழ், புகை அழல் அதர்பட மிதித்துத் தம்
குழுவொடு புணர்ந்து போம், குன்று அழல் வெஞ் சுரம்
இறத்திரால், ஐய! மற்று இவள் நிலைமை கேட்டீமின்:
மணக்குங்கால் மலர் அன்ன தகையவாய், சிறிது நீர்
தணக்குங்கால், கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ
15சிறப்புச் செய்து உழையராப் புகழ்பு ஏத்தி, மற்று அவர்
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்?
ஈங்கு நீர் அளிக்குங்கால் இறை சிறந்து, ஒரு நாள் நீர்
நீங்குங்கால், நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ
செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு, மற்று அவர்
20ஒல்கத்து நல்கிலா உணர்விலார் தொடர்பு போல்?
ஒரு நாள் நீர் அளிக்குங்கால் ஒளி சிறந்து, ஒரு நாள் நீர்
பாராட்டாக்கால், பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து, அம் மறை
பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்பு போல்?
25என ஆங்கு,
யாம் நிற் கூறுவது எவன் உண்டு? எம்மினும்
நீ நற்கு அறிந்தனை; நெடுந் தகை! வானம்
துளி மாறு பொழுதின், இவ் உலகம் போலும் நின்
அளி மாறு பொழுதின், இவ் ஆயிழை கவினே

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, 'நீ பிரிந்தால் பீடிலார் தொடர்பு போல,நும்மை அலர் தூற்றுவன இவ் வகைப்பட்டன சில உள' எனத் தலைவி ஆற்றாமை கூறி, செலவு அழுங்குவித்தது.

   
26
தோழி கூற்று

‘ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும்,
பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும்,
மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்,
ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்,
5ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்கு,
தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல,
போது அவிழ் மரத்தொடு பொருகரை கவின் பெற,
நோ தக வந்தன்றால், இளவேனில் மே தக
பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து,
10தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார்
ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி,
வெல் புகழ் உலகு ஏத்த, விருந்து நாட்டு உறைபவர்
திசை திசை தேன் ஆர்க்கும் திருமருதமுன்துறை,
வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார்
15நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரைத் தாங்கி, தம்
இசை பரந்து, உலகு ஏத்த, ஏதில் நாட்டு உறைபவர்
அறல் சாஅய் பொழுதோடு, எம் அணி நுதல் வேறாகி,
திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார்
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி,
20ஆறு இன்றிப் பொருள் வெஃகி, அகன்ற நாட்டு உறைபவர்’
என, நீ
தெருமரல் வாழி, தோழி! நம் காதலர்,
பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர்
செரு மேம்பட்ட வென்றியர்;
25‘வரும்’ என வந்தன்று, அவர் வாய்மொழித் தூதே

‘மேவிய சிறப்பின் ஏனோர்’ என்னும் சூத்திரத்தில், பகைமேற் சென்ற அரசன் திறை பெற்ற நாடு காத்து, அதன்கண் தன் நெறி முறைமை அடிப்படுத்து வருதற்குப் பிரிவன் என்றலின், பிரிவின்கண் தலைவன் இளவேனிற் காலம் குறித்துப் பிரிய,அக் கால வரவின்கண் தலைவி ஆற்றாளாய், ‘அவர் நமக்கு அருளும் காலையில் அருளார் காண்’ என்றாட்கு, தோழி, ‘அவர் வரவிற்கு இக் காலம் தூதாயன்றே வந்தது; நீ ஆற்றுவாயாக’ என வற்புறுத்தியது(25)

   
27
தோழி கூற்று

‘ஈதலில் குறை காட்டாது, அறன் அறிந்து ஒழுகிய
தீதிலான் செல்வம் போல், தீம் கரை மரம் நந்த;
பேதுறு மட மொழி, பிணை எழில் மான் நோக்கின்;
மாதரார் முறுவல் போல், மண மௌவல் முகை ஊழ்ப்ப;
5காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப் போல், கழல்குபு
தாதொடும் தளிரொடும், தண் அறல் தகை பெற;
பேதையோன் வினை வாங்க, பீடு இலா அரசன் நாட்டு,
ஏதிலான் படை போல, இறுத்தந்தது, இளவேனில்
நிலம் பூத்த மரமிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள,
10நலம் பூத்த நிறம் சாய, நம்மையோ மறந்தைக்க;
கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய,
புலம் பூத்து, புகழ்பு ஆனாக் கூடலும் உள்ளார்கொல்?
கல்மிசை மயில் ஆல, கறங்கி ஊர் அலர் தூற்ற,
தொல் நலம் நனி சாய, நம்மையோ மறந்தைக்க;
15ஒன்னாதார்க் கடந்து அடூஉம், உரவு நீர் மா கொன்ற,
வென் வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்?
மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள,
பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க;
தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும்
20வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்கொல்?’
என ஆங்கு,
நோய் மலி நெஞ்சமோடு இனையல், தோழி!
நாம் இல்லாப் புலம்பாயின், நடுக்கம் செய் பொழுதாயின்,
காமவேள் விழவாயின், ‘கலங்குவள் பெரிது’ என,
25ஏமுறு கடுந் திண் தேர் கடவி,
நாம் அமர் காதலர் துணை தந்தார், விரைந்தே

தலைவன் குறித்துப் பிரிந்த இளவேனில் வரவின்கண், ‘எம்மையோ மறக்க; இக்காலத்து, இவ் ஊரின்கண், தாம் விளையாடும் விளையாட்டும் மறந்தாரோ?’ எனச் சொல்லி ஆற்றாளாய தலைவிக்கு, தோழி தலைவன் வரவு உணர்ந்து, கழி உவகையால் கூறியது.(26)

   
28
தோழி கூற்று

‘பாடல் சால் சிறப்பின் சினையவும், சுனையவும்
நாடினர் கொயல் வேண்டா, நயந்து தாம் கொடுப்ப போல்,
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார்கண்
தோடுறத் தாழ்ந்து, துறை துறை கவின் பெற,
5செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு,
தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல்
வையை வார் அவிர் அறல், இடை போழும் பொழுதினான்
விரிந்து ஆனா மலராயின், விளித்து ஆலும் குயிலாயின்,
பிரிந்து உள்ளார் அவராயின், பேதுறூஉம் பொழுதாயின்,
10அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது
வருந்த, நோய் மிகுமாயின் வணங்கிறை! அளி என்னோ?
புதலவை மலராயின், பொங்கரின வண்டாயின்,
அயலதை அலராயின், அகன்று உள்ளார் அவராயின்,
மதலை இல் நெஞ்சொடு மதனிலள் என்னாது
15நுதல் ஊரும் பசப்பாயின் நுணங்கிறை! அளி என்னோ?
தோயின அறலாயின், சுரும்பு ஆர்க்கும் சினையாயின்,
மாவின தளிராயின், மறந்து உள்ளார் அவராயின்,
பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது
பாயல் நோய் மிகுமாயின் பைந்தொடி! அளி என்னோ?'
20என ஆங்கு,
ஆயிழாய்! ஆங்கனம் உரையாதி; சேயார்க்கு
நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா; நம்மினும்
தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர்,
பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்தே?

இளவேனில் வரவின்கண் ஆற்றாத தலைவி தூது விடக் கருத, தோழி, ‘அவர் பிரிந்திருத்தலை நம்மினும் தாம் வல்லரல்லர்’ எனச் சொல்லி, வற்புறுத்தியது

   
29
தோழி கூற்று

‘தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின்,
அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல்,
பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம்
புல்லிய புனிறு ஒரீஇப் புது நலம் ஏர்தர;
5வளையவர் வண்டல் போல், வார் மணல் வடுக் கொள;
இளையவர் ஐம்பால் போல், எக்கர் போழ்ந்து அறல் வார;
மா ஈன்ற தளிர்மிசை, மாயவள் திதலை போல்,
ஆய் இதழ்ப் பல் மலர் ஐய கொங்கு உறைத்தர;
மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின்கண்
10சேயார்கண் சென்ற என் நெஞ்சினை சின்மொழி!
நீ கூறும் வரைத்து அன்றி, நிறுப்பென்மன்? நிறை நீவி,
வாய் விரிபு பனி ஏற்ற விரவுப் பல் மலர் தீண்டி,
நோய் சேர்ந்த வைகலான், வாடை வந்து அலைத்தரூஉம்
போழ்து உள்ளார் துறந்தார்கண் புரி வாடும் கொள்கையைச்
15சூழ்பு ஆங்கே சுடரிழாய்! கரப்பென்மன்? கைநீவி
வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இருந் தும்பி
யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம்
தொடி நிலை நெகிழ்த்தார்கண் தோயும் என் ஆர் உயிர்
வடு நீங்கு கிளவியாய்! வலிப்பென்மன்? வலிப்பவும்,
20நெடு நிலா, திறந்து உண்ண, நிரை இதழ் வாய் விட்ட
கடி மலர் கமழ் நாற்றம், கங்குல் வந்து, அலைத்தரூஉம்’
என ஆங்கு,
வருந்தினை வதிந்த நின் வளை நீங்க, சேய் நாட்டுப்
பிரிந்து செய் பொருட் பிணி பின் நோக்காது ஏகி, நம்
25அருந் துயர் களைஞர் வந்தனர்
திருந்து எயிறு இலங்கு நின் தே மொழி படர்ந்தே

பருவ வரவின்கண் ஆற்றாத தலைவியைத் தோழி வற்புறுப்ப, வன்புறை எதிர் அழிந்தாட்கு, தோழி அவன் வரவு உணர்ந்து கழி உவகையால் கூறியது

   
30
பாணன் கூற்று

‘அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல், அணி கொள
விரிந்து ஆனாச் சினை தொறூஉம், வேண்டும் தாது அமர்ந்து ஆடி,
புரிந்து ஆர்க்கும் வண்டொடு, புலம்பு தீர்ந்து எவ் வாயும்,
இருந் தும்பி, இறை கொள எதிரிய வேனிலான்
5துயில் இன்றி யாம் நீந்த, தொழுவை அம் புனல் ஆடி,
மயில் இயலார் மரு உண்டு, மறந்து அமைகுவான்மன்னோ
‘வெயில் ஒளி அறியாத விரி மலர்த் தண் காவில்
குயில் ஆலும் பொழுது’ எனக் கூறுநர் உளராயின்
பானாள் யாம் படர் கூர, பணை எழில் அணை மென் தோள்
10மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்மன்னோ
‘ஆனாச் சீர்க் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை,
தேன் ஆர்க்கும் பொழுது’ எனத் தெளிக்குநர் உளராயின்
உறல் யாம் ஒளி வாட, உயர்ந்தவன் விழவினுள்
விறல் இழையவரோடு விளையாடுவான்மன்னோ
15‘பெறல் அரும் பொழுதோடு, பிறங்கு இணர்த் துருத்தி சூழ்ந்து,
அறல் வாரும், வையை' என்று அறையுநர் உளராயின்’
என ஆங்கு,
தணியா நோய் உழந்து ஆனாத் தகையவள் தகை பெற,
அணி கிளர் நெடுந் திண் தேர் அயர்மதி பணிபு நின்
20காமர் கழல் அடி சேரா
நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே

பருவ வரவின்கண் ஆற்றாத தலைமகள் இறந்தது சிந்தித்து, ‘நம்மாட்டு அன்பிலராயினும், இக் காலத்து, இவ் ஊரின்கண், பண்டு தாம் விளையாடியவாறு நினைந்து வருவர், இக் கால வரவு சொல்லுவார் உளராயின்’ எனக் கேட்ட பாணன் பாசறைக்கண் சென்று, தலைவனைக் கண்டு கூறியது(29)

   
31
தோழி கூற்று

‘கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற,
நெடுங் கயத்து அயல் அயல் அயிர் தோன்ற, அம் மணல்
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக,
பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீய, காதலர்ப்
5புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன,
மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால்,
கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுதுமன்
"பொய்யேம்" என்று, ஆயிழாய்! புணர்ந்தவர் உரைத்ததை
மயங்கு அமர் மாறு அட்டு, மண் வௌவி வருபவர்,
10தயங்கிய களிற்றின்மேல், தகை காண விடுவதோ
பயங் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு,
வயங்கு இழை தண்ணென, வந்த இவ் அசை வாடை?
தாள் வலம்பட வென்று, தகை நன் மா மேல்கொண்டு,
வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ
15நீள் கழை நிவந்த பூ நிறம் வாடத் தூற்றுபு,
தோள் அதிர்பு அகம் சேர, துவற்றும் இச் சில் மழை?
பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர்
வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ
புகை எனப் புதல் சூழ்ந்து, பூ அம் கள் பொதி செய்யா
20முகை வெண் பல் நுதி பொர, முற்றிய கடும் பனி?'
என ஆங்கு,
வாளாதி, வயங்கிழாய்! ‘வருந்துவள் இவள்’ என,
நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி,
மீளி வேல் தானையர் புகுதந்தார்
25நீள் உயர் கூடல் நெடுங் கொடி எழவே

‘இளவேனிற் காலத்து வருவல்; அத்துணையும் ஆற்றியிரு’ என்று மண் நசையால் வேந்தன் சென்றவழி, முன்பனிக் காலமும் பின்பனிக் காலமும் வந்து வருத்தலின்,ஆற்றாத தலைவியைத் தோழி, ‘வருவர்’ என வற்புறுப்பவும், வன்புறை எதிர் அழிந்த வழி, தலைவன் ‘யாம் குறித்த பருவம் வரும்துணையும் ஆற்றியிராள்’ எனப் பின்பனிக் காலத்து வருகின்ற வரவு உணர்ந்து, தோழி கழி உவகையால் கூறியது(30)

   
32
தோழி கூற்று

எஃகு இடை தொட்ட, கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல்
மை அற விளங்கிய, துவர் மணல் அது; அது
ஐதாக நெறித்தன்ன அறல் அவிர் நீள் ஐம்பால்
அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல்,
5பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள
துணி நீரால், தூ மதி நாளால், அணி பெற
ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும்,
ஆன்றவர் அடக்கம் போல் அலர்ச் செல்லாச் சினையொடும்,
வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும்,
10நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும்,
உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும்,
புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும்
நயந்தார்க்கோ நல்லைமன், இளவேனில்! எம் போல?
பசந்தவர் பைதல் நோய் பகை எனத் தணித்து, நம்
15இன் உயிர் செய்யும் மருந்தாகி, பின்னிய
காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லைப்
போது ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும்
தூது வந்தன்றே தோழி!
துயர் அறு கிளவியோடு: அயர்ந்தீகம் விருந்தே

கால வரவு கண்டு ஆற்றாளாயின இடத்து, தோழி காலத்தை நோக்கி, ‘அழகிதாகச் செய்தாய், வந்து’ எனச் சொல்லி, தலைவிக்கு, "நம் காதலர் வருகின்றார்" எனச் சொல்லி வந்த தூது காண் இது; நாம் விருந்து அயர்கம்’ எனச் சொல்லியது

   
33
தோழி கூற்று

‘வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய
யாறு கண் விழித்த போல், கயம் நந்திக் கவின் பெற,
மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல,
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக,
5துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப,
மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய,
காதலர்ப் புணர்ந்தவர் கவவுக் கை நெகிழாது,
தாது அவிழ் வேனிலோ வந்தன்று; வாரார், நம்
போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர்!
10எரி உரு உறழ இலவம் மலர,
பொரி உரு உறழப் புன்கு பூ உதிர,
புது மலர்க் கோங்கம் பொன் எனத் தாது ஊழ்ப்ப,
தமியார்ப் புறத்து எறிந்து எள்ளி, முனிய வந்து,
ஆர்ப்பது போலும் பொழுது; என் அணி நலம்
15போர்ப்பது போலும் பசப்பு
நொந்து நகுவன போல் நந்தின, கொம்பு; நைந்து உள்ளி
உகுவது போலும், என் நெஞ்சு; எள்ளி,
தொகுபு உடன் ஆடுவ போலும், மயில்; கையில்
உகுவன போலும், வளை; என் கண் போல்
20இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார்;
மிகுவது போலும், இந் நோய்
நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல்
இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத
தூது அவர் விடுதரார் துறப்பார்கொல்? நோதக,
25இருங் குயில் ஆலும் அரோ.’
என ஆங்கு,
புரிந்து நீ எள்ளும் குயிலையும், அவரையும், புலவாதி
நீல் இதழ் உண்கணாய்! நெறி கூந்தல் பிணி விட,
நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி,
30மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார்
கால் உறழ் கடுந் திண் தேர் கடவினர் விரைந்தே

பருவ வரவின்கண் வன்புறை எதிரழிந்து ஆற்றாளாயினாளைத் தோழி, தலைவனது வரவு உணர்ந்து கூறி ஆற்றுவித்தது

   
34
தோழி கூற்று

‘மன் உயிர் ஏமுற, மலர் ஞாலம் புரவு ஈன்று,
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி, இறந்த பின்,
சில் நீரால் அறல் வார, அகல் யாறு கவின் பெற,
முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண்
5பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளர் போல்,
பல் மலர் சினை உக, சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப,
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்
விரி காஞ்சித் தாது ஆடி இருங் குயில் விளிப்பவும்,
பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்,
10கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி,
எரி பொத்தி, என் நெஞ்சம் சுடும்ஆயின், எவன் செய்கோ?
பொறை தளர் கொம்பின்மேல் சிதரினம் இறை கொள,
நிறை தளராதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்,
முறை தளர்ந்த மன்னவன் கீழ்க் குடி போலக் கலங்குபு,
15பொறை தளர்பு பனி வாரும் கண்ஆயின், எவன் செய்கோ?
தளை அவிழ் பூஞ் சினைச் சுரும்பு யாழ் போல இசைப்பவும்,
கொளை தளராதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்,
கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று,
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள்ஆயின், எவன் செய்கோ?’
20என ஆங்கு,
நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல்; எல்லா! நாம்
எண்ணிய நாள்வரை இறவாது, காதலர்
பண்ணிய மாவினர் புகுதந்தார்
கண் உறு பூசல் கை களைந்தாங்கே

பருவம் கண்டு வன்புறை எதிரழிந்து ஆற்றாளாய தலைவிக்குத் தோழி அவன் வரவு உணர்ந்து, கழி உவகையால் கூறியது

   
35
தோழி கூற்று

‘மடியிலான் செல்வம் போல் மரன் நந்த, அச் செல்வம்
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப;
மாயவள் மேனி போல் தளிர் ஈன, அம் மேனித்
தாய சுணங்கு போல் தளிர்மிசைத் தாது உக;
5மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப,
அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார;
நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால்,
துறந்து உள்ளார் அவர்’ எனத் துனி கொள்ளல் எல்லா! நீ
‘வண்ண வண்டு இமிர்ந்து, ஆனா வையை வார் உயர் எக்கர்,
10தண் அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுதன்றோ
கண் நிலா நீர் மல்கக் கவவி, நாம் விடுத்தக்கால்,
ஒண்ணுதால்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை?
மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து, அவர்,
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ
15"வலன் ஆக, வினை!" என்று வணங்கி, நாம் விடுத்தக்கால்,
ஒளியிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை?
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாடக் கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ
பல நாடு நெஞ்சினேம் பரிந்து, நாம் விடுத்தக்கால்,
20சுடரிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை?
என ஆங்கு,
உள்ளுதொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பாகி,
எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல்
காமர் கடுந் திண் தேர்ப் பொருப்பன்
25வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே

வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி, ‘இக் காலம் அல்லவோ, அவர் வருதும் எனச் சொன்ன காலம்?’ என வன்புறை எதிர் அழிந்தாளை, ‘நீ துனி கொள்ளல்; அவர் வந்தார்’ எனத் தலைவன் வரவு உணர்ந்து, தோழி ஆற்றுவித்தது

   
36
தோழி கூற்று

‘கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல், மராத்து
நெடுமிசைச் சூழும் மயில் ஆலும் சீர,
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப,
தொடி மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர,
5இயன் எழீஇயவை போல, எவ் வாயும் இம்மென,
கயன் அணி பொதும்பருள் கடி மலர்த் தேன் ஊத,
மலர் ஆய்ந்து வயின் வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப,
இருங் குயில் ஆல, பெருந் துறை கவின் பெற,
குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும்
10சீரார் செவ்வியும், வந்தன்று;
வாரார், தோழி! நம் காதலோரே
பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று, நுதல்;
சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன, தோள்
நனி அறல் வாரும் பொழுது என, வெய்ய
15பனி அறல் வாரும், என் கண்
மலையிடைப் போயினர் வரல் நசைஇ, நோயொடு
முலையிடைக் கனலும், என் நெஞ்சு
காதலின் பிரிந்தார்கொல்லோ? வறிது, ஓர்
தூதொடு மறந்தார்கொல்லோ? நோதக,
20காதலர் காதலும் காண்பாம்கொல்லோ?
துறந்தவர் ஆண்டு ஆண்டு உறைகுவர்கொல்லோ? யாவது?'
"நீள் இடைப் படுதலும் ஒல்லும்; யாழ நின்,
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி!
நாள் அணி சிதைத்தலும் உண்டு" என நய வந்து,
25கேள்வி அந்தணர் கடவும்
வேள்வி ஆவியின் உயிர்க்கும், என் நெஞ்சே’

காலம் கண்டு ஆற்றாத தலைவியது நிலைமை கண்டு, ஆற்றாத தோழி தான் ஆற்றாளாய்,அவட்குக் கூறியது.